Friday, December 28, 2018

நமக்கும் சுரக்கும் அமிர்தம்



{2000 வருடங்களுக்கு முன்பே சித்தர்கள்
கூறிய அறிவியல் உண்மைகள். }

சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள்.
யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால்
உண்மையை உணர்ந்தவர்கள். உணவே இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே
இல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை
அனுபவித்தனர். அது எப்படி?

நவீன உடலியல் உமிழ் நீரானது வாய், கன்னம், தாடை, போன்ற வாய் பகுதியில் சுரப்பதாகச் சொல்கிறது. அது எங்கே சுரந்தாலும் அதற்கு அடித்தளமாக
இருந்து அதை அதிகமாகச் சுரக்கச் செய்வதும், கட்டுப் படுத்துவதுமான வேலைகளைச் செய்வது எது என்றால் பிட்யூட்டரி சுரப்பியே ஆகும். இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த உமிழ்நீரைத்தான் அவர்கள் காயப்பால்
என்று சொல்வார்கள். என்னடா இது எச்சிலைப் போய் பெரிதாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். எச்சில் வேறு உமிழ்நீர் வேறு.

எச்சிலானது நாறும். உமிழ்நீர் நாற்றமடிக்காது.

இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும்.
டாக்டர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி
அடிப்பாரே, அது போல சுரந்து அடிக்கும்.

வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்ற மடிக்காது, என்று சித்தர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.

தேவலோகத்திலும் இதைப்போல்
பாலில்லை. இது நம்மை இறவாமல் காக்கும் அமிர்தமாகும். யோகிகள் இதை நாள்தோறும்
உண்டிருப்பர். சாதாரணமாக இது தொண்டை
வழியாக உள்ளே சென்று அக்னியில் விழுந்து போகும். அவ்வாறு விடாமல் நாக்கை மடித்து வாயால் நன்கு சுவைத்து நெடுநேரம் இருத்தி உண்ணவேண்டும். அப்படி உண்பவர்களுக்கு காயசித்தி ஏற்படும். உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். நீண்டநாள் வாழலாம்.

ப்ராணாயாமத்தால் பிட்யூட்ரி சுரப்பியை
நன்றாகச் சுரக்கச் செய்யமுடியும்.

ஊறு மமிர்தத்தை யுண்டி யுறுப்பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம்.
- ஔவையார்.

இந்த உமிழ்நீரில் ஸ்டார்ச் இருக்கிறது.
தாவரங்கள் இந்த ஸ்டார்ச் மூலமாகத்தான்
தேவையான உணவை தயாரித்துக்
கொள்கின்றன. அதற்க்குச் சூரிய ஒளியும் நீரும் இருந்தால் போதும். சித்தர்களும் இந்த
வழிமுறையையே பின்பற்றி இருக்கிறார்கள்.

உமிழ்நீரில் இருந்து ஸ்டார்ச்சை பெற்ற உடல் அதன் உதவியோடு சூரிய ஒளியில் இருந்து
உடலுக்குத் தேவையான சக்தியை தயாரித்துக் கொள்ளும். ப்ராணாயாமம் செய்தால் காயப்பால் அதிகம் சுரக்கும்.

எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது சுரக்கும் இந்த உமிழ்நீரின் சக்தி கிடைக்காமலே
போய்விடுகிறது. சித்தர்கள் உணவை நன்றாக மென்று அரைத்து நீர்போலாக்கி சாப்பிடச் சொன்னார்கள். அப்படிச் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலந்து நமக்கு பலம் கிடைக்கும். நீரை மெதுவாகச் சாப்பிடுவது போலக் குடிக்கச் சொன்னார்கள். அப்படிக் குடிக்கும் போது உமிழ்நீர் நீருடன் கலந்து நமக்கு நல்ல பலன் தரும்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ! உமிழ் நீருக்கு சுவையா என்று. ஆம். நன்கு கவனித்து பாருங்கள். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதன் தன்மையை உற்று நோக்கி, பல இன்னல்களை சரி செய்து கொள்ள
முடியும். வாய் துர்நாற்றம் முதல?் உடலின்
உள் உறுப்புகளில் ஏற்படும் ஆபத்தான
புண்கள்/ கட்டிகள் வரை அனைத்தையும் சரி
செய்யும் வல்லமை உமிழ் நீருக்கு உண்டு. சரி, நாம் செய்ய வேண்டியது என்ன...வழக்கம்
போல, உடல் (உமிழ் நீர்) சொல்வதை கேட்பது
தான்......... அனுபவத்தில், நல்ல தூய நீர்
போல சுவைக்கும் உமிழ் நீர் இருந்தால் உடல் நன்றாக உள்ளது என்று பொருள்.

சில நேரம் புளிப்பாக, கசப்பாக இருக்கும். அந்த நேரங்களில், உணவை, முக்கியமாக சமைத்த உணவை தவிர்த்து, நல்ல பழங்கள் அல்லது நீர் அருந்தினாலே போதுமானது. அடுத்த வேளைக்குள்ளாக அந்த சுவையுணர்வு மாறி விடும். பசி உணர்வு அறிந்து உணவு உண்ண இயலாதவர்கள், உமிழ் நீரின் சுவை உணர்வு அறிந்து அதற்கேற்றார் போல் உணவு உண்ணலாம். பூச்சி மருந்துகள், இராசாயன உரங்களுக்கு பயந்து பழங்களை தவிர்ப்பவர்களுக்கு ஒரு செய்தி.

