Saturday, June 20, 2015

தமிழ் உருவாக்குவோம்

முன்னெப்போதோ... ஓரிடத்தில் வடமொழி உச்சரிப்பினை தமிழில் கொண்டு வரமுடியாத போது தமிழை எப்படி செம்மொழி என்று சொல்லலாம் என்றொரு விவாதத்தின் போது பதிலளித்தது போலும்.... எதையோ தேடும்பொழுது கண்ணில் பட்டது.... இது... உங்கள் பார்வைக்கும்....
கீழ இருந்து பதிலளிக்கிறேன். பெயர்ச்சொற்களை ஒலிமாற்றினால் போதுமானது. மொழிமாற்றத் தேவையில்லை. அப்படியே உச்சரிக்க எழுத்துகள் இல்லாத போழ்து அதற்குச் சொல்லாக்கம் முயற்சிக்கலாம்.
CAR என்பதை கார் என்றே சொல்லலாம் என்று என் சில நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். கார் என்றால் மேகம் என்றொரு பொருள் உள்ளதே என்றால்... இடம் கொண்டு பொருள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றும் விளக்கம் தந்தார்கள். ஏற்றுக்கொள்ளும்படிதானே இருக்கின்றது...?
இப்பொழுது சொல்லுங்கள், ஹ,ஷ, ஜ போன்றவற்றை உச்சரிக்கும் வண்ணம் தமிழில் என்ன சொல் இருக்கின்றது என்று? அரிசிச் சோறு சாப்பிடும் நமக்கு, பீட்சாவும் பர்கரும் விருப்பமானது போல மொழியிலும் அப்படித் திணிக்க வேண்டும் என்கிறீர்களா?

புஷ்பம் என்பதைக் குறிக்க, மலர் என்ற வார்த்தைதான் இருக்கின்றதே...
அப்புறம் என்ன? மலரின் பல்வேறு நிலைகளைக் குறிக்க,

அரும்பும் போது - அரும்பு
அரும்பிப் பனியில் நனையும் போது - நனை
நனைந்து முத்தாகும் போது - முகை
வெடிக்கத் தயாராக இருக்கும் போது - மொக்குள்
அரும்பி, விரிந்து கொண்டே இருக்கும் போது - போது
மணம் வீசத் தொடங்கும் போது - முகிழ்
மலர்ந்த பின் - மலர்
இன்னும் நன்றாக மலர்ந்து, மகரந்தம் அலரும் (பரவும்) போது - அலர்
கூட்டமாக மலர்ந்தால் - பொதும்பர்
வீழும் போது - வீ
உதிர்ந்து கிடக்கும் பூக்கள் - பொம்மல்
பழுப்பாய் வாடிய பின் - செம்மலர்
என்று நிலைக்கொன்றாகப் பெயர்கள் இருக்கின்றனவே... பின் என்னதான் வேண்டும் தற்கால மாந்தர்க்கு...?

தமிழ் தன்னிறைவு பெற்ற மொழி. தன்னால் காலத்திற்கேற்ப புதுச் சொற்களை ஆக்கிக் கொள்ள முடியும். குறைமதி கொண்ட மனிதர்கள் நாம்தான்... தமிழை முழுதும் உணராது, அறியாது பிதற்றிக்கொண்டிருக்கின்றோம்.
13ம் நூற்றாண்டுகளில், தமிழும், சமசுகிருதமும் தனித்தனியே வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தன. தனித்தனியே இலக்கியங்கள் படைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற சான்றோர்களின் விருப்பத்தால், இரண்டு மொழிகளையும் கலந்து மணிப்பிரவாளம் என்றொரு நடையை உருவாக்கினர். ஆனால், அது மொழி இயல்புக்கு மாறானது என்பதால் அது தோல்வியைக் கண்டது என்று அறிஞர் முவ குறிப்பிடுவார்.

இன்றைக்கும் அப்படியொரு முயற்சியை முன்னெடுத்தால், அது மொழியைச் சிதைக்கத்தான் செய்யுமேயொழிய சிறக்க வைக்காது.
உங்களுக்கு என்ன வேண்டும்? ஏனைய மொழிகளின் சொற்களுக்கான நிகர்ச்சொல் வேண்டுமா? வாருங்கள் நம் தமிழைக்கொண்டே உருவாக்குவோம்.

அல்லது, அதே போன்றுதான் உச்சரிக்க வேண்டும் என்கிறீர்களா...? அதற்கு அந்த மொழியைக் கற்றுக்கொண்டு அப்படியே உச்சரிக்கவும் எழுதவும் செய்தால் போதுமே...?

சுனாமி அப்டீயே எடுத்துக்கலாம்தான்... ஆனா, அதுக்கு ஆழிப்பேரலைன்னு அழகுத் தமிழ்ல ஒரு பெயர் இருக்கே. கட்டுமரம் என்பதுதான் தமிழ்ச்சொல் ஆதிமுதற்சொல்.

No comments:

Post a Comment