Wednesday, October 8, 2014

பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் திருவரலாறும், மெய்வழிச் சபையும்:

  1. தேவ உலக தீர்மானப்படி நிகழ இருக்கும் ஏழாம் பிரளயமும் ஆதி பரம்பொருளான ஆண்டவர்களின் திருஅவதாரமும். அளப்பரிய ஏக இருட் கோளத்தில் விசும்பி எழும்பிய பேரொளி பிழம்பான ஆதிமூல பரம்பொருளுக்கு, இவ்வுலகம் அனைத்தையும் உண்டாக்கி அருளாட்சி புரிந்து நல்லாட்சிசெய்ய ஆலோசனை தரும் உரிமையுடைய தேவ உலகம் ஒன்று உண்டு.

அப்பாலுக்கு அப்பாலாய் சரித்திரத்திற்கு எட்டாத நாள் தொட்டு இறப்பு, பிறப்பு அற்ற, ரூபசொரூபமற்ற வான்உலக பரலோக தேவமக்கள் இதில் உள்ளனர். தலைநாளுக்கு அப்பால் தலைநாளாகிய ஆதி சபேசிய ரகசிய காலத்திலிருந்நே இந்த தேவ உலக மக்கள், இறை தூதுவர்களாக, மெய்ஞ்ஞான பாரவான்களாக மனித கோலமெடுத்து மனிதருக்குள் மனிதராக இப்பூ உலகிற்கு வந்து, மக்களுக்கு மெய்ஞ்ஞான அருள் தந்து உய்விக்கும் கடமையைப் பூண்டவர்கள். “வந்திடுவேன் யுகந்தோறும் யுகந்தோறும்” என்று கூறும் கிருஷ்ண பரமாத்மாவின் பகவத்கீதையில் இந்த உண்மையை அறியலாம்.

“தேவ கூட்டுறவு திருமரபு கூட்டத்தினர்” என்று இந்த தேவ மகா புருஷோத்தமர்களுக்குப் பெயர். ஸ்ரீ கண்ணபிரான், ஸ்ரீ ராமன், ஏசுபிரான், நபிகள் நாயகம் போன்ற இலட்சத்து இருபதாயிரத்திற்கு மேல் இந்த மாமுனிவர்கள் வாழையடி வாழையாக உலகிற்கு அவதாரம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதை சத்தியவேதமான பைபிள், திருக்குர்ஆன் மற்றும் சைவ, வைணவ, பௌத்த சுருதி வேத கிரந்தங்களில் காணலாம்.

இறைவன் தனது நான்கு கோடி சூரிய பிரகாச கிரணங்களை அடக்கிக் கொண்டு மனித ரூபத்தினுள்ளே உள் புகுந்துள்ளதை எடுத்துக் காட்டும் வல்லபம் இறைவனின் முதன்மை கிரணங்களான இந்த இறை தூதுவர்களிடம் மட்டுமே தலைமுறை தலைமுறையாக ஊற்றோடி ஓடி இன்று வரை வந்துள்ளது. வேதத்தையும், மதத்தையும் உண்டாக்கியவர்களும் இவர்களே. அகண்டாகார பெருவெள்ள மெய்ஞ்ஞான பெட்டகத்தின் பொக்கிஷ அறையைத் திறக்கும் மந்திர மாத்திரை திறவுகோல் கொண்டு தங்கள் பெருங்கருணையால் இந்தத் தேவதூதர்கள் உலக மக்களுக்குத் திறந்து காட்டி, ஞான அறிவு தந்து பரமபதம் அடையச் செய்கிறார்கள்.

இது இறைவனின் தீர்ப்பு. இப்போது பாவம் நிறைந்து விட்ட இந்தப் பூமி, இனிமேலும் பாவகனத்தைச் சுமக்க இயலாததால் தெய்வத் திருவளநாட்டு நித்திய சூரியர்கள் ஒன்று திரண்டு கூடி, முன்னமேயே நிர்ணயிக்கப்பட்ட சந்திரசாப கணக்கின்படி ஏழாம் ஊழிப் பிரளய முடிவு நியமன தீர்ப்பு நாள் இப்போது நெருங்கிவிட்டதைப் பற்றி கலந்து பேசினார்கள் என்பதை வந்த எல்லா வேதங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

புது உலகம் பிறப்பிப்பான் வேண்டி, ஆதிமனு நீடாழியராகிய ஆதிமூல பரம்பொருளே, ஜீவ தயாபரராக ஜகம்உய்யும் பொருட்டாய் மனுக்கோலமெடுத்து, இறுதிகால நிக்கிரக அனுக்கிரக பணி ஏற்று, உலக மக்களை உய்விக்க இப்பூ உலகிற்கு அவதரித்து செல்ல வேண்டு மென்று வேண்டிக் கொண்டுள்ளார்கள் என்ற வரலாற்றைப் பழம் மாமறைகளில் காணலாம்.மேலும், அப்படி மெய்ரூபமாக பரம்பொருள் எழுந்தருளும் போது, ஏற்கெனவே இதுவரை இப்பூமண்டலத்திற்கு வந்து, ஜீவ தேகம் பெற்று, மண்ணில் மறைவு செய்யப் பெற்றிருக்கும் மதிமகத்துக்கள் அனைவரும், உடன் எழுந்து அவருடன் அவதரித்து வந்து, சாகா வர நித்திய தேகம் எடுப்பதற்காக - ஊழிப்பிரளய நீதித்தீர்ப்புக்கு காத்திருக்கும்படி கட்டளையும் பிறப்பிக்கப் பெற்றது.

 அதன் பொருட்டு, சிருஷ்டி முதலிய ஐந்து கிருத்தியங்களையும் செய்யும் சர்வேஸ்வரனே, இந்த சர்வமத வேதகர்த்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வான் வேண்டி, பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களாக அவதரித்து வந்த வரலாற்றையே இப்போது நாம் காண்கிறோம்.இப்படி அவர்கள் அவதரிப்பதைப் பற்றி, அந்த தேவ திருக்குழாம், தாங்கள் வருகை தந்த ஒவ்வொரு காலத்திலும் தங்கள் தவ வலிமையால், ஆண்டவர்களின் இந்த வரலாற்றைக் கூடவே இருந்து பார்த்தவர்கள் போல், திடதீர்க்க திருஷ்டியில் தீர்க்க தரிசனங்களாக பல ஆயிரமாயிரம் கிரந்தங்களில் உலகிற்கு எழுதி அறிவித்து வந்திருக்கிறார்கள். இப்படி அவதரித்து வந்த ஆதி மனுமகன், அனைவருக்கும் யுகங்கோடி முடிவு ஜகக்கோடி வாழ்வு வழங்கி, சாவாவரம் தந்து கொண்டிருக்கும் மாபெரும் செய்தியின் சுருக்கத்தையே இப்போது தெரிவித்துள்ளோம்.

தீர்க்க தரிசனமாக இந்த ஆதிமூல ஆவியின் அவதாரத்தைக் கண்டு “சன்மார்க்க சாலையப்பா என்னை வந்து தாங்கிக் கொள்ளே” என்று வேண்டுகிறார் வடலூர் வள்ளல் பிரான். பிற்காலத்தில், தவ ஏற்றம்கொண்டு சர்வ சன்னததாலங்கிர்தராக உருவெடுத்த மெய்வழி தெய்வம், அன்று பாண்டிவள நாட்டில், அதாவது தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில், மார்க்கம்பட்டி என்னும் சிற்றூரில் தமிழ் இஸ்லாமிய குடும்பத்தில் 19 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1857 ஆம் ஆண்டில்) அவதரித்தார்கள்.

கொங்கு வளநாட்டில் அதாவது தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் திங்களூர் - பெருந்துறை, காசுக்காரன் பாளையத்தில், நெல் வணிகம் செய்து செல்வ செழிப்போடு இல்வாழ்க்கையில் இருந்து வந்த காலத்தில், ஆதி ஊழிவிதி தேவ தீர்மானப்படி, தேவநாட்டிலிருந்து வழிவழியாக வந்த தனிகை மணி வள்ளல் என்னும் பழம் பெரும் பிரம்ம சொரூப மாமுனிவர் அவர்களை 1901 ஆம் ஆண்டில் சந்தித்து, அச்செம்மலின் திருவருளுக்குப் பாத்திரமாகி, அவருடன் துறவு பூண்டு எழுந்தார்கள்.

தமது பெரிய வியாபாரத்தையும், இளம் மனைவியையும், பால் மனம் மாறா பெண் குழந்தையையும் விட்டு விட்டு பிரிந்து, ஏழை வடிவினராய் துறவு கோலத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். அவர்களுடன் இருபத்து மூன்று ஆண்டுகள் உடன் இருந்து நாடெங்கும் அகிலவலம் வந்து, பூரண ஞான தேவ வடிவு வேத போத ரகசியங்களையும், பூட்டப் பெற்றிருக்கும் தேவ திருவருள் தெய்வ ஆதின பாரம்பரை கட்டுத் திறவுகோலையும் கைவசம் பெற்று பூரண மெய்ஞ்ஞானி ஆகினார்கள். வடலூர் வள்ளற் பிரானுக்கு பூரண ஞான செல்வத்தைத் தந்து, அவரை உயர் ஞானியாக்கியவர், ஆண்டவர்களின் குருக்கொண்டலரான இந்த தனிகைமணி ஞான செம்மலே ஆவார்கள்.

இவர்களே தான், வள்ளலார் மறைவுக்கு (1874) பிறகு 27 ஆண்டு காலம் காத்திருந்து ஆண்டவர்களைக் கண்டெடுத்து ஞான பிரகாசத்தை அருளி பிரம்ம சொரூபியாக மாறச் செய்தார்கள். தொடர்ந்து ஆண்டவர்களுக்கு ஓர் அருந்தவ கட்டளையிட்டு, திருக்கயிலாய நாட்டு வேத விதிப்படி தன்னிகரற்ற மேருகிரி தவத்தில் ஆண்டவர்களை அமரச் செய்தார்கள். ஆண்டவர்களும் நெடுநாள் அன்ன ஆகாரமின்றி நிர்விகார ரகிதநிலையாசன தவக்கோலத்தில், கடுந்தியான முகத்திலிருந்து, கைவல்யபதம் அடையப் பெற்று, நித்திய ஜீவ மகா முனிவராகினார்கள்.

தனிகைமணி வள்ளல் அவர்களும், தேவமகா சபையில் தாம் முன்னரே வாக்கு தந்தபடி நீதித்தீர்ப்பு நடத்தும் பெரும்பார அருங்காரண செயலை ஆண்டவர்களிடம் ஒப்பிவித்து, மனுக் கோடிகளுக்கு கதிமோட்சம் தரும் பாசுபத கங்கண முத்திரையையும் அவர்களுக்குப் பதிப்பிக்கச் செய்தார்கள். மேலும், சர்வக்ஞ தன்மை கொண்ட இந்த ஞான செல்வத்தை, உலகம் முழுவதும் உய்யும்படி செய்து அனைவரையும் ஆட்கொள்ளும்படி ஆண்டவர்களுக்கு ஆணையிட்டு ஆசீர்பதித்தார்கள். ஆண்டவர்களும், தமது குரு கொண்டலர் அவர்களின் ஆக்ஞைபடியே, உலக மக்களை உய்விக்க, கலிவலி தொலைத்து தலையுகப் பயிர் ஏற்றும் பணிக்கென்றே, மெய்வழிச்சபையை உண்டு பண்ணி, இறைதிருவடிசேர் பெருநெறியில் கி.பி.1923 ஆம் ஆண்டு முதல் மக்களைச் சேர்த்து அனந்தாதி தேவ குலமாக்கினார்கள் மேலாம் பதம் தரும் ஜீவரட்சிப்பு அருள் உபதேசங்களை, உயிரினிமை உணவாக உலக மக்களுக்குத் தந்து, அனைவருக்கும் ஜீவ ஆவி அறிவானது எழும்பி மீறி ஏறிபூரிக்கின்ற அருள் அமுதத்தினை அருந்த அருந்த தந்தார்கள். ஞானப் பயிரேற்றம் செய்ய மெய்வழிச் சாலை என்ற ஊரையே உண்டு பண்ணினார்கள்.

“பன்னிரண்டு தேவ சன்னதங்கள் பெற்ற சிவமூர்த்தியாக இறுதி காலத்தில் வரும் இவரே தென்னாட்டுடைய சிவன்” என்று ஞான செம்மல் மாணிக்கவாசக பிரான் திடதீர்க்க தரிசனம் கூறுகிறார். “உடுக்கை சங்கு சூலம் தாங்கி வந்துள்ள இந்த மெய்வழி தெய்வத்தை பூஜிக்கின்ற அனைவரும் இடைஞ்சல்கள் நீங்கி மெய்யான ஞானமும் அடைவார்கள்” என்று தீர்க்க தரிசனமாக மகரிஷி வீரபிரம்மம் கூறுகிறார்.


2. ஆண்டவர்கள் அருளிய கிரந்தங்களும், திருவாயுரை விரிப்புகளும் இந்த ஜெகத்குரு, மெய்ஞ்ஞான உண்மைகளை தீப ஸ்தம்பம் போல பிரகாசிக்கும்படி, ஆதிமெய் உதய பூரண வேதாந்தம், ஆதி மான்மியம் போன்ற அபூர்வ ஞான கிரந்தங்களையும், பல்வேறு விதமான உட்பொருள் ஆதார உயிர் பதிப்பு திருவாயுரை விரிப்புகளையும், உலக மக்களுக்கு அருளியுள்ளார்கள். ஆனிப் பொன்னம்பலப் பலன் தரும், மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் அவதாரத்தைக் குறித்து ஊணி, முன்முறையாதிய பல்லாயிரம் திடதீர்க்க தரிசனங்கள் உள்ளன.

 மதங்கள் பல பலவாயுள்ள அறுபத்து ஒன்பது ஜாதி மக்கள் எல்லோரும் கூட்டமாக மெய்வழியில் ஒன்று கூடி, ஜீவ ஏற்றத்தில் ஏறிட, தெய்வமவர்களின் வரம்தரும் வேத கிரந்தங்களான இவற்றை எல்லாம் எந்நாளும் ஓதி, இரவு பகலாக மெய்ஞ்ஞான பிரகாச தேன் கடலில் ஆழ்ந்து ஆழ்ந்து பரமானந்தத்தில் திளைத்து வருகின்றனர். ஆதிமெய் உதய பூரண வேதாந்தம் ஆதிமெய் உதய பூரண வேதாந்த நூலில் பூரணப் புதையல், மெய்ந் நிலை போதம், மெய்ம்மண ஞானம், அமுத கலைஞான போதம் என்ற பல்வேறு மிக உயர்ந்த தத்துவாதீக ஞான போதனை பகுதிகளைத் தந்திருக்கிறார்கள்.

சர்வ வேதங்களின் அகமிய பெருமறை சாஸ்திரங்களில் பின்னி இருந்தவை அனைத்தும் தெள்ளெனப் பிளந்துக்காட்டும் ஞான நூல் இது. ஆண்டவர்கள் அருளிய வேதத்தில், ஞான நிலையின் இயல், யோக காட்சிகள், பிறவி மாறுதல், நாத தேகம், விட்ட தொட்ட குறை, உலக அன்னையாக வெளி வரும் மாதேவியின் தோற்றம், தேவ நிலையில் ஏறி நிற்கும் வாணி சக்தியின் காட்சி போன்ற பல யோக வைப்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டுகிறார்கள்.

பெறற்கரிய ஞான நிலைகளைத் தொட்டுத் தொட்டுக் காட்டி முடிவான பூரண ஞானநிலையையும் எடுத்துரைத்து உள்ளார்கள். ஆதி மான்மியம் மான்மியம் என்ற ஆண்டவர்களின் இந்த சரித நூலைப் படிப்போர் அனைவரையும், மூச்சு லயமாகிய மனோலய மந்திர தவச்செயலில் மூழ்கடிக்கச் செய்யும் ஒரு தவ நூலாக, சுந்தரத் தமிழில் அருளியுள்ளார்கள். நரரை மக்களாக்கி மக்களைத் தேவராக்கும் இந்த மெய் ஞான தேவ மக்கள், ஆண்டவர்களின் வரலாற்று நூலான ஆதிமான்மியத்தைத் தினமும் இரவு பகல் எந்த நேரமும் தோத்தரித்துக் கொண்டிருக்கும் இந்த தவமுறை பயிரேற்றம், மனுத்தலைகளுக்கு தவசெழிப்பேற்றமாக உள்ளது.



 3. மெய்குண்டம் என்னும் மெய்வழிச்சாலை மகிமையும் மெய்மதத்தின் பெருமையும் மெய்குண்டம் என்னும் மெய்வழிச்சாலை தரணி எங்கும் காணமுடியாத ஒப்பற்ற ஒரு தவ எல்லை ஆசியா கண்டம், இந்திய தமிழ் தொண்டமான் சீமை, புதுக்கோட்டை மாவட்டத்தில், கீரனூரிலிருந்து அன்னவாசல் போகும் சாலைக்கு அருகில், ஊரல் மலைச்சாரலில், இந்த மெய்வழிச் சாலை என்னும் தேவபூமி உள்ளது. அருள் அடைபடுத்து மெய்ஞ்ஞான ஜீவ உயிர்ப்பயிரேற்றம் செய்யும் எழிலோங்கும் தவக் கானகம் இது. தமது வாடாத தவவலிமையால் தம்மை வணங்கும் நன்னெறி மக்கள் அனைவரையும் அழியாப் புகழ் உடம்பு தந்து பரமபதம் அடையச் செய்விக்கும் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் காருண்ய தவாதிக்க குருக்ஷேத்திரம் இது.

பொன்னரங்க தேவாலயம் :

 தம்மை வேண்டி நிற்போர் அனைவரையும் அழியாத நெடுங்கால யுகவித்துகளாக ஆக்கும் பிறவா நெறி பிரம்ம வித்தையை அருளும் ஆண்டவர்களின் இந்தத் திருச்சன்னிதானமே மெய்வழி மக்களின் பொன்னரங்க தேவாலயம் ஆகும். மக்களுக்கு வரமனைத்தும் தந்தருளும் தேவ ரூபமாக மாறி இங்கு ஏழாம் ஊழிப்பிரளய அமளி மிகுந்த நாளின் இறுதி தீர்ப்பினை நடத்தும் பொருட்டு, வான் கன்னி விராட் தவத்தில் ஏறியுள்ள மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் வான் செல்வ ஜீவத் திருமேனியின் பரிசுத்த ஆவி சதாவீசி கருணை பாலித்து கொண்டு இருக்கும் புண்ணிய ஸ்தலம் இது அனந்தர் குல சிந்தை மந்திரமான இந்த மெய்வழி தெய்வத்தின் இந்த ஸ்தலம், பொல்லாப்பிணி நீக்கும் பெருந்தவப்பள்ளியாகும்.

மெய்வழிச்சாலை - மெய் நகரம் இந்த சத்திய மெய்வழி திருவருள் நகரத்தில், இந்த ஆதிமூல ஆவியின் மெய்க்கிரண பரிசுத்தாவி சதா நின்று விசிறி வீசி, அனைவருக்கும் கருணை பாலித்து சகல இக பர சௌபாக்கியம் அளித்துக் கொண்டிருக்கிறது. ஜெகம் உய்ய வந்துள்ள ஜீவ வழிப்பாட்டு வசந்த எல்லை இது. ஜீவரட்சிப்பு தந்தருளும் புனித பூமி இது. துன்பம் தரும் நவக்கிரக கோள்களின் பீடிப்பை நீக்கச் செய்யும் தரும பூமி இது! துஷ்ட நிக்கிரக, தேவசிஷ்ட பரிபாலனம் செய்யவே, நீதி நெறி சூடாமணி கோடாயுத தேவ சன்னதங்களைப் பெற்று அமர்ந்திருக்கும் தெய்வத்தின் பதி இது! பாவ சங்கார வரதரின் ஜீவ சஞ்சீவி மாமலையே இந்த மெய்வழிச் சாலை! “இதன் பெயர் மெய்நகரம். இந்த மெய்க்குருபிரானைத் தரிசித்தால் மறுபிறப்பு என்னும் தேவப்பிறப்பில் ஆக்கி உயிர்ப்பித்து எழுப்புவார்கள்” என்று பிரம்ம ஞானோத்தமர் கபீர்தாஸ் அவர்கள் திட தீர்க்க தரிசனம் கூறுகின்றார்.

 “இந்த ஸ்தலம் காருண்ய ஸ்தலமாக மாற்றப்பெறபோகிறது என்று - அடிபேரிகை” என்று நித்திய சூரியர் வீரபிரம்மம் அவர்கள் தீர்க்க தரிசனம் முழங்கி வைத்துள்ளார். அழிவற்ற ஆன்மிக உன்னத வழியே மெய்வழி தேவ திருநாட்டு குருகுல மக்களின் திருச்சபையே மெய்வழி! இறுதி தீர்ப்பு பிரளய நீதி நடத்தி வையம் முழுவதும் ஒரே குருகுல நெறி நீதியில் ஆக்கிட, நீதிக்கோள் தாங்கி வந்து தருமயுக வித்து நாயகத்தின் இறைபெரு வழியே மெய்வழி! மெய்வழியும் மெய்க்கல்வி கலாசாலையும் மெய்வழிச் சபையின் வித்து நாயகம் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்களே, மெய்க்கல்வி கலா சாலையின் போதனாசிரியர் ஆவார்கள்.

முன்னாதி காலம் முதல் தொடர்ந்து வரும் முனிவர் வழி வழி மகா மந்திர பிரேரணை தேவ ரகசியத்தை மெய்க்கல்வி கலாசாலையில் மக்களுக்கு ஆண்டவர்கள் தெள்ளத் தெளிவாக போதித்துள்ளார்கள். ஆதீன ஆதி பரம்பரை பூர்வீக புராதன மெய்ஞ்ஞான கல்வியை உலகிற்கு விளக்கி எடுத்துரைக்க வந்தவரே இந்த ஜெகத குருக்கொண்டல்! “எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ் சோதி” என்று வேண்டுகிறார் வடலூர் வள்ளல் பிரான். “இந்த இறுதி தீர்ப்பரை வணங்குவோர் மீட்புக்குரிய தீர்க்க தரிசியர்கள் ஆவார்கள்” என்று வேதச் செம்மல் சொராஸ்டர் நாயகம் கூறுகிறார்.



4. மெய்வழி சாலையம்பதியில் எடுத்து வைக்கப்பெற்றுள்ள வணக்க முறைகளும், திருவிழாக்களும் மெய்வழி பொன்னரங்க தேவாலயத்தில், நாள் முழுவதும் இரவு பகலாக தவ வணக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இரவு சரியாக 12 மணிக்கு பெரிய வணக்கம் ஆரம்பமாகிறது. மெய்வழி தவவிரதர்கள் இதனை நடத்துகிறார்கள்.

 இரவு 1.30 மணிக்கு துந்துமி முழங்கி வணக்கம் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு குழல் ஊதி வணக்கம் நடைபெறுகிறது.

 இரவு 3.00 மணிக்கு ஒரு குழல் வணக்கம் மட்டுமே நிகழ்கிறது. இது நிகழும் போது ஆலயத்தின் உள்ளே யாரும் இருக்கக்கூடாது. அடுத்து உத்தியோவன சித்தி கானகம் என்று சொல்லி திட தீர்க்க தரிசனங்கள் ஆலயத்தை நோக்கி ஜபிக்கப்படுகிறது.

 இரவு 4.00 மணிக்கு மெய்வழி மக்களுக்காகவே கூறப்பெற்றுள்ள புத்த பகவான் தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது.

இரவு 4.30 மணிக்கு வெறும் துந்துமி மட்டும் ஒலித்து வணக்கம் நிகழ்கிறது. அடுத்து ஆண்டவர்களைத் தோத்தரித்து பஞ்சணை எழுச்சி பாடப் பெறுகிறது.

விடியற்காலை 5.30 மணிக்கு ஆண்டவர்கள் திருவரலாற்றைக் கூறும் ஆதிமான்மிய பகுதி ஓதப்பெறுகிறது.

 காலை 7.00 மணிக்கு, மகா சங்கல்ப மந்திரம் ஓதப்பெறுகிறது.

மத்திய உச்சி உரும கற்பகத்தவக் காலம் நன் பகல் 12.00 மணிக்கு அறவலம் நிகழ்கிறது. ஆண்டவர்களின் உருமகால கற்பக தவநேரத்தில் யாரும் ஒருவரோடொருவர் பேசக்கூடாது என்று ஆலயமணி அடித்து அறிவிக்கப்படுகிறது. மாலை ஆனவுடன் ஆண்டவர்கள் எடுத்து வைத்துள்ள முறைப் படி வணக்கம் நிகழும்.

இரவு 9.00 மணிக்கும் இதே போன்று வணக்கம் நிகழும். புத்த பகவான் தீர்க்க தரிசனமும் ஓதப்பெறும். ஆண்டு முழுவதும் நடைபெறும் மெய்வழி கிள்நாமக் கொடியேற்றங்கள் “மெய்ஞ்ஞான கொடி ஏற்றி அனைவரையும் தூரத்தில் உள்ளவர்களையும் பயில்காட்டி அழைப்பார்கள்” என்று ஏசய்யா தீர்க்க தரிசனம் கூறுகின்றார்.

அதன்படியே, உதய நெடும் உயர்ஞானக்கொடி பொன்னரங்க தேவாலயத்திற்கு முன்பு ஏற்றப்பெற்று, இறை திருவடிச்சேர் உலக மக்களை அறைகூவி அழைத்து ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மெய்வழி கிள்நாம கொடியேற்றமும், வளர் பிறைமூன்றாம் நாள் மெய்வழி மாதாந்திர கிள்நாமக் கொடியேற்றமும் மெய்வழி அனந்தர் பெருமக்களால் தவமுறை பக்தி பரவசத்துடன் ஏற்றப் பெறுகின்றது.



 திருவிழா தேவ நிகழ்வுகள்:


1. தை முதல் நாள் மக்களுடைய நவக்கிரக கோள்களை அகற்றி அனுக்கிரகம் செய்வதற்கு முக்கூர் கத்தி கொண்டுபானைப்பலி ஏற்கும் பொங்கல் திருவிழா நிகழ்கிறது. மறுநாள் செல்வப் பொங்கல் நிகழ்கிறது.

 2. பங்குனி பௌர்ணமி முன்தினம் பாட்டையர் தனிகைமணி வள்ளல் அவர்களிடம் ஆண்டவர்கள் ஞானோபதேசம் பெற்று ஆட்கொள்ளப் பெற்ற நாளான பிறவானாள் பிறப்புத் திருவிழா நிகழ்கிறது.

 3. வைகாசிப் பூரணை நாளில் உலகம் முழுவதினுக்கும் தெய்வீக திருவருளை அருள, ஆடுமேய்ப்பு திருக்கோலம் ஏற்ற காட்சியும் தேவத்திருமுடி சூடப்பெற்ற கங்கண திருக்காப்பு காட்சியும், பாசுபத தவக்கோல காட்சியும் நிகழ்கிறது. மறுநாள் தேவரத கருமான குடிக்காட்சியும், புத்தாடை புனைச்சீர் அணியும் நிகழ்ச்சியும் நிகழ்கிறது. நன்னம்பிக்கை வைப்பு என்னும் பாபவிமோசன திருமந்திரமும் ஓதப்பெறுகிறது.