அதிக பட்சம் 10% இரசாயனம் என்றாலும் கூட, மீதி 90% இயற்கை பழங்களில் உள்ளது. அதை தவிர்த்தால், பிறகு 100% இரசாயனம் கொண்ட மருந்துகளை உண்ண நேரிடலாம்....

எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய
பலகைகளை நாம் பல இடங்களில்
பார்த்திருப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது
உணவை செரிப்பதற்கும், வாயின் உள்
பகுதியையும், தொண்டைக் குழியையும்
ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது
வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை
உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.
உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என
சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை
உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை
ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும்
உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள்
உள்ளன.
1. பரோடிட் சுரப்பி
2. சப்மாண்டிபுலர் சுரப்பி
3. சப்லிங்குவல் சுரப்பி

பரோடிட் சுரப்பி
*****************
இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது.
இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின்
உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு
மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள்
உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ்
நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில்
நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம்
சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி
************************
இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே
அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின்
அடிப் பகுதியில் துவாரங்களாக
அமைந்துள்ளன.

சப்லிங்குவில் சுரப்பி
***********************
கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும்
அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய்
முழுவதும் அமைந்துள்ளன.

உமிழ்நீரின் தன்மைகள்
*************************

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில்
ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு
மாறுபடுகிறது..

உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.

நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.

உணவை நன்கு மென்று சாப்பிட்டால்
நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.

உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள்
உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி,
தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது.

வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும்
உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும்,
அதிகரித்தாலும் கடினத் தன்மை
அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.

சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும்
காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே
துப்புவார்கள்.

உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப்
படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி
காக்க சுரக்கும் அமிர்த நீராகும்.
எனவே உணவைக் குடியுங்கள்.
நீரைச் சாப்பிடுங்கள்.
பான்பராக், புகையிலைப் பொருள்களை
தவிர்ப்போம்.

Tuesday, April 17, 2018

தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?


"குமிழி"- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?

மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை? அவர்களின் மதகுகளில் மதிமயங்கி, ஏரி குளங்களில் இருந்து குமிழிகளை ஒழித்துவிட்டோமா?

ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழை, வாய்க்கால், ஓடைகளின் வழியே நீர்வரும்போது நீரோடு, களிம்பும், வண்டலும் சேர்ந்தே வரும். 

நீர்நிலைகள் தூர்ந்து போவதற்கு இது முக்கியமான காரணம். இதற்கு தீர்வு என்ன? தமிழரிடம் தீர்வு தெளிவாகவே இருந்தன.

மதகுகள் நீரை வெளியேற்றும் வேலையைச்செய்யும். குமிழிகள், நீரை வெளியேற்றுவதோடு, ஏரி, குளம், கண்மாய்களுக்குள் வாய்க்கால்களில் வந்துவிழும் வண்டல்களையும் அகற்றிவிடும். 

இந்தக்குமிழிப்பொறியியலை புரிந்துகொள்ளவேண்டுமானால், பண்டிதர் மணி.மாறனின் "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" என்ற ஆய்வுக்கட்டுரையை படிக்கவேண்டும்.

பாசனக்கால்வாய்களுக்கு தண்ணீரைத்திறந்துவிடும் பண்டைய தமிழ்ப்பொறி "குமிழி" ஆகும். குமிழிகள் ஏரிக்கரையில் மதகுகளைப்போல அமைக்கப்படுவதில்லை. ஏரிக்கரையிலிருந்து 200-300 அடிகள் தள்ளி
ஏரிக்குள்ளே அமைக்கப்படுவது குமிழி. இன்னும் உள்ளே இருந்தாலும் வியப்பில்லை. ஏரியின் அமைப்பைப்பொறுத்தது இந்த இடைவெளி. ஒவ்வொரு பாசனக்கால்வாய்க்கும் ஒரு குமிழி இருக்கும். கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப்பொறுத்து குமிழிகளின் எண்ணிக்கை கூடவும் இருக்கும். ( 1:1 அல்லது M:1)

ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கற்தளம் அமைத்து, அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டியை வடிவமைப்பார்கள். தொட்டியின் மேற்பாகத்தில் நீர் போவதற்கான பெரிய "நீரோடித்துளை" இருக்கும். தொட்டிக்கடியில் அதே அளவில் துளைபோட்டு, அதனை சுரங்கக்கால்வாயால், ஏரிக்கு வெளியில் இருக்கும் பாசனக்கால்வாயோடு இணைத்துவிடுவர்.

தொட்டிக்குள் நீர்போவதற்கான துளையை மூடவும், தேவையான அளவு திறக்கவும் பயன்படும் 

தூம்புக்கல்லை ( conical stone valve) மேலும் கீழும் இயக்குமாறு கற்சட்டகம் உண்டு. இதுவரை, குமிழி செய்வதெல்லாம் மேலைநாட்டு மதகைப்போலத்தான்.
படத்தில், அந்தக்கற்தொட்டியின் பக்கவாட்டிலே மூன்று துளைகள் இருக்கின்றன பாருங்கள், அதுதான் நமது சிறப்பு. அந்தச்சிறுதுளைகளுக்கு "சேறோடித்துளை" என்று பெயர்.

பாசனக்கால்வாய்க்கு நீர் திறக்கும்போது என்னவாகும்? தொட்டியின் மேலேயுள்ள நீரோடித்துளையை அடைத்துக்கொண்டிருக்கும் தூம்புக்கல்லை தூக்குவார்கள். நிறைய வேண்டுமெனில் முழுதாகவும்,
குறைவாக நீர் அனுப்பும்போது சிறிய அளவிலும் தூம்பை தூக்குவார்கள் அல்லவா? ஏரிக்கடியில் இருக்கின்ற இந்த அமைப்பில், ஏரியின் நீர்மட்டத்திற்கேற்ற அழுத்தத்தில் நீரோடித்துளைவழியே நீ சுழித்துக்கொண்டு ஓடுமல்லவா? ஏரிக்கடியில் சிறுதுளை என்றால் சுழலின் வேகத்தை கேட்கவா வேண்டும்? சுரங்கக்கால்வாய் வழியே ஏரிக்குவெளியே உள்ள பாசனக்கால்வாயை நீர் சென்று சேர்ந்துவிடும்.

நீரோடித்துளை வழியே நீர் சுழித்தோடும் வேகத்தில், பக்கவாட்டில் உள்ள சேறோடித்துளைவழியே, ஏரியின் அடிமட்டத்தில் இருக்கும் கலங்கியசேறு இழுபடும். இந்தச்சேறும் நீரோடு சேர்ந்து பாசனக்கால்வாய்க்குச்சென்றுவிடும்.

இந்தச்சேறு அடியிலேயே தங்கித்தங்கி வலுவடைவதாற்றான் ஏரி தூர்ந்துபோகிறது. நீரைவிட சேறு அடர்த்தியில் அதிகமென்பதால் அடியில் தங்குவது நாம் நன்கறிந்ததே. அதை அவ்வப்போது இழுத்து, தன்னியக்கமாக, இயல்பாக, நிகழ்நேரத்தில் வெளியேற்றுவதுதான் தமிழர்களின் குமிழிப்பொறியியல். (it is a real-time disilting system). எப்போது ஏரியிலே நீர் வற்றும் என்று ஆண்டுக்கணக்கில் காத்திராமல், அவ்வப்போது, தூரை வெளியேற்றிவிட்டதால் நீரும் வளமும் மிகுந்திருந்தன 

பண்டைய தமிழகத்தில்.
இந்த வண்டல், சேறு என்பன, வயலுக்கு உரமாகவும் பயன்பட்டன. குமிழிகள் மதகாகவும், சேறோட்டும் பொறியாகவும் பயன்பட்டன. ஆனால், மேலைநாட்டுமதகுகளில் மதிமயங்கிப்போனதால் குமிழிகளை ஒழித்துக்கட்டி புதுமை என்ற பெயரில் ஏரிகளிலும் மதகுகளை வைத்துக்கொண்டோம். 

விளைவு, ஏரி, குளம், கண்மாய், ஊரணி, குட்டை, ஏந்தல் போன்ற எல்லா நீர்நிலைகளும் தூரேறிப்போயின.
தூர்வாருதல் என்பதனை வருடாவருடம் செய்துகொண்டே இருக்கமுடியாது. அப்படியே செய்தாலும், ஒரு சிறு அளவிற்கு, வயலுக்கு வரப்பு வெட்டுவோமே (அல்லது சீர்படுத்தல்) அந்தளவில் பேணப்படுவதுவதாகவே இருக்கமுடியும். 

இன்றைக்குப்பெய்திருக்கும் மழையும், ஏரி, குளங்களை நீரால் மட்டும் நிரப்பவில்லை; சேறாலும்தான்?
இந்தச்சேற்றை எப்போது வெளியேற்றுவோம்? ஏரிகளிலும், குளங்களிலும் இருக்கும் மதகுகளை ஒழித்துவிட்டு, தமிழ்க்குமிழிகளை கட்டமைக்கவேண்டும்.

நீர்நிலைகளின், வெளிப்புறத்தை வீடுகளாலும், நிறுவனங்களாலும் கைப்பற்றினோம். நீர்நிலைகளின் அடிமட்டத்தில் இருந்த குமிழிகளை தொலைத்துக்கட்டினோம். கழிவுகளை நீர்நிலைகளில் செலுத்தினோம். நாகரிகத்தையும் இழந்தோம். தொன்ம அறிவையும் இழந்தோம். தொன்மத்தையாவது மீட்போம். இருக்கும் ஏரிகளைக்காப்போம். நமது பழம் அறிவியலை மீட்போம்.

கட்டுரை: நாக.இளங்கோவன். மூலமும், படமும்: "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" - ஆய்வுக்கட்டுரை, தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன், சரசுவதிமகால் (வெளியீடும்)

Wednesday, March 28, 2018

USB bacteria களின் அதிசய செய்தி





உயிர்ப் பதிவு!

பயணம் செய்வதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும், நானே காரை நெடுந்தூரம் ஓட்டிச் செல்வதென்றால்… ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மாலை நேரம், வாகனங்கள் குறைந்த நெடுஞ்சாலையில், இரைச்சல்கள் இல்லாத தனிமைச் சூழலில் காரோட்டிச் செல்வது யாருக்குத்தான் பிடிக்காது..? டாஷ்போர்ட்டில் ஒட்டப்பட்டிருக்கும் வாசனை அட்டையிலிருந்து கிளம்பிவரும் மெல்லிய வாசனையுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டு மிகையொலியுடன் ஒலிக்க, அதை உரக்கப் பாடியபடி பயணம் செய்வது சொர்க்கம். பாடும்போது, என் குரல் அண்டங்காக்காய் கத்துவதுபோல இருந்தாலும், ரஹ்மானின் இசையிலிருந்து வரும் கிதார் கம்பிகளின் அதிர்வுகளும், வழியும் பியானோ பின்னொலியும், அதிரும் தாளமும், பிரபலப் பாடகியாகவே என்னை நினைக்க வைத்துவிடும்.

ஒவ்வொரு முறையும் நான் காரில் ஏறுவதற்குக் கதவைத் திறக்கும்போது, ‚இந்தச் சுகமான அனுபவத்தை ரசிக்கப் போகின்றேன்‘ என்ற நினைவுடனே காரில் நுழைந்து இயக்க ஆரம்பிப்பேன். ஆனால்… எங்கே அந்த யூஎஸ்பி பதிவுத் தகடு (USB Stick)? வழக்கமாக இந்தக் கைப்பையில்தானே வைத்திருப்பேன்..? வீட்டில் இருக்கும்போது அதைப் பயன்படுத்தினேனல்லவா, மீண்டும் கைப்பையினுள் வைத்தேனா..? எல்லாப் பெண்களும் வைத்திருப்பது போலவே, நானும் ஒரு பெரிய கைப்பையை வைத்திருக்கிறேன். பெண்களின் கைப்பைகளில், இந்த உலகத்தில் அவர்களுக்குத் தேவையான பணப்பை, அழகு சாதனங்கள், திறப்புகள், கைபேசி, பேனா, சீப்பு, கிளிப், பர்ஃப்யூம், அது இது என்று எல்லாமே இருக்கும். கை வைத்துத் தேடத் தேட, எல்லாவற்றையும் வழங்கும் காமதேனு அது. ஆனால், அவசரத்தில் நீங்கள் எதைத் தேடுவீர்களோ, அது அங்கே இருக்காது. எத்தனை தேடினாலும் உங்கள் கைகளில் கிடைக்காது. இன்று நான் தேடிக்கொண்டிருக்கும் யூஎஸ்பி பதிவுதத் தகடுபோல. எதுவும் இல்லாமல் காரில் பயணம் செய்ய முடியும் என்னால், பாடல் இல்லாமல்…. ம்ஹூம், முடியவே முடியாது. தினமும் கார், வீடு என்று யூஎஸ்பி பதிவுத் தகட்டை அங்குமிங்கும் கொண்டு செல்வதைவிட, சொந்தமாகப் பதிவுதத் தகட்டையே நாம் கொண்டு செல்வது நல்லதில்லையா..? சொந்தமான பதிவுத் தகடென்று நான் சொல்வது எந்தவொரு எலெக்ட்ரானிக் சாதனத்தையும் அல்ல. ஒரு யூஎஸ்பி பதிவுத் தகடுபோல, நம் உடலினில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்..? அதுவும் உயிர்வாழும் பதிவுத் தகடாக அது இருந்தால் எப்படி இருக்கும்..? ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் கட்டுரை சொல்லப் போவது அதைத்தான். உயிருள்ள யூஎஸ்பி பதிவுத் தகடொன்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
நமது உடலில் இருக்கும் அனைத்து திசுக்களையும் (Cells) விடப் பத்து மடங்குகள் அதிகமான பாக்டீரியாக்களும், பிற நுண்ணுயிரிகளும் நம் உடம்பில் வாழ்கின்றன. கிட்டத்தட்ட, 3.9X10^13 அளவில் பிற நுண்ணுயிரிகள் நம் உடம்புக்குக்கு உள்ளேயும், உடம்பின் வெளி மேற்பரப்பிலும் வாழ்கின்றன. இவை ஒரே மாதிரியான உயிரிகள் அல்ல. வெவ்வேறு விதங்களில் காணப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் அவற்றிற்கெனத் தனித்தனித் தொழிற்பாடுகள் இருக்கின்றன. பாக்டீயாக்கள் (Bacteria) என்றாலே கெட்டவைதான் என்று பெரும்பாண்மையான மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்தக் கூற்று உண்மையானதல்ல. நம் உடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாக்டீரியாக்களில் பெரும்பாண்மையானவை நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானவை. நம் உடலின் ஒரு பகுதியாகவே அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சொல்லப் போனால், அவை இல்லாவிட்டால் நாம் உயிர் பிழைப்பதே கஷ்டமானது.

