Tuesday, August 20, 2013

உடலில் உயிர் நுழையும் ரகசியம்




ஒரு உயிர் எப்படி ஒரு கருவைத் தேர்வு செய்கிறது? அந்தக் கருவிற்குள் எப்படி இறங்குகிறது, போன்ற சுவாரஸ்ய கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது சத்குருவின் இந்த உரை.
கேள்வி
சத்குரு, எனக்கு உச்சந்தலையில் ஒரு அழுத்தம், மேல்நோக்கி இழுப்பது போல் உணர்கிறேன், அது யோகா சம்பந்தமானதா, அல்லது உடல் கோளாறா?
சத்குரு:

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மண்டையோட்டின் குறிப்பிட்ட பகுதி இன்னமும் சரியாக உருவாகாமல் இருப்பதை கவனிக்க முடியும். அந்தப்பகுதி இன்னமும் தோலாகத்தான் இருக்கிறது, எலும்பு உருவாகவில்லை. இந்தப் பகுதி யோகாவில் ‘பிரம்மரந்த்ரா’ அல்லது ‘ரந்த்ரா’ என அழைக்கப்படுகிறது. அதற்கு சிறிய துவாரம் அல்லது வழி என்று பொருள். கருவில் குழந்தை வளரும்போது இந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் அந்த குழந்தைக்குள் இறங்குகிறது. இறங்கிய உயிர் இந்த(குழந்தையின்) உடல் தன்னை தாங்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறது. அந்த அளவிற்கு அதற்கு விழிப்புணர்வு இருக்கிறது. தன் இருப்பிற்கு அந்த உடல் தகுதியானதல்ல என்று அது கருதினால் தான் வந்த வழியாகவே திரும்பிப் போய்விடும். எனவே கடைசிவரை அந்த இடத்தை தான் போவதற்கு வசதியாக அப்படியே வைத்திருக்கிறது. வேறு எந்த வழியாகவும் போவதற்கு அது விரும்புவதில்லை. ஒரு நல்ல விருந்தாளி எப்போதும் முன் வாசல் வழியாகத்தான் வருவார், முன் வாசல் வழியாகத்தான் போவார். முன் வாசல் வழியாக வந்து பின் வாசல் வழியாகப் போனால் உங்களை சுத்தமாக துடைத்து விட்டார் என்று பொருள். மருத்துவர்கள் அறிந்திருப்பார்கள், இறந்தே பிறக்கும் குழந்தை மிக நன்றாக, ஆரோக்கியமாகத்தான் இருக்கும், ஆனாலும் உயிர் இருக்காது. ஏனெனில் உயிருக்குத் தேர்ந்தேடுக்கும் வாய்ப்பு கடைசி வரைக்கும் இருக்கிறது.
இறங்கிய உயிர் இந்த(குழந்தையின்) உடல் தன்னை தாங்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறது. அந்த அளவிற்கு அதற்கு விழிப்புணர்வு இருக்கிறது. தன் இருப்பிற்கு அந்த உடல் தகுதியானதல்ல என்று அது கருதினால் தான் வந்த வழியாகவே திரும்பிப் போய்விடும்.

உயிர் தனது கர்ம வினையைக் கொண்டிருக்கிறது. கருவில் வளரும் பிண்டமோ பெற்றோரின் கர்ம வினையைக் கொண்டிருக்கும். எனவே உயிர் தனது விருப்பப்படி தேர்ந்தெடுக்கிறது. 90 சதவீதம் சரியாகத் தேர்ந்தெடுத்து விடுகிறது. சில நேரங்களில் அதனுடைய தேர்வு தவறாகி விடுகிறது. எனவேதான் ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது அவருக்கு சரியான சூழ்நிலை உருவாக்க முயற்சிக்கின்றனர். இப்போது அப்படி யாரும் பார்ப்பதில்லை. ஏனெனில் பெண்கள் இப்போது வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். அது மட்டுமல்ல கர்ப்ப காலத்திலும் வேலைக்குச் செல்கின்றனர், சினிமா பார்க்கின்றனர், எல்லா இடத்திற்கும் செல்கின்றனர். தங்களை விட ஒரு நல்ல உயிர் அந்த கர்ப்பத்தில் தங்க வேண்டுமென்பதற்காக ஆணும் பெண்ணும் முன் காலத்தில் எல்லா முயற்சியும் எடுத்தனர். எனவே கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியைப் பார்க்க கணவன் கூட ஒரு காலகட்டத்திற்கு மேல் அனுமதிக்கப் படுவதில்லை. ஏனெனில் சுகமான சூழ்நிலையில், மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில், எண்ணங்கள் பாதிக்கப்படாத சூழ்நிலையில், எல்லா நிலையிலும் பாதுகாப்பாக கர்ப்பமுற்ற பெண்இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். சரியான உயிரை வரவேற்க வசதியாக அப்பெண்ணின் தன்மை இருக்கும்படி, சரியான உணர்ச்சிகள், சரியான சப்தங்கள், சரியான மந்திரங்கள், சரியான உணவு ஆகியன அனைத்தும், இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். ஒரு வேளை இன்றைய உலகத்தில் இவையனைத்தும் பொருந்திவராமல் இருக்கலாம். எனவே ஒரு உயிர் குறிப்பிட்ட ஒரு கருவில் இறங்கி, நாளடைவில், தான் குழந்தையாக மாற அந்தக் கரு தகுதியானதல்ல என்று கருதினால், கருவை விட்டுப் போய்விடுகிறது. எனவேதான் அந்த வளரும் பிண்டத்தில் ஒரு வழி எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழிதான் பிரம்மரந்திரா. உங்கள் வாழ்வின் இறுதியில் ஒரு நாள் நீங்கள் இந்த உடலை விட்டுப் போகும்போது எந்த வழியாக வேண்டுமானாலும் போகமுடியும், ஆனால் போவதற்கு சிறந்த வழி பிரம்மரந்திராதான். விழிப்புணர்வுடன் உடலின் எந்தப் பகுதி வழியாக வெளியேறினாலும் அது நல்லதே. ஆனால் பிரம்மரந்திரா வழியாக வெளியேறுவது மிகச் சிறந்தது. இந்த பெரிய வாய்ப்பைப் பற்றி நிறைய பேர் பேசியிருப்பதாலும், நிறைய புத்தகங்கள் இதைப் பற்றி சொல்லியிருப்பதாலும், மக்கள் தங்கள் உச்சந்தலையிலும், நெற்றியிலும் ஏதாவது கற்பனை செய்து கொள்கிறார்கள். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கே உங்கள் மனதை குவிக்கிறீர்களோ அங்கே சிறிது அரிப்பு உணர்வு தோன்றும். இப்போது வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வலது சுண்டு விரலை இப்படி வையுங்கள், அதன் முனையில் உங்கள் மனதை குவியுங்கள், சில நிமிடங்களில் அங்கே ஒரு அரிப்பு உணர்வு தோன்றும், ஏன்? உடலின் எந்த பகுதியில் மனதைக் குவித்தாலும், அங்கே சிறிது அரிப்பு உணர்வு தோன்றும். அதை வைத்து உங்களுக்குள் ஏதோ பெரிய செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் முடிவு செய்யக்கூடாது. அல்லது உடலிலேயே சில முறை அங்கங்கே அரிப்புகள் உணரலாம். எப்போதாவது உங்களுக்கு இப்படி நடக்கும். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள், அப்போது உங்கள் உடலில் அங்கங்கே அரிப்பு உணர்வு தோன்றலாம், குறிப்பாக நீங்கள் மிகவும் பதட்டமாக இருக்கும்போது அப்படி அடிக்கடி நடக்கும். நீங்கள் தளர்வாக இருக்கும்போது அப்படி நடக்காது. நீங்கள் பதட்டமாக இருக்கும்போது அங்கங்கே அரிப்பு உணர்வு தோன்றுவதால் அதை நீங்கள் வேறுவிதமாக முடிவு செய்துவிடக்கூடாது.

நான் இதை சொல்லலாமா என்று தெரியவில்லை, ஏனெனில் சொல்லிவிட்டால் பிறகு நீங்கள் நிறைய கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால், நீங்கள் சாம்பவி பயிற்சியை செய்வதால், இப்போது கூட நீங்கள் அதை பரிசோதித்துப் பார்க்கலாம். நான் எப்போதும் இது போன்ற விஷயங்களை தவிர்த்தே வந்திருக்கிறேன், ஏனெனில் மக்கள் பிறகு அது போன்ற விஷயங்களில் மிகவும் கற்பனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இதை நீங்கள் செய்து பார்க்க வேண்டாம், அது தேவையில்லாதது. நான் எனது பிரம்மரந்திராவின் மேல் கைவைத்தால், நான்கு அடிக்கும் மேல் வைத்தால் கூட, கை 8 போன்ற அமைப்பில் இருப்பதை உணர முடிகிறது. சக்தி நிலைகளை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைக்கும்போது எப்போதும் அப்படி நடக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் நடக்க முடியும். ஆனால் அது உள்ளுக்குள் நடக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது என்றால் நம்மில் உள்ள 114 சக்கரங்களில் 2 சக்கரங்கள் உடலுக்கு வெளியே இருக்கிறது. பொருள்தன்மைக்கும் அப்பால் உள்ள பரிமாணம் நிலையான செயல்முறையாக மாறினால், சில ஷணங்களுக்கு உங்களையும் தாண்டிய சில விஷயங்கள் நடப்பதை உணரமுடியும். எனவே உங்கள் பொருள்தன்மையைத் தாண்டிய பரிமாணம் தொடர்ந்த செயல்முறையாக மாறும்போது, உடலுக்கு வெளியே செயலற்ற நிலையில் உள்ள 2 சக்கரங்கள் செயல்படத் துவங்குகின்றன. அவை அப்படி செயல்படத் துவங்கும்போது, உங்கள் தலையில் ஒரு ஆன்டெனாவை நீங்கள் பெறுகிறீர்கள். உயிர்த்தன்மை குறித்த சில புரிதல்களை அது வழங்குகிறது.

இதில் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. மேலும் அது எப்போதும் உங்களை வாழ்வு மற்றும் அதற்கும் அப்பால் உள்ளவற்றின் விளிம்பில் நிறுத்திவிடுகிறது. ஒரு யோகியின் நோக்கமும் எப்போதும் அப்படித்தான் இருக்கிறது, ஏனெனில் விரும்பும் ஷணத்தில் விழிப்புணர்வுடன் உடலை விட முடியும். குறிப்பாக, கார் ஓட்டுகிற, வானில் பறக்கிற, கால்பந்து விளையாடுகிற என்னைப் போல் சுறுசுறுப்பாக உள்ள ஒரு யோகி அது போன்ற விளிம்பில் எப்போதும் இருப்பது மிக முக்கியம். எல்லா யோகிகளும் இப்படித்தான் இருப்பார்கள். ஆனால் நான் அதிகமாக அப்படி இருக்கிறேன். ஏனெனில் ஒரு வேளை விமானம் விபத்துக்குள்ளாகி விட்டால் நான் விழிப்புணர்வின்றி இறக்க விரும்பவில்லை. எனவே எப்போதும் விளிம்பில் இருக்கிறேன். அப்படி இருப்பது யோகிக்கு பாதுகாப்பானது. நீங்கள் சமநிலையில் இருக்கத் தெரிந்தவராக இருந்தால் கயிற்றின் மீது நடப்பது கூட பாதுகாப்பானதுதான், இல்லையா? அப்படி இருக்கத் தெரியாதவருக்கு அது அபாயமான விளையாட்டாகத் தெரிகிறது. சென்னை தெருக்களில் கார் ஓட்டுவதை விட அது மிகவும் பாதுகாப்பானதுதான், இல்லையா? எல்லாம் உங்களைப் பொறுத்ததுதான், சென்னை தெருக்கள் உங்கள் கையில் இல்லை, ஆனால் கயிற்றின் மீது நடப்பது உங்கள் கையில் இருக்கிறது, இல்லையா? எப்படி நடப்பது என்று தெரிந்து கொண்டால் அது பாதுகாப்பானதுதான். எனவே நீங்கள் சமநிலையில் இருந்து விட்டால் விளிம்பில் இருப்பதும் பாதுகாப்பானதுதான். அதில் அபாயம் ஏதும் இல்லை. தவறி கீழே விழும் வாய்ப்பு கிடையாது. ஆனால் அது உங்களுக்கு விடுதலையை தருகிறது. ஏதாவது தவறாகி விடும் பட்சத்தில் நீங்களாகவே வெளியேறிவிடலாம். விழிப்புணர்வின்றி போகத் தேவையில்லை. இப்போது அது போல எதுவும் நடக்கவில்லை. நீங்கள் விளிம்பில் இல்லை.ஒன்று நீங்கள் உங்கள் ஆத்ம சாதனையைத் தொடரலாம். அல்லது அந்த சக்திநிலையை பெரியதொரு வாய்ப்பாக மாற்ற நினைத்தால் நீங்கள் என்னிடம் வரவேண்டும்.

No comments:

Post a Comment