Thursday, November 10, 2016

இதை அனுபவித்தவனே ஞானவான்!

                 சாதனை - தியானம்



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !

குருவே சரணம்! குரு திருவடி சரணம்.

குருவே சரணம்! குரு திருவடி சரணம்.

என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.

சாதனை என்றால் தியானிப்பது - தவம் செய்தல் என்று பொருள். சாதனை என்பதற்கு மற்றொரு பொருள் அருஞ்செயல். எல்லோராலும் எளிதாக செய்ய முடியாத செயலை செய்தவரை சாதனை படைத்தார் என்கிறோம். அந்த விளையாட்டு வீரர் இதுவரை உள்ள சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்தார் என்கிறோமல்லாவா? உலகத்தில் இன்று ஏதாவது சாதனை செய்தால் அதை "கின்னஸ் ரெகார்ட்" என்கின்றனர்.

ஞானிகள் புரிந்த சாதனைகள் ஒன்றா, இரண்டா? உலகியலிலும் ஆன்மீகத்திலும் அவர்கள் படைத்த சாதனைகளுக்கு நிகரேது?! செத்தவர்களை பிழைக்க வைத்தனர் எத்தனையோ ஞானிகள். விஞ்ஞானம் பேசும் மக்கள் யாரவது இதை செய்ய முடியுமா? நினைத்துகூட பார்க்க முடியாது. ஆன்மீகவாதிகளே சாதனை செய்து - கடுமையான தவமியற்றி, சாதனை பல படைத்துள்ளனர். ஈடு இணையற்ற சாதனையாளர்கள் ஞானிகளே!

ஆன்மீக சாதனை - தவம் புரிபவனுக்கே எல்லா ஆற்றலும் கிட்டுகின்றன. மனம் ஒருமைப்பாடு - மனம் குவிதல் என்பதை ஒரு ஆன்மீகவாதியால் மட்டுமே செய்ய முடியும். வைராக்கியத்தோடு இருப்பவன் மட்டுமே வெற்றி பெறுவான்.

இன்றைய விஞ்ஞானம் பூமியைப் பற்றி கிரகங்களைப் பற்றி பலவிதமாக ஆராய்ந்து கோடிகோடியாக பணம் செலவு செய்து ஏகப்பட்ட கருவிகளை வைத்துத்தான் பல செய்திகளை கூறுகின்றது.

ஆனால் நமது ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம் எந்த காலத்தில் உருவானது என்றே தெரியாது! மிக மிக துல்லியமாக கிரகங்கள் இருப்பிடம், தன்மை போன்ற அனைத்து விபரங்களையும் கூறுவதோடல்லாமல், அதன் ஆதிக்கத்தால் மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்றும் துல்லியமாக கணக்கிட்டு கூறுகிறது. பஞ்சாங்கத்தில் உள்ள விஷயங்களைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல கூறுகிறார்கள். இந்தியா என்கிற கொல்லனிடம் வெளிநாட்டவர் ஊசி விற்க வருகிறார்கள்!?

நம் பெருமை - மகிமை - அரிய சக்திகள் நாம் அறியாமலிருக்கிறோம்.

உலகிலுள்ள பழமையான மொழி என்றும் கலாச்சாரம் என்றும் இன்றைய உலகத்தவர்களால் சொல்லப்படுகிற கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சமஸ்கிருதம், தமிழ் என்ற ஐந்தினுள் இந்தியாவிலுள்ள சமஸ்கிருதமும் தமிழுமே நிலைபெற்றுள்ளன. ஏனையவை கிட்டத்தட்ட அழிந்தேவிட்டது.

நமது சமஸ்கிருதமும் தமிழும் தெய்வீகமானது. நமது காலாச்சாரம் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டது. இங்கு இல்லாதது ஒன்றுமேயில்லை! உலகுக்கே நாகரீகத்தை கற்றுத்தந்தவர்கள் நாம்தான்! "ஐந்து கண்டம் அளாவியதமிழ் என திருமந்திரம் கூறுகிறது." இன்றைக்கு உலகெங்கிலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருமூலர் கூற்று உண்மை என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என பாடிய பாடல் முற்றிலும் உண்மை. ஆதியிலே உலகெங்கும் இருந்தது சனாதனதர்மமே! பக்தியின் முடிவு ஞானத்தின் தொடக்கம் சிவலிங்க வழிபாடே! அறிந்தவர் அறிவர்.

