Friday, October 4, 2013

என்னை காதலிக்கிறாயா இல்லை காமுற்றிருக்கிறாயா?

ஒரு சாமானியனைப்போல்
என் முன் நிற்காதே
வேசம் களை
வெளுத்துப்போன சட்டை அவிழ்
மாந்திரீக வார்த்தைகளின் பின்னிருக்கும்
நிர்வாணம் காண்
நிதானித்து பேசு
நிதர்சனத்தில் நில்
மூச்சுவாங்க உனைத்தேடு
கிடைத்ததில் பிழையிருந்தால்
கண்ணீர் சிந்து
உண்மையிருப்பின் உயிர்தொட்டு
உனைத்திருத்து
கருத்துசொல்வதாய் கடந்துவிடாதே
காத்திருத்தலெனும் கெளரவம்
கைக்கு வருகையில் கொலைசெய்யும்
கண்டதையும் போட்டுடைக்கும்
இல்லாதது போலிருந்து
போகாத இடம் போகும்
போதையென்று கைக்கு வந்து
போகப்போக உனைக்குடிக்கும்
ஆம்
காமம்
ஓர் அமிலம்
காதல் அதன் குவளை
அதனதனிடத்தில் அதன் செயல் சரி
என் வழியில் நீ தவறு
காமுற்றிருப்பினும்
உனை காதலிக்க நான் தயார்
அதற்கு முன்
பெண்ணைப்படி
படித்தலென்பது
வார்த்தைகளைத்தாண்டி வாதங்களிலும்
வாழுமென்பதை உணர்
பெண்ணாடுவது மார்புச்சூட்டின் கதகதப்பை
நெடுஞ்சாலை பயணத்தின் கைகோர்ப்பை
மாதவிடாய் நேரத்தின் தோளணைப்பை
உச்சிக்குழியில்
காமம் பல்லிளிக்காத எச்சில் முத்தத்தை
இதற்கு சாமானியனைப்போன்ற வேஷமெதற்கு
வாழ்வென்பது ஒப்பனைகளைக்காட்டிலும்
ஒப்படைத்தலிலிருக்கிறதென்று உணர்
இப்பொழுது சொல்
என்னை காதலிக்கிறாயா
இல்லை காமுற்றிருக்கிறாயா?

ரேவா கவிதைகள்

No comments:

Post a Comment