4. புரட்டாசி பௌர்ணமி நன்னாளில் மெய்வழி குல மக்களின் தூலப்பிணி நீக்கி அருள்வரம் தரும் அம்மையப்பராக எழுந்தருளும் பிச்சை ஆண்டவர் திருக்கோல திருவிழா நிகழ்கிறது.

 5. கார்த்திகை திங்களில் யுகத் தவ காட்டில் கார்க்கும் தீ கைக்கொண்ட கார்த்திகையர் தீப திருக்காட்சி திருவிழா நிகழ்கிறது.

6. மார்கழி கடைசி நன்னாள் அன்று சாகாவரத்தைச் சலிக்காமல் வழங்கி புதுயுக வித்துக்களைத் தேர்ந்தெடுக்க வந்த ஆண்டவர்களின் திரு அவதாரத் திருநாள் கொண்டாடப் பெறுகிறது. பொன்னரங்க தேவாலய ஆடலங்கள் மெய்வழி பொன்னரங்க தேவலாயத்தின் திருசன்னிதானத்தில், நாள் தோறும் பாத பூசை பிரார்த்தனைகள் செய்து, ஆலய அலங்காரம் செய்து அமுது படைத்தல், நேர்த்திக்கடன் சமர்ப்பித்தல் போன்றவை நிகழ்ந்து வருகின்றது.

அனந்தாதி தேவர்கள் தங்களின் புனல்ஜென்ம வழிபாட்டை அவ்வப் போது நிகழ்த்துகிறார்கள். மெய்வழி மக்கள் ஜீவதேக ஜீவமுத்தி பெற்று பரமபத வாழ்வில் குடியேறிய சாவாவர நித்திய ஆண்டு பூர்த்திகள் நிகழ்கின்றன.

அடக்கமாகிய 3-ஆம் நாள் ஜீவபந்து உரிமை காட்சி, 40-ஆம் நாள் ஆன்ம சஞ்சார உரிமை காட்சி போன்றவைகளும் நிகழ்கின்றது. குழந்தைகளுக்கு நாமம் சூட்டல், தீர்த்தம் போடுதல், காதுக்குப் பொன் பூட்டல், மற்றும் திருமண வைபவங்கள் போன்ற அனந்தானந்தம் நிகழ்வுகள் நாள் தோறும் நடந்து வருகின்றது. தெய்வமவர்களின் திருமேனி சயிலத்தில் பூத்து உதித்த தெய்வ திருக்குமாரர் மெய்வழி சாலை வர்க்கவான் அவர்கள் இன்று மெய்வழிச் சாலையின் ஆதினராக இருந்து வருகிறார்கள்.

ஆண்டவர்கள் எடுத்து வைத்துள்ள கொடி ஏற்றங்கள், மற்றும் திருவிழாக்களை இவர்கள் முன்னின்று நடத்துகிறார்கள். மெய்வழி மக்களின் முதன்மைத் தலைவராகவும் திகழ்கிறார்கள்.



 5. மெய்வழி பற்றிய குறிப்பு:

1. நிறுவனர்: வித்துநாயகம் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்
2. மதம் : மறலிகை தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம்
3. குலம்: சத்திய தேவ பிரம்மகுலம் (வான்குலம்)
4. கோத்திரம்: ஆங்கிரச கோத்திரம்
5. சாதி : தன்னை அறிந்து சாதித்தவர்
6. சபை : எமனணுகா பரிசுத்தவான்களின் சபை
7. கல்வி : மெய்ப்பாலறியும் மெய்க்கல்வி
8. கலாசாலை : சதுர் யுகங்களுங்கண்ட மெய்மை
9. க்ஷேத்திரம் : மெய்குண்டம் என்னும் குரு க்ஷேத்திரம்
10. ஊர் : உயிர்ப்பயிரேற்றும் நித்திய சுமங்கல ஊர்
11. பலன் : சாவாவரம், நாறிச்சாகும் நரர்களைத் தேவராக்குதல்
12. வழி : சர்வ புவனாதியங்கட்கும் உய்வழி கூட்டும் மெய்வழி
13. கொடி : வெண்துகிலில் கிள்நாமம். கூர் இல்லாபிறை வடிவம்
14. திருவிழாக்கொடி : பூராங்கொடி
15. அடையாளம்: செந்நிற காஷாய தலைப்பாகையில் கிள்நாமம்
16. திருமணம் : நீதித் திருமணம்
17. மங்கள தாரகை (மாங்கல்யம்) : புள்ளியை மையமாக்கொண்ட ஆறு இதழ்கள்


