Monday, April 11, 2016

லாவோட்சூ சொல்கிறார்



தெரிந்தவர் பேசுவதில்லை 
பேசுகிறவருக்கு தெரிவதில்லை 

பொருட் சார்புடையது பற்றிப் பேசும் வரையிலும் மொழி பயன் படுகிறது 

ஆனால் அகத்தைப் பற்றி பேசும் போது மொழி பயன் அற்றதாகிறது 

மொழி சத்தியத்தை சொல்லி விட முடியாது ஏனென்றால் சத்தியம்
பயன் பாடல்ல 

சத்தியம் ஒரு பொருளல்ல உனக்கு 
வெளியே இருப்பது அல்ல 

அது உன் இருப்பின் ஆழத்தில் நடுவில் நிகழ்வது 

சத்தியம் என்ன என்று சொல்லி விட முடியாது 

ஆனால் எது சத்தியம் அல்ல என்று சொல்லி விட முடியும் 

சாத்திரங்கள் அனைத்தும் கடவுள் யாராக இல்லை என்பதைத் தான் சொல்கின்றன 

தவறானதை விலக்கி
கொண்டே போகும் போது ஒருநாள் சத்தியம் திடீரென வெளிப்படும் 

ஆனால் அது மொழியால் வெளிப்படுவதில்லை 
மௌனத்தில் வெளிப்படுகிறது 

கடவுள் என்ற வார்த்தை கடவுள் அல்ல 

வார்த்தைகளால் அக அனுபவத்தை சொல்லி விட முடியாது 

வார்த்தைகளில் மயங்கி விடாதே 
சத்தியத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது 

மொழி மனதினுடையது அனுபவம் நெஞ்சத்தினுடையது 

மனம் அவ்வப்போது நெஞ்சத்தை எட்டிப் பார்க்கிறது 

அதனால் தான் கவிதை ஓவியம் இசை சாத்தியமாகிறது 

மனம் நெஞ்சத்தை அடுத்து மூன்றாவது தளம்தான் உன் இருப்பின் அடித்தளம் 

அதுதான் உன் இருத்தல் ஜீவிதம் 

மனம் சிந்திக்கிறது 
நெஞ்சம் உணர்கிறது 
ஜீவிதம் இருப்பாக இருக்கிறது 

கடவுள் பரவசம் நிர்வாணா ஞானம் இவைகள் இருப்பினுடையவை 

நெஞ்சம் கொஞ்சம் இருப்பிற்குள் எட்டிப் பார்க்கிறது நெஞ்சத்தின் மொழி அன்பு 

யேசு நெஞ்சத்தோடு நெஞ்சத்தின் மொழியில் பேசிக் கொண்டிருந்தார் 

அதைத் தான் அவர் அன்பே கடவுள் என்றார் 

" தெரிந்தவர் பேசுவதில்லை 
பேசுகிறவர்க்கு தெரிவதில்லை 
அதன் துளைகளை நிரப்பி விடு " 

மனதில் நிறைய துளைகள் உள்ளன 

அவற்றின் வழியே மனம் நிரம்புவதும் கொட்டிப் போவதும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது 

கண்கள் வழியாக தகவல் ஏதாவது கிடைக்குமா என்று மனம் பார்த்துக் கொண்டே இருக்கிறது 

எது கிடைத்தாலும் அதை வாங்கி வைத்துக் கொள்கிறது 

அறிவுதான் மனதின் உணவு மனம் அறிவின் மூலம் வளர்கிறது 

கண்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன 

காதுகள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன 

மனம் அறிவைத் தேடி தேடி ஓடும் துளைகள்தான் இந்தப் பொறிகள் 

எந்தப் பயனும் இல்லாத அறிவைத் தேடி மனம் ஓடுகிறது 

மௌனம் சாத்தியமாக வேண்டுமானால் பொறிகளின் துளைகளை மூடி விடு 

உன்னுடைய கண்களை காலியாக வைத்திரு 

வெறுமையான கண்களோடு உலகத்தைப் பார் 

ஒரு ஞானி கண்களால் பார்க்கிறார் என்றாலும் அவர் எதையும் பார்ப்பதில்லை 

அவர் மனம் எதையும் சேர்த்து வைப்பதில்லை !!


No comments:

Post a Comment