இப்பேர்ப்பட்ட சனாதன நெறி வந்தவர்கள் நாம். சாதனை என்றாலே சாதித்தவர்கள் நாம்தான்! இன்னும் பல அரிய பெரிய உண்மைகளை, இரகசியங்களை நம் நாட்டின் மகத்துவத்தை நாம் அறியாமல் தான் இருக்கிறோம்.

நம்மவர்கள் தான் அறியாமையால் நாத்திகவாதம் பேசுகிறார்கள் மூடநம்பிக்கை என்று சாடுகிறார்கள். உனக்கு புரியவில்லை என்றால் இல்லை என்றாகிவிடுமா? உண்மை உணரும் அறிவு உன்னிடம் இல்லாததால் நாத்திகம் பேசுகிறாய்! நரேந்திரன் கடவுள் எங்கே காட்ட முடியுமா என ராமகிருஷ்ணரிடம் கேட்டார். அவர் உணரச் செய்தார்! நரேந்திரன் சுவாமி விவேகானந்தரானார். ராமகிருஷ்ணர் பரமஹம்ஸரானார்!

கேள்விகேள் - கேட்க வேண்டியதுதான். தகுந்தவரிடம் கேள். புரியவில்லையா, உன்னிடமே நீ கேள்! சாக்ரடீஸ் சொன்னாரே, உன்னையே நீ எண்ணிப்பார் என்று! இதைத்தான் வள்ளலாரும் பாடினார். தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என வெண்ணிலாவிடம் கேட்கிறார். சூரியனிடம் கேட்கவில்லை. ஆன்மீகவாதிகளே சிந்திக்க வேண்டியம் இடம் இது!?

நரேந்திரன் கேள்விக்கு பதில் தந்தார் நல்ல ஒரு குரு! இன்று ஏன் நாத்திகம் பேசுகிறவர் பெருகியிருக்கின்றனர் என்றால் நல்ல ஆன்மீக குரு இல்லாமையால்தான்!? இருக்கின்றவர்கள் இரகசியம் இரகசியம் என்று இல்லாமலாக்குகின்றனர். போலி குருமார்களும் போலி மடாதிபதிகளும் தான் நிரம்பியிருக்கின்றனர். இங்கே இருக்கின்ற பலமடாதிபதிகள் மட அதிபதிகள் தான்! ராஜபோக வாழ்க்கைக்காக மடத்தை பிடித்தவர்களே இவர்கள்! வேஷதாரிகள்!? ஆன்மீகத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது! இன்னும் சொல்லப் போனால் ஆன்மீகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்கள்தாம். சந்தேகமேயில்லை!

"துறை இது வழி இது நீ செயும் முறை இது என மொழிந்த அருட்பெரும்ஜோதி" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் சுட்டிக்காட்டிய வழி - விழி வழியை நமது ஞானிகள் - சித்தர்கள் எல்லோரும் சுட்டிக்காட்டியதும் இதுவேதான்! எல்லோரும் அறியவே எங்கள் ஆசான் "கண்மணிமாலை" "அருள்மணிமாலை" என இவ்விருநூற்களையும் வெளியிட்டுளார்கள். அவருள் இருந்து வெளியிட வைத்தார் சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் என்பதுதான் முற்றிலும் உண்மை!

"சூடு கொண்ட திரு ஆடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே" என அகத்தியர் திருவாகிய இறைவன் ஜோதியாக ஆடும் துறைமுகம் எது என அழகாக கூறுகிறார். துறை முகத்தின் கண்ணேயுள! இதில் என்ன, மறைத்தா சொல்லியிருக்கிறார்? எவ்வளவு ஆணித்தரமாக, இலகுவாக உண்மையை கூறியிருக்கிறார்! சற்று சிந்தியுங்கள். சிந்தித்தவனுக்கே சித்திக்கும்!!

