Thursday, October 30, 2014

பெருங்குடலை சுத்தப்படுத்த சிறந்த வழி

 
அதிகளவில் தண்ணீர் பருகுவது. தினமும் 10 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அத்தியாவசியமாகும். சீரான முறையில் தண்ணீரை பருகி வந்தால், உடலில் இருந்து இயற்கையான முறையில் தீமையான நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற, உடலுக்கு தேவையான நீரையும் இளக்குதலையும் அளிக்கும்.

    

பெருங்குடலை சுத்தப்படுத்த சிறந்த வீட்டு சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது நற்பதமான ஆப்பிள் ஜூஸ். சீரான முறையில் ஆப்பிள் ஜூஸ் பருகினால் மலம் கழித்தலும், நச்சுப் பொருட்கள் உடைதலும் மேம்படும். மேலும் கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியமும் மேம்படும். 1. வடிகட்டாத ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூசுடன் உங்கள் நாளை தொடங்குங்கள். 2. 30 நிமிடங்கள் கழித்து ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். 3. இந்த செயல்முறையை நாள் முழுவதும் பல முறை செய்யவும். இதனை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு கடைப்பிடிக்கவும். நடுவே ஒரு டம்ளர் உலர்த்தியப் பழச்சாறையும் பருகலாம். இந்த சிகிச்சையை பின்பற்றும் போது திண்ம உணவுகளை தவிர்ப்பது நல்லது.

எலுமிச்சை ஜூஸ்
 
 எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. மேலும் அதிலுள்ள அதிகமான வைட்டமின் சி, செரிமான அமைப்பிற்கு நன்மையாக விளங்குகிறது. அதனால் பெருங்குடலை சுத்தப்படுத்த எலுமிச்சை ஜூஸையும் பயன்படுத்தலாம். அதற்கு ஒரு எலுமிச்சையை பிழிந்து, அதில் சிறிதளவு உப்பு மற்றும் தேன் கலந்து, அதனுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகவும். இதனால் அதிகளவிலான ஆற்றல் திறன், பிரச்சனையில்லாமல் மலங்கழித்தல் மற்றும் சிறந்த சரும நிலையை பெற இது உதவிடும். 
 
 
   

பச்சை காய்கறி ஜூஸ்
 
 பெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சமைக்கப்பட்ட உணவுகளை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு தள்ளி வைத்து விடுவது அவசியமாகும். திண்ம உணவுகளுக்கு பதிலாக, தினமும் பல முறை நற்பதமான காய்கறி ஜூஸை பருகுங்கள். குறிப்பாக பச்சை காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் நச்சுப் பொருட்களை நீக்க உதவிடும். மேலும் அதிலுள்ள வைட்டமின்கள், கனிமங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், ஆற்றல் திறனுடனும் வைத்திருக்கும். மூலிகை தண்ணீரை கூட நீங்கள் பருகலாம். ரெடிமேடாக செய்யப்பட்டுள்ள காய்கறி ஜூஸ்களை பயன்படுத்த நாங்கள் அறிவுறுத்த மாட்டோம். அதற்கு காரணம், கழிவு பொருட்களை உடைக்கவும், நீக்கவும் உங்கள் உடலுக்கு உதவிட, பயனுள்ள என்ஸைம்கள் அதில் இருப்பதில்லை. கேரட், பீட்ரூட், சோளம், சீமைப்பூசணி, கீரை, பரட்டைக்கீரை போன்ற காய்கறிகளை கொண்டு வீட்டிலேயே ஜூஸர் அல்லது ப்ளெண்டரை பயன்படுத்தி நற்பதமான காய்கறி ஜூஸ்களை தயார் செய்யலாம்.
 
   

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் 
 
 நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவதால் தீமையான நச்சுப் பொருட்கள் சேர்ந்துள்ள பெருங்குடல் சுத்தப்படுத்தப்படும். மலத்தை மென்மையாக்கி, மலம் கழித்தலை மேம்படுத்த நார்ச்சத்து உதவிடும். இதனால் கழிவு பொருட்களை வெளியேற்ற உடலுக்கு சுலபமாக இருக்கும். அதே நேரம், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கவும் கூட நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உதவுகிறது. ராஸ்ப்பெர்ரி, பேரிக்காய், ஆப்பிள் போன்ற நற்பதமான பழங்கள், பட்டாணி மற்றும் ப்ராக்கோலி போன்ற நற்பதமான காய்கறிகள் மூலமாக அதிகமான நார்ச்சத்தை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். முழு தானியங்கள், நட்ஸ், பீன்ஸ் மற்றும் விதைகளிலும் கூட போதிய அளவிலான நார்ச்சத்து அடங்கியுள்ளது.

தயிர் 
 
 பெருங்குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சீரான முறையில் நற்பதமான தயிரை உட்கொள்வது ஒரு சிறந்த வழியாகும். தயிர் என்பது ப்ரோபயோடிக் உணவு என்பதால் நல்ல பாக்டீரியாவை குடலுக்குள் அனுப்பி வைக்கும். இதனால் செரிமானம் மேம்படும். மேலும் குடல் அழற்சி நோய்களை எதிர்த்து போராடவும் உதவிடும். கூடுதலாக, இதில் போதிய அளவிலான கால்சியம் உள்ளதால், பெருங்குடல் உட்பூச்சை சுற்றிய அணுக்களின் வளர்ச்சியை தடுக்கும். குடலுக்கு நண்பனாக விளங்கும் தயிர் அஜீரணம், வாய்வு, மலங்கழித்தல் போன்ற பல வயிற்று பிரச்சனைகளையும் தீர்க்கும். தயிரை அப்படியே உண்ணலாம் அல்லது ஆப்பிள், எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் பெர்ரி போன்ற பழங்களுடன் சேர்த்தும் உண்ணலாம்.

  

ஆளி விதை 
 
ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இயற்கையான நார்ச்சத்துக்கள் வளமையாக உள்ளது. அதனால் ஆளி விதையை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலை சுத்தப்படுத்த அதுவும் ஒரு சிறந்த வழியாக விளங்கும். தண்ணீரை உறிஞ்சி பெருங்குடலில் விரிவடையும் ஆளி விதை, பெருங்குடலை கடந்து செல்லும் நச்சுப் பொருட்கள் மற்றும் சளியை நீக்க பெரிதும் உதவிடும். மேலும் புற்றுநோய், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை தடுக்கவும் ஆளி விதை உதவும். ஆளி விதையை தானியங்கள், தயிர், பழங்கள் மற்றும் இதர ஆரோக்கியமான உணவுகளோடு சேர்த்து உண்ணலாம். துரித பலனை பெறுவதற்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆளி விதையை கலந்து, காலை உணவை உண்ணுவதற்கு முன் மற்றும் இரவு தூங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அதனை குடியுங்கள்.

  

உப்பு 
 
1. குடிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உப்பை கலந்து கொதிக்க வைக்கவும். 
2. இந்த பானத்தை வெதுவெதுப்பாக அல்லது குளிர வைத்து, காலையில் முதல் வேளையாக குடியுங்கள். 
3. சிறிது நிமிடங்கள் காத்திருந்த பிறகு, கீழே படுத்து கொண்டு, வயிற்றில் குடல் பகுதி பக்கமாக மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது மலங்கழித்தலை ஊக்கப்படுத்தும். மேலும் நச்சுப் பொருட்கள், குவிந்துள்ள மலம், சீரான மலம், ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்களை குடல் பாதையில் இருந்து நீக்க உதவும். இதனை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை வரை செய்யவும். இந்த பானம் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதால், நாள் முழுவதும் அளவுக்கு அதிகமாக தண்ணீரையும் நற்பதமான பழச்சாறுகளை குடிப்பதும் அவசியமாகும். உங்களுக்கு இரத்த கொதிப்பு அல்லது இதய கோளாறு இருந்தால் இந்த சிகிச்சை முறையை தவிர்க்கவும்.

சோத்துக் கற்றாழை 
 
நச்சுத்தன்மையை அகற்றும் திறன் மற்றும் மலமிளக்கும் மருந்தாக செயல்படும் திறனுக்காக அறியப்படுகிறது சோத்துக் கற்றாழை. அதனால் பெருங்குடலை சுத்தப்படுத்தும் சிறந்த வழியாக இது கருதப்படுகிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணங்கள் பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தலைவலி, சரும தொற்றுக்கள், வயிற்றுப் போக்கு, வாய்வு வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற இதர உடல்நல பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கும். 1. ஒரு எலுமிச்சையை நற்பதமான கற்றாழை ஜெல்லில் பிழிந்து, அந்த கலவையை ப்ளெண்டரில் போட்டு நன்றாக அடித்து, மென்மையான ஜூஸை தயார் செய்யுங்கள். 2. இந்த ஜூஸை குளிர்சாதன பெட்டியில் 2-3 மணிநேரம் வரை வைத்திருக்கவும். 3. சில நாட்களுக்கு அதனை தினமும் பலமுறை குடியுங்கள்.

  

இஞ்சி
 
 வயிற்றுப் போக்கை குறைத்து, பெருங்குடல் செயல்பாட்டை ஊக்குவித்து, கழிவு மற்றும் தீமையான நச்சுப் பொருட்கள் இல்லாமல் பெருங்குடல் சுத்தமாக இருக்க உடனடியாக உதவிடும் பொருள் தான் இஞ்சி. செரிமான சாறுகள் சுரப்பதை ஊக்குவிப்பதன் மூலமாக செரிமானத்திற்கு இது உதவிடும். 
 
* பெருங்குடலை சுத்தப்படுத்த இஞ்சியை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் - நறுக்கிய அல்லது ஜூஸாக. 
 
* இல்லாவிட்டால், 1 டீஸ்பூன் இஞ்சி சாற்றை 1/4 கப் எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து, இரண்டு கப் தண்ணீரில் கலக்கவும். இது ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது. சுவைக்காக சிறிதளவில் தேனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக பிரித்து, அதனை நாள் முழுவதும் பருகுங்கள். குறிப்பு: கர்ப்பிணி பெண்களுக்கு இஞ்சி பரிந்துரைக்கப்படுவதில்லை.