மலைத்தோட்ட
விவசாயிகளின் முக்கியப் பிரச்னையே வனவிலங்குகளும், இயற்கைச்
சீற்றங்களும்தான். இதன் காரணமாக எதையும் உருப்படியாக விளைவிக்க
முடியாமல் சிக்கித் தவித்த விவசாயிகளுக்கு தற்போது நன்கு கைகொடுத்து
உதவி வருகிறது பசுமைக்குடில் விவசாயம்.
அதையும் இதையும் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்த
பலரும் தற்போது பன்னிரண்டு சென்ட் அளவுக்கு பசுமைக்குடில் அமைத்து
ஜெர்பரா, கார்னேஷன், ரோஜா போன்ற கொய் மலர்களையும்...
கேப்ஸிகம் என்னும் குடைமிளகாயையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகள் பலவிதமான செயற்கை உரங்களைப்
பயன்படுத்தித்தான் பசுமைக்குடிலுக்குள் பயிர்செய்து வருகின்றனர்.
ஆனால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல் பகுதியில் முதல்முறையாக
பசுமைக்குடிலுக்குள் இயற்கை விவசாயத்தைப் புகுத்தி கொய்மலர்களையும்,
குடைமிளகாயையும் சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார்
ஜெயக்குமார்.
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மலை
மீது குறுக்கிடுகிறது ஊத்து. இந்த சிறு கிராமத்திலிருந்து வலதுபுறம்
பிரிந்து செல்லும் சாலையில் நான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது
பண்ணைக்காடு. கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ மூன்றாயிரத்து
எண்ணூறு அடி உயரத்திலிருக்கும் கிராமம். இங்கும், இதையடுத்திருக்கும்
வடகரைப்பாறையிலும் பசுமைக் குடில்கள் அமைத்து விவசாயம் செய்து
வருகிறார் ஜெயக்குமார் (அலைபேசி: 94436-77673).
அவரைத் தேடிபோனபோது, ''பசுமைக்குடில் மட்டும்தான் நவீனம்.
உள்ளுக்குள் நடக்கிற விவசாயமெல்லாம் பாரம்பரியம்தான்'' என்று
பளீர் சிரிப்புடன் வரவேற்றவர், கடகடவென பேச ஆரம்பித்தார்.
''பண்ணைக்காடுதான் எங்க சொந்த ஊர். என்னோட அப்பா
ஆசிரியரா இருந்தார். நான் டி.-பார்ம் படிச்சி முடிச்சிட்டு,
உள்ளுரிலேயே மருந்துக் கடை நடத்திக்கிட்டிருக்கேன். எங்களுக்கு
இருந்த பூர்வீக நிலத்துல ரொம்ப வருஷமா காபிதான் போட்
டிருந்தோம். ஆனா, அதுல பெரிய அளவு வருமானம் இல்லாததால
நான் விவசாயத்துல ஆர்வம் காட்டாம இருந்தேன். பாகப்பிரிவினையில்
எனக்கு கொஞ்சம் தோட்டம் பிரிச்சு கொடுத்தாங்க. அதுக்கப்புறம்,
விவசாயம் பண்ணலாம்னு எனக்கு ஆசை வந்து, அதைப்பத்தி யோசிக்க
ஆரம்பிச்சேன்.
எல்லாரும் பசுமைக்குடில் போட்டு குடைமிளகாய் சாகுபடி செய்றாங்க.
உணவுப்பயிரான அதுக்கு பெரும்பாலும் ரசாயன உரங்கள்தான் போடுறாங்க.
அதையும் ஏன் இயற்கையில நாம முயற்சி செய்து பார்க்கக் கூடாதுனு
தோணுச்சி. உடனே அதுக்காக ஒரு பசுமைக்குடில் அமைச்சி, குடைமிளகாயை
பயிரிட்டேன். முழுக்க இயற்கை உரத்தைப் போட்டேன். இப்ப
அது நல்லா விளைஞ்சிருக்கு. இன்னும் பத்து பதினைந்து நாள்ல அறுவடை
செய்ய ஆரம்பிச் சுடுவேன்.
''அடுத்ததா, 'பசுமை விகடன்'ல வரும் ‘ஜீரோ பட்ஜெட்’
விவசாய முறையை கொஞ்சம்கொஞ்சமா இதுல புகுத்தலாம்னு இருக்கேன்.
அப்படிச் செய்தா... இன்னும் இன்னும் லாபம் கிடைக்கும்'' என்று
உறுதியான குரலில் சொன்னார்.
தொடர்ந்து பேசியவர், ''இயற்கை முறையில பயிராகியிருக்கற
பூக்களும் நல்லா இருக்கறதால அதுக்கும் வருடம் முழுவதும் ஒப்பந்தம்
போட்டி ருக்காங்க. இன்னும் பெரிய அளவுல பசுமைக் குடில்கள்
போட்டு ஏற்றுமதி பண்ணலாம்னு திட்டம் வெச்சிருக்கேன். பூக்களைப்
பொருத்தவரை முன்னைக் காட்டிலும் இப்போ விளைச்சல் அதிகரிச்
சிருந்தாலும் ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டுட்டதால இப்போதைக்கு
பழைய விலைதான் கிடைக்குது. வர்ற 2008-ம் வருஷத்துல இருந்து
புது ஒப்பந்தம் போடணும். இயற்கை விவசாயம்கறதால அதிக
விலை கிடைக்கும்.
''மலைப்பகுதியில அரை ஏக்கர் இடம் இருந்தாக்கூட போதும்.
யார் வேணும்னாலும் தைரியமா செலவே இல்லாம இயற்கை விவசாயத்துல
பூக்கள், குடை மிளகாய் உற்பத்தி பண்ணி நல்லா சம்பாதிக்கலாம்.
பசுமைக்குடில் மட்டும்தான் செலவு. அதுக்கும் அரசாங்க மானியம்,
கடனெல்லாம் கிடைக்குது. அதனால இளைஞர்களெல்லாம் தைரியமா
இந்த தொழில் பண்ணலாம். கூட்டா பல பேரு சேர்ந்தும் செய்யலாம்.
ஏற்றுமதி செய்தா இன்னும் அதிக லாபம் சம்பாதிக்கலாம்'' என்று
நம்பிக்கை பொங்கச் சொன்னார்.
|
This is a RARE DETAILS BLOG that focus on everything about Tamil language and Tamilans cultures,Amazing News,Scientific News, Tamil Medicines,Cooking Tips,World's Mystery,Rare History,Sex Education,Electronics Technology,Business,Etc.,
Wednesday, August 13, 2014
‘‘இளைஞர்களே, வாருங்கள்... இணையற்ற லாபம் பாருங்கள்!‘‘
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment