Wednesday, September 28, 2016

நீங்கள் பருகும் நீரில் எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா?



ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஆனால்
ஒரே ஒரு பூமி

நீர், உயிர் ஆற்றலின் அடிப்படை வடிவம். நீர் இல்லாத நிலத்தில் உயிர்கள் வாழ்வது இல்லை. நீர் என்பது தாகம் தணிக்கும் பொருள் மட்டும் அல்ல; நீரும் ஓர் உணவுதான். “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்பது, நமது சங்கப்பாடலின் வரி. நீரில் உயிர்கள் இருக்க வேண்டும். அந்த உயிர்கள் யாவும் மனித உடலில் வாழ்ந்து பெருகினால்தான், இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கும். உயிரற்ற நீரை மட்டுமே பருகிக்கொண்டிருந்தால், உடலின் இயக்க ஆற்றல் தடைபடும். உடலுக்கு தேவையான ஊட்டங்கள் கிடைக்காது.
பூமியில் உள்ள பல வகையான நீரும் அப்புறப்படுத்தப்பட்டு, எல்லா இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பப்பட்டால், ஒரே ஒரு உயிர்கூட வாழாது. மனித உடலும் இப்படிதான், சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே தொடர்ந்து பருகிக்கொண்டிருந்தால், உயிர் ஆற்றலை இழக்கத் தொடங்கிவிடுகின்றது.
தூய்மையான குடிநீர் என்ற கருத்து மிகவும் தேவையானது. இந்தக் கருத்தை வணிகமயமாக மாற்றிய நிறுவனங்கள், தூய்மை என்ற இடத்தில் சுத்திகரிக்கப்பட்ட என்ற சொல்லைத் திணித்துவிட்டன.இது வெறும் சொல் விளையாட்டு அல்ல; மிக மோசமான விளைவுகளைத் தருகிற உயிர் விளையாட்டு.
மழைதான் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்குமான நீர் ஆதாரம். ஆறு, ஏரி, குளம், குட்டை, ஊற்று, சுனை, ஓடை, காட்டாறு போன்ற எல்லா வடிவங்களிலும் மழைநீர்தான் நமக்கும் நம்முடன் வாழும் பிற உயிரினங்களுக்கும் உணவாக வேண்டும். இந்த நீரில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இருக்கும். நுண்ணுயிரிகள் இல்லாத நீர் என எதுவும் இயற்கையில் இல்லை. சரியாக பராமரிக்கப்படாத நீரில் இயற்கையான அளவை விட அதிகமான நுண்ணுயிரிகள் பெறுகிவிடும். இது பாதுகாப்பாற்ற குடிநீர். இவ்வாறு நேராத வகையில், குடிநீர் முறையாக பராமரித்தால் போதும்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர், குடிநீர் நிறுவனங்கள் சமூகத்தின் உடல் நலனில் அக்கறை செலுத்த தொடங்கின. நாம் பருகும் ஒவ்வொரு சொட்டு நீரும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என அந்த நிறுவனங்கள் மிகுந்த கவலை கொண்டன. சுத்திகரிக்கப்பட்டநீர் புட்டிகள் சந்தைக்கு வந்தன. நீரில் வாழும் நுண்ணுயிரிகளையெல்லாம் கிருமிகள் என்ற பொதுபெயரால் அந்த நிறுவனங்கள் அழைத்தன. எல்லா நுண்ணுயிரிகளையும் கிருமிகள் என அழைப்பது அறிவியலுக்கு புறம்பானது மட்டுமல்ல, மிக மோசமான பொய்யும்கூட. பொது இடங்களில் கிடைக்கும் எந்த நீரும் கிருமிகளால் நிரம்பியதுதான் என்ற கட்டுக்கதை வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டது.




உணவகங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் இருக்கும் குடிநீர் தரமற்றது என மக்கள் நம்பத் தொடங்கினர்.
முறையான பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இவை தரமான நீராக மாறியிருக்கும். அரசும் அதன் துணை அமைப்புகளும் குடிநீர் நிருவனங்களும் இணைந்து பணியாற்றின. விளைவாக, இப்போது நீங்கள் பருகும் பெரும்பான்மையான குடிநீர் “சுதிகரிக்கப்பட்ட”தாகி விட்டது.
“சுதிகரிப்பு செய்யும் நீரில் உள்ள கிருமிகள்மட்டும் தேடித் தேடி அழிக்கப்படுகின்றனவா அல்லது எல்லா நுண்ணுயிரிகளும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யப்படுகின்றனவா?” என்ற கேள்வியை நீங்கள் கேட்கவேண்டும் ஏனெனில், நுண்ணியிரிகள் மிகமிக குறைவாக உள்ள நீர், மனித உடலை உலுக்கிபோடும் அளவுக்குத் தீமைகளைச் செய்யக்கூடியது. நமது உடலே நுண்ணுயிரிகளின் பிரபஞ்சம்தான். இந்தப் பிரபஞ்சத்துக்குள் நீர் என்னும் உணவின் வழியாகத் தொடர்ந்து கோடானுகோடி உயிரிகள் செல்ல வேண்டும். இது படைப்பின் விதி. இவ்வாறு செல்லும் உயிரி கூட்டத்தில், உடலுக்கு ஒவ்வாத வகையினங்கள் இருந்தால், அவற்றை அழித்து வெளியேற்றுவதற்கு என, எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் நமது உடலுக்குள் உள்ளன.
எச்சில் அவற்றில் மிக முக்கிய பாதுகாப்புக் கவசம். உடலின் மிகச் சிறந்த பாதுகாப்பு எதிர் உயிரி மருந்து(ஆண்டிபயொட்டிக்) எச்சில்தான். இயற்கையான குடிநீரைப் பருகும்போது எச்சில் சுரந்து, இனிமை மிகுந்த சுவை உண்டாகின்றது. புட்டிகளில் அடைத்த நீரை பருகும் போது, அளவுக்கு அதிகமான எச்சில் சுரப்பதையும் அதில் கசப்புச் சுவை மிகுந்திருப்பதையும் உணர்ந்திருப்பீர்கள். உடலுக்கு ஒவ்வாத எந்த உணவையும் பானத்தையும் வாயில் திணிக்கும்போது, எச்சில் சுரப்பு அதிகமாக இருக்கும். உள்ளே நுழையும் ஒவ்வாத பானத்தை அல்லது உணவை உடனடியாகச் சுத்திகரித்து வெளியே துப்பச் செய்யும் பணியை, எச்சில் சுரப்பிகள் செய்கின்றன.
உடல் முழுவதும் இவ்வாறான தற்காப்பு உறுப்புகளும் சுரப்பிகளும் படைக்கப்பட்டுள்ளன. இவையாவும், உயிருள்ள பொருட்களைக் கையாளும் வகையில் உள்ளனவே தவிர, வேதிப்பொருட்களைக் கையாளும் வகையில் அல்ல என்பதே முக்கியமான சேதி. தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்படும் நீரில் கலக்கப்படும் வேதிப்பொருட்களில் குளோரின் முதன்மையானதும் அடிப்படையானதும். இதப் பயன்படுத்தாத சுத்திகரிப்பு நிலையங்களே இருக்காது. அரசு குடிநீர்கூட குளோரின் வழியாகதான் சுத்திகரிக்கப்படுகிறது. குளோரின் பயன்பாட்டினால் மன அழுத்தம், மன பதற்றம், பீதியடைதல் என மூன்று வகையான மன நோய்கள் உருவாகின்றன என நவீன அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. இந்த மனநோய்கள், மோசமான உடல் நோய்களை உருவாக்கும் என்பதும், அந்த நோய்களை ஒரு வரையறைக்குள் அடக்கி பட்டியலிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சமூகத்தில் எல்லா பாவங்களுக்கும் ஒரு வடிகால் உள்ளது. அந்த வடிகாலுக்கு உள்ள மதிப்புமிக்க பெயர், “அனுமதிக்கப்பட்ட அளவு” என்பது. “குடிநீரில் குளோரின் பயன்பாடு புற்றுநோயை உருவாக்குமா? என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், “சுத்திகரிப்பு” நிபுனர்கள் அளிக்கும் விடை, “அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்தினால் குளோரின் பாதுகாப்பானதுதான்” என்பதாக இருக்கும்.
புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரை வாங்கி பருகுகிறீர்கள். நீங்கள் பருகும் நீரில் எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? அது அனுமதிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது எனத் தெரியுமா? உங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்தக் குடிநீரில் கிருமிகள் இல்லை. ஆகவே, இது பாதுகாப்பானது’. கிருமிகளைக் காட்டிலும் கொடூரமான விளைவுகளை வேதி நஞ்சுக்கள் உருவாக்குகின்றன என்பதும், அந்த நஞ்சுக்கள் கலக்கப்பட்ட நீரைத்தான் பருகிக்கொண்டுள்ளோம் என்பதும் நீங்கள் அறியாதவை. ஒரு லிட்டர் நீரில் எவ்வளவு வேதிப்பொருட்கள் கலக்கலாம் என்ற கணக்கை, மிகத்துல்லியமாக எல்லா நிறுவனங்களும் கடைபிடிக்கின்றன என நம்புகிறீர்கள் அல்லவா? இந்த நம்பிக்கை உண்மையாகவே இருக்கட்டும்.  குளோரின் கலக்கப்பட்ட நீரை ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் பருகுவது பாதுகாப்பானது? எத்தனை ஆண்டுகளுக்குப் பருகுவது பாதுகாப்பானது? ஆகிய இரு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிப்பாருங்கள். உங்களுக்கு நீர் வழங்கும் நிறுவனங்களிடம் இந்த கேள்வியைக் கேளுங்கள். பதில் சொல்லவேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் அவர்களுக்கு உள்ளன.
பூமியில் வீசும் கதிர்வீச்சுகளில் அகச்சிவப்பு, புறஊதாக்கதிர்கள் அடிப்படையானவை. குறைந்த வெப்பஆற்றல் செறிவு கொண்டவை, அகச்சிவப்புக்கதிர்கள். மிகை வெப்ப ஆற்றல் செறிவு கொண்டவை புறஊதாக்கதிர்கள். பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் புறஊதாக் கதிர்வீச்சைப் பாய்ச்சிதான் சுத்திகரிப்பு செய்கின்றன. குளத்து நீரின் கீழே படிந்திருப்பவை அகச்சிவப்புக்கதிர்கள். நீரில் மிகக் குறைவான அளவு கதிர்வீச்சு இருப்பது, நுண்ணுயிர் வாழ்க்கைக்கு நல்லது. குளத்து நீர் மாசுபடாதவரை, மனிதர்களும் பருகலாம். அதிக அளவிலான கதிர்வீச்சுகள் எந்த உயிரினத்துக்கும் ஆபத்தானவை தான். குறைந்த அளவு கர்வீச்சுகள் அடங்கிய உணவையும் நீரையும் உட்க்கொள்ளும் வகையில் மனிதன் படைக்கப்பட்டுள்ளோம். இப்போது மிதமிஞ்சிய புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடாக, மிகைக்கதிர்வீச்சுகள் குடிநீரில் செலுத்தப்படுகின்றன.
புற ஊதாக்கதிர்களை நீரில் பாய்ச்சுவது கிருமிகளை மட்டும் தான் அழிக்கும்; அந்த நீரைப் பருகும் மனிதர்களை அழிக்காது என எந்த ஆய்வுகளும் இதுவரை கூறவில்லை.
நீங்கள் பருகும் குடிநீரில் கதிர்வீச்சுக்கள் உள்ளன என்பதையாவது முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா வேதிப்பொருட்களும் பிளாஸ்டிக் உடன் வினைபுரிபவைதான். பிளாஸ்டிகில் அடைக்கப்பட்ட ஒரு சொட்டு நீர் உங்கள் வாயில் விழும்போது, அதில் பல வகையான வேதிப்பொருட்களும் கதிர்வீச்சுகளும் கலந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“ அரசு அனுமதி பெற்ற நிறுவனம் ” தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் போன்ற அறிவுப்புகளின் பின்னால், மறைவான ஒரு உலகம் இருக்கின்றது.
உங்களை வந்தடையும் ஒவ்வொரு நீர் புட்டியையும் அரசு அதிகாரிகள் சோதித்து அனுப்புவதாகவும், உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள் சோதித்து சான்று தருவதாகவும் ஒரு மாயத்தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே நீரை “சுத்திகரிப்பதற்கு” என அமைக்கப்படும் கருவிகளுக்கும், மேல உள்ள அனைத்து விளக்கங்களும் பொருந்தும்.
நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு நன்னீர்தான் உயிர் ஆதாரம். நன்னீர் என்றால், பலகோடி நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய நீர்தான். நீருக்கும் மனிதர்களுக்குமான இயற்கையான உறவை, நிறுவனங்களும் அவற்றை தாங்கிப்பிடிக்கும் தொழில்நுட்பங்களும் சிதைத்துவிட்டன. நமது மரபு, நவீனத்தின் சதிகளை காட்டிலும் வலிமையானது. “மழைநீர்தான் அமுதம்” என்றார் ஆசான் திருவள்ளுவர்.
மழை நீரை சேமிக்கும் தொழில்நுட்பங்கள் இப்போது கூடுதலாக தேவைப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்வோர், நமக்குள் கூட்டமைப்பு ஏற்படுத்தி அனைவருக்கும் பொதுவாக மழை நீர் சேமிப்பில் ஈடுபடலாம். ஏரிகளும் குளங்களும் தூய்மையானவையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தேவையான நேரத்தில் நீரை காய்ச்சிப் பருக வேண்டும்.
வேறுவழியில்லாமல், “சுத்திகரிப்பு”  நீரை பயன்படுத்துவோருக்கு என, சத்துநீர்முடிச்சு ஒன்றைப் பரிந்துரைக்கின்றேன். நன்னாரிவேர், வெட்டிவேர், தேற்றாங்கோட்டைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒரு தூய வெள்ளை துணியில் முடிச்சாக கட்டிவைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் இவையனைத்தும் சிறிய அளவில் இருந்தால் போதும். அனுபவத்தில் அளவுகளைக் கற்றுக்கொளுங்கள். “சுத்திகரிக்கப்பட்ட” நீரை, பானையில் ஊற்றிவைத்து, அந்த முடிச்சை உள்ளே போட்டுவிடுங்கள். ஓரிரு மணிநேரத்தில் குடிநீர் மணக்கும். பானையில் ஊற்றப்படும் நீரில் உயிரிகள் உற்பத்தியாகின்றன. உள்ளே போடப்பட்ட முடிச்சு, சத்து வழங்குவதாகவும், இயற்கையான பாதுகாப்புக் கருவியாகவும் செயலாற்றும்.
இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். உங்கள் பொருளாதாரம், நாட்டு மருந்து கடைகளை நோக்கி திரும்புவது மிக நல்லது. அங்கு தான் நமது காடுகளுக்கும் நகரங்களுக்கும்  இடையிலான வேர்கள் ஒட்டிக்கொண்டுள்ளன. அந்த வேர்களின் ஆயுட்காலம் மிக நீளமானது. எந்த சீர்கேடுகளையும் உறிஞ்சியெடுத்து மரங்களைக்காக்கும் வல்லமை அந்த வேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி
ஆனந்த விகடன்
3.8.16 www.vikatan.com