இன்னும் இதுபோல பல லட்சக்கணக்கான ஆன்மீக பாடல்கள் உள்ளன. உண்மை விளக்கம் காணவேண்டும். மக்களை இறைவனிடம் கூட்டிச் செல்ல வேண்டும். திருஞானசம்பந்தர் தானும் தன் மணவிழாவிற்கு வந்தவர் அனைவரையும் கூண்டோடு கைலாசதிற்கு அழைத்து போனாரே அது போல இருக்க வேண்டாமா? இறைவன் இப்படி இருக்கிறான் நீ இப்படி சாதனை செய்தால் இறைவனை அடையலாம் என்று சொல்லக்கூட மாட்டேன் என்கிறீர்களே! தெரிந்தாலல்லவா சொல்வார்கள்!

இன்னும் ஒரு சில மேதாவிகள் அர்த்தம் புரியாமல் அனர்த்தம் செய்து மடையனாகி ஏனையோரையும் முட்டாளாக்கிவிடுவர். உதாரணமாக, அகத்தியர் ஞான நிலையை அழகாக தெளிவாக இலகுவாக கூறியது "பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்" என்று ஒரு பாடல். இதற்கு மதகுருமார்கள் சொல்லும் விளக்கம் வெளியே சொன்னால் உன் தலை வெடித்துவிடும் என்பது தான்?! இதுவா பொருள்? இறைவனை அடைய வழிகாட்டும் ஒரு ஞானி இப்படியா சொல்லியிருப்பார்? சிறிதாவது சிந்திக்க வேண்டாமா? இப்படி மிரட்டியே பலர் பலரை சீடராக வைத்திருகின்றனர். என்ன குருவோ என்ன சீடனோ,

இராமானுஜரை அவர் குரு இப்படித்தான் பயமுறித்தினார். மந்திரத்தை வெளியே சொன்னால் நீ நரகத்திற்குத்தான் போவாய் என்று இராமானுஜர் என்ன சொன்னார். நான் ஒருவன் நரகத்திற்கு போனால் பரவாயில்லை மக்களே நீங்கள் எல்லோரும் சொர்க்கத்திற்கு போங்கள் என ஸ்ரீரங்கம் மொட்டை கோபுரத்தின் மீதேறி நின்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசித்தார். அதன் பிறகுதான் அவர் குரு தன் தவறை உணர்ந்தார். இராமானுஜர் ஒரு மாபெரும் மகான் ஆனார்.

பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும் என்றால் வெளியே சொல்லாதே தலை இரண்டு உண்டு என்பதே. நமக்கு ஒரு தலை தானே இருக்கிறது எப்படி இரண்டு என்கிறீர்களா? தலை இரண்டு என்பது தலைக்கு தலையாயது இரண்டு என்பதே. அதாவது தலையில் உள்ள முக்கியமான இரண்டு என்பதேயாகும். என் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம் அவரவர் கையால் அளந்தால் எல்லோரும் எட்டு ஜாண் தானே! ஐந்து பூதமும் ஒருங்கே அமைந்த கண்கள்! இதுவல்லவா முக்கியமானது. அதாவது உடம்பில் முக்கியமானது தலை. தலையில் முக்கியமானது இரு கண்கள். இதுவே சரியான விளக்கம். சப்தமாக மிரட்டும் தொனியில் சொன்னால், "பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்" என்றால் பயப்படத்தான் செய்வான்".

அன்பாக அமைதியாக பிரித்துச் சொன்னால் ஞான இரகசியமே இதுதான். பரப்பிலே விள்ளாதே, தலை - இரண்டு ஆகும் என்றால் உண்மையை உணர்வான்!

இதைத்தான் பரிபாஷை இரகசியம் என்றனர். இவ்வாறே எல்லா ஞானிகள் பாடல்களையும் பொருள் கொள்ள வேண்டும். ஞானிகள் பாடல்களை படித்து உணர்வதற்கு பெரிய படிப்பு ஒன்றும் தேவையில்லை. பக்தியும், இறைவனை அடைய வேண்டும் என்ற ஆவலும் இருந்தாலே போதுமானது. கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவர் தாள் (திருத்தாள் - திருவடி - இருகண்கள்) வணங்கி என மாணிக்கவாசகப் பெருமான் பாடுகிறார்.

