Tuesday, July 1, 2014

உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் - ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)




     நீங்கள் ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, நித்திரையின் போது குறட்டை விடுபவரா? உங்கள் குறட்டையின் சத்தத்தால் அருகில் படுத்திருப்பவர் தன் தூக்கத்தை இழக்கிறாரா? இதனால் நீங்களும் மனச் சோர்வடைகிறீர்களா? அப்படியெனில் நான் இனிச் சொல்லப் போவதை நீங்கள் மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும். சரி, நீங்கள் குறட்டை விடுவதில்லையா? பரவாயில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் அப்பாவோ, அம்மாவோ, சகோதரனோ, சகோதரியோ. துணையோ, நண்பனோ குறட்டை விடுபவரா? அப்படியிருந்தாலும் நீங்கள் இதைப் படிக்க வேண்டும். 'குறட்டை விடாமல் அமைதியாய் உறங்குவது எப்படி?' என்றோ, 'குறட்டையைத் தடுக்கப் பத்து வழிமுறைகள்' என்றோ உங்களுக்குப் பாடம் சொல்லித்தரப் போவதில்லை நான். ஆனால் அதைவிடப் பெரிய விசயம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். குறட்டையுடன் சம்மந்தப்பட்ட மிகமுக்கியமான விசயம் ஒன்றைப் பற்றிச் சொல்லப் போகிறேன். அதுவும் தமிழர்களான நம்மில் பலர் அறிந்தேயிராத முக்கிய விசயம் அது.  நவீன மருத்துவத்துடன் சம்மந்தப்பட்ட, அறிவியலின் அருமையான கண்டுபிடிப்பு அது. "அட! என்னதான் அது" என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.

     ஊரில் அல்லது கிராமத்தில் வாழும் உறவினர் ஒருவர் திடீரெனப் பக்கவாத நோயால் (Paralysis) பாதிக்கப்பட்டு, எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் விழுந்துவிடுவார். அல்லது இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழுந்திருக்கவே மாட்டார். படுக்கையிலேயே இறந்திருப்பார். அப்படி இறந்தவரைப் பரிசோதனை செய்த மருத்துவர், 'அவர் மாரடைப்பால் இறந்திருக்கிறார்' என்று அறிக்கை தருவார். உறவினர்களிலும், அயலவர்களிலும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் இவை. இந்தச் சம்பவங்கள் சம்பவிப்பதற்கு அதிகபட்சமாகக் காரணமாக இருப்பது ஒன்று. அதுவே மேலே சொல்லப்பட்ட குறட்டை பற்றி விரிவாகப் பார்ப்பதற்குக் காரணமாகவும் இருக்கிறது. அந்த ஒன்றைப் பற்றிதான் நாம் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம். அதன் பெயர் 'ஸ்லீப் அப்னியா' (Sleep Apnea).



     'ஸ்லீப் அப்னியா' என்னும் இந்தப் பெயரை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். ஆனால் நம்மில் பலருடன் தொடர்புபட்டது இந்தப் பெயர். இந்த ஸ்லீப் அப்னியா, நாம் அறியாமலே நமக்குள் இருந்து, நம்மையே அழிக்கக் காத்திருக்கும் ஒரு நோய். ஸ்லீப் அப்னியா நோய் உள்ளவர்கள் அதைக் கவனிக்காத பட்சத்தில் உறக்கத்திலேயே உயிரை விட்டுவிட அதிகளவு சாத்தியங்கள் உண்டு. இல்லையெனில் பாரதூரமான உடல் பாதிப்புகளுக்கு அது நம்மை இட்டுச் செல்லும். "அவ்வளவு கொடுமையான நோயா இந்த ஸ்லீப் அப்னியா?" என்று நீங்கள் கேட்டால், இதைப் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளினால் ஏற்படும் நோய்களுடனோ, உடல் உறுப்புகளின் பாதிப்புகளால் உருவாகும் நோய்களுடனோ ஒப்பிட முடியாது. உறக்கத்தின் போது, நம் உடலின் செயல்பாடுகளில் நடைபெறும் குளறுபடியால் உருவாகும் ஒருவித வினோத நோய் இது. ஆனாலும் அதிகளவு ஆபத்தானது. இந்த நோய் பற்றி நான் இங்கு சொல்வதற்கு விசேச காரணம் ஒன்றும் உண்டு. இந்த நோய் எனக்கும் வந்தது. 'அட! என்ன இது? புதுக்கதையாக இருக்கிறதே!' என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆமாம்! இந்த நோய் எனக்கு வந்ததும் ஒரு கதைதான். இந்த நோய் எனக்கு வந்த கதையையும், இந்த நோயின் கதையையும் சேர்த்து இங்கு நாம் பார்க்கப் போகிறோம். இறுக்கமாக அல்ல, ஜாலியாகவே பார்க்கலாம். 

     அடிப்படையில் நான் மிகவும் சுறுசுறுப்பானவன். இளைஞனாக இருக்கும் போது, இறுக்கமான உடலமைப்புடன் ஒரு விளையாட்டு வீரனாக விளங்கியவன். ஆனால், கடந்த சில காலமாக நான் மிகவும் சோம்பலாகக் காணப்பட்டேன். நன்றாக நித்திரை செய்து எழுந்தாலும், மீண்டும் நித்திரை செய்ய வேண்டும் என்னும் அளவுக்கு களைப்பாக உணர்ந்தேன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அப்படியே தூங்க ஆரம்பித்தேன். அதிகம் ஏன், ஆபீஸில் சில சமயங்களில் நின்று கொண்டே தூங்கினேன் என்றால் பாருங்கள். விளைவு…. என் உடலின் எடை மனுஷ்ய புத்திரனும், பிரச்சனையும் போல, நாளொரு மேனியும் பொழுதொரு கிலோவாக வளரத் தொடங்கியது. நிலைமை உணர்ந்து சிறிது கவலையானேன். உடன் வைத்தியரைப் பார்க்க வேண்டுமெனத் தீர்மானித்தேன். என் குடும்ப வைத்தியர் ஒரு ஜேர்மனியர். இளமையானவர். தன் சிரிப்பினாலேயே நோய்களைத் தீர்த்துவிடுவாரோ என்று, நோயாளிகளை நினைக்க வைப்பவர்.

     எனக்குச் சமீபமாக நடைபெறும் சம்பவங்களை நான் அவருக்கு விவரிக்கலானேன். நான் சொன்னவற்றை மிகவும் அமைதியாகக் கேட்டார். பின்னர் யோசனையுடன் மூக்கின் மேல் விரலைக் கொண்டு சென்று, மூக்கில் மேலாகப் பறந்த ஈயைத் தட்டிவிட்டு, என்னை வெட்டப் போகும் ஆட்டைப் பார்ப்பது போலப் பரிதாபமாகப் பார்த்தார். எனது குடும்ப வைத்தியர் ஒரு பாசக்கார வைத்தியர். ஆனால், அன்று அவரது பார்வையில், தன் வாடிக்கை நோயாளியை நிரந்தரமாக இழக்கப் போகும் வியாபாரியின் 'லுக்' இருந்ததை நான் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற சங்கடமும் அவரது பார்வையில் தெரிந்தது. சில நொடிகளில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட வைத்தியர் ஜேர்மன் மொழியில், "மிஸ்டர் சிவா, உங்களுக்கு 'ஸ்லீப் அப்னியா' என்னும் நோய் இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன்" என்றார். அவர் சொன்னது முழுமையாகப் புரியாத நிலையில், "டாக்டர், எனக்கு ஸ்லீப் தெரியும். அது என்ன அப்னியா?" என்றேன்.

     ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி தன் வலையில் மாட்டிவிட்ட சந்தோசத்தில், 'ஸ்லீப் அப்னியா' என்றால் என்னவென்று எனக்கு அரை மணி நேரம் அவர் கொடுத்த விளக்கத்தை, நான் அப்படியே எழுத முடியாது. ஓடிவிடுவீர்கள். எனவே சில வரிகளில் அவர் சொன்னதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். 'நாம் நித்திரை கொள்ளும் போது, மூச்சு விடுவதை நம்மையறியாமலே சில செக்கன்களுக்கு நிறுத்தி விடுகிறோம். அதாவது, ஆழ்ந்த நித்திரையின் போது, நமது நாக்குடன் சேர்ந்திருக்கும் தாடைப்பகுதி சற்றுக் கீழே இறங்கி, சுவாசிக்கும் காற்று உடலில் செல்லும் வழியை முழுவதுமாக அடைத்துவிடுகிறது. அதனால், பல நொடிகளுக்கு மூச்செடுக்காமல் இருந்துவிடுகிறோம். இதன் விளைவாக, நமது இரத்தத்தில் உள்ள ஆக்சிசன் வாயுவின் அளவு குறைந்து, மூளையில் மின்னல்கள் போல அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டு, நித்திரை கொண்டாலும் மூளை விழித்துக் கொண்டு, இதயத்தின் செயற்பாடு படிப்படியாக பலவீனமாகி, ஒருநாள் அது நிறுத்தப்பட்டு, மாரடைப்பால் இறந்து விடுவோம், அல்லது மூளையில் ஏற்படும் அதிர்ச்சி அலைகளின் தாக்கத்தால் பக்கவாதத்தில் விழுவோம். அவ்வளவுதான். வெரி சிம்பிள்'.

     எனக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, என்னைச் சோகமாகப் பார்த்த வைத்தியரின் பார்வையில், 'என்ன சைஸில் எனக்கு பெட்டி எடுக்கலாம்' என்ற சேதி அடங்கியிருந்ததை நான் உடனடியாக அறிந்து கொண்டேன். "இப்ப நான் என்ன செய்ய.....?" என்று 'தம்பி' பட மாதவன் ஸ்டைலில் நானும் வைத்தியரைக் கேட்டேன். அதற்கு அவர், "நீங்க ஒன்றும் செய்ய முடியாது மிஸ்டர் சிவா. நான்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்று சொல்லிவிட்டு, தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்த ஆரம்பித்தார். யாருடனோ மிகவும் பொறுப்புடன் அமைதியாகப் பேசிய பின் என்னிடம் சொன்னார், "மிஸ்டர் சிவா, உங்களுக்கு வந்திருப்பது ஒரு சிக்கலான நோய். அதை நாங்கள் சரியான வகையில் அளவிட்டு அறிய வேண்டும். இதற்கென மிகவும் பிரத்தியேகமான பரிசோதனைச் சாலைகளுடன் கூடிய சிறந்த வைத்தியசாலைகள் இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, ஜேர்மனியிலேயே மூன்றே மூன்று வைத்திசாலைகள்தான் உண்டு. அதிலும் அதிர்ஷ்டவசமாக எனது நண்பன் ஒருவன் அந்த வைத்தியசாலைகளில் ஒன்றில், வைத்தியராகப் பணிபுரிகிறான். அவனுடன்தான் இப்போது போனில் பேசினேன். சாதாரணமாக அந்த வைத்தியசாலைக்கு அனுமதி கிடைப்பதற்கு நீங்கள் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் எனது நண்பன் மூலம் உங்களுக்கு எதிர்வரும் பதினைந்தாம் திகதி அட்மிட்டாக இடம் எடுத்து விட்டேன். என்ன, வைத்தியசாலை இங்கிருந்து 200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. தூரம்தான் என்றாலும் நீங்கள் அங்கு செல்லத்தான் வேண்டும்"  என்று கட்டளை போலச் சொன்னார். 'செய் அல்லது செத்து மடி' என்று மட்டும்தான் அவர் சொல்லவில்லை.

"சென்று.....?" என்று ஈனஸ்வரமாக இழுத்தேன்.
"அங்கே ஒரு 'ஸ்லீப் லாபரட்டரி' ஒன்று உண்டு. அதில் நீங்கள் நித்திரை கொள்ள வேண்டும்"
"அந்த நித்திரையை நான் இங்கு எங்கும் கொள்ள முடியாதா டாக்டர்" என எதுவும் தெரியாத மாதிரி வைத்தியரைப் பார்த்துக் கேட்டேன்.

     முட்டாள் ஒருவனை முதல் முறையாகப் பார்ப்பது போல, முகபாவனையை மாற்றிய வைத்தியர் தொடர்ந்து சொன்னார்,
"அந்த வைத்தியசாலையில், நீங்கள் நித்திரை செய்வதைப் பலவிதமான கோணங்களில், பலவிதமான கருவிகள் மூலமாக அளப்பார்கள், வீடியோ மூலமாகப் படம்பிடிப்பார்கள். அந்த அளவீட்டின் மூலம், இந்த நோய் உங்களுக்கு எந்த அளவிற்கு பாதித்து உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்" என்றார். சவப்பெட்டி ஒன்று என் மனதுக்குள் வந்து சட்டெனப் பயமுறுத்தியதால், மறுப்பேதும் சொல்லாமல் உடன் சம்மதித்தேன். மீண்டும் சந்திக்கலாம் என்று (சந்தேகத்துடனேயே) அவர் கைகொடுத்து வழியனுப்பி வைத்தார்.



     200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வைத்தியசாலையை நோக்கி என் பிரயாணம் ஆரம்பமாகியது. நகர்ப்புறங்கள் கழிந்து, படிப்படியாகச் செல்ல வேண்டிய அந்த இடத்தை அண்மிக்க, இயற்கை அழகு நம்மை அரவணைத்து முத்தமிட்டது. அழகான மலைகள் பரந்திருக்கும் பகுதியில், ரம்மியமாக அமைந்த இடங்களினூடாக எனது கார் அந்த வைத்தியசாலையை நோக்கிச் சென்றது. இறுதியில் ஒரு மலையைச் சுற்றிச் சுற்றி மேலே ஏற ஆரம்பித்தேன். மலை உச்சியின் முடிவில், கறுப்பு நிறத்தில் உயர்ந்த கோட்டை ஒன்று காணப்பட்டது. அந்தக் கோட்டையின் வாசலை அடைந்தேன். வைத்தியசாலையே அந்தக் கோட்டைக்குள்தான் அமைந்திருந்தது. மிகவும் கட்டுப்பாடான ஒருவித கிருஸ்தவ அமைப்பினால் அந்த வைத்தியசாலை நடத்தப்பட்டு வருகிறது என்பதை அங்கு சென்றதும்தான் கவனித்தேன். வைத்தியசாலைக்கு அருகிலேயே புராதனமான பெரிய சர்ச்சொன்றும் காணப்பட்டது. கருத்த அங்கி அணிந்து கொண்டு முகத்தையும் மூடியவாறு, முக்காடிட்ட நிலையில் வித்தியாசமான உடை அணிந்தபடி பலர் அங்கும் இங்குமாக நடமாடினர். தவறுதலாக ஹாலிவூட்டில் தயாரிக்கப்படும் பயங்கரப் படப்பிடிப்பின் செட் ஒன்றுக்குள் வந்து விட்டேனோ என்ற சந்தேகம் வந்தது. விசாரித்ததில், அவர்கள் அனைவரும் ஒரு வித்தியாசமான வழியைப் பின்பற்றும் கிருஸ்தவப் பாதிரிமார்கள் என்றும், வைத்தியசாலையுடன் இணைந்து அவர்களுக்குரிய பயிற்சிக் கல்லூரியும் இருக்கிறது என்றும் அறிந்து கொண்டேன். வாழ்க்கையில் முதல் முறையாக் இப்படிப்பட்டவர்களைக் கண்டதாலும், அந்த இடம் இருந்த தனிமையான அமைப்பினாலும், ஏதோ இனம் புரியாத ஒருவகைப் பய உணர்ச்சி என் வயிற்றினூடாகப் பரவியது.


          வைத்தியசாலைக்குள் நுழைந்தேன். உள்ளே எனக்குப் பெரிய அதிசயம் காத்திருந்தது. வெளியே பழைய கோட்டை போலத் தெரிந்த கட்டடம், உள்ளே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போலக் காட்சியளித்தது. எனது மனம் ஓரளவு நிம்மதியான நிலைக்கு வந்தது. பதிவுகள் செய்யப்பட்ட பின்னர், சகல வசதிகளுடன் கூடிய பெரிய அறையொன்று எனக்குத் தரப்பட்டது. அழைத்துச் சென்ற தாதி உட்பட, மணியடித்தால் ஓடி வந்து சேவை செய்ய,  தாதிகள் கூட்டமே அங்கு காத்திருந்தது. எனக்குரிய ஆரம்ப வைத்திய நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்தன. எல்லாம் முடிந்ததும் தலைமை வைத்தியர் என் அறைக்குள் வந்தார். நலம் விசாரித்தார். சம்பிரதாயச் சோதனைகளையும், கேள்விகளையும் முடித்து விட்டு, 'அன்று இரவு, நித்திரை கொள்ளும் சோதனைச் சாலைக்கு நான் செல்ல வேண்டுமெனவும், அங்கு என்னை ஒரு தாதி அழைத்துச் செல்வார் எனவும், நான் எப்போது நித்திரை கொள்ள ஆயத்தமோ, அப்போது அறிவித்தால் என்னை அழைத்துச் செல்வார்கள் எனவும், பரிசோதனைகள் முடிந்ததும் நாளைக்கே நான் மீண்டும் வீட்டிற்குச் திரும்பிவிடலாம்' எனவும் கூறி, மாலை வணக்கத்துடன் கைகுலுக்கி விடை பெற்றார்.

     ஏற்கனவே பயணக் களைப்பில் இருந்ததால், அப்போதே நித்திரை கண்களில் நின்று விளையாடியது. கட்டிலில் படுத்துச் சிறிது கண்ணயர்ந்துவிட்டு எழுந்து பார்க்க, நேரம் இரவு ஒன்பது மணியை தாண்டி விட்டிருந்தது. பதறியபடி மணியை அடித்துத் தாதியை அழைத்தேன். மிகவும் அழகான தாதி ஒருவர் வந்து, என்னை நித்திரை சோதனைக்கு அழைத்துச் சென்றார். மாடல் அழகிகள் டி.வியில் மட்டும் வருவதில்லை, தாதி உருவத்திலும் வருவார்கள் போல. விமான நிலையங்களில் இருப்பது போல, ஒளி வெள்ளத்துடன் கூடிய மிக நீண்ட ஹாலில், வெகு தூரம் நடந்து சென்று ஒரு சோதனைச் சாலையை அடைந்தோம். அங்கே இன்னுமொரு மாடலிடம், ச்சே...! தாதியிடம் என்னை ஒப்படைத்துவிட்டு அவர் செல்ல, கவலையுடன் இரவு வணக்கம் சொல்லி அவரிடம் இருந்து விடைபெற்றேன்.

     அந்தப் புதிய தாதி என்னை அன்புடன் நலம் விசாரித்தார். பெயரை அறிந்து கொண்டார். மங்கிய இருட்டான ஒரு தனியறைக்கு என்னை அழைத்துச் சென்றார். ஜன்னலருகே அமைந்த ஒரு கட்டிலில் என்னைப் படுக்கச் செய்தார். என் உடைகளைக் களைந்துவிட்டு, தலை முதல் கால்வரை அந்தத் தாதி எனக்கு…………..!

     நீங்கள் நினைப்பது போல எதுவும் இல்லை. அவர் தலைமுதல் கால்வரை, உடல் முழுவதும் பல விதமான வயர்களால் என்னை இணைக்க ஆரம்பித்தார். அப்போதுதான் நிமிர்ந்து அறையைப் பார்த்தேன். சுற்றிவரப் பலவிதமான கருவிகள். சுவரின் நான்கு மூலைகளிலும் நவீன வீடியோக் காமராக்கள். என்னென்னவோ சிவப்பு ஒளிக்கீற்றுகள். மங்கலான இருட்டில் அனைத்தும் மின்னிக் கொண்டிருந்தன. வயர்களை இணைத்து முடிந்ததும் தாதி சொன்னார், "நான் விளக்குகளை அணைத்து விட்டு சென்றதும் நீங்கள் நித்திரை கொள்ளலாம். அடுத்து இருக்கும் அறையிலிருந்து நாங்கள், காமராக்கள் மூலமாகவும், கருவிகள் மூலமாகவும் நீங்கள் நித்திரை செய்வதை அவதானிப்போம். உங்களுக்கு எதுவும் தேவையெனின், இந்த பட்டனை அழுத்தினால், நான் உடன் வருவேன்" என்று சொல்லிவிட்டு. நல்ல இரவுடன் விடைபெற்றார்.



     நான் நித்திரைக்கு முயற்சித்தேன். முடியவில்லை. வழக்கமாக படுத்தவுடன் வரும் நித்திரை வரமறுத்தது. ஆயிரம் வயர் சுற்றிய அபூர்வ சிந்தாமணியான நான் எப்படி உறங்குவது? வயர்களை அணைத்தபடி உறங்குவது, இதுதான் முதல்முறை  என்பதால், நித்திரை வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. அப்படி, இப்படி உடலை அசைத்துத் தூங்க முயற்சி செய்தேன். அப்போது அறைக் கதவு தட்டப்பட்டு, அந்தத் தாதி அறைக்குள் நுழைந்தார். நுழைந்தவர், 'எனக்கு ஏன் நித்திரை வரவில்லை' என்பது தனக்குப் புரிகிறது என்றும், அதை யோசிக்காதது தன் தவறுதான் என்றும் சொல்லி, அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு, கட்டிலுக்கு அருகே இருந்த ஜன்னலை நன்றாகத் திறந்து விட்டார். திரைச் சீலையையும் விலக்கி விட்டார். அத்துடன் அவர், "இப்போது நல்ல காற்று வரும். இனி நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்" என்று சொல்லிவிட்டு, மீண்டும் 'நல்ல இரவு' சொல்லி விடைபெற்றாள்.
     அவள் சென்றதும் படுக்கையில் படுத்தபடி எனக்கருகே ஆவெனத் திறந்திருந்த ஜன்னலூடாக வெளியே பார்க்கத் திரும்பினேன்.
அய்யோ.....! அங்கே நான் கண்ட காட்சி...........!!
பிரகாசமான சந்திர வெளிச்சத்தில், ஆயிரம் சிவப்பு நிறத்திலான மெழுகுவர்த்திகள் காற்றில் சலசலத்தபடி வரிசையாக எரிய, கறுப்பு மனிதர்கள் எழுந்து நிற்பது போல, வரிசையாக அடுக்கப்பட்ட கல்லறைகள் என்னைப் பார்த்துச் சிரித்தன. அதாவது சவ அடக்கம் செய்யும் இடம். நான் இதற்கு முன்னர் சவ அடக்கம் செய்யும் இடத்திற்குச் சென்றிருக்கிறேன். ஆனால் சவ அடக்கம் செய்யும் இடத்தில் படுத்ததில்லை. கடும் இருட்டில் இவ்வளவு சமீபமாக, சாவாதனமாக நான் இதுவரை சவக்காடுகளைப் பார்த்ததுமில்லை. நான் உறங்கும் அறையை ஒட்டியபடியே தாழ்வான மிகச் சிறிய சுவரொன்று பிரிக்க கைக்கெட்டும் தூரத்தில் கல்லறைகள். 'க்ளோஸ்டர்' என்று சொல்லப்படும் சர்ச்சிற்குச் சொந்தமான அடக்கம் செய்யும் இடம் அது. அவர்களுக்கு அது ஒரு புனிதமான இடம். ஆனால், எனக்கு…?



