Saturday, June 15, 2013

தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது! சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!

"கோயம்புத்தூர்" பெயர்க்காரணந்தெரியுமா உங்களுக்கு..?

நம் கவியரசர் கண்ணதாசனவர்கள்
கூறுகின்ற விளக்கத்தை பாரீர்.

கன்னியரின் இதழழகை கோவையென்பார்!

கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!

தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு.

திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.

இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?

எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?

என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்

இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்

மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.

செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற

செங்குட்டுவன் ஒருவன்.

தமிழெடுத்து

அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்

அடுத்தொருவன்.

இவ்விருவர் குறிப்பும் பார்த்து

பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்

பேதையொரு வேதாந்தி.

அதனைக்கேட்டு

முன்னவனே நாடாள வேண்டுமென்று

முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்

தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்.

தனியாக சாத்தனுடன் தங்கிவிட்டான்.

அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்

அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து

இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று..!

இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து

நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்

பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்

பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி

வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!

வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!

சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!

சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!

ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!

இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!

மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!

மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!

தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!

திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!

ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!

ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!

அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்

ஆறுநாள் பசிவேண்டும்!

 வயிறும் வேண்டும்!

தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!

சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!

ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!

உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!

கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்

கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்

இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி

இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி

தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்

தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்

கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு

குறையெதற்கு?

நானுமதைச் செய்துவிட்டேன்.

No comments:

Post a Comment