Thursday, September 22, 2016

உலகால் அறியப்படாத ஊட்டி ooty


தமிழ்நாட்டில் உள்ள அதி முக்கியமான கோடைஸ்தலம், மலைகளின் ராணி என்று செல்லமாக அழைக்கப்படும் ஊட்டியைக் காணாத தமிழர் இருக்காது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும், இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள் மத்தியிலும் ஊட்டி மிகப்பிரபலமானது. மற்ற மலைகளில் இல்லாத தனிச்சிறப்பு ஊட்டிக்கு உள்ளது. இந்திய அளவில் பிரபலமான ஹிந்துஸ்தான் போட்டோ ஃபில்ம்ஸ் பாக்டரி, அருவங்காட்டில் உள்ள கார்டைட் கன் பவுடர் பாக்டரி, நீடில் இண்டஸ்ட்ரீஸ் (ஊசி தயாரித்தல்), டீ பாக்டரி, சாக்லேட் பாக்டரி, பேக்கிங் ப்ரோடக்ட்ஸ் போன்ற இன்னும் பல தனித்தன்மை வாய்ந்த நிறுவனங்கள் ஊட்டியில் செயல்பட்டு வருவதால், வெறும் சுற்றுலா மட்டும் அல்லாமல் பல வகையான தொழில் சார்ந்த மக்கள் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.
அருகில் உள்ள பிரபல தொழில் நகரான கோயமுத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஊட்டியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றனர். ஆங்கிலேயர்கள் வித்திட்டு உருவாக்கிய மலைப்பிரதேசம் என்றாலும், ஊட்டி இந்த அளவிற்கு பிரபலமடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஊட்டியைக் காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்கள் தெரிவதில்லை.
பொதுவாகவே கார்டன்ஸ், தொட்டபெட்டா, பைக்காரா, மலைரயில், லேக்கில் போட்டிங், மியூசியம், பார்க்குகள் மற்றும் ஷாப்பிங்குடன் முடிகிறது ஊட்டியின் சுற்றுலா.
மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் பயணிகள் குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ் மற்றும் லேம்ப் ராக் அல்லது கோத்தகிரியில் உள்ள கொடநாடு வியூ பாயின்ட், கேத்தரின் மற்றும் கொடநாடு நீர்வீழ்ச்சியுடன் சுற்றுலாவை முடிக்கின்றனர். ஒரு வேளை கூடலூர் அல்லது பந்திப்பூர் வழியாக வந்தால் முதுமலை புலிகள் சரணாலயம், வனப்பகுதியில் ஜங்கிள் சபாரி போன்றவையோடு முடிகிறது ஒருவரின் ஊட்டிச் சுற்றுலா.
இதுக்குமேல வேற என்னதான் ஊட்டில இருக்குனு தோணுதா? அப்போ நீங்க ஊட்டிய மேலோட்டமாத்தான் பாத்திருக்கீங்க, முழுசா பாத்ததில்லை. முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குறைந்தவர்கள் உங்களுடன் இல்லையெனில் சிறிது சாகசம் கலந்த, உங்களை பிரமிக்க வைக்கும் ஒரு எழில்மிகு இயற்க்கைச் சுற்றுலாவிற்கு நீங்கள் தயாராகலாம். கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பல முறை ஊட்டிக்குச் சென்றிருப்பார்கள். இங்கே குறிப்பிடப் போகும் அனைத்தையும் கண்டு ரசித்த சிலர் இருந்தாலும், பலர் காணாதவையே. நீங்கள் கண்டிராத ஊட்டியைக் காண வழிவகுக்கும் என் நினைவில் வந்த சிலவற்றைக் கீழே காணலாம்.
ஆரம்பமே அமர்க்களமாக இருப்பதற்கு, முதலில் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காரமடை என்ற இடத்தைச் சென்றடையுங்கள். அங்கே உள்ள சிலரிடம் மஞ்ஜூர் செல்லும் சாலைக்கு வழி கேளுங்கள். ஜிபிஎஸ் இருந்தால், அதனை மஞ்ஜூருக்கு செட் செய்துவிட்டு அந்த வழியைப் பயன்படுத்துங்கள். அடர்ந்த காட்டுப்பாதையில் யானை, கரடி, மான், காட்டெருமை போன்றவற்றை அதிர்ஷ்டம் இருந்தால் கண்டு ரசித்தவாறே குறுகலான மற்றும் செங்குத்தான மலைப்பாதையில் சுமார் 1 மணி நேர பயணத்தில் மஞ்ஜூரைச் சென்றடையலாம்.
அது வெறும் மக்கள் வாழும் சிறு மலைக் கிராமம் என்பதால் காண்பதற்கு ஏதும் இருக்காது. ஆனால் அங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டரில் அப்பர் பவானி என்ற ஒரு மிக அருமையான நீர்த்தேக்கம் உள்ளது. அங்கே உங்கள் ஆசை தீரும் வரை ரசித்துவிட்டு, அடுத்ததாக அவலாஞ்சி லேக் மேலும் ஒரு 17 கிலோமீட்டரில் உள்ளது. உங்கள் மனதையும், கண்களையும் கவரும் அவலாஞ்சி, அடுத்த சில நிமிடங்களில் வரும் எமரால்ட் லேக் என உங்கள் ஊட்டி அனுபவம் 10,000 வாலா சரவேடியோடு துவங்கிய தீபாவளியைப் போல் பட்டையைக்கிளப்பும்.
அதே ரோட்டில் நீங்கள் ஊட்டியை அடைவீர்கள். முதல் நாள் இரவு ஊட்டி நகருக்குள் ஒரு நல்ல ஹோட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு, அடுத்த நாள் வழக்கமாக மக்கள் காணும் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைக் காணவும். இல்லையெனில், பைக்காரா செல்லும் வழியில் ஒரு பிரிவில் பார்சன்ஸ் வால்லி என்ற இடம் உண்டு. அதன் அருகே போர்த்முண்டு லேக் என்ற இடமும் உண்டு. அதிக சுற்றுலா பயணிகள் இல்லாமல் இந்த இடம் உங்கள் மனதைக் கவர்வதும் நிச்சயம். அதை முடித்துவிட்டு, பைக்காரா லேக் அல்லது நீர்வீழ்ச்சியைக் காணலாம். இல்லையெனில், அங்குள்ள மக்கள் யாரிடமாவது விசாரித்தோ அல்லது ஜிபிஎஸ்ஸில் செட் செய்தோ க்லென் மார்கன் ரிசர்வாயர் செல்லலாம். அங்கு உள்ளே செல்வதற்கு தமிழக அரசு அனுமதி பெற வேண்டும். அதைப் பெற்றிருந்தால், அதன் உள்ளே சென்று பார்வையிடலாம். அல்லது மசினக்குடியில் இருந்து சிங்காரா பைக்காரா என்ற ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ளான்ட்டிற்கு அனுமதியுடன் சென்றால், அது ஒரு புதிய த்ரில் அனுபவமாக இருக்கும். பழனியில் உள்ளதைப்போல் சிறிய அளவில், வெறும் 6 பேர் செல்லக்கூடிய வின்ச்சிலோ அல்லது ஹேர்ப்பின் பேன்ட் மட்டுமே கொண்ட வளைவான ரோட்டிலோ பயணித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் இடத்திற்கே செல்லலாம்.
இரண்டு நாட்களில் இதையெல்லாம் கண்டுவிட்டு, வரும்போது கோத்தகிரி சாலையை அடையவும். அதில் சுமார் 15 கிலோமீட்டரில் கட்டபெட்டு என்ற இடத்தில் பிரிந்து வண்டிச்சோலை என்ற இடத்தை அடையவும். அங்கிருந்து அரவேனு என்ற இடம் நோக்கி ஹாலக்கரை ரோட்டில் பயணிக்கும்போது, டீ எஸ்டேட்களும் அதன் நடுவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பங்களாக்களும் காணலாம். பின்னர் மேட்டுப்பாளையம் வழியில் சமவெளியை அடைந்து ஊருக்கு திரும்பிச்சென்றால் ஒரு அட்டகாசமான சுற்றுலா சென்று வந்த திருப்தியுடன் வீடு திரும்பலாம்.

Tuesday, September 20, 2016

KPN 7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி.


7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி....

படித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை. பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்.

மூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல தென்மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுப்பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். அந்தப் பேருந்துகளை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.நடராஜன், இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்துகளுக்கு சொந்தக்காரர்.

அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடுமுழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்திவரும் கே.பி.நடராஜன், பெரிய பிசினஸ் படிப்பு எதுவும் படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும்தான். ஆனால், அடைந்த வெற்றிகள் ஏராளம்.

தனது வெற்றிக்கதையை சொல்கிறார் நடராஜன்....

'' நான் பிறந்து வளர்ந்தது சேலம், பெரியபுத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக்கவுண்டர் நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம். ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளை செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 1968 ம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன். அதுக்கு 'வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ்' என்று பெயர் வைத்து கோவை டூ பெங்களூரு ட்ரிப் அடித்தேன்.

அந்த ஒற்றைப் பஸ்ஸின் ஓட்டுநரும் நான்தான், கிளீனரும் நான்தான். இப்படியாக தனி ஒருவனாக பஸ் போக்குவரத்தை நடத்தினேன். அடுத்த சில வருடங்களில் பங்குதாரர்கள் தங்கள் பங்கை பிரித்துக்கொண்டு வேறு தொழில்களுக்கு போய்விட்டார்கள். எனக்கு மோட்டார் தொழிலை விட மனதில்லை. என்னிடம் இருப்பில் இருந்த பணம் போதவில்லை. வெளியில் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி 1969 ல் ஒரு புதிய பஸ் ஒன்றை வாங்கினேன். எனது நெருங்கிய உறவினரின் குழந்தை பெயர் சிவக்குமார். அந்த குழந்தையின் பெயரையே புதிய பஸ் கம்பெனிக்கு வைத்தேன். 'சிவக்குமார் பஸ் சர்வீஸ்' என்கிற பெயரில் இயங்கிய அந்தப் பஸ்ஸின் டிரைவரும் நான்தான்.
.

மதுரை டூ பெங்களூரு ரூட்டில் பேருந்தை இயக்கி, அந்த பஸ் கம்பெனியை 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில், தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன். எனது தாத்தா குப்பண்ணகவுண்டர் பெயரின் முதல் எழுத்தான 'கே' இன்ஷியலையும், எனது தகப்பனார் பொன்மலைக்கவுண்டர் பெயரில் இருந்து 'பி' எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து 'என்' ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து, '1972 கே.பி.என்.' என்கிற பெயரைவைத்து, டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.

'ஏ.பி.சி 7581' என்கிற ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த கே.பி.என். டிராவல்ஸ் பஸ், திருநெல்வேலி - பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்த போக்குவரத்தை தொடர்ந்து, 1974ம் வருடத்தில், கே.பி.என்.டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பட்டது.1976 ல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின.

பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரை சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் உள்ளிட்ட விஷயங்களில், எங்கள் கம்பெனி டாப்கியரில் போகத்தொடங்கியது. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பஸ் மட்டும் இயக்கிய பொழுது, நான் மட்டும்தான் டிரைவர். இரண்டாவது பஸ்ஸை ஓட்ட, இன்னொரு டிரைவரை வேலையில் சேர்த்தேன். படிப்படியாக கம்பெனி வளர்ந்து, ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுடன் உயர்ந்தது. அப்படி 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்தபோதும், அதில் ஒரு வண்டியின் டிரைவராக நான்தான் இருந்தேன்.

அடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக சொகுசு பஸ்களை அறிமுகம் செய்தேன். குளுகுளு வசதி செய்யப்பட்டதும், சாய்மானம் கொண்ட மெத்தை இருக்கைகளை உடைய பஸ்களை வடிவமைத்தோம். அவற்றுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல பஸ்களை இயக்கினோம்.

இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம்தான்.இப்போது எங்கள் நிறுவனத்தின் 210 பேருந்துகளில்,95 படுக்கை வசதி கொண்டவை. இன்று நாட்டின் எல்லா நகரங்களிலும் எங்கள் நிறுவனத்திற்கு பதிவுக் கிளைகள் உண்டு. நாட்டின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கே.பி.என்.டிராவல்ஸில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளமுடியும்.

ரயில் பயணிகளுக்கு ரயிலுக்குள் உணவு கிடைப்பது போல, எங்கள் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்திட உள்ளோம். எதிர்காலத்தில் 'கே.பி.என். ஏர்லைன்ஸ்' என்கிற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் ஒரு திட்டத்தைப் பற்றிய யோசனையும் இருக்கிறது.

ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான் 17 வயதில் கிளீனர்,18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர், 24 வயதில் கே.பி.என்.டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து, இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ருபாய் சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை நிர்வாகம் செய்ய, என்னிடம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் வேலை பார்க்கிறார்கள்" என்ற நடராஜன்," அன்றைக்கு ஏதோ ஒரு ஆர்வத்தில் படிப்பை பாதியில் கை விட்டேன். இன்னும் கூட படித்திருக்கலாம் என்கிற ஆதங்கம் சிலசமயம் எழுவதுண்டு. இன்று தென் மாநிலங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்தை நடத்திவரும் நான், பட்டப்படிப்பை படித்திருந்தால், இன்னும் நன்றாக பஸ் போக்குவரத்தை நடத்தியிருக்கலாம் என்று எப்போதாவது நினைப்பதுண்டு. ஆனாலும் வாழ்க்கையில் தெரிந்துகொண்ட அனுபவக் கல்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்பதையும் மறுபதற்கில்லை.'' என சொல்லி முடித்தார்.


Thanks to
- DrTm Mohan Namakkal

Saturday, September 3, 2016

சிறப்புச் சார்பியல் கோட்பாடு... விளக்க முடியுமா?


அறிவியலில் இரு வேறு பார்வைகளாக, நியூட்டோனியன் பார்வை மற்றும் ஐன்ஸ்டீனியன் பார்வை எனச் சொல்வார்கள். இப்பிரபஞ்ச இயக்கங்கள் குறித்து நாம் நியூட்டன் விதிகள் மூலம் அறிந்திருப்போம். இவைகள் நம் அன்றாட வாழ்க்கை முறை வேகங்களில் மிகப் பொருத்தமானவையே. ஆனால், ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க இவ்விதிகள் தோல்வியைத் தழுவுகின்றன.

1905ல் ஐன்ஸ்டைன் வெளியிட்ட தனது சிறப்புச் சார்பியல் கோட்பாடு (Special Relativity Theory - STR) குறைந்த வேகத்திற்கும் சரி, ஒளியின் வேகத்திற்கும் சரி எல்லா வேகத்தில் இயங்கும் இயக்கங்களுக்கும் பொருந்தியது.

நாம் இதுவரை ஒளியின் வேகத்தை வெறும் எண்களாக மட்டுமே அறிந்திருக்கின்றோம், உணர்ந்திருக்கின்றோம். அதன் முழு வேகத்தை உணரும் திறன் இன்னும் பெறவில்லை. இன்றையக் கணக்கின்படி ஒளியின் வேகம் வெற்றிடத்தில் நொடிக்கு 2,99,792.458 கிலோ மீட்டர்கள். ஏறக்குறைய நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் எனக்கூடக் கொள்ளலாம்.

நமது அறிவு என்பது கடந்தகால அனுபவங்களின் தொகுப்பு எனலாம். அனுபவத்தில் இல்லாதவற்றை ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினம்தான். அதுபோன்றே ஒளியின் வேகத்தில் பயணிக்கும்பொழுது ஏற்படும் சில மாற்றங்களை முரண்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்வதும் சற்றுக் கடினமாகத் தெரியும். ஆனால், இயற்பியல் பரிசோதனைகள் அம்மாற்றங்களை உறுதி செய்துள்ளன.

பார்க்கப்படும் பொருள் ஒன்று இருக்குமேயானால் பார்க்கும் பார்வையாளர் என ஒருவரும் இருந்தேயாக வேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்பதே சார்பு எனப்படும்.

இங்கு ஆதிசங்கரர் அத்வைதத்தில் கேட்ட கேள்வியாக படித்த ஒன்று நினைவிற்கு வருகின்றது.

கேள்வி : வானம் என்ன நிறம்?
பதில் : நீல நிறம்.
கேள்வி : எப்படிச் சொல்கின்றாய்?
பதில் : நான் பார்த்தேன்.
கேள்வி : அப்படியெனில், நீ பார்க்காதபொழுது வானம் என்ன நிறம்?
பதில் : .......

இது போன்று இன்னும் பல கேள்விகள் நம் குவாண்டம் இயற்பியலுக்குள் இருக்கின்றன.

சரி, பார்வையாளர் என நம்மைக் கொள்வோம். இந்தச் சிறப்புச் சார்பியல் கோட்பாடும் நம்மை வைத்தே தொடங்குகின்றது. அதாவது பார்வையாளர் இருக்கும் இடத்தினைக் கொண்டு. அது குறியீட்டுச் சட்டம் (Reference Frame) எனப்படுகின்றது. இது வேறொன்றுமில்லை பார்வையாளர் எங்கு நிற்கின்றார் என்ற இடமே குறியீட்டுச் சட்டம்.

இப்பொழுது நீங்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றீர்கள். இதுதான் உங்களது குறியீட்டுச் சட்டம். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் நிலையாக இல்லை. நீங்கள் பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றீர்கள். இந்தப் பூமி உங்களைச் சுமந்துகொண்டு சராசரியாக நொடிக்கு 30 கிலோமீட்டர்கள் வேகத்தில் சூரியனைச் சுற்றிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. சூரியனோ, உங்களை, பூமியை, ஏனைய கோள்களையும் இழுத்துக்கொண்டு பால்வெளிமண்டலத்தை நொடிக்கு 200 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

இங்கு வேகத்தை விடுங்கள், நீங்கள் நிலையாக இல்லை, பயணித்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆக, இப்பிரபஞ்சத்தில், நிலையான குறியீட்டுச்சட்டம் என்று ஒன்று இல்லை. எல்லாமே இயக்கத்தில் உள்ளன. எல்லாம் இயக்கத்தில் இருப்பதால் ஒவ்வொன்றும் ஒன்றைச் சார்ந்துள்ளன.

ஒரு இயக்கத்தைக் குறிக்க மற்றொன்றைத் தொடர்பு படுத்தித்தானே குறிப்பிடமுடியும்.

சரி, இப்பொழுது நீங்கள் ஒரு குறியீட்டுச் சட்டத்திலும், நான் ஒரு குறியீட்டுச் சட்டத்திலும் உள்ளோம். எனது குறியீட்டுச்சட்டம் உங்களை நோக்கி வருகின்றது, அதாவது நான் உங்களை நோக்கி வருகின்றேன். இதனை என் பார்வையிலும் உங்கள் பார்வையிலும் பார்த்தோமானால் என்ன சொல்வோம்?

நான்: நீங்கள் என்னைநோக்கி வருகின்றீர்கள்.
நீங்கள்: பாபு என்னை நோக்கி வருகின்றார்.

இரண்டுமே நியாயமான கருத்துக்கள்தான். எனவே, பார்வையாளரின் குறியீட்டுச்சட்டம் மிக முக்கியமான ஒன்று இக்கோட்பாட்டில். அடுத்து, சிறப்புச் சார்பியல் கோட்பாட்டின் முதலாம் மெய்கோள் (முதலுண்மை) (First Postulate) குறித்துப் பார்ப்பதற்கு முன் இதுவரை சொன்னவற்றில் சந்தேகங்கள், பிழைகள் இருந்தால் விவாதித்துக்கொள்வோமா...?


பகுதி - 2

முதலாம் கருதுகோள்

இது சற்று எளிமையான ஒன்றுதான். இயற்பியல் விதிகள் அனைத்துக் குறியீட்டுச் சட்டங்களிலும் மெய்யே. அதாவது தரையில் நின்றுகொண்டு நீங்கள் ஒரு செங்கலின் நீளத்தை நீங்கள் அளந்தாலும், ஒரு தொடர்வண்டியில் பயணித்துக்கொண்டு அளந்தாலும் அது உங்களுக்கு ஒரே அளவைத்தான் கொடுக்கும்.

ஆனால், நீங்கள் தரையில் நின்றுகொண்டு தொடர்வண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் செங்கல்லை அளக்க முற்பட்டால் அது வேறு அளவினைத்தரும். குழப்புகின்றதா, சரி, இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

ஒரு தொடர்வண்டி 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. நீங்கள் ஓட்டுனரின் அருகில் இருக்கின்றீர்கள். தொடர்வண்டி ஓட்டுனர் ஒரு துப்பாக்கி வைத்துள்ளார். அந்தத்துப்பாக்கிக்குண்டின் வேகம் நொடிக்கு 5 கிலோமீட்டர் வேகம். இப்பொழுது ஓட்டுனர் தொடர்வண்டி செல்லும் திசையில் துப்பாக்கியால் சுடுகின்றார். துப்பாக்கிக் குண்டின் வேகம் என்னவென்று உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? நொடிக்கு 5 கிலோமீட்டர் என்றுதானே?

சரி, இப்பொழுது நீங்கள் தரையில் நிற்கின்றீர்கள். இப்பொழுது அதேவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் தொடர்வண்டியில், அதே ஓட்டுனர்,அதே துப்பாக்கியால் சுடுகின்றார். இப்பொழுது அந்தத் துப்பாக்கிக் குண்டின் வேகம் என்னவென்று உங்களைக் கேட்டால் உங்கள் பதில், 50+5=55 அதாவது நொடிக்கு 55கிலோமீட்டர் என்றுதானே சொல்வீர்கள்?

ஆக, இயற்பியல் விதிகள் நிலையானவைதான், அந்தந்த குறியீட்டுச்சட்டத்தில். வேறொரு குறியீட்டுச்சட்டத்தில் இருந்து மற்றொரு குறியீட்டுச்சட்டத்தின் விதிகளை அளவிட்டால் அது வேறுபடும்.


இரண்டாம் கருதுகோள்

அனைத்துக்குறியீட்டுச் சட்டங்களிலும் ஒளியின் வேகம் நிலையானது. இதுதான் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டின் இரண்டாவது கருதுகோள். முதலாவது கருதுகோளில் சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். இப்பொழுது துப்பாக்கிக்குப் பதில் தொடர்வண்டியின் முகப்பு விளக்கு.

நீங்கள் ஓட்டுனரின் அருகே உள்ளீர்கள். ஓட்டுனர் முகப்பு விளக்கினை எரிய விடுகின்றார். இப்பொழுது ஒளியின் வேகம் என்ன? சற்றேறக்குறைய மதிப்பாக நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் எனக் கொண்டு அதைத்தானே சொல்வீர்கள். சரி, இப்பொழுது நீங்கள் தரையில் நிற்கின்றீர்கள். ஓட்டுனர், ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியின் முகப்பு விளக்கினை எரிய விடுகின்றார்.

இப்பொழுது உங்கள் எதிர்பார்ப்பின் படி, 3,00,000+50 = 3,00,050 அதாவது நொடிக்கு 3 இலட்சத்து 50 கிலோமீட்டர்கள் என்றுதானே சொல்வீர்கள். ஆனால் அதுதான் இல்லை. இங்கும் ஒளியின் வேகம் அதே நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள்தான் இருக்கும். முரண்பாடாகத் தெரிந்தாலும், அதுதான் உண்மை. வேகம் என்பது குறிப்பிட்ட காலத்திற்குள் கடக்கப்படும் தொலைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொருண்மை உள்ள ஒரு பொருளானது தன் வேகத்தினை, முடுக்கத்தின் மூலமாக அதிகரித்துக்கொள்ளவோ, தடை மற்றும் உராய்வின் மூலம் குறைத்துக்கொள்ளவோ முடியும். ஆனால், ஒளி ஒரு மின்காந்த அலை. அப்படியெல்லாம் செய்துகொள்ளாது. ஆக, ஒளியின் வேகம் தற்போதைய கணக்கின்படி நிலையான ஒன்று. (ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குள் பாயும்பொழுது வேறுபாடுகள் ஏற்படும். அதில் மாற்றமில்லை.)

சரி, இக்கோட்பாட்டினால் ஏற்படும் சில நிகழ்வுகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.


பகுதி - 3

  கோட்பாட்டின் படி ஒளியின் வேகத்தில் பயணித்தால் முக்கியமாக இரண்டு நிகழ்வுகள் நிகழ்கின்றன. இவற்றைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டால் சற்றே புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

1. பொருண்மை உள்ள ஒரு பொருள் பயணிக்கும் திசையில் தன் நீளத்தில் சற்றே குறுகுகின்றது.
2. ஒளியின் வேகத்தில் பயணிப்பவருக்கு காலமும் சுருங்கிவிடுகின்றது.

1. நீளக்குறுக்கம் (Length Contraction)
5மீட்டர் நீளமுள்ள ஒரு சிற்றுந்து (Car) 60% ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றது எனக்கொள்வோம். அப்பொழுது அதன் நீளம் 4 மீட்டர் எனச் சற்றே குறைவுபட்டிருப்பதை தரையில் நிற்கும் நீங்கள் அளவிடலாம்.

அதேசமயம், அச்சிற்றுந்தில் பயணிப்பவர் உங்கள் கையில் இருக்கும் அளவுகோலின் நீளம் குறைந்திருப்பதைக் காண்பார்.
ஒருவேளை நீங்களும் 60% ஒளிவேகத்தில் அச்சிற்றுந்திற்கு அருகாமையில் பயணித்துக்கொண்டு அளப்பீர்களேயானால் அதன் நீளம் 5 மீட்டரே இருக்கும்.


2. காலவிரிவு (Time Dilation)
ஒளியின் வேகத்தில் பயணிக்கும்பொழுது மட்டும் காலமும் சுருங்கிவிடுகின்றது. ஆனால் அதனை அவ்வேகத்தில் பயணிப்பவர் இருக்கும் குறியீட்டுச்சட்டத்திலிருந்து உணர முடியாது. வேறொரு குறியீட்டுச்சட்டத்தில் இருப்பவரால் மட்டுமே உணர முடியும்.

இந்த காலவிரிவினைக் காட்ட ஒரு பிரபலமான கருத்து ஒன்று உள்ளது. அதுதான் இரட்டையர் முரண்மெய் (Twin Paradox).

அதாவது பாபு-கோபு இருவரும் இரட்டையர். இருவரிடத்தில் இரண்டு துல்லியமான நேரங்காட்டும் கடிகாரங்கள் உள்ளன. அதனை இருவரும் ஒரே நேரத்தைக் காட்டுமாறு ஒருங்கிசைத்துக் கொள்கின்றனர். தற்பொழுது இருவருமே ஒரே குறியீட்டுச்சட்டத்தில் உள்ளனர்.

இப்பொழுது பாபு மட்டும் ஒரு விண்கலத்தில் ஏறி 60% ஒளியின் வேகத்தில் பயணிக்கிறார். இருவருமே தங்களது பார்வையில் நீளக்குறுக்கம் மற்றும் காலவிரிவு விளைவுகளை மற்றவரிடத்தில் காண்பர். ஒருவேளை பாபு திரும்பவே இல்லை என்றால் பிரச்சனை இல்லை. திரும்பிவிட்டால்....?

ஒளியின் வேகத்தில் பயணித்த பாபுவை விட, நிலையாக நின்ற கோபுவிற்கு வயது கூடியிருக்கும். ஆனால் இருவரும் இரட்டையர்கள். இதனை அவர்களின் கடிகாரங்களை ஒத்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். முரண்பாடு போல் தோன்றினாலும் அதுதான் மெய்.

இந்த இரட்டையர் முரண்மெய்க்குள் நிறைய அலசல்கள் உள்ளன. பாபு போகும்பொழுது ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு சமிக்ஞை அனுப்புவது, ஒருவர் குறியீட்டுச் சட்டத்தில் இருந்து அடுத்தவரின் குறியீட்டுச்சட்டத்திற்கு மாறி விளைவுகளை அளப்பது என்று நிறைய சாத்தியக்கூறுகளை பிரித்தலசி குழம்பலாம் நாம்.

அடுத்தது காலப்பயணம்....


பகுதி - 4

காலப்பயணம் சாத்தியமா?

மேற்சொன்ன இரட்டையர் முரண்மெய் பற்றி அறிந்ததும், அப்படியெனில் ஒளியின் வேகத்தில் பயணித்தால் நம்மால் எதிர்காலத்திற்கோ அல்லது இறந்தகாலத்திற்கோ பயணிக்க முடியும் என்று கொள்கை ரீதியில் எண்ணத்தான் தோன்றும். காலப்பயணம் என்பது வெகுகாலத்திற்கு முன்பிருந்தே சிந்திக்கப்பட்டு வந்தது. ஐன்ஸடைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாடு வந்ததும் அதற்கு கொள்கை ரீதியான கட்டுமானம் கட்டப்பட்டுவிட்டது.

நம்மில் நிறையப் பேர் காலம் என்றால் என்னவென்று தெரியும் என்று எண்ணிக்கொண்டுள்ளோம். வரையறுக்கச்சொன்னால் சற்றுத் தடுமாறுவோம். காலத்தை வரையறுப்பது கடினம்தான் ஆனால் அதன் விளைவுகளை மட்டும் காண்கிறோம்.

காலம் என்பது இரு நிகழ்வுகளுக்கு இடையே உள்ள இடைவெளி. நிகழ்வு நிகழ பரவெளி வேண்டும். பரவெளியினை உணர காலம் வேண்டும். ஆக, காலம் என்று ஒன்று தனித்து கிடையாது. காலமும் (Time) வெளியும் (Space) பின்னிப் பிணைந்தது. அது ஒரு நான்காவது பரிமாணம். (Fourth Dimension) இதற்கு முன்பு நியூட்டன் விதிகள் காலத்தை தனித்ததொன்றாகக் கொண்டிருந்தது. ஆனால், ஐன்ஸ்டைனின் கூற்றுக்குப் பின் காலமும் வெளியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இதனை காலவெளித்தொடர்ச்சி என்பர். (Space-time continuum என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. தெரிந்தோர் தெரிவிக்கவும்.)

ஆக, காலம் என்பது இரு நிகழ்வுகள் நிகழ்ந்தபின்னரே வரையறுக்கப்படுகின்றது. இதில் காலத்தைக் கடப்பது எப்படி? ஆக, கோட்பாட்டின்படி காலப்பயணம் சாத்தியமே என்று கொண்டாலும், அதிலும் சில முரண்பாடுகள் தொக்கி நிற்கின்றன.

<>ஒரு வேளை உங்களால் இறந்த காலத்திற்குச் செல்ல முடிகின்றது என்றாலும், நீங்கள் பிறக்கும் வருடத்திற்கு முந்தை ஆண்டுகளில் ஒன்றிற்கு நீங்கள் செல்வீர்களேயாயின்... அது முரண்படாதா..?

<>அல்லது நீங்கள் பிறந்த ஆண்டிற்குப் பின்னர் ஒரு காலத்திற்குச் செல்கின்றீர்கள் என்றால் அங்கு உங்களை நீங்களே பார்ப்பீர்களா?

<>Grandfather Paradox என்று ஒன்று உள்ளது. நீங்கள் பின்னோக்கிச் சென்று உங்கள் அப்பாவின் அப்பாவைக் கொன்றுவிட்டீர்கள் என்றால் என்னவாகும்?


எனினும், காலப்பயணம் சாத்தியம் என்பதற்கு இன்னொரு முறையும் சொல்லப்படுகின்றது. இணைபிரபஞ்சம் (Parallel Universe). அதாவது ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நீங்கள் பின்னோக்கிச் சென்று உங்கள் தாத்தாவை கொன்றுவிட்டால் அது நிகழ்வது வேறொரு பிரபஞ்சத்தில்தான் என்கிறார்கள். குழப்பம்தான்.

இன்னும், கருந்துளை (Black Hole), புழுத்துளை (Worm Hole), பேரண்டக்கயிறு (Cosmic String), வளைந்த வெளி (Curved Space), என்று அதிசயிக்க ஏராளம் உண்டு அறிவியலில். பொறுமையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் மட்டுமே வேண்டும் நமக்கு.


முன்பொரு சமயம், சிறப்புச் சார்பியல் கோட்பாடு குறித்து அசைபோடும்பொழுது என்னுள் தோன்றிய வரிகள்.....


காலமில்லாக் காலமொன்றைப்
பரவெளியில் தேடினேன்
வெளியின்றிக் காலமோ
காலமின்றி வெளியோ காணக் கிடைக்கிலேன்.
காலமுணரச் சலனமும்
சலனம் நிகழ வெளியும்
வெளியை யுணரக் காலமும்
எனவோர் வட்டக் களிநடனம்
கண்டு வியந்தனன்.

பிரபஞ்சத்தின் எல்லையை அடைந்தால் என்ன இருக்கும்?




முதலில் பிரபஞ்சத்திற்கு எல்லை இருக்கின்றதா? மனித அறிவு எல்லாவற்றையும் ஒரு வரையறைக்குள் அடக்கவே பார்க்கும். இத்தோடு அவ்வளவுதான் என்று அடக்கி விட்டு அடுத்ததைத் தேடிப் போகப் பார்க்கும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். பிரபஞ்சத்தில் எல்லை என்று குறிக்க எந்தவொரு காம்பவுண்ட் சுவரும் இல்லை. இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்ப்போம்.

1. பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அப்படியெனில், அதன் எல்லை என்பது ஒரு முடிவிலி. எல்லையே கிடையாது. ஒரு வேளை விரிவடையும் வேகத்தை விட வேகமாகப் போய்ப் பார்த்தால்.... அடுத்த பிரிவைப் பாருங்கள்.

2. பிரபஞ்சம் தன்னகத்தே தேவைக்கதிகமான நிறைகொண்ட பொருட்களைக் கொண்டிருக்கின்றது. அந்நிறைகளின் காரணமாக விரிவடைவது தடுக்கப்பட்டு சுருங்கத் துவங்கும். தன் அதீத நிறையால் குலைந்தழிந்து போய் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு கருந்துளையாய்ப் போகக்கூடும். (நல்ல வேலையாக அத்தனை நிறைகள் இல்லை.) இந்த நிலையில் பிரபஞ்சத்திற்கு எல்லை இருக்க வேண்டுமே. அதனைப் பார்க்கலாமே என்றால்....

இப்பொழுதும் முடியாது. ஏனெனில் இப்பொழுதும் எல்லை என்று எதுவும் இருக்காது. நிறையீர்ப்பின் காரணமாக பிரபஞ்சம் வளைந்து கோளவடிவிலாகி விட்டிருக்கும். கோளத்தில் எது எல்லை? எது மையம்?  எது முடிவு?

ஒரு பெரிய கால்பந்தில் ஊறும் எறும்பினைக் கற்பனை செய்யுங்கள். எல்லையைத் தேடிப் பயணப்படும் அவ்வெறும்பு எந்தப் பக்கம் பயணித்தாலும் தான் துவங்கிய இடத்திற்கே வந்துவிடும். இப்பொழுதும், ஈர்ப்பின் காரணமாக பிரபஞ்சம் வளைந்துதான் இருக்க வேண்டும். ஏனெனில், வளைந்த வெளிகள் ஐன்ஸ்டைன் சொன்னதற்குப் பிறகு நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

சரி, பிரபஞ்சம் கோள வடிவில் இருக்கின்றது என்றே கொள்வோம். அதன் உட்புறத்திலிருந்து வெளிப்புறமாக வந்தால் அதன் எல்லையைக் கண்டேன் என்று சொல்ல முடியுமா? அந்த எல்லையில் இருந்து பார்த்தால் என்ன தெரியும்? (இப்படியெல்லாம் கேள்வி கேட்டேன் என்றுதான் ஜியாகரஃபி மிஸ் என் காதைத் திருகி உட்கார வச்சாங்க... உங்களையும் அவங்ககிட்ட மாட்டி விட்டுருவேன்....) ஒரு வேளை இணைப் பிரபஞ்சம் (Parallel Universe) தெரியக்கூடுமோ?

எனினும், நம் பார்வைக்குட்பட்ட (பார்வை என்றால் கண்ணால் பார்ப்பது என்று பொருளல்ல, நாம் உணர்ந்தறியக்கூடிய என்று பொருள்) பேரண்டம் என்று ஒரு தொலைவைச் சொல்கின்றார்கள். நம் சூரியக்குடும்பத்தில் இருந்து எந்தப்பக்கம் பார்த்தாலும், 14 பில்லியன் புடைநொடிகள் (ஏறக்குறைய 45.7 பில்லியன் ஒளியாண்டுகள்) தொலைவு வரை காண முடியும்.

இத்தொலைவை ஆரம் என்று எடுத்துக்கொண்டால் விட்டம் 28 பில்லியன் புடைநொடிகள் தொலைவு வரை பிரபஞ்சம் பரந்திருக்கின்றது. கோளவடிவம் என்பதால் இதன் கொள்ளளவைக் கணக்கிட்டால், 4.1 x 10^32 கனசதுர ஒளியாண்டுகள் ஆகும். மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள்.

புடைநொடி (Parsec), ஒளியாண்டு (Light Year) இரண்டுமே தொலைவைக் குறிக்கும் அளவைகள்.

Big Bang Theory


பிரபஞ்சத் தோற்றம்

பரந்து விரிந்து இருக்கும் இப்பிரபஞ்சத்தில், கோடானுகோடி நட்சத்திரங்களில் கவனத்தையே ஈர்க்காத ஒரு சிறு நட்சத்திரம்தான் நம் சூரியன். அச்சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி என்ற கிரகத்தில் வசிக்கும் மனிதர்களாகிய நாம் அற்பத்திலும் அற்பம். ஆனால் அந்த அற்பத்திற்கு அறிவு பெருகும் மூளை என்ற ஒன்றின் வளர்ச்சி மிகச் சிறப்பானது. அச்சிறப்பால், சிந்தனையால் அதற்குள் எழும் கேள்விகள்தான் எத்தனையெத்தனை, எத்தனை அபாரமானவைகள்....?

இதோ தன் தோற்றம் குறித்தும், தானிருக்கும் பிரபஞ்சத்தோற்றம் குறித்தும் அறியப் புறப்பட்டதன் விளைவாக உருவாக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகளைக் காண்போம். பிரபஞ்சத் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துகள், கொள்கைகள் நிலவுகின்றன. அவற்றில் சில,
1. ஸ்திர நிலைத் தத்துவம் (Steady State Theory)
2. பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theory)
3. கடவுளால் படைக்கப்பட்டது (God's Creation)

இதில் பெருவெடிப்புக் கொள்கை பற்றி இங்கு சற்று பார்ப்போம்.

இன்றிலிருந்து ஏறக்குறைய 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏதுமற்ற பாழ்வெளியில், சூனியத்தில், ஓரிடத்தில் மட்டும் ஒரு பொருண்மை இருந்தது. அதி எடையுடன் அனைத்தையும் தனக்குள் அடக்கிக்கொண்டு உள்ளுக்குள் ஒரு பரபரப்பில் இருந்திருக்கவேண்டும். அதனை ஆங்கிலத்தில் Singularity என்கிறார்கள். நாம் தமிழில் அதனை அனைத்தொருமை எனச் சொல்லலாமா..?

அவ்வனைத்தொருமை ஒரு கணத்தில் அதி வேகத்தில் விரிவடையத் துவங்கியது. அந்த அதிவேகத் தொடக்கத்தினைத்தான் நாம் பெருவெடிப்பு என்கிறோம். அதுதான் நம் பிரபஞ்சப் பிறப்பின் முதற்கணம். கணக்கிட முடியாத அளவிற்கான பெருவெப்பம். விரிவிலிருந்து 10ன் அடுக்கு -37வது நொடியில், (அதாவது 0.0000000000000000000000000000000000001 என ஒரு புள்ளி வைத்து 36 சுழியன்கள் போட்டுப் பின் ஒன்று) பிரபஞ்ச வீக்கம் பெறத் துவங்குகின்றது. அப்பொழுது தோன்றுகின்றது முதற்பொருள். Quark-Gluon Plasma (GGP) அல்லது குவார்க் குழம்பி. அதனைத் தொடர்ந்து மற்ற அடிப்படைத் துகள்கள் பிறக்கின்றன.