     என்னில் இணைத்த வயர்களெல்லாம் குடல்களாகி வாய்க்குள் வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. கண்னை மூடியபடி என்னை நானே தேற்றிக் கொண்டேன். பயம் கொள்வது ஆணுக்கு அழகில்லையல்லவா? மனதை ஒரு நிலைப்படுத்தினேன். நித்திரை கொள்ள முயற்சித்தேன். ஆனால் கண்ணைத் திறந்து அங்கே பார் பார் என்று மனம் கெஞ்சிக் கொண்டே இருந்தது. முக்காடிட்ட அந்த பாதிரிமார்களின் உருவங்களும், கோட்டையும், நான் பாஅர்த்த 'றாகுலா' படங்களும் ஞாபகத்தில் வருவதைத் தடுக்க முடியவில்லை. விடுயும் வரை நான் நித்திரை கொண்டேனா? இல்லையா? என எனக்கே தெரியவில்லை.
     விடிந்ததும் தலைமை வைத்தியர் என்னைச் சந்தித்தார். கம்யூட்டர்களில் தெரிந்த வரைவுகளைப் பார்த்தார். புருவம் மேலும் கீழுமாக ஏறி இறங்கியது. அப்புறம் அவர் சொன்னார், "மிஸ்டர் சிவா, கிடைத்த தரவுகள் ஏனோ ஒழுங்கற்றவையாக இருக்கின்றன. எனக்கே இது சற்றுக் குழப்பமாக இருக்கிறது. சில சமயங்களில் கருவிகளின் ஒழுங்கற்ற தொழில்பாட்டால் இவை நடக்கச் சாத்தியம் உண்டு. அது ஏன் என்று எனக்குத் தற்சமயம் புரியவில்லை? எப்படி இருந்தாலும் இந்த முடிவுகளில் எனக்குத் திருப்தியில்லை. மீண்டும் ஒரு முறை நீங்கள் இங்கே வந்து சோதிக்க வேண்டும்" என்றார். அப்போது நான், "அந்த அறை கல்லறைகளோடு சேர்ந்து இருக்கும் வரை உங்களுக்குச் சரியான ரீடிங்குகள் கிடைக்க வாய்ப்பில்லை டாக்டர்" என்று அவருக்குச் சொல்லவில்லை. என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

     அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வைத்தியசாலையை விட்டு வெளியே வர, அந்த இயற்கை அழகு ஏனோ என்னை வசீகரிக்கவில்லை. என் கார் வீடு நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியது.....!

     இந்த இடத்தில், 'இந்தக் கதையில் வரும் பெயர், சம்பவங்கள் யாவும் கற்பனையே! யாரையும் குறிப்பன இல்லை' என்று நான் போட வேண்டும். ஆனால், இப்போது அது முக்கியமல்ல. நம்மை மிரட்டும் இந்த ஸ்லீப் அப்னியா நோயைப் பற்றிய முழு விபரத்தையும் அறிவதே முக்கியமானது. அதையும் நாம் விளக்கமாகப் பார்த்துவிடலாம்.