18. வேதம் :
1. ஆதிமெய் உதய பூரண வேதாந்தம்
2. ஆண்டவர்கள் மான்மியம்
3. எம படரடி படு கோடாயிதக்கூர்
4. திருமெய்ஞ்ஞானக் கொரல் பதி மறைவிற்குப் பின்னர் தொகுத்தவை
5. வான்மதிக் கொரல்
6. விஸ்வனாத திரு ஒலி வசனம்
7. திருமெய்ஞ்ஞான அருளமுதம்
8. திருமெய்ஞ்ஞான தேவாமிர்தம்
9. திருமெய்ஞ்ஞான தில்லையமுதம்
10. மெய்வழி தெய்வத்தின் திருவரலாற்று தடம் சுவடுகள்
19. சமரசம் : தொழிலதிபர்கள், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், பட்டம் பெற்றோர்கள் ஆகியோர் தங்கள் வசதிகளைத் துறந்து எளிமையாக கூரைக்குடிசையில் ஏழைகளோடு எளிமையாக வாழ்கிறார்கள்
 20. நீதம் : வெவ்வேறு மதத்தின் 69 ஜாதிகளைச் சேர்ந்த பல ஆயிரமக்கள் ஆன்ம நேய ஒருமைப்பாட்டால் ஒன்றாகி வாழ்கிறார்கள்.
21. நெறி : கொலை, களவு, போதை, விபசாரம், பொய், புகை (சிகரட்), சினிமா பார்த்தல் ஆகிய ஏழு குற்றங்களும் விலக்கி பரிசுத்தமாக வாழ்தல்
22. மூலமந்திரம் : மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடிகால மக்களிடத்திலுமுள்ள சர்வமூல மந்திர நிரூபிக மகான்மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு.
23. மகா சங்கல்ப மந்திரம்: (காலை 7 மணிக்கு) மறலி என்கிற எமனுடைய அவமான அவஸ்தை வந்து தீண்டும் அடையாளம், கசப்பு தீட்டு பிணநாற்ற ஜலம் வெளியாகி யுகங்கோடிகால நரக வேதனைக்குப் போகாமல் அதை மாற்றி, பரமபத நித்திய மகிழ்ச்சி வாழ்வு வரத்தில் ஏற்றவே சதுர் யுகத்திலும் உண்டான எல்லா ஜாதி, மத, வேதங்களும் வந்திருக்க, அந்த அகமிய மகா அதிவல்லப தெய்விக பிரம்மவித்தைச் செயலானது, மாநெடுங்காலங்களாக மக்கள் புழக்கத்தில் இல்லாது உலகத்தை விட்டு மறந்து மறைந்தே போய்விட்ட இறுதிக்காலமாகிய இது நேரம், எமபயத்தைக் கடத்தி அதே பிரம்ம வித்தையாகிய சுவர்க்க பதி பரமபத முத்திச் செயலினில் ஏற்றிவைக்கும் கல்கி மகதியென்னும் மூக்குக்கு வெளியே மூச்சு ஓடாத தவமுடைய ஊண் உறக்கமற்ற எங்கள் குலதெய்வம், மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் மெய்மதத்தில் நாங்கள் சேர்ந்து ஆகியிருக்கின்றோம்.
 எதார்த்த நன்மனத்தினர் யாராக இருந்தாலும் சேர்ந்து தேவப்பிறப்பிலே பிறந்து ஆகிக்கொள்வதற்கு ஆண்டவர்களுடைய ஆசீர்பாதம்.

24. பாவ மன்னிப்பு மந்திரம் (சுருக்கம்) எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த ஆண்டவர்களே! எம்மை இரட்சித்து ஆளும் இராஜாவே! யான் அறிந்து செய்த பாவங்களைத் தொட்டும், அறியாமற் செய்த பாவங்களைத் தொட்டும், அடக்கமாய் செய்த பாவங்களைத் தொட்டும், வெளிச்சமாய் செய்த பாவங்களைத் தொட்டும், எல்லாப் பெரும்பாவங்களையும் எல்லாச் சிறுபாவங்களையும் உணர்ந்து நினைந்து உருகி வணங்கி, மன்னிக்கும்படி உங்களை மன்றாடி வேண்டுகிறோம் ஆண்டவர்களே! எந்தச் சிறு அளவிலும் இன்னல் என்னும் நரகம் எங்களைத் தீண்டாது காத்தருளும்படி நும் பாதத்தில் வீழ்ந்து அழுது வேண்டுகிறோம் ஆண்டவர்களே.

No comments:

Post a Comment