பெருவெப்பத்தில், அதிவேகத்திலும், ஒன்றோடு ஒன்று மோதி துகள்கள் மற்றும் எதிர்த்துகள்கள் உருவாக்கப்படுகின்றன. உருவான அதே வேகத்தில் அழிக்கவும்படுகின்றன. அப்படியொரு கணத்தில் திடீரென்று Baryogenesis என்றொரு வினை நிகழ்த்தப் பெற்று குவார்க்குகள் மற்றும் லெப்டான்கள் உருப்பெறுகின்றன. இவைகள்தான் நம் இன்றையப் பிரபஞ்சத்தின் பொருள் மற்றும் எதிர்ப்பொருள்களின் (Matter and Antimatter) முன்னோடி.

பிரபஞ்சம் இன்னும் விரிவடையத் துவங்குகின்றது. அளவில் விரிய விரிய வெப்பம் குறையத் துவங்குகின்றது. காரணம் பொருட்களின் சக்தி குறைகின்றன. பல்வேறு தொடர்மாறுதல்களில் இருந்தவைகள் எல்லாம் இப்பொழுது நாம் உணரும் பிரபஞ்சத்தின் இன்றைய அடிப்படை விதிகளுக்குட்பட்டு பொருட்களின் தற்போதைய அமைப்பு உருவாகின்றது.

இதுவரை தன் நிகழ்வில் கண்கொள்ளாக்காட்சியாக இருந்த பெருவெடிப்பு, 10ன் அடுக்கு -11வது நொடியில் தன் வசீகரம் இழக்கத் துவங்குகின்றது. துகள்களின் வேகமும் சக்தியும் இன்றைக்கு நாம் சோதனைச்சாலைகளில் அடைத்துவைத்து சோதிக்கும் அளவிற்குக் குறைகின்றன.

10ன் அடுக்கு -6வது நொடியில் குவார்க்குகளும் குளூவான்களும் ஒன்றிணைந்து பேரியான்களாக (baryon) அதாவது புரோட்டான் நியூட்ரானாக உருவாகின்றன. இப்பொழுது போதுமான வெப்பம் இல்லாத காரணத்தினால் இனி புதிய புரோட்டான்களோ எதிர்-புரோட்டான்களோ உருவாவது நின்று போகின்றது. அதுபோன்றே நியூட்ரான்களும், எதிர்-நியூட்ரான்களும் உருவாவதும் நின்று போகின்றது. பொருண்மை அழிவு துவங்கி (Mass annihilation) சில புரோட்டான் நியூட்ரான்களைத் தவிர மற்றவைகள் அழிவு பெறுகின்றன.

ஒரு நொடி கழித்து இதே போன்றதொரு நிகழ்வு எலக்ட்ரான்களுக்கும் பாஸிட்ரான்களுக்கும் நிகழ்கின்றது. இந்த அழிவுகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் முன்புபோல் பிரபஞ்சத்தில் அலையவில்லை. வேகம் குறைந்துவிட்டது. ஆனால், போட்டான்கள் (Photons) பிரபஞ்சத்தினை ஆளுமை செய்யத் துவங்கிவிட்டன நியூட்ரினோக்களின் (Neutrinos) சிறிய பங்களிப்போடு.

பெருவிரிவின் சில நிமிடங்களுக்குப் பிறகு ஏறத்தாழ ஒரு பில்லியன் கெல்வின் அளவிற்கு வெப்பநிலையில் நியூட்ரான்கள் புரோட்டான்களோடு ஒன்றிணைந்து இன்றைய பிரபஞ்சத்தின் டியூட்டிரியம் (Deuterium) மற்றும் ஹீலியம் அணுக்கருவை உருவாக்குகின்றன. இதற்கு பெருவெடிப்பு அணுக்கருச்சேர்க்கை (Big Bang Nucleosynthesis) என்று பெயர். பெரும்பாலான புரோட்டான்கள் நியூட்ரான்களோடு சேராமல், ஹைட்ரஜன் அணுக்கருவாகவே நீடிக்கத் தொடங்கின.

பிரபஞ்சம் குளிரக் குளிர (ஒரு பேச்சுக்குத்தான் குளிர என்கிறோம்... ஆரம்ப கணத்தின் வெப்பத்தினை ஒப்பிடும்பொழுதுதான் இது குளிர். நம்மைப் பொறுத்தவரை இது அதிவெப்பம்தான்.) மிச்சமிருக்கும், பொருண்மை, ஆற்றல் நிறைகள் எல்லாம் ஒன்றாக, ஈர்ப்பு விசை உருவாகின்றது.

3,79,000 ஆண்டுகள் கழித்துதான் அணுக்கருவுடன் எலக்ட்ரான்கள் சேர்ந்து அணுக்களே உருவாகின்றன. பெரும்பாலும் ஹைட்ரஜன் அணுக்கள். அதிலிருந்து கதிரியக்கம் பெருகிப் பிரபஞ்சம் முழுவதும் விரைகின்றன. அதனையே பிரபஞ்சப் பின்புல நுண்ணலைக் கதிரியக்கம் (Cosmic Microwave Background Radiation-CMBR) என்கிறோம். இன்றைக்கும் அதனை நாம் உணர்கின்றோம். இந்த ஒன்றைத்தான் பெருவெடிப்பிற்கான ஆதாரமாக விஞ்ஞானிகள் சுட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து பின்னோக்கிப் போய்தான் இத்தனையையும் உணர்கின்றோம்.

அதன் பின்னரே, வெகுகாலத்திற்குப் பிறகு அடர்த்தியான பொருள்கள் ஈர்ப்புவிசையின் காரணமாக ஒன்றிணைந்து, அதனால் ஏற்பட்ட நிறையின் காரணமாக ஈர்ப்பு விசை கூடி மேலும், தன்னைச்சுற்றி உள்ள பொருட்களை மேலும் ஈர்த்து, மேகங்கள், நட்சத்திரங்கள், மண்டலங்கள் மற்றும் இதரவைகளாக உருப்பெற்றன. அதன் பின்னர்தான் நம் சூரியன் மற்றும் கோள்கள். அதற்குப்பின் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முதல் உயிரினம். அதற்குப் பின் பல மில்லியன் ஆண்டுகள் கழித்துதான் மனிதன்.


பெருவெடிப்பில் நாம் தவறாகப் புரிந்துகொள்வது

1. பெருவெடிப்பு என்றதும், ஏதோ வாணவெடி வெடித்துச் சிதறுவது போன்று கற்பனை செய்துகொள்கின்றோம். விஞ்ஞானிகள் என்ன சொல்கின்றார்கள் என்றால், அது ஒரு திடீர் விரிவடைவு அவ்வளவுதான் என்கிறார்கள்.

2. அனைத்தொருமை (Singularity) என்றதும், அது ஏதோ விண்வெளியில் இருந்த ஒரு சிறிய புள்ளி போன்ற ஒரு பொருள், அல்லது ஒரு கனன்று கொண்டிருந்த ஒரு நெருப்புப் புள்ளி என்று நினைக்கிறோம். அதுவும் தவறு. நினைவில் கொள்ளுங்கள், பெருவெடிப்பிற்குப் பின்னர்தான் வெளி என்ற ஒன்றே உருவானது. பொருள், நிகழ்வு மற்றும் காலமும் அப்படித்தான்.

அதாவது வெளியில் அந்த அனைத்தொருமை இல்லை. மாறாக வெளியே அந்த அனைத்தொருமைக்குள்தான் இருந்தது. அப்படியென்றால் அது எங்கேதான் இருந்தது? எங்கிருந்து வந்தது? எதற்காக வந்தது? சரியான பதில், நமக்குத் தெரியாது என்பதுதான். உண்மையில் நமக்குத் தெரிந்தது என்றால், நாமெல்லாம் அதற்குள் இருந்து வந்தோம் என்பது மட்டும்தான்.



பெருவெடிப்பிற்கான சான்று

1. உடுமண்டலங்கள் அதிவேகத்தில் ஒன்றை விட்டு ஒன்று விலகிச்செல்கின்றன என்பதை 1929ல் ஹப்பிள் என்பவர் கண்டுபிடித்துச் சொன்னது, பிரபஞ்சம் விரிவடைவதை உறுதிப்படுத்தியது.

2. CMBR என்ற பின்புலக் கதிரியக்கத்தினை 1965ல் Arno Penzias மற்றும் Robert Wilson 2.725K அளவில் வியாபித்திருப்பதைக் கண்டு சொன்னார்கள். இதைத்தான் விஞ்ஞானிகளும் பெருவெடிப்பை உறுதிப்படுத்தத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

Thursday, September 1, 2016

கிராவிட்டேசனல் வேவ்ஸ்!

பலர் கேட்டுக்கொண்டதன்படி, 'ஈர்ப்பலைகள்' என்று சொல்லப்படும் ' பற்றிய கட்டுரையை உங்களுக்குத் தருகிறேன். கட்டுரை விளக்கமாக இருக்க வேண்டுமென்பதற்காக, சற்றே நீளமாகிவிட்டது. மன்னிக்க.
-ராஜ்சிவா-

ஐன்ஸ்டைன் என்னும் ஆச்சரிய மனிதன்

     உங்கள் வீட்டில் பலூன் இருக்கிறதா? அப்படியென்றால் அதைக் கையிலெடுங்கள். அந்த பலூனின் இரப்பரை சதுர வடிவத்தில் வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சதுரம் இரண்டங்குல நீளம் X, இரண்டங்குல அகலம் Y இருந்தால் போதுமானது. இப்போது, அந்தச் சதுர இரப்பர் துண்டின் எதிரெதிர் பக்கங்களையும் உங்கள் வலது கையினாலும், இடது கையினாலும் பிடித்து இயன்ற மட்டும் இழுங்கள். அதாவது X அகலப் பக்கத்தை பெரிதாகும்படி முடிந்தவரை இழுங்கள். இப்போது நீங்கள் அவதானிப்பது என்ன? நீங்கள், X அகலப் பக்கத்தை இழுத்துப் பெரிதாக்கும்போது, Y பக்கத்தின் நீளம் தானாகவே சுருங்கிக் குறையும். 

     “அதுசரி, இப்பொழுது எதற்கு இந்த பலூன் விளையாட்டு?”

     சொல்கிறேன். அதற்கு முன்னர், நூறு வருடங்களுக்கு முன், அதாவது 1915ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டு வருவோம், வாருங்கள்.

     கணித, இயற்பியல் மாமேதையான 'அல்பேர்ட் ஐன்ஸ்டைன்' (Albert Einstein) , ‘பொதுச் சார்புக் கோட்பாடு’ (General theory of Relativity) என்ற புரட்சிகரமான கோட்பாட்டை, 1915ம் ஆண்டு உலகிற்கு அறியப்படுத்தினார். அதுவரை, ‘ஈர்ப்புவிசை’ (Gravity) என்றால், ‘ஒரு பொருள் தன்னை நோக்கி மற்றப் பொருளை இழுக்கும் விசை’ என்றுதான் அறிவியல் நம்பி வந்தது. ஐசாக் நியூட்டன் தலையில் அப்பிள் பழம் விழுந்ததை வைத்து (உண்மையில் அவர் தலையில் அப்பிள் பழம் விழவில்லை), ஈர்ப்புவிசைக்கு இப்படியானதொரு அர்த்தம் கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, ‘பூமியானது தனது மையத்தில் காந்தம் போன்ற ஒன்றைக் கொண்டிருப்பதாகவும், அந்தக் காந்தம் பூமியை நோக்கிய திசையில் அனைத்துப் பொருட்களையும் இழுத்துக் கொள்கிறது’ என்றும் ஈர்ப்புவிசை புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால், ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புவிசைக்கான விளக்கம், யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டைன் கொடுத்த விளக்கத்தின்படி, பேரண்டத்தின் அமைப்புப் பற்றிய பார்வையும் மாறிப் போனது. 