பாக்டீரியா என்றால் பாக்டீரியாதானே என்றுதான் நினைத்துக்கொள்கிறோம். பாக்டீரியாக்களிலேயே ஆயிரக்கணக்கான இனங்கள் உண்டு. இவை நம் தோலிலும், மூக்கிலும், வாயிலும், கழிவுறுப்புகளிலும், வயிற்றுக்குள்ளும் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. உங்கள் இடது காதின் பின்மடலில் மட்டும் 2363 விதமான பாக்டீரியாக்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? உங்கள் முழங்கையில் 3632 வகையான பாக்டீரியாக்கள் கோடி கோடியாக வாழ்கின்றன. மிக அதிகமான விதங்களில் பாக்டீரியாக்கள் வயிற்றின் செரிமானத் தொகுதியிலேயே வசிக்கின்றன. அவற்றின் சுரப்புகள் உணவுச் செரிமானத்திற்கு மிகவும் முக்கியமானவை. அவை மட்டுமில்லாமல், வைட்டமின்களையும், கொழுப்பு அமிலங்களையும் (Short Chain Fatty Acids) அவை சுரக்கின்றன. தவறான உணவை உண்பதும், நோய்த் தொற்றுகளும், மன அழுத்தங்களும், மருந்துகள்/மாத்திரைகளின் பக்கவிளைவுகளும், இந்த நன்மை செய்யும் பாக்டீயாக்களை அழிக்கும் காரணிகளாகின்றன. இந்த பாக்டீரியா வகைகளில் முக்கியமான ஒன்றுதான் ஈகோலி (Eschericia coli) என்னும் பாக்டீரியா. பாக்டீரியாக்கள், நம் வயிற்றினுள் வாழ்ந்துகொண்டு, கெட்ட நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. இதைப்பற்றி பின்னர் நான் விரிவாக எழுதுகிறேன். ஆனால் இப்போது, பார்க்க இருக்கும் சம்பவத்துக்கு வரலாம்.

ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் சேத் ஷிப்மான் (Seth Shipman) என்பவரின் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த ஆண்டு (2017) ஒரு ஆச்சரியமான ஆராய்ச்சியைச் செய்தனர். செய்தது மட்டும் இல்லாமல், அதில் பெரும்பகுதி வெற்றியும் கண்டனர். நாம் ஒரு கணணி வன்தகட்டிலோ (Hard disc), யூஎஸ்பி தகட்டிலோ தரவுகளைச் (Data) சேகரிப்பதுபோல, உயிர் வாழும் பாக்டீரியாக்களில் சேகரிக்க முயற்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் முதல் படியாக, ஈகோலி பாக்டீரியாவின் டிஎன்ஏ யினுள் GIF இயங்கு படமொன்றைப் பதிவுசெய்து சேகரித்தார்கள். ஒரு பந்தயக் குதிரை ஓடுவது போன்ற இயங்கு படம். அவர்களின் இந்த முயற்சி உலகமே வியக்குமளவிற்கு வெற்றி பெற்றது. மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் (gene & editing system CRISPR) மூலமாகவே இந்த ஆராய்ச்சியைச் செய்து முடித்தார்கள்.

நமது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை, வைரஸ் கிருமிகள் தாக்கும்போது, பாக்டீரியாக்கள் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும். வைரஸ்களை நடுவே பிளந்து, அவற்றின் மரபணுப் பதிவுகளில் (DNA), தங்களின் மரபணுப் பதிவுகளைப் பாக்டீரியாக்கள் பதிவு செய்துவிடுகின்றன. அதாவது, காப்பி பேஸ்ட் செய்வது போல. இதனால், வைரஸ்களின் மரபணுக்கள், பாக்டீரியாக்களின் பகுதிகள் போல ஆகிவிடுகின்றன. இது, வைரஸ்களின் படையெடுப்பின் தீவிரத்தை வெகுவாகக் குறைத்து விடுகின்றன. இதனால், நோய் எதிர்ப்பை நம் உடல் இதனால் இலகுவாகக் கைக்கொள்கின்றது. வைரஸ்களின் தாக்குதல் செயல்பாடுகளை செய்தியாகத் தாங்கிய அவற்றின் மரபணுக்களில், அச்செய்திகள் நீக்கப்பட்டு, வேறு வகையான தீமையற்ற செய்திகள் பதிவாகின்றன. பாக்டீரியாக்களின் இந்தப் பதிவுசெய்யும் செயல்முறையை வைத்துக்கொண்டே, ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் அந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியுமாகியது.

இதுவரை இந்த ஆராய்ச்சி மூலமாக, சிறியளவு பிக்செல் (Pixels) கொண்ட கருப்பு வெள்ளை இயங்கு படமொன்றையே (GIF) ஈகோலி பாக்டீரியாக்களில் பதிவு செய்திருக்கிறார்கள். 36X26 பிக்செல்கள் படமாக அது இருந்தது. இவற்றின் அளவு படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும். இந்த ஆராய்ச்சி வேகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில், ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் பத்தாம் பகுதியை நம் தோல்களில் பதிவுசெய்து நாம் பார்க்கப் போகும் நிலைக்கான வாய்ப்புகள் மிகஅதிகமாகவே இருக்கிறது.

நன்றி 

யாலு சிவா

Thursday, January 11, 2018

இந்தச் சுவரைத் தகர்க்க பீரங்கிகளாலேயே முடியாது! - ராகுல் டிராவிட் பிறந்தநாள் பதிவு



ஆகஸ்ட் 24, 2007. பிரிஸ்டோல் நகரில் இந்தியா, இங்கிலாந்து அணிகளின் மோதல். பிளின்டாபின் பௌன்ஸரில் 99 ரன்களில் வெளியேறுகிறார் சச்சின். வழக்கம்போல் எல்லோரும் மூட்அவுட். ஹாஸ்டலில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலரும் எழுந்து சென்றுவிட்டனர். சச்சின் அவுட் ஆனதும் வழக்கமாக நடப்பதுதானே! 'எழுந்து போய்விடலாமா...?' எனக்குள்ளும் கேள்வி. "கோவில்கள் கட்டப்படுவது அங்குள்ள சிற்பங்களை, கட்டடக் கலையை ரசிக்க. அந்தக் கலைஞனின் திறமையை அறிந்துகொள்ள... கடவுளை மட்டும் பார்த்துத் திரும்புவன் முட்டாள்!" - எங்கள் தமிழ் வாத்தியார் சொன்னது நினைவிருந்தது. எழுந்து போகவில்லை. காத்திருந்தேன், அந்தக் கலைஞனுக்காக...!
கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் பெவிலியன் திரும்பிக்கொண்டிருக்கிறார். 19-ம் நம்பர் ஜெர்சி... ராகுல் டிராவிட்... இதற்காகத்தான் காத்திருந்தேன். கீப்பரின் கைநோக்கிச் செல்லும் பந்தை சடாரென்று அடிக்கும் அந்த லேட் கட், யார்க்கர் பந்தை அசால்டாக லெக் சைடில் செய்யும் ஃப்ளிக், அதற்கும் மேல்... மார்பளவு எழுந்துவரும் பந்தை, பேக்ஃபூட் வைத்து, கால்களை உந்தி, க்ரீசுக்கு அருகிலேயே வைக்கும் அந்த ஸ்ட்ரோக்...! கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கலைஞனைக் காணாமல் எழுந்துபோனால் நான் முட்டாள்தானே! கிரிக்கெட்டைப் பார்ப்பவர்களுக்கு கெய்ல், மெக்கல்லம் போன்றவர்கள் அழகு. ஆனால், கிரிக்கெட்டை நேசிப்பவனுக்கு டிராவிட்தானே பேரழகு!

சச்சின் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்டு வெளியேற, தன் கிரிக்கெட்டின் வாழ்வின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸை ஆடினார் டிராவிட். வழக்கம்போல் Aerial ஷாட்கள் அதிகம் இல்லை. ஆனால், 63 பந்துகளில் 92 ரன்கள். 11 பவுண்டரி, 1 சிக்ஸர்தான். ஓடி எடுத்த அந்த 43 ரன்களும்கூட கிரிக்கெட் பாடம் எடுத்தது. வழக்கமாக பந்துக்கும் குறைவாகவே ரன் எடுக்கும் டிராவிட், அன்று ஆடிய ஆட்டம் பலருக்கும் அதிர்ச்சி. உண்மையில் அழகும், அதிர்ச்சியும் நிறைந்ததுதானே டிராவிட்டின் ஆட்டம்! நியூசிலாந்துடனான போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 22 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து அசத்தியவர் அல்லவா அவர்.




"சுவர் மட்டுமல்ல... அவரை ஒரு கோட்டை என்றும் சொல்லலாம். களத்தில் டிராவிட் நிலைத்து நின்றுவிட்டால், 12 பீரங்கிகளை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்தால்தான் அந்தக் கோட்டையைத் தகர்க்க முடியும்" என்றார் பௌலிங் ஜாம்பவான் ஷேன் வார்னே. கொஞ்சமும் மிகையில்லாத வார்த்தைகள். மொத்த அணியும் பெவிலியின் நோக்கி நடந்த போட்டிகளில், ஒற்றை ஆளாக நின்று போராடிய களங்கள் எத்தனை! ஸ்கோர்போர்டில் இந்தியா என்பதும் டிராவிட் என்பதும் ஒரேமாதிரி தெரியும். தாறுமாறாக ஸ்பின் ஆகட்டும், ஸ்விங் ஆகட்டும், பௌன்ஸ் ஆகட்டும், 160 கிலோமீட்டர் வேகத்தில் மார்பை நோக்கி வரட்டும்... டிராவிட் தயங்கியதுமில்லை, தடுமாறியதுமில்லை. ஒவ்வொரு பந்துக்கும் அவரிடம் பதிலுண்டு.
பந்துகளை அடிப்பவர்களெல்லாம் தேர்ந்த பேட்ஸ்மேன் இல்லை.