     சாதாரணமாக மனிதன் ஒருவன் சுவாசிக்கும் போது, அவன் வாயின் மூலமாகவும், மூக்கின் மூலமாகவும் காற்றை உள்ளே எடுத்து வெளியே விடுகிறான். இந்த மூச்சுக் காற்று சுவாசப் பையை அடையும். மூக்கு, வாய், தொண்டை ஆகியவற்றினூடாகக் காற்றுச் செல்லும் குழாய் போன்ற அமைப்பை பாரிங்ஸ் (Pharynx) என்றழைப்பார்கள். விழித்திருக்கும் நிலையில், நாம் சுவாசிக்கும் காற்று எந்தத் தடையுமில்லாமல், ஆக்சிசனுடன் சுவாசப் பையை அடைகிறது. ஆனால் நித்திரை கொள்ளும் போது, தொண்டைக் குழாய்ப் பகுதியில் இருக்கும் சவ்வுகள் வளர்திருக்கும் நிலையிலும், உள்நாக்கு என்று சொல்லப்படும் டான்சில்ஸ் (Tonsils) பெரிதாக வளர்ந்த நிலையிலும், இந்தச் சுவாசக் காற்றுச் செல்லும் பாதை குறுகியதாக அடைபட்டிருக்கும். இந்தக் குறுகிய பகுதியினூடாக மூச்சுக் காற்றுச் செல்லும் வேளையில்தான், மனிதன் குறட்டை விடும் செயல்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன. சாதாரணமாக ஒரு சுகதேகி நித்திரை செய்யும் போது, நூறு சதவீதம் ஆக்ஸிசன், மூச்சுக் காற்றினூடாக உள்ளே செல்லும். ஆனால், மேலே சொல்லப்பட்ட காரணங்களினால் குறட்டை விடுபவர்களுக்கு அதை விட மிகக்குறைந்த சதவீதத்திலேயே ஆக்ஸிசன் உடலை அடையும். உணவுச் சமிபாட்டுக்கும், உடல் தொழிற்பாட்டுக்கும் இந்த ஆக்ஸிசன் மிகவும் முக்கியமானது. ஆக்ஸிசன் இரத்தத்தில் குறையும் போது, சமிபாடு மந்தமாக நடைபெறுவதால், சமிபாடடையாத உணவுகள் கொழுப்பாகச் சேமிக்கப்பட ஆரம்பிக்கும். இதனால் உடலின் எடை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும். அத்துடன் உடலில் மிகவும் சோர்வான நிலையில் எப்போதும் காணப்படும். ஸ்லீப் அப்னியாவின் ஆரம்ப நிலையாக இதைக் கருதலாம்.
     ஆனால், இதைவிடக் கடுமையான ஸ்லீப் அப்னியாவும் உண்டு. இதை Obstructive Sleep Apnea என்பார்கள். சிலர் நித்திரை கொள்ளும் போது, அவர்களின் நாக்கு, வாய் போன்ற உறுப்புகள் சற்றே கீழ் நோக்கி அழுத்தப்படும். அப்போது, இந்தப் பாரிங்ஸ் என்னும் குழாய் முற்றாக நெருக்கப்பட்டு, மூடப்பட்டுவும்.  சிறிதளவேனும் மூச்சுக் காற்று உள்ளே செல்ல முடியாதவாறு அது அடைபட்டுக் கொள்கிறது. இப்படி முற்றாக மூச்சுக் காற்று உள்ளே வராமல் அடைபட்டு இருப்பதால், நாம் சுவாசிப்பதை பல நொடிகளுக்கு நிறுத்திவிடுகிறோம். சுவாசிக்காமல் மனிதன் உயிர் வாழ முடியாது அல்லவா? சுவாசப் பைக்கு ஆக்ஸிசன் வரவில்லை என்றதும், அந்தச் செய்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது. அப்போது மூளை நம்மை நித்திரையிலிருந்து எழுப்பிவிடுகிறது. ஆனாலும் நாம் உறக்கத்தில் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளுவோம். இப்படி நித்திரை கொள்ளும் போது, மூச்சுக் காற்றுக்காக நம்மை எழுப்பிவிடும் செயல், பல நூறு தடவைகள் நடைபெறும். நானூறு தடவைகளுக்கு மேலே நடைபெறுவது என்பதெல்லாம் சாதாரணம். ஒரு முழு இரவுத் தூக்கத்தின் போது, நானூறு தடவைகளுக்கு மேல் நாம் தூக்கத்திலிருந்து எழுந்து மீண்டும் தூங்கினால், உண்மையில் அது ஒரு முழுமையான தூக்கமாக இருக்க முடியாது. அதை ஒரு விழிப்பு நிலையென்றே சொல்லலாம். ஆனாலும் தூங்கிக் கொண்டிருப்பதாக நாம் நினைப்பதுதான் வேதனை. இதனால் விடிந்து எழுந்ததும் அந்த நாள் முழுவதும் நித்திரைக் கலக்கத்துடனே இருந்து கொள்வோம். எந்த இடத்திலும் அந்த நேரத்திலும் தூங்க ஆரம்பிப்போம். அமெரிக்காவில் அதிகப்படியான கார் விபத்துகளுக்கு இந்த ஸ்லீப் அப்னியாவும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. காரில் செல்லும் போது, நித்திரை கொள்வதால்தான் அதிக விபத்துகள் அங்கே நடக்கின்றன.