     முன்பின், வலதுஇடது, மேலேகீழே என்று முப்பரிமாண வடிவத்தில் நம் கண்களுக்குக் காட்சியளிக்கும் பேரண்டமானது, உண்மையில் முப்பரிமாணம் கொண்டதல்ல. அது கிடையாக விரிக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான, இரப்பரினால் (Rubber) செய்யப்பட்ட பாய்போலக் காணப்படுகிறது. என்ன…, இந்த இரப்பர் பாய் 92 பில்லியன் ஒளிவருடங்கள் அளவு பரப்பளவையுடையது. கற்பனையே பண்ணமுடியாத பிரமாண்டம் அது. இந்தப் பிரமாண்டமான இரப்பர் பாயின் மேலேயே நட்சத்திரங்களும், கோள்களும், காலக்ஸிகளும், கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும் அமர்ந்திருக்கின்றன.

     இப்போது நான் சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். பத்து அடி விட்டமுள்ள வளையத்தின் விளிம்பில், அதே அளவுள்ள ஒரு மெல்லிய இரப்பர் விரிப்பை, நன்றாக இழுத்துக் கட்டி வையுங்கள். இப்போது அந்த இரப்பர் விரிப்பின் மேல் பாரமுள்ள இரும்புக் கோளம் ஒன்றைப் போடுங்கள். அந்தக் கோளம் வைக்கப்பட்ட இடத்தில் இரப்பர், கீழ் நோக்கி வட்டவடிவத்தில் குழிவாக அமிழ்ந்து போயிருக்கும். அந்தக் குழிவான இரப்பர் மேற்பரப்பில் ஒரு சிறிய கோலிக் குண்டைப் போட்டால், அது அந்தப் பெரிய இரும்புக் கோளம் ஏற்படுத்தியிருக்கும் குழியை நோக்கி கீழே இழுக்கப்படும். இது உங்களுக்குப் புரிகிறதா? அப்படியென்றால், இதுபோலத்தான், பாய்போல விரிந்திருக்கும் அண்டவெளியில், நட்சத்திரங்களும், கோள்களும் அதனதன் திணிவின் அளவுக்கேற்ப, அண்டவெளியைக் கீழ்நோக்கி வளைத்தபடி காணப்படுகின்றன. பூமியும் அப்படியே! பூமியால் ஏற்படுத்தப்பட்ட அதன் குழியை நோக்கி அனைத்துப் பொருட்களும் இழுக்கப்படுவதையே ‘புவி ஈர்ப்புவிசை’ என்று ஐன்ஸ்டைன் வரையறுத்தார். அத்துடன் ஐன்ஸ்டைன் இன்னுமொரு கருத்தையும் சொன்னார். அண்டவெளியில் காணப்படும் நட்சத்திரங்களின் அதிகளவான திணிவினால் ஏற்படும் குழியின் வளைவில் ஒளிகூட வளைந்தபடியே வருகின்றது என்றார். ஆரம்பத்தில் ஐன்ஸ்டைனின் இந்த முடிவுகளை அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பின்னர் செய்யப்பட்ட பல பரிசோதனைகள், ஐன்ஸ்டைன் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நிரூபித்தது. 

     சூரியனுக்குப் பின்னால் மறைந்தபடி, வெகு தொலைவில் இருக்கும் சில நட்சத்திரங்கள், சூரிய கிரகணம் ஏற்படும் நாட்களில் நம் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தன. அதற்குக் காரணம் சூரியனால் ஏற்பட்ட வெளியின் வளைவில், அந்த நட்சத்திரங்களின் ஒளியும் வளைந்தபடி நம் கண்களை நோக்கி வந்ததால், நாம் அவற்றைக் காணக்கூடியதாக இருந்தது. இதுவே விண்வெளி வளைகிறது என்பதற்குப் போதிய சான்றாக அமைந்தது. ‘எதையும் தன் சொந்தக் கண்களால் பார்க்காமல், வெறும் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக் கணித்து, இந்த மனிதன் எப்படி இது போன்ற கோட்பாடுகளைச் சொல்கிறார்?’ என்று உலகமே வியந்தது. இருபதாம் நூற்றாண்டின் அதிசய மனிதராகவே ஐன்ஸ்டைன் கொண்டாடப்பட்டார். ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்னும் நம்பிக்கை அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஏற்படலாயிற்று. அத்துடன், ஐன்ஸ்டைன் கூறிய இன்னுமொரு கோட்பாட்டை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அதனை நிரூபிக்க முடியவில்லை. ஐன்ஸ்டைன் கூறினால் அதில் தவறே இருக்காது, என்ற நம்பிக்கையில் அதற்கான ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிள் ஈடுபடத் தொடங்கினார்கள். அதற்குப் பலன் நூறு வருடங்களின் பின்னர்தான் கிடைத்தது. கடந்த மாதம் அந்தக் கோட்பாட்டிற்கான சான்று கதவைத் தட்டியது. 

     அண்டவெளியானது நீளம், அகலம் கொண்ட இரண்டு பரிமாணத்தில் பாய்போன்று விரிந்திருக்கிறது. அதன் மேல் நட்சத்திரங்களும், கோள்களும், கருந்துளைகளும் காணப்படுகின்றன. இவையெல்லாம் நிலையாக அண்டவெளியில் நிற்கவில்லை. எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்றையொன்று சுற்றிக் கொண்டுமிருக்கின்றன. இவற்றின் உயரமும், அவற்றின் திணிவினால் ஏற்படும் அண்டவெளியின் குழிவும், உயரம் என்னும் மூன்றாவது பரிமாணத்தைக் கொடுக்கிறது. இந்த அண்டவெளி (Space), நேரத்துடன் (Time) இணைந்தே காணப்படும் என்று இயற்பியலாளர்கள் கருதுகிறார்கள். அதிக திணிவுள்ள கருந்துளைகள், அண்டவெளியை மிக ஆழமாக வளைத்திருப்பவை. வளைந்த இடத்தில், நேரம் மெதுவாகி, சமயத்தில் நின்றே விடுகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அண்டவெளியும், நேரமும் இணைந்து, ‘அண்டவெளி நேரம்’ (Spacetime) என்னும் கூட்டு நிலையில் காணப்படுகிறது என்கிறார்கள். மேற்படி சொன்ன மூன்று பரிமாணங்களுடன், நேரமானது நான்காவது பரிமாணமாக இங்கே இணைந்து கொள்கிறது. பரிமாணங்கள் எப்போதும் ஒன்றுக்கொன்று மிகவும் அருகிலேயே காணப்படுகின்றன. 

     அண்டவெளியில் அநேகமான நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்களாக ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. நம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் 'அல்ஃபா செண்டாரி' (Alpha Centauri) நட்சத்திரங்களும், இரட்டை நட்சத்திரங்களே! நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சமயத்தில் மாபெரும் திணிவையும், ஈர்ப்புவிசையையும் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்களும் (Neutron Stars), கருந்துளைகளும் (Blackholes) கூட, இரட்டைப் பிள்ளைகள் போல சுற்றிக் கொண்டிருக்கின்றன. இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் அல்லது இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கையில், அவற்றின் ஈர்ப்புவிசையின் காரணமாக தம்மைக்  கவர்ந்துகொண்டே சுற்றுகின்றன. இந்தக் கவர்ச்சி அதிகரிப்பினால், அவை ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில், தமக்கிடையேயான தூரத்தைக் குறைத்துக்கொண்டு வருகின்றன. எதோவொரு கட்டத்தில், இரண்டு கருந்துளைகளும் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களும் மிக அண்மையில் நெருங்கி வந்ததும் சடாரென ஒன்று சேர்ந்து, ஒரு கருந்துளையாகவோ, ஒரு நியூட்ரான் நட்சத்திரமாகவோ மாறிவிடுகின்றன. இரண்டும் ஒன்று சேர்வதற்கு சற்று முன்னரான நிலையில், அவை சுற்றும் வேகம் மிக அதிகமாகக் காணப்படும். ஒளியின் வேகத்தின் அரை மடங்குக்கு அதிகமான வேகமாகக்கூட அது இருக்கும். அந்த அதிவேகத்தினால், அண்டவெளியின் மேற்பரப்பில் அலைகள் போன்ற அதிர்வுகள் ஏற்படும். அதன்பின் இரண்டு கருந்துளைகளும் ஒன்றாகச் சேரும் கணத்தில் அதிர்வலைகள் மிக அதிகமாக வெளிப்படும். இந்த அலைகளை, 'ஈர்ப்பு அலைகள்' (Gravitational Waves) என்று ஐன்ஸ்டைன் குறிப்பிட்டார். மேற்படி, இரண்டு கருந்துளைகள் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்று சேரும்போது உருவாகும் மிகப்பெரிய ஈர்ப்பலையானது படிப்படியாக, அண்டவெளியினூடாகக் கடத்தப்பட்டு பூமிவரை வந்தடையும். தாய்லாந்தின் கடலுக்குக் கீழே பூமிப்பாறைகளின் உராய்வால் ஏற்பட்ட அதிர்வால் உருவான பேரலைகள், படிப்படியாகக் கடல்வழி நகர்ந்து, எங்கேயோ இருக்கும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெரும் சுனாமியாக உருவெடுத்து அழித்து ஓய்ந்ததல்லவா. அதுபோல, அண்டவெளியில் ஏற்படும் பிரளயங்களும் ஈர்ப்பலை அதிர்வுகளாக அண்டமெங்கும் கடத்தப்படும். அண்டவெளியில் ஈர்ப்பலையை ஏற்படுத்த, கருந்துளைகளோ, நியூட்ரான் நட்சத்திரங்களோ மட்டும்தான் தேவையென்றில்லை. நீங்களும், நானும் எம்பிக் குதித்தாலும், அண்டவெளியின் பரப்பில் அதிர்வுண்டாகும். அந்த அதிர்வு ஈர்ப்பலைகளை உருவாக்கும். ஆனால், அவையெல்லாம் அளக்கவே முடியாத மிகமிகச் சிறிய ஈர்ப்பலைகள். இந்த ஈர்ப்பலைகளை அளக்க வேண்டுமென்றால், கருந்துளைகள் போன்ற பெரிய கடோத்கஜன்கள்தான் மோதிக்கொள்ள வேண்டும்.      'ஈர்ப்பலைகள்' பற்றி ஐன்ஸ்டைன் குறிப்பிட்ட கணத்திலிருந்து, அப்படியொன்று இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாமல் தடுமாறியது அறிவியல் உலகம். போகும் போக்கில் கோட்பாடுகளை ஒரு தீர்க்கதரிசி போலச் சொல்லிவிட்டு மறைந்து போனார் ஐன்ஸ்டைன். ஆனால அவரின் கோட்பாடுகளை நிருபித்துக் காட்டுவோமென்று பலர் களத்தில் இறங்கினர். அந்த நிலையில்தான் ரஷ்யாவைச் சேர்ந்த 'மிகைல் கேர்சென்ஸ்டைன்' (Mikhail Gertsenshtein) மற்றும் 'விளாடிஸ்லாவ் புஸ்டோவொய்ட்' (Vladislav Pustovoit) ஆகிய இருவரும் 1962ம் ஆண்டு, இந்த ஈர்ப்பலைகளைக் கண்டுபிடிக்கும் விதத்தைக் கோட்பாடாக வெளியிட்டார்கள். இதைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு, லேசர்க் கதிர்களின் உதவியுடன் 'இண்டெர்ஃபெரோமீட்டர்' மூலமாக ஈர்ப்பலைகளை அவதானிக்கும் பரிசோதனைச் சாலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அது 'லைகோ' (LIGO -  Laser Interferometer Gravitational wave Observatory) என்றழைக்கப்படுகிறது. 

