Thursday, October 23, 2014

மறந்துபோன தீபாவளி மருந்து........!!!!


தீபாவளி மருந்து செய்வது எப்படி?

என் சிறுவயதில் என் பாட்டி தீபாவளி அன்று பலகாரங்கள் செய்யும் போதே கூடவே தீபாவளி மருந்து என்று ஒன்றை செய்தது நினைவில் வருகிறது. இந்த பாரம்பரிய மருந்து இன்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை பற்றி கேள்விப்பட்டிருக்க கூட வாய்ப்பு இல்லை...... உடலுக்கு மிகவும் சிறந்த இந்த மருந்தை இன்று நினைது பார்க்கும் போது, தமிழர்களின் உன்னதமான சித்தமருத்துவம் எவ்வளவு சிறந்தது என்று வியப்பை தருகிறது......

தீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி மருந்து அல்லது லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் கிடைக்கும்.

தேவையானவை:
தணியா : 4 கப்
இஞ்சி : 200 கிராம்
ஓமம் : 100 கிராம்
சுக்கு, மிளகு, திப்பிலி : தலா 10 கிராம்
வெல்லம் 100 கிராம்: (துருவிக் கொள்ளவும்)
பொடித்த ஏலக்காய் 5 கிராம்: (விருப்பப்பட்டால்)
நெய் : 1/4 கப்

செய்முறை:
* தணியாவையும், சீரகத்தையும் நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* இளசாக இருக்கும் இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* ஊற வைத்த தணியாவையும், சீரகத்தையும் இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும்.
* கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெல்லத்தை பொடி செய்து கலக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.
* பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள். லேகியம் பதத்திற்கு வந்ததும் இறக்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.
* இதனை அனைவரும் சாப்பிடலாம். பலகாரங்களால் வயிற்றுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை இந்த லேகியமே சரி செய்து விடும்.