அடிக்காமல் விடத் தெரிந்தவரே சிறந்த பேட்ஸ்மேன். எந்த பந்து இன்ஸ்விங் ஆகி வெளியே வரும், எந்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும், ஸ்பின்னாகி வெளியே செல்லுமா, இல்லை ஆர்ம் பாலாக உள்ளே வருமா..? ஒரு பந்து பிட்சாகி தன்னை நோக்கி வரும் அந்த மைக்ரோ விநாடியில் இதையெல்லாம் சரியாகக் கணிக்கும் ஒரு பேட்ஸ்மேனால் மட்டுமே நம்பிக்கையோடு பந்தை அடிக்காமல் விடமுடியும். டிராவிட் - இதில் டிஸ்டிங்ஷன் வாங்கியவர். "டிராவிட்டின் தடுப்பு அரணைத் தாண்டி அவரை அவுட்டாக்குவது மிகவும் கடினம். மற்ற வீரர்களைப்போல் அவர் அதிகமாக பந்தை அடிக்க முற்படுவதில்லை. எப்போது ஒரு பேட்ஸ்மேன் குறைவான பந்துகளை மட்டும் அடிக்கிறாரோ, அப்போது அவரை அவுட்டாக்குவது சிரமம். ஏனெனில், அவர்கள் குறைந்த தவறுகளே செய்வார்கள்" என்று ஷோயப் அக்தர் ஒருமுறை டிராவிட் பற்றிச் சொல்லியிருந்தார்.

 அவருக்கு மட்டுமல்ல, வார்னேவுக்கு மட்டுமல்ல... ஜாம்பவான்களாய் திகழ்ந்த பௌலர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தச் சுவர் சிம்மசொப்பனம்!
அதுவும் அக்தர் ஓவரில் டிராவிட் ஆடுவதெல்லாம்...! லாங் ஆன் ஃபீல்டருக்குக் கைகொடுத்துவிட்டு, பௌண்டரி ரோப்புக்கு அருகிலிருந்து வெறிகொண்டு ஓடிவந்து 150+ வேகத்தில் வீசுவார் அக்தர். எல்.பாலாஜியே அவரது ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்டிருக்கிறார். வேகம் அப்படி. அந்த வேகத்துக்கு யார் அடித்தாலும், பந்து பறந்துவிடும். டிஃபன்ஸிவ் ஷாட் ஆடினாலே சர்க்கிள் ஃபீல்டரை அடையும். அப்படிப்பட்ட பந்தை, க்ரீஸுக்கு அருகிலேயே அடக்கிவைப்பார் டிராவிட். பந்து பேட்டில் பட்டது போலும் இருக்கும், படாதது போலும் இருக்கும். அதுதான் டிராவிட்டின் ஸ்பெஷல். ஒரு ஷாட்டால் பந்தின் pace-ஐக் குறைக்கும் வித்தை கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தவனுக்கே வராது. But the wall can!



அதையெல்லாம்விட, அந்த லேட் கட்...! ரிவர்ஸ் ஸ்வீப், தில்ஸ்கூப் எதுவும் அதன் பக்கத்தில் நிற்க முடியாது. அந்த ஷாட்டை பலரும் ஆடியிருக்கின்றனர்.


ஆனால், டிராவிட்டைப் போல் எவராலும் ஆடியதில்லை. ஏனெனில், அந்த ஷாட் ரன்னுக்கானது இல்லை, ரசிப்பதற்கானது. வலது காலை க்ரீசுக்குப் பின்னே பலமாக வைத்து, இடது காலை சற்று மடக்கி, உதடுகளை உள்ளே மடக்கிக்கொண்டு பந்தை அடித்துவிட்டு, அது போகும் திசையை அவர் பார்ப்பார். 'inverted Y' போல், அதைப் பார்ப்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். மாயக் கரங்கள் கொண்ட ஓவியன் வரைவதெல்லாம் அழகாகத்தானே இருக்கும்.


ரசிப்பதைவிட, அவரிடம் கற்றுக்கொள்ள இருக்கும் விஷயங்கள் ஏராளம்.


 'நீ நிற்கும் சூழல் எதுவாக இருந்தால் என்ன? உன் எதிரில் நிற்பவன் யாராக இருந்தால் என்ன? அவன் கையில் இருக்கும் ஆயுதம் எதுவாக இருந்தால் என்ன? உன் வெற்றியைத் தீர்மானிப்பது நீ மட்டுமே'...

இதை நான் கற்றுக்கொண்டது அவரிடமிருந்துதான். எந்த மைதானமாக இருக்கட்டும்... எந்த எதிரணியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... எத்தனை விக்கெட்டுகள் வேண்டுமானாலும் வீழ்ந்திருக்கட்டும்...எந்த நெருக்கடியும் டிராவிட்டை வீழ்த்தியது இல்லை. அவை எதுவும் அவரது உறுதியை அசைத்துக்கூடப் பார்த்தது இல்லை.