     2002ம் ஆண்டு 'லூசியானா' மாநிலத்தில் இருக்கும் 'லிவிங்ஸ்டன்' (Livington Louisiana) நகரில், உலகிலுள்ள பல நாடுகளின் கூட்டு முயற்சியாலும், ஆயிரத்துக்கு அதிகமான ஆராய்ச்சியாளர்களுடனும், பலநூறு மில்லியன் டாலர்கள் செலவில்,  'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி நிலையம் 2010ம் ஆண்டுவரை எந்தவிதமான ஈர்ப்பலைகளையும் கண்டுபிடிக்கவில்லை. அதன்பின்னர் 2015ம் ஆண்டு, மிகவும் நவீனமான முறையில் புதிய ஆராய்ச்சி நிலையங்களாக 'லைகோ' மாற்றியமைக்கப்பட்டது. இம்முறை வாஷிங்டனில் உள்ள ஹான்ஃபோர்ட் ( Hanford, Washington) நகரிலும் இரண்டாவது 'லைகோ' ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு ஆராய்ச்சி நிலையங்களின் இடைவிடாத அவதானிப்புகளால், ஈர்ப்பலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.        

     ஒன்றுக்கொன்று 90 பாகைக் கோணத்தில் அமைந்த மிக நீண்ட இரண்டு குழாய்கள் லைகோவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை இரண்டும் சந்திக்குமிடத்தில் லேசர் கதிர்கள் செலுத்தும் கருவியும், அந்த லேசர் கருவிகள் குழாய்கள் வழியே சென்று, அங்கிருக்கும் கண்ணாடியில் தெறிப்படைந்து மீண்டும் திரும்பி வரும்போது, அதைக் கிரகித்துக் கொள்ளும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் இரண்டும் நான்கு கிலோமீட்டர்கள் நீளத்துடன், நேர்கோட்டில் அமைந்தவை. குழாயின் வழியாகச் செலுத்தப்படும் லேசர் கதிர்கள், அந்தக் குழாய்கள் வழியாகச் சென்று, அவற்றின் முடிவில் அமைந்திருக்கும் கண்ணாடிகளில் பட்டுத் தெறித்து, அதே பாதையில் மீண்டும் திரும்பிவரும். இப்படி இரண்டு குழாய்களிலிருந்து வரும் கதிர்கள், சென்று திரும்ப எடுக்கும் நேரம் துல்லியமாகக் கணிக்கப்படும். இரண்டு குழாய்களும் ஒரே நீளமுள்ளவையாக இருப்பதால், இரண்டினூடாகவும் லேசர் கதிர்கள் சென்றுவர ஒரேயளவு நேரமே எடுக்கும். 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ம் தேதி 9:51 மணியளவில், உலகமே அதிசயிக்கும் அந்த அறிவியல் ஆச்சரியம் நடந்தது. வாஷிங்டன் மற்றும் லூசியானா இரண்டு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்களின் கணணித் திரைகளும் ஒரே நேரத்தில் அதிர்வுகளால் துடித்தன. 

     லைகோவிலுள்ள லேசர் அவதானிப்புக் கணணிகளில் முதல் முறையாகச் சலனங்கள் தோன்றின. லேசர் கதிர்களின் நேர அளவுகள் இரண்டு குழாய்களிலும் சமமாக இருக்குமென்று சொன்னேனலவா? அந்த அளவுகளில் வித்தியாசம் காணப்பட்டது. ஈர்ப்பலையதிர்வுகள் அந்த இடங்களைக் கடந்து சென்றதாகக் கருவிகள் காட்டின. ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் துள்ளிக் குதித்தனர். 'நூறு வருடங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டைன் கூறிய கோட்பாடு உண்மையே!' என்று நிரூபனம் கிடைத்தது. ஆனால் உடனடியாக அவர்கள் அதை வெளியிடவில்லை. காரணம், அந்த அதிர்வுகள் உண்மையாகவே விண்வெளியிலிருந்துதான் வந்தனவா? அவை நிஜமான அண்டவெளி ஈர்ப்பலைகள்தானா? அவை எவ்வளவு தூரங்களிலிருந்து வந்தன? எதனால் அந்த அலைகள் ஏற்பட்டன? என்பது போன்ற ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன. கிடைத்த தகவல்களோ ஆச்சரியமானவை. சாதாரண மக்களால் நம்பவே முடியாதவை. அந்தக் காரணங்களை ஆராய்ந்து ஒரு மாதத்தின் பின்னர் கடந்த வாரம், "ஈர்ப்பலைகளைக் கண்டுபிடித்துவிட்டோம்" என்று உலகிற்குச் சத்தமாகச் சொன்னார்கள். 

     1.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருந்த இரண்டு கருந்துளைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கருந்துளையாக மாறியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளையே நாம் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த இரண்டு கருந்துளைகளும், கிட்டத்தட்ட 30 சூரியனின் அளவையுடயனவாக இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிலோமீட்டர்கள் குறுக்களவுள்ளவையாக இருந்திருகின்றன. அதாவது, சென்னையை விடப் பெரிதானவையாக இருந்திருக்கின்றன. மோதும் கணத்தில் அவை ஒளியின் அரை மடங்கு வேகத்தில் சுற்றியிருக்கின்றன. அவ்வளவு வேகத்தில் சுற்றிய இந்தக் கருந்துளைகள் இரண்டும் மோதியதால் ஏற்பட்ட ஈர்ப்பலைகள், 1.3 பில்லியன் வருடங்களாகச் சுனாமி அலைகள் போலப் படிப்படியாக அண்டவெளியெங்கும் நகர்ந்து, நம் பூமியைத் தாண்டிச் சென்றிருக்கிறது. நீங்கள் குளத்தில் கல்லெறியும் போது, அது ஏற்படுத்தும் வட்டமான அலைகள் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கும் இலைச் சருகை, அசைத்துவிட்டுச் செல்லுமே அதுபோல, கருந்துளைகளால் ஏற்படுத்தப்பட்ட ஈர்ப்பலைகளும் பூமியைத் தாண்டும்போது, பூமியை சற்றே அசைத்துவிட்டுப் போயிருக்கிறது. அசைவு மிகச் சிறியதுதான். ஒரு புரோட்டான் அணுவின் பத்தாயிரத்தில் ஒரு பங்குதான் அந்த அசைவு. அதுவே நமக்குப் போதுமானது. அந்த அசைவை 'லைகோ' குழாய்கள் உடனே கண்டுபிடித்துவிட்டன. 'அதுசரி, எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'

     இப்போது, நாம் ஆரம்பத்தில் கூறிய பலூன் துண்டை இழுத்துப்பிடித்த சம்பவத்துக்கு வரலாம். 

     பலூனில் சதுரமாக வெட்டிய சிறிய இரப்பர் துண்டை, இருபக்கமும் பிடித்து இழுத்தோமல்லவா? அப்படி இழுக்கும்போது, அதற்குச் 90 பாகையில் அமைந்த மற்ற இரண்டு பக்கங்களும் சிறியதாக மாறின அல்லவா? இதுபோலத்தான், அண்டவெளியும் ஒருபுறம் அழுத்தப்பட்டால் மறுபுறம் விரிவடையும். லைகோவில் 90 பாகையில் அமைக்கப்பட்ட இரண்டு குழாய்களைத் தாண்டிச் செல்லும் ஈர்ப்பலைகள் அங்கேயிருக்கும் அண்டவெளியைச் சற்றே இழுக்கும். அதே சமயத்தில் அண்டவெளியின் மறுபக்கம் சிறியதாகும். எல்லாமே மிகமிகச் சிறிய அளவுகளில்தான் நடைபெறும். இதனால், ஒரு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே கூட, மறு குழாயினூடாகச் செல்லும் லேசர் கதிர்களின் நீளம் சற்றே குறையும். இந்த லேசர் கதிர்களின் அளவு வித்த்தியாசத்தைக் கணணிகள் உடனடியாகக் கணித்துக் கொள்கின்றன.

     முடிவில் மாபெரும் புரட்சியாக 'கிராவிட்டேசனல் வேவ்ஸ்' என்று சொல்லப்படும் ஈர்ப்பலைகளை நாம் கண்டுபிடித்துவிட்டோம். அறிவியலுலகை மாற்றியமைக்கப் போகும் கண்டுபிடிப்பு இது. இதன்மூலம் ஈர்ப்புவிசை பற்றிய முழுமையான தெளிவும், ' இணையண்டம்' (Parallel Universe), 'பல்பரிமாணங்கள்' (Dimesions), 'பல அண்டங்கள்' (Multiverse) போன்ற கோட்பாடுகளுக்கான விடைகளையும் காணக்கூடிய வழி கிடைத்திருக்கிறது. இவற்றை ஆராய்வதற்கு மேலும் ஆறு 'லைகோ' ஆராய்ச்சி நிலையங்கள் உலகெங்கும் அமைக்கப்படவிருகின்றன. விண்வெளியின்கூட ஒன்று அமைக்கப்படலாம். இதில் முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். 14.09.2015 அன்று மனித வரலாறின் மிகமுக்கிய சம்பவமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்குக் காரணமாக இருந்த, 1.3 பில்லியன் வருடப் பழைய ஈர்ப்பலைகள் என்னையும், உங்களையும் தொட்டுவிட்டே தாண்டிச் சென்றிருக்கின்றன. அந்தக் கருந்துளைகள் மோதியபோது ஏற்பட்ட அதிர்வுகளின் ஒலி, மனிதக் காதுகளால் கேட்கும் அதிர்வுகளையே கொண்டிருந்தன. அந்த ஒலியும் ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதன்முதலாகப் பேரண்டத்தின் பேச்சு ஒலியை மனிதன் தன் காதால் இந்தச் சம்பவத்தின் மூலமாகக் கேட்டிருக்கின்றான்.  இறுதியாக ஒன்று:
     'லைகோ' ஆராய்ச்சி நிலையமொன்றை இந்தியாவிலும் அமைப்பதற்குக் கோரிக்கைகள் விடப்பட்டிருக்கிறது. இந்திய அணு ஆராய்சிக் கழகத்தினால் இன்னும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. யார் கண்டது அது தமிழ்நாட்டில் கூட அமைக்கப்படலாம். 

-ராஜ்சிவா-