சிந்தையுள் நின்ற சிவனே நம்மை சிந்திக்க வைக்கிறான். அந்த சிவனே நம் இரு கண்களிலும் சீவ ஒளியாக நின்றிலங்குகிறான். இதைத்தான் குருமூலம் அறிய வேண்டும்.

முதலில் இறைவன் அண்டத்திலுள்ளதைப் போல பிண்டத்திலும் கோயில் கொண்டுள்ளான் என்றும், தலையில் ஐந்து பூதங்களும் ஒருங்கே அமையப் பெற்ற கண்களில் ஒளியாக சீவனாக உள்ளான் என்றும் அறிய வேண்டும். சந்தேகமே இருக்கக்கூடாது. சந்தேக நிவர்த்தியே சுருதி உபதேசம்.

இரண்டாவதாக, கண்களில் ஒளியாக இறைவன் இருப்பதை உணர வேண்டும். உணர்த்துபவரே குருவானவர். "தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்றொரு பழமொழியுண்டு. எனவே தகுந்தவரிடம் உணர்த்தபெற வேண்டுவது அவசியம். "சுருதி" சொன்னதை "யுக்தி"யாள் உணர வேண்டியது முக்கியமாகும்.

மூன்றாவது, கண்களிலேயே ஒளி உணர்வு பெற்ற நாம் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடியது போல, "நினைந்து - நீ -நைந்து, உணர்த்து உணர்ந்து உணர்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து" இருந்து சாதனை செய்ய வேண்டும். இவ்வாறு சாதனை செய்யச் செய்ய கிட்டுவதே பேரானந்தம். இதுவே அனுபவப்படவேண்டும்.

நாம் காட்டும் ஈடுபாடு, வைராக்கியம் நம்மை மேனிலையடைவிக்கும்.

நம்மிடம் உள்ள "சத்"தாகிய சீவனை குறித்து தியானித்து வந்தால் சிவமாகிய ஒளியாகிய சீவனே நம் வசப்படும் நாம் நம்மை உணர்வோம். அதாவது "சித்"திக்கும் கைவல்யப்படும். அதனால் நாம் அடைவதே பரவசம் - பேரானந்தம் - பரமானந்தம் - "ஆனந்தம்." சத்து சித்தாகி ஆனந்தம் கிட்டும், அதைத்தான் சுருக்கமாக சத்சித் ஆனந்தம் என்று சச்சிதானந்தம் என்றார்கள் ஞானிகள்!

இதுபோன்ற உண்மை ஞான பொருள்களை நாம் அறிய வேண்டும். உணர வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். இதைத்தான் எல்லா ஞானிகளும் உபதேசித்தார்கள். பெற்றார்கள். இதை சொல்லிக் கொடுப்பது அருஞ்சாதனை! மிகமிக முக்கியமான இறைபணி! மக்கள் தொண்டு! இது ஒன்றே எங்கள் சற்குரு பணி, அனைவருக்கும் ஞானத்தை எடுத்து உரைப்பதே எமது பணி எங்கள் சபை அன்பர்கள் பணி!

தியானம் எப்படி செய்வது என பலநூறு வழிகளில் பல நிலைகளில் நமது ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள்.

இவை அனைத்தையும் மொத்தம் 16 நிலையில் அடக்கி விடலாம். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற 4 நிலையில் சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் இப்படியே கிரியையில் சரியை என மொத்தம் 16 நிலைகளே.

திருவருட்பிரகாச வள்ளலாரும் சித்தர் பெருமக்களும் மக்களுக்கு காட்டும் பாதை ஞானப்பாதை! எத்தனையோ ஜென்மங்களாய் துன்பம் அனுபவித்து வரும் மக்கள் மீது கருணை கொண்டு இறைவனை அடைய வழிகாட்டும் ஞானமார்க்கத்தில் நேரடியாக செல்ல உபாயங்களை கூறியருளியிருக்கின்றனர்.

தியானம் செய்ய வள்ளலார் கூறும் உபாயம், பசித்திரு! தனித்திரு! - விழித்திரு! என்பதே.

