Wednesday, March 25, 2015

A Day and Night of Brahma யுகம் என்றால் என்ன?


யுகம் என்றால் என்ன? எதை கொண்டு அவை நிர்ணயிக்கப்படுகிறது? அவற்றுக்கு அடிப்படை என்ன? எதை கொண்டு அவை பிரிக்கப்படுகிறது? மொத்தம் எத்தனை யுகங்கள் உள்ளது?
இவை அனைத்திற்கும் விடை “பிரம்மனின் காலம்”. சரி பிரம்மனின் காலம் என்றால் என்ன? யுகங்கள் எவ்வாறு பிரம்மனுடன் தொர்பு உடையதாகிறது?
இதை பற்றி ஒவ்வொருவரும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நம் புராணங்களும் இதிகாசங்களும் இந்த பிரம்மனின் கால அளவை கொண்டே நிகழ்வுகளை குறிக்கிறது. எனவே இதை பற்றி சற்று விரிவாக அலசலாம்.
மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள்.
1 மனித வருடம் = 1 தேவ நாள்.
360 மனித வருடம் = 1 தேவ வருடம்.
இப்போது தேவர்களின் கால கணக்கை துவங்குவோம்.....
12000 தேவ வருடம் = 1 சதுர்யுகம் (43,20,000 மனித ஆண்டுகள்).
1 சதுர்யுகம் என்பது 4 யுகங்களை கொண்டது. அதாவது 12000 தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.
கிருத யுகம் 17,28,000 மனித வருடம் / 4800 தேவ வருடம்.
திரேதாயுகம் 12,96,000 மனித வருடம் / 3600 தேவ வருடம்.
துவாபரயுகம் 8,64,000 மனித வருடம் / 2400 தேவ வருடம்.
கலியுகம் 4,32,000 மனித வருடம் / 1200 தேவ வருடம்.
அதாவது ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மனித ஆண்டுகள் அல்லது 12,000 தேவ வருடங்கள். சதுர்யுகத்தை மஹாயுகம் என்றும் அழைப்பர்.
71 மகாயுகங்கள் = 1 மனுவந்தரம்.
மொத்தம் 14 மனுவந்திரங்கள் உள்ளன அவை :
1.சுவயம்பு
2.சுவாரோசிஷம்
3.உத்தமம்
4.தாமசம்
5.ரைவதம்
6.சாக்சூசம்
7.வைவசுவதம்
8.சாவர்ணி
9.தக்ச சாவர்ணி
10.பிரம்ம சாவர்ணி
11.தர்ம சாவர்ணி
12.ருத்திர சாவர்ணி
13.ரௌசிய தேவ சாவர்ணி
14.இந்திர சாவர்ணி
இப்போது நாம் இருப்பது 7 வது மனுவந்திரம்.
1 மனுவந்திரம் என்பது ஒரு மனுவின் ஆட்சிகாலம் என்பதை மட்டும் இப்போது நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களை கட்டுரையின் கீழ் காண்போம்.
கல்ப காலம்:
ஒரு கல்பகாலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பும் நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகலை மட்டும் பிரம்மனின் ஒரு நாள் என்று பேச்சு வழக்கில் வந்தது.
பிரம்மனின் கல்பகாலத்தில் 14 மனுவந்திரங்கள் அடங்கும். அதாவது ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் 1 மனு மற்றும் 1 இந்திரன் வீதம், 14 மனுக்கள் மற்றும் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள் (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).
2 மனுவந்திரத்திர்க்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும்.
இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. ஸந்தியா காலத்தின் அளவு நான்கு கலியுகம் அளவு. அதாவது, 432000 X 4 = 1728000 மனித வருடங்கள்.
இதேபோல் 14 மனுவந்திரத்திர்க்கு பின்பு மீண்டும் ஒரு பெரிய இடைவேளை இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு.
எனவே பிரம்மனின் ஒரு பகலில், 71 X 14 மகாயுகங்களும்,15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
14 மனுவந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 = 2,59,20,000 மனித ஆண்டுகள்.
2,59,20,000 = 6 மஹாயுகங்கள். ( 43,20,000 X 6 = 2,59,20,000).
ஆக பிரம்மனின் 1 பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர்யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும் கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.
இவ்வாறு 360 நாள் (அ) 360 கல்பம் (அ) 360 X 1000 சதுர்யுகம் என்பது பிரம்மனின் ஒரு வருடம்.
பிரம்மனின் 100 வருடம் = ஒரு பிரம்மனின் ஆயுள்.
அதாவது பிரம்மனின் ஆயுள் என்பது 155,520,000,000,000 மனித வருடங்கள்.
அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.
ஸ்ஸ்ஸ்ஸ்..... இப்பவே கண்ணை கட்டுதே....
யுகங்கள் என்றால் என்ன.... அவை எப்படி பிரம்மனோடு தொடர்பு கொண்டுள்ளது என்று ஓரளவிற்கு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் அல்லது பிரம்மாவின் பகலுக்கு 'சுவேத வராஹ கல்பம்' என்று பெயர். இக்கல்பத்தினுள், 7-வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 28-வது மகாயுகத்தில், கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது. கி.பி.2015 என்பது கலியுக வருடம் 5116 – 17 என்பதை குறிக்கின்றது.
நவீன கால விஞ்ஞானம் இந்த உலகத்தில் உயிரினம் தோன்றிய காலத்தை கணித்து 1,972,944,456 வருடங்கள் என்று கூறுகிறது. மேலே உள்ள நமது யுகங்களின் கணக்கை வைத்து பார்க்கும் போது தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,972,944,456 வருடங்கள் என்பது தெளிவாகிறது. பிரம்மாவிற்கு இப்போது 51 வயது நடந்து கொண்டிருக்கிறது. பிரம்மாவின் ஆயுள் 100 என்றால், அதன் பின் பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அழியும் என்றால் இன்னும் ஜீவராசிகள் உயிர்வாழ 49 பிரம்மா ஆண்டுகள் பாக்கியுள்ளன. அதாவது 76,20,48,00,000,000 வருடங்கள் இன்னும் பாக்கியுள்ளது. நவீன அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் மீதம் உள்ள ஆயுள் என்று கணக்கிட்ட வருடங்களும் கிட்டத்தட்ட இதுவே... ஆச்சரியமாக இருக்கிறதா? நம்பிக்கை இல்லாவிட்டால் கூகிள் செய்து பாருங்கள்.....
நமது வேதங்களை மிஞ்சும் எந்த விஞ்ஞானமும் இவ்வுலகில் இல்லை என்பதை பெருமையுடன் சொல்லுவோம்.


No comments:

Post a Comment