Wednesday, March 25, 2015

(காலோத்திர ஆகமம்) திருமந்திரம்


 ஆறு ஆதாரம்

1704. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம்கண்டு ஆங்கே முடிந்து முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.
பொருள் : அக நிலைகள் ஆறும் வருமாறு: நான்கு இதழ்கள் உள்ள மூலமும் (மூலாதாரம்), ஆறு இதழ்கள் உள்ள கொப்பூழும் (சுவாதிட்டானம்), பத்து இதழ்கள் உள்ள மேல்வயிறும் (மணிபூரகம்), பன்னிரண்டு இதழ்கள் உள்ள நெஞ்சமும் (அனாகதம்), பதினாறு இதழ்கள் உள்ள மிடறும் (விசுத்தி), இரண்டு இதழ்கள் உள்ள புருவநடுவும் (ஆஞ்ஞை), ஆகிய ஆறு இடங்களும் ஆறு ஆதாரங்கள் எனப்படும். இந்நிலைக் களங்களின் நினைந்து வழிபடக் காலத்தைத் தோற்றுவித்துத் தொழிற்படுத்தும் சிவபெருமானின் திருவடி காணலாகும்.
1705. ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசக்தி
போதா லயத்துஅ விகாரந் தனிற்போத
மேதாதி ஆதார மீதான உண்மையே
பொருள் : ஓசைமெய்யாகிய நாத தத்துவத்தின்கண் பன்னிரு கலைகளோடு கூடியது சூரிய மண்டலம்; பதினாறு கலைகளோடு கூடியது திங்கள் மண்டலம் நிலமுதல் நாதம் ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்தாறு மெய்களும் மேலாகப் பேராற்றலாகிய திருவருள் அம்மை வீற்றிருந்தருள்வன். இயற்கை உணர்வின் இருப்பிடமாகிய தனிமுதற் சிவன் அதற்குமேல் காணப்படுவன். இவற்றிற்கு எல்லாம் சார்பு நிலைக்களமாக வுள்ளதும் அச்சிவனேயாவன்.
1706. மேல்என்றும் கீழ்என்று இரண்டறக் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகிநின் றானே.
பொருள் : மேல் கீழ் என்னும் பாகுபாடுகள் நீங்கி ஆராயுமிடத்துத் தான், யான், நீ என்னும் மூவிடப் பெயர்களும் அவன், அவள், அது என்னும் திணைபாற் பெயர்களும் கூடிப் பெயர்த்தன்மை ஆறாகும். நிலவுலகம் எங்கணும் பரந்து நிறைந்த முழுமுதற் தனிப்பொருளாம் சிவன் வேண்டாமை கொடுத்தலின் காரும், வேண்டக் கொடுத்தலின் கற்பகமும் ஆகி நின்றருள்கின்றனன். மேகத்தையும் கற்பகமரத்தையும் ஒப்பாகக் கொடுப்பவன் என்க: (கேட்காமல் கொடுப்பது - மேகம் கேட்டுக் கொடுப்பது - கற்பகம்)
தொடரும் .....

No comments:

Post a Comment