     சுவாசம் தடைப்பட்டு ஆக்ஸிசன் சுவாசப் பைக்குச் செல்லாமல் விடும் போது மூளைக்குச் செய்தி போகின்றது என்று பார்த்தோமல்லவா? அந்தக் கணங்களில் மூளையில் சிறிய மின்னல் போன்ற அதிர்ச்சித் தாக்குதல் எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்கும். இந்த மின்னதிர்ச்சி பல காலம் தொடர்ச்சியாக ஏற்படும் நிலையில், திடீரென ஒருநாள் அது பக்கவாத நோய்க்கு அழைத்துச் சென்று விடுகின்றது. அது போல, ஆக்ஸிசன் குறைந்த இரத்தோட்டத்தின் காரணத்தினால், சீரற்ற இதயத் துடிப்புகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது. இதுவும் என்றாவது ஒருநாள் மரணத்துக்கு இட்டுச் செல்கிறது. ஒருவர் அதிகமாகக் குறட்டை விடுவதும், அதிகாலையில் எழுந்ததும் தலையிடி போன்ற உணர்வு இருப்பதும், பகல் நேரத்தில் நித்திரை கொள்ள விரும்புவதும், மிகவும் சோர்வாக இருப்பதும், உடல் எடை அதிகரித்துச் செல்வதும், உடன் கோபமடையும் தன்மையுடையவராக இருப்பதும், கவனக் குறைவுகள் ஏற்படுவதும் இந்த நோயின் முக்கிய அடையாளங்களாக கருதப்படுகின்றன.



     ஸ்லீப் அப்னியாவைக் கவனிக்காமல் விட்டுவிடுவதால், உயர் இரத்த அழுத்த நோய், இதயக் கோளாறுகள், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, ஊட்டம் குறைந்த இரத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உருவாகலாம். இதன் அதிகபட்ச முடிவாக இறப்பும் ஏற்படலாம். ஆனால், இதைச் சரியாக கவனித்து அதற்குரிய வைத்தியத்தைச் செய்து வருபவர்கள் என்றும் சுகதேகியாக வாழலாம். பொருளாதார வசதிகள் உள்ள நாடுகளான மேற்குலக நாடுகளில், ஸ்லீப் அப்னியா நோய் உள்ளவர்களுக்கென, காற்றை செலுத்துக் கொண்டே இருக்கும் சிறிய பெட்டி போன்ற கருவியைக் கொடுகின்றனர். இந்தக் கருவியை CPAP (Continuous Positive Airway Presure) என்று சொல்வார்கள். இந்தக் கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு மாஸ்க்கைப் (Mask) பொருத்தியபடியே ஸ்லீப் அப்னியா நோயுள்ளவர்கள் எப்போதும் உறங்க வேண்டும். தொடர்ச்சியாகக் காற்று அந்தக் கருவிமூலம் கிடைப்பதால், மூச்சுத் தடைப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தக் கருவி ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும் கொண்ட மிகச் சிறிய கருவியாகும். இதை வீட்டில் வைத்தே பயன்படுத்தலாம். இதன் மூலம் எத்தனையோ இறப்புகளையும், பக்கவாத தாக்குதல்களையும் தடுத்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற வசதியற்ற நம் நாடுகளில் வசிப்பவர்கள், உடனடியாகத் தங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு வழி செய்தே ஆகவேண்டும். அத்துடன் புகைத்தல், மதுவருந்துதல் பழக்கம் இருந்தால் உடன் நிறுத்திவிட வேண்டும். நித்திரை செய்யும் போது, எப்போதும் பக்கவாட்டிலேயே சரிந்து படுக்க வேண்டும். முடிந்தால், டான்ஸில்ஸ் போன்றவற்ரை ஆபாரேசன் மூலமாக நீக்கி மூச்சுக் காற்று வர வழி வகை செய்யலாம்.
     இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மக்களிடையே கொஞ்சமும் இல்லாததால், நான் சொன்னதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நோய் பற்றி இணையத்தின் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ அறிந்து கொள்ளும் போது நிச்சயம் அதிர்ச்சியே காத்திருக்கும். இந்த நோயைப் பற்றிய அறியாமையினாலும், அலட்சியத்தினாலும் நம் உறவுகளில் பலரை நாம் இழந்திருக்கிறோம் என்பதைக் கூட நாம் அறிந்து கொள்ளவில்லை என்பதுதான் நிஜம். இனியாவது விழித்துக் கொள்வோம்.

-ராஜ்சிவா-

No comments:

Post a Comment