
1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடு கட்டியபோது அவர் எஞ்சிய மின்சார கம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை (PVC) மேற்கண்ட முறையில் உபயோகித்து அருகிலிருந்த சாலை மரங்களுக்கும், வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிக சிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார். இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
இந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம்.
குழியெடுத்து அதனுள் மக்கிய இலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும் இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி அதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும். கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது.
No comments:
Post a Comment