இரண்டு நாள்கள் முழுமையாக நின்று அணியைக் காப்பாற்றியிருக்கிறார். டெய்ல் எண்டர்களோடு சேர்ந்து சிறந்த பார்ட்னர்ஷிப்கள் அமைத்திருக்கிறார். இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறும் வெளிநாட்டு ஆடுகளங்களில் எதிரணி பௌலரை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

 அவர் அவுட்டாக வேண்டுமா என்பதையும் அவர்தான் முடிவு செய்யவேண்டும். அவரிடம் இருக்கும் உறுதி நம்மை உலுக்கிவிடும். "நம் வாழ்வில் நாம் பார்ப்பதெல்லாம் ஆக்ரோஷம் கிடையாது. உண்மையான ஆக்ரோஷத்தைக் காணவேண்டுமென்றால் டிராவிட்டின் கண்களைப் பாருங்கள்" என்றார் மேத்யூ ஹெய்டன். அப்படி ஒரு தீ அந்தக் கண்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும். அதுதான் அவர் ஜாம்பவான் ஆகக் காரணம்.
எந்தச் சூழலாக இருந்தாலும், அணிக்காக இவர் காட்டும் அர்ப்பணிப்புதான் அனைவரும் அவரை மதிக்கக் காரணம். 'முதல் பாலே விக்கெட் போயிருச்சா? நான் இருக்கேன். ஃபாரீன் சாயிலா? நான் இருக்கேன். மூணு செஷன் நிண்ணு மேட்ச டிரா பண்ணணுமா? நான் இருக்கேன். ஃபாலோ ஆன் ஆயிடுச்சா? நான் இருக்கேன். முதல் ஸ்லிப்ல நிக்கணுமா? நான் இருக்கேன். விக்கெட் கீப்பர் இல்லையா? நான் இருக்கேன். அட, ஜெயிக்க 22 பந்துக்கு 50 ரன் வேணுமா? அதுக்கும் நான் இருக்கேன்' என அணிக்குத் தேவைப்பட்டபோதெல்லாம், திணறியபோதெல்லாம் ஆக்ஸிஜனாய் இருந்தவர் டிராவிட்! "அணிக்குத் தேவை என்று கண்ணாடியின்மேல் நடக்கச் சொன்னால், டிராவிட் நிச்சயம் அணிக்காக அதைச் செய்வார்" என்றொருமுறை புகழ்ந்தார் நவ்ஜோத் சிங் சித்து. அது புகழ்ச்சியில்லை. நிதர்சனம்.



'எப்படி இந்த மனிதன் மட்டும் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்?' - இந்தக் கேள்வி கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் எழுந்திருக்கும். அதற்கான பதில் அவருக்கு மட்டுமே தெரியும். ஒரு ஐ.பி.எல் போட்டிக்குப் பின்னர் தொப்பியை வீசியெறிந்தது என்றுமே நம்மால் மறக்க முடியாது. ஏனெனில், அது அரிதிலும் அரிதான நிகழ்வு. நாம் கோபப்படும்போது, பொறுமை இழக்கும்போதெல்லாம் அவரை நினைத்தால் அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும். கொல்கத்தா, அடிலெய்டு போன்ற இடங்களில் அவர் ஆடிய ஆட்டத்தின் வீடியோக்களைப் பார்த்தால், இன்றும் கூட அவர் மீதான வியப்பு குறைவதில்லை. அந்த வியப்பு, பொறுமை என்ற ஆயுதத்தின் மதிப்பைப் புரிய வைக்கிறது.

கவாஸ்கர், சச்சின், கங்குலி, தோனி, கோலி என அளவு கடந்து கொண்டாடப்பட்ட வீரர்கள் அனைவரையும் மூர்க்கத்தனமாக வெறுத்தவர்களும் நம் நாட்டில் உண்டு. இவ்வளவு ஏன், கபில்தேவை விமர்சிப்பவர்களும் இங்குண்டு. ஆனால், இவரை வெறுக்கும் ஆளை இதுவரை கண்டதில்லை. வெறுத்திட முடியுமா? அளவுகடந்த திறமை, ஏராளமான சாதனைகள், குறைவில்லாத வெற்றிகள், பொருள்... அனைத்தும் சம்பாதித்தவரின் கண்களில் திமிரோ, ஆணவமோ ஒருமுறைகூட எட்டிப் பார்த்ததில்லை. அவர் அரைசதம் அடித்தால், ஹெல்மெட்டின் உயரத்தைக் கூடத் தாண்டாத மாதிரிதான் பேட்டை உயர்த்துவார். அப்படியொரு மனிதனை யாரால் வெறுக்க முடியும்?





"நான் இந்திய அணிக்காக 604 முறை விளையாடியுள்ளேன். அதில் 410 முறை அரைசதத்தைக் கடந்ததில்லை. வெற்றிகளைவிட, நான் சந்தித்த தோல்விகளே அதிகம். நான் வெற்றியாளன் என்பதைவிட, தோற்றவன்தான். அதனால், எனக்குத் தோல்விகள் பற்றிப் பேசத் தகுதி இருக்கிறது" என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசினார் டிராவிட். இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பலகோடி பேரின் ரோல் மாடல், கிரிக்கெட் வீரர்களே கொண்டாடும் ஜாம்பவான், பத்மபூஷண்... அவர் சொன்ன வார்த்தைகள் அவை. டிராவிட்டை மொத்த உலகமும் நேசிக்கக் காரணம் இதுதான். இந்தச் சுவரின் உயரம் எவரும் அடைய முடியாதது!


Thanks for

https://m.dailyhunt.in/news/india/tamil/vikatan-epaper-vika/inthas+suvaraith+takarkka+beerangikalaleye+mudiyathu+rakul+diravid+biranthanal+bathivu+happybirthdaydravid-newsid-79665717