இதில் பசித்திரு என்றால் வயிற்றுப்பசியோடு இருப்பதல்ல! இறைவனை காணவேண்டும் - அடைய வேண்டும் என்றும் நம்மை நாம் உணரவேண்டும் என்றுமுள்ள ஆன்ம பசிவேண்டும்! தனித்திரு என்றால் காட்டுக்கு போகவேண்டும் தனிமையில் இருக்கவேண்டும் என்பதல்ல! நாம் நம் ஆன்மாவோடு மட்டுமே தொடர்புகொண்டிருக்க வேண்டும். தனித்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதே!

அடுத்து விழித்திரு என்றால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன், தியானம் செய்யும் போது கண்களை திறந்துதான் இருக்க வேண்டும். இது முக்கியமான ஒன்று. ஞான சாதனைக்கு கண்ணை திறந்திருந்துதான் செய்ய வேண்டும்.

நான் யார்? கடவுள் யார்? என்று அறியும் பசியோடு, மனதில் வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் நான் ஆத்மா என்ற தனித்த உணர்வுடன் இருந்து, கண்களை திறந்து - இருந்து தியானம் செய்க!

தியானம் செய்வது, ஆரம்பத்தில் ஏதாவது ஒரு உருவத்தை பார்த்து இருந்து செய்யவேண்டும். உருவம் என்றால் தெய்வத் திருஉருவங்களுக்கு போய்விடாதீர்கள். எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜோதியை வைத்துக் கொள்க. ஒருவிளக்கு ஏற்றிவைத்து அதன்முன் அமர்ந்து கண்களை திறந்து அந்த ஜோதியையே பார்த்து கொண்டிருக்க வேண்டும். சிலகாலம் அப்படியே இருந்து பழகிப்பழகி வரவர நாம்பார்க்கின்ற ஜோதியில் பலவித மாறுதல்கள் உண்டாகும். ஒரு நிலையில் ஒன்றுமே தெரியாமல் கூடபோகும். உங்கள் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டும். அப்போது ஆடாதீர்! அசையாதீர்! வேறொன்றை நாடாதீர்!

அதன்பிறகு உங்களுக்கு பற்பல காட்சிகள் அனுபவங்கள் ஏற்படும். சற்குரு வழிகாட்டுவார். இதுவே ஞானத்தில் சரியை என்ற 13-வது படிநிலையாகும். இவ்வாறு பயிற்சி செய்து அனுபவபட்டால் பின்னர் விளக்கு ஏற்றிவைக்க வேண்டியதுமில்லை. எந்த இடத்திலிருந்தும் கண்களை திறந்து இருந்து தியானம் செய்யலாம்! அதுவே முக்திக்கு வழி.

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் எப்படி தியானம் செய்தார் என அறிய வேண்டாமா? தன்னுடைய 9 வயதில் தன் வீட்டின் மாடியிலுள்ள ஒரு அறையில் சுவரில் கீழே ஒரு நிலை கண்ணாடியை வைத்து அதன் முன்னர் ஒருவிளக்கை ஏற்றி அதன்முன்னர் இருந்து பார்த்து தியானம் செய்தார். சுவரில் இருக்கும் கண்ணாடியில் தன் உருவமும் தன் கண்ணில் விளக்கின் ஒளியும் கண்டு தியானம் செய்தார்.

சில நாட்களிலே தன் "கண்" ஆடியிலே ஆறுஜோதிகொண்ட ஜோதிதரிசனம் பெற்றார். இதைத்தான், சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் . . . என் கண் உற்றதே என பாடியருளினார். ஞான அனுபவ நிலை! சிந்திப்பவர்க்கே சிவம்! காணலாம் கண்ணிலே! கண்ணாலே காணலாம்! மிகமிக உயர்ந்த ஞான நிலை இதுவே.

இதை அறிந்தவன் பாக்கியவான்! இதை அனுஷ்டித்தவன் புண்ணியவான்! இதை அனுபவித்தவனே ஞானவான்!

ஆன்மநேய ஒருமைப்பாடுடைய மெய்யன்பர்களே, இதைவிட மேலான வழி உண்டுமோ? இன்றே இக்கணமே ஆரம்பமாகட்டும் உங்கள் சாதனை.