Thursday, October 17, 2013

தேன் துளிகள் சருமத்தை பாதுகாக்கும்

சிறு சிறு தேன் துளிகள் கூட சருமத்தை பாதுகாக்கும், இளமையாக வைத்துக் கொள்ளும்.
தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது.
பட்டுப்போன்ற மென்மையான கூந்தலுக்கு
ஒரு கிண்ணத்தில் இரண்டு மேசைக்கரண்டி தயிர், இரண்டு முட்டைகள்(வெள்ளைக்கரு மட்டும்), எலுமிச்சைச் சாறு, ஐந்து துளி தேன் ஆகியவை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அரை மணிநேரம் கழித்து தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். இதனால் கூந்தலானது பட்டுப்போல மென்மையாகி இருக்கும்.
பளபளப்பான கூந்தலுக்கு
தேனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தல் மீது தடவி சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் அலசினால் கூந்தல் பளபளப்புடன் இருப்பதைக் காண முடியும்.
முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை ஒரு கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கலக்கிப் பசை போலாக்குங்கள். பின் இதனை அப்படியே ஒரு மைக்ரோவேவ் ஓவனில் மூன்று நிமிடங்கள் வைத்து சூடு செய்யுங்கள்.
பிறகு வெளியே எடுத்து கை சூடு தாங்கும் பதத்தில் வந்ததும், அதனை முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள்.
குறிப்பாக முடியானது எந்த திசையை நோக்கி வளர்ந்துள்ளனவோ, அந்தத் திசைகளில் தடவ வேண்டியது முக்கியம்.
இப்போது ஒரு சுத்தமான பருத்தியால் ஆன துணி ஒன்றை எடுத்துக் கொண்டு, முகத்தில் இக்கலவை தடவிய பகுதியின் மேல் போர்த்தி அழுத்தி எதிர்த்திசையில் இழுங்கள்.
இப்போது முகத்தில் உள்ள முடிகள் வேரோடு அகற்றப்பட்டுவிடும். இதனால் முகத்தில் நீண்ட காலத்திற்கு முடிகள் வளராமல், முகம் வழவழப்புடன் திகழும்.
முகத்திலுள்ள சரும மாசுக்கள் நீங்க
சிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள். பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள்.
சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள்.
இம்மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை மென்மையாகவும் ஆக்கும்.
அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.
சூரிய ஒளியால் கருமை அடையும் சருமத்திற்கு
தேன், பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து கொள்ளுங்கள். பின் அதனை சூரிய ஒளியால் கருமை அடைந்த பகுதிகளில் இக்கலவையைத் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் தண்ணீர் கொண்டு நன்கு அலசிவிடுங்கள்.

No comments:

Post a Comment