Wednesday, September 28, 2016

நீங்கள் பருகும் நீரில் எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா?



ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஆனால்
ஒரே ஒரு பூமி

நீர், உயிர் ஆற்றலின் அடிப்படை வடிவம். நீர் இல்லாத நிலத்தில் உயிர்கள் வாழ்வது இல்லை. நீர் என்பது தாகம் தணிக்கும் பொருள் மட்டும் அல்ல; நீரும் ஓர் உணவுதான். “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்பது, நமது சங்கப்பாடலின் வரி. நீரில் உயிர்கள் இருக்க வேண்டும். அந்த உயிர்கள் யாவும் மனித உடலில் வாழ்ந்து பெருகினால்தான், இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கும். உயிரற்ற நீரை மட்டுமே பருகிக்கொண்டிருந்தால், உடலின் இயக்க ஆற்றல் தடைபடும். உடலுக்கு தேவையான ஊட்டங்கள் கிடைக்காது.
பூமியில் உள்ள பல வகையான நீரும் அப்புறப்படுத்தப்பட்டு, எல்லா இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பப்பட்டால், ஒரே ஒரு உயிர்கூட வாழாது. மனித உடலும் இப்படிதான், சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே தொடர்ந்து பருகிக்கொண்டிருந்தால், உயிர் ஆற்றலை இழக்கத் தொடங்கிவிடுகின்றது.
தூய்மையான குடிநீர் என்ற கருத்து மிகவும் தேவையானது. இந்தக் கருத்தை வணிகமயமாக மாற்றிய நிறுவனங்கள், தூய்மை என்ற இடத்தில் சுத்திகரிக்கப்பட்ட என்ற சொல்லைத் திணித்துவிட்டன.இது வெறும் சொல் விளையாட்டு அல்ல; மிக மோசமான விளைவுகளைத் தருகிற உயிர் விளையாட்டு.
மழைதான் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்குமான நீர் ஆதாரம். ஆறு, ஏரி, குளம், குட்டை, ஊற்று, சுனை, ஓடை, காட்டாறு போன்ற எல்லா வடிவங்களிலும் மழைநீர்தான் நமக்கும் நம்முடன் வாழும் பிற உயிரினங்களுக்கும் உணவாக வேண்டும். இந்த நீரில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இருக்கும். நுண்ணுயிரிகள் இல்லாத நீர் என எதுவும் இயற்கையில் இல்லை. சரியாக பராமரிக்கப்படாத நீரில் இயற்கையான அளவை விட அதிகமான நுண்ணுயிரிகள் பெறுகிவிடும். இது பாதுகாப்பாற்ற குடிநீர். இவ்வாறு நேராத வகையில், குடிநீர் முறையாக பராமரித்தால் போதும்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர், குடிநீர் நிறுவனங்கள் சமூகத்தின் உடல் நலனில் அக்கறை செலுத்த தொடங்கின. நாம் பருகும் ஒவ்வொரு சொட்டு நீரும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என அந்த நிறுவனங்கள் மிகுந்த கவலை கொண்டன. சுத்திகரிக்கப்பட்டநீர் புட்டிகள் சந்தைக்கு வந்தன. நீரில் வாழும் நுண்ணுயிரிகளையெல்லாம் கிருமிகள் என்ற பொதுபெயரால் அந்த நிறுவனங்கள் அழைத்தன. எல்லா நுண்ணுயிரிகளையும் கிருமிகள் என அழைப்பது அறிவியலுக்கு புறம்பானது மட்டுமல்ல, மிக மோசமான பொய்யும்கூட. பொது இடங்களில் கிடைக்கும் எந்த நீரும் கிருமிகளால் நிரம்பியதுதான் என்ற கட்டுக்கதை வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டது.




உணவகங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் இருக்கும் குடிநீர் தரமற்றது என மக்கள் நம்பத் தொடங்கினர்.
முறையான பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இவை தரமான நீராக மாறியிருக்கும். அரசும் அதன் துணை அமைப்புகளும் குடிநீர் நிருவனங்களும் இணைந்து பணியாற்றின. விளைவாக, இப்போது நீங்கள் பருகும் பெரும்பான்மையான குடிநீர் “சுதிகரிக்கப்பட்ட”தாகி விட்டது.
“சுதிகரிப்பு செய்யும் நீரில் உள்ள கிருமிகள்மட்டும் தேடித் தேடி அழிக்கப்படுகின்றனவா அல்லது எல்லா நுண்ணுயிரிகளும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யப்படுகின்றனவா?” என்ற கேள்வியை நீங்கள் கேட்கவேண்டும் ஏனெனில், நுண்ணியிரிகள் மிகமிக குறைவாக உள்ள நீர், மனித உடலை உலுக்கிபோடும் அளவுக்குத் தீமைகளைச் செய்யக்கூடியது. நமது உடலே நுண்ணுயிரிகளின் பிரபஞ்சம்தான். இந்தப் பிரபஞ்சத்துக்குள் நீர் என்னும் உணவின் வழியாகத் தொடர்ந்து கோடானுகோடி உயிரிகள் செல்ல வேண்டும். இது படைப்பின் விதி. இவ்வாறு செல்லும் உயிரி கூட்டத்தில், உடலுக்கு ஒவ்வாத வகையினங்கள் இருந்தால், அவற்றை அழித்து வெளியேற்றுவதற்கு என, எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் நமது உடலுக்குள் உள்ளன.
எச்சில் அவற்றில் மிக முக்கிய பாதுகாப்புக் கவசம். உடலின் மிகச் சிறந்த பாதுகாப்பு எதிர் உயிரி மருந்து(ஆண்டிபயொட்டிக்) எச்சில்தான். இயற்கையான குடிநீரைப் பருகும்போது எச்சில் சுரந்து, இனிமை மிகுந்த சுவை உண்டாகின்றது. புட்டிகளில் அடைத்த நீரை பருகும் போது, அளவுக்கு அதிகமான எச்சில் சுரப்பதையும் அதில் கசப்புச் சுவை மிகுந்திருப்பதையும் உணர்ந்திருப்பீர்கள். உடலுக்கு ஒவ்வாத எந்த உணவையும் பானத்தையும் வாயில் திணிக்கும்போது, எச்சில் சுரப்பு அதிகமாக இருக்கும். உள்ளே நுழையும் ஒவ்வாத பானத்தை அல்லது உணவை உடனடியாகச் சுத்திகரித்து வெளியே துப்பச் செய்யும் பணியை, எச்சில் சுரப்பிகள் செய்கின்றன.
உடல் முழுவதும் இவ்வாறான தற்காப்பு உறுப்புகளும் சுரப்பிகளும் படைக்கப்பட்டுள்ளன. இவையாவும், உயிருள்ள பொருட்களைக் கையாளும் வகையில் உள்ளனவே தவிர, வேதிப்பொருட்களைக் கையாளும் வகையில் அல்ல என்பதே முக்கியமான சேதி. தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்படும் நீரில் கலக்கப்படும் வேதிப்பொருட்களில் குளோரின் முதன்மையானதும் அடிப்படையானதும். இதப் பயன்படுத்தாத சுத்திகரிப்பு நிலையங்களே இருக்காது. அரசு குடிநீர்கூட குளோரின் வழியாகதான் சுத்திகரிக்கப்படுகிறது. குளோரின் பயன்பாட்டினால் மன அழுத்தம், மன பதற்றம், பீதியடைதல் என மூன்று வகையான மன நோய்கள் உருவாகின்றன என நவீன அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. இந்த மனநோய்கள், மோசமான உடல் நோய்களை உருவாக்கும் என்பதும், அந்த நோய்களை ஒரு வரையறைக்குள் அடக்கி பட்டியலிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சமூகத்தில் எல்லா பாவங்களுக்கும் ஒரு வடிகால் உள்ளது. அந்த வடிகாலுக்கு உள்ள மதிப்புமிக்க பெயர், “அனுமதிக்கப்பட்ட அளவு” என்பது. “குடிநீரில் குளோரின் பயன்பாடு புற்றுநோயை உருவாக்குமா? என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், “சுத்திகரிப்பு” நிபுனர்கள் அளிக்கும் விடை, “அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்தினால் குளோரின் பாதுகாப்பானதுதான்” என்பதாக இருக்கும்.
புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரை வாங்கி பருகுகிறீர்கள். நீங்கள் பருகும் நீரில் எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? அது அனுமதிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது எனத் தெரியுமா? உங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்தக் குடிநீரில் கிருமிகள் இல்லை. ஆகவே, இது பாதுகாப்பானது’. கிருமிகளைக் காட்டிலும் கொடூரமான விளைவுகளை வேதி நஞ்சுக்கள் உருவாக்குகின்றன என்பதும், அந்த நஞ்சுக்கள் கலக்கப்பட்ட நீரைத்தான் பருகிக்கொண்டுள்ளோம் என்பதும் நீங்கள் அறியாதவை. ஒரு லிட்டர் நீரில் எவ்வளவு வேதிப்பொருட்கள் கலக்கலாம் என்ற கணக்கை, மிகத்துல்லியமாக எல்லா நிறுவனங்களும் கடைபிடிக்கின்றன என நம்புகிறீர்கள் அல்லவா? இந்த நம்பிக்கை உண்மையாகவே இருக்கட்டும்.  குளோரின் கலக்கப்பட்ட நீரை ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் பருகுவது பாதுகாப்பானது? எத்தனை ஆண்டுகளுக்குப் பருகுவது பாதுகாப்பானது? ஆகிய இரு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிப்பாருங்கள். உங்களுக்கு நீர் வழங்கும் நிறுவனங்களிடம் இந்த கேள்வியைக் கேளுங்கள். பதில் சொல்லவேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் அவர்களுக்கு உள்ளன.
பூமியில் வீசும் கதிர்வீச்சுகளில் அகச்சிவப்பு, புறஊதாக்கதிர்கள் அடிப்படையானவை. குறைந்த வெப்பஆற்றல் செறிவு கொண்டவை, அகச்சிவப்புக்கதிர்கள். மிகை வெப்ப ஆற்றல் செறிவு கொண்டவை புறஊதாக்கதிர்கள். பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் புறஊதாக் கதிர்வீச்சைப் பாய்ச்சிதான் சுத்திகரிப்பு செய்கின்றன. குளத்து நீரின் கீழே படிந்திருப்பவை அகச்சிவப்புக்கதிர்கள். நீரில் மிகக் குறைவான அளவு கதிர்வீச்சு இருப்பது, நுண்ணுயிர் வாழ்க்கைக்கு நல்லது. குளத்து நீர் மாசுபடாதவரை, மனிதர்களும் பருகலாம். அதிக அளவிலான கதிர்வீச்சுகள் எந்த உயிரினத்துக்கும் ஆபத்தானவை தான். குறைந்த அளவு கர்வீச்சுகள் அடங்கிய உணவையும் நீரையும் உட்க்கொள்ளும் வகையில் மனிதன் படைக்கப்பட்டுள்ளோம். இப்போது மிதமிஞ்சிய புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடாக, மிகைக்கதிர்வீச்சுகள் குடிநீரில் செலுத்தப்படுகின்றன.
புற ஊதாக்கதிர்களை நீரில் பாய்ச்சுவது கிருமிகளை மட்டும் தான் அழிக்கும்; அந்த நீரைப் பருகும் மனிதர்களை அழிக்காது என எந்த ஆய்வுகளும் இதுவரை கூறவில்லை.
நீங்கள் பருகும் குடிநீரில் கதிர்வீச்சுக்கள் உள்ளன என்பதையாவது முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா வேதிப்பொருட்களும் பிளாஸ்டிக் உடன் வினைபுரிபவைதான். பிளாஸ்டிகில் அடைக்கப்பட்ட ஒரு சொட்டு நீர் உங்கள் வாயில் விழும்போது, அதில் பல வகையான வேதிப்பொருட்களும் கதிர்வீச்சுகளும் கலந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“ அரசு அனுமதி பெற்ற நிறுவனம் ” தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் போன்ற அறிவுப்புகளின் பின்னால், மறைவான ஒரு உலகம் இருக்கின்றது.
உங்களை வந்தடையும் ஒவ்வொரு நீர் புட்டியையும் அரசு அதிகாரிகள் சோதித்து அனுப்புவதாகவும், உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள் சோதித்து சான்று தருவதாகவும் ஒரு மாயத்தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே நீரை “சுத்திகரிப்பதற்கு” என அமைக்கப்படும் கருவிகளுக்கும், மேல உள்ள அனைத்து விளக்கங்களும் பொருந்தும்.
நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு நன்னீர்தான் உயிர் ஆதாரம். நன்னீர் என்றால், பலகோடி நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய நீர்தான். நீருக்கும் மனிதர்களுக்குமான இயற்கையான உறவை, நிறுவனங்களும் அவற்றை தாங்கிப்பிடிக்கும் தொழில்நுட்பங்களும் சிதைத்துவிட்டன. நமது மரபு, நவீனத்தின் சதிகளை காட்டிலும் வலிமையானது. “மழைநீர்தான் அமுதம்” என்றார் ஆசான் திருவள்ளுவர்.
மழை நீரை சேமிக்கும் தொழில்நுட்பங்கள் இப்போது கூடுதலாக தேவைப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்வோர், நமக்குள் கூட்டமைப்பு ஏற்படுத்தி அனைவருக்கும் பொதுவாக மழை நீர் சேமிப்பில் ஈடுபடலாம். ஏரிகளும் குளங்களும் தூய்மையானவையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தேவையான நேரத்தில் நீரை காய்ச்சிப் பருக வேண்டும்.
வேறுவழியில்லாமல், “சுத்திகரிப்பு”  நீரை பயன்படுத்துவோருக்கு என, சத்துநீர்முடிச்சு ஒன்றைப் பரிந்துரைக்கின்றேன். நன்னாரிவேர், வெட்டிவேர், தேற்றாங்கோட்டைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒரு தூய வெள்ளை துணியில் முடிச்சாக கட்டிவைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் இவையனைத்தும் சிறிய அளவில் இருந்தால் போதும். அனுபவத்தில் அளவுகளைக் கற்றுக்கொளுங்கள். “சுத்திகரிக்கப்பட்ட” நீரை, பானையில் ஊற்றிவைத்து, அந்த முடிச்சை உள்ளே போட்டுவிடுங்கள். ஓரிரு மணிநேரத்தில் குடிநீர் மணக்கும். பானையில் ஊற்றப்படும் நீரில் உயிரிகள் உற்பத்தியாகின்றன. உள்ளே போடப்பட்ட முடிச்சு, சத்து வழங்குவதாகவும், இயற்கையான பாதுகாப்புக் கருவியாகவும் செயலாற்றும்.
இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். உங்கள் பொருளாதாரம், நாட்டு மருந்து கடைகளை நோக்கி திரும்புவது மிக நல்லது. அங்கு தான் நமது காடுகளுக்கும் நகரங்களுக்கும்  இடையிலான வேர்கள் ஒட்டிக்கொண்டுள்ளன. அந்த வேர்களின் ஆயுட்காலம் மிக நீளமானது. எந்த சீர்கேடுகளையும் உறிஞ்சியெடுத்து மரங்களைக்காக்கும் வல்லமை அந்த வேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி
ஆனந்த விகடன்
3.8.16 www.vikatan.com

No comments:

Post a Comment