Wednesday, June 17, 2015

வர்மத்தின் மர்மங்கள்..!



உடலின் பல பகுதிகளில் மர்மமான முறையில் நோய் பாதித்து எளிதில் கண்டறிய முடியாத நிலையில் உடலினை நோய் ஆட்கொண்டிருக்கும். இத்தகைய நோய்களை கண்டறிந்து கொள்வது அபூர்வமாகும். இந்த மர்மமான நோய்களை அனுபவம் நிறைந்த வர்ம மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை செய்து வருகிறார்கள் என்பது காலமறிந்த உண்மை.

புரியாத மர்மமான நோய்களுக்கு வர்ம மருத்துவ முறையில் ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. உடலில் 108 பாகங்களாக ஒடுங்கியிருக்கும் உயிர்நிலை ஒடுக்கம்தான் வர்மப் புள்ளிகள். ஏதாவது சிறு பாதிப்பு உண்டானால் கூட வர்மப் புள்ளிகள் பாதிப்படையும் (தன்னிலை மாறும்) .

உதாரணமாக அதிக மன உளைச்சல், வேலைப்பளு நிறைந்தவர்கள் கூட நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உறுப்புகள் செயலிழக்க ஆரம்பிக்கும். இதுவும் ஒரு வர்மப் பாதிப்புதான். இதை சர வர்மம் என்பார்கள்.

பொதுவாக நரம்புகள் பாதிப்படைந்தால் அதனதன் செயல்பாடுகளிலிருந்து மாறுபட்டு உடல் சக்தியிழந்து அதுவே பெரிய நோயாக நாளடைவில் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பிரதிபலிக்கும் நோய்கள் ஏதாவது அதனுடன் தொடர்புடைய வர்மப் புள்ளிகளின் தாக்குதலுக்கு உட்பட்டிருப்பது தெரியவரும்.

இந்த வர்மப் புள்ளிகளின் பாதிப்பு சாதாரண உடற்கூறுகளிலிருந்து மாறுபட்ட தன்மையை உண்டாக்கியிருக்கும். குறிப்பாக இப்படி புரியாத நோய்களுக்கு விடை சொல்லும் மருத்துவமாக வர்ம மருத்துவம் உள்ளது. வர்ம மருத்துவம் அறிவு சார்ந்த அனுபவமிக்க வல்லுநர்களால்தான் கண்டறிய முடியும். அப்போதுதான் இனம்புரியாத நோய்களை வர்ம மருத்துவ முறையில் பூரண குணமடையச் செய்யும் சாத்தியக்கூறுகள் உண்டு.

சித்தர்கள் சித்த மருத்துவத்தில் எவ்வாறு பல உட்பிரிவுகளை பிரித்துக் கூறியுள்ளனரோ அதுபோல் வர்ம மருத்துவத்திலும் பல உட்பிரிவுகள் உள்ளன.

உதாரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நரம்பு நிதானங்களை அறிந்து அவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக கணித்து நரம்பு நிதான முறை என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர்.

வர்ம சிகிச்சை முறையில் சாதாரண நோய்களுக்கும் மற்ற எல்லா விதமான நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தனித்தனி பிரிவாக உள்ளது.
இயற்கையோடு இணைந்த மருத்துவம்தான் வர்ம மருத்துவம்.
கோபத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு அதனால் பித்தம் அதிகரித்து உடலில் மாற்றம் உண்டாகி நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

இதனால் ரத்தம் சூடேறி உடல் பலவிதமான உபாதைகளை சந்திக்க நேரிடும். இதுவும் ஒரு வர்மப் பாதிப்புதான்.

வாகனங்களை அதிவேகமாக ஓட்டும் போதும், திடீரென்று எதிரே நடக்கும் விபத்துகளைப் பார்க்கும்போதும் மன அதிர்ச்சி ஏற்பட்டு சுவாதீனம் இழந்துவிட வாய்ப்புகள் உண்டு. இதனால் நரம்புகள் பாதிப்படைந்து அதோடு தொடர்புடைய அங்கங்களையும், வர்மப் புள்ளிகளையும் பாதிப்படையச் செய்கிறது.

கீழே விழுதல், அடிபடுதல் இவற்றால் கூட நரம்புகள் பாதித்து வர்மப் புள்ளிகளைத் தாக்கும். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு வர்ம பரிகார சிகிச்சை முறையே சிறந்தது.

வாயுவினால் வாதம் முற்றி நரம்பு முடிச்சுகளில் ஏற்படும் வாத நோய்களும், நரம்பு சார்ந்த சதை, சந்திப்புகளில் ஏற்படும் நோய்களும், முதுகுத் தண்டுடன் இடுப்போடு சார்ந்த இடத்தில் வலியை உண்டாக்கும்.

இதுபோல் அளவுக்கு மிஞ்சிய கனமான பொருட்களைத் தூக்குவதால் இடுப்புப் பகுதி பாதிக்கப்படும். இதனால் இடுப்புப் பகுதியில் இருக்கும் அருகுபற்றி வர்மம் பாதிக்க வாய்ப்புண்டு. அருகுபற்றி வர்மம் பாதித்தால் இடுப்புப் பகுதியுடன், கால் தொடைப்பகுதி சேர்ந்து மூட்டில் தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தும். அப்போது வில்விசை நரம்பு பாதிக்க வாய்ப்புண்டு. வில்விசை நரம்பு என்பது இடுப்புப் பகுதியிலிருந்து கழுத்து வரையிலான உடற்பகுதியில் சமநிலையை ஏற்படுத்தி தாங்கி நிற்கிறது. இந்த நரம்பினால்தான் மனிதன் நேராக நிற்க முடிகிறது. இப்படி தனிச்சிறப்பு வாய்ந்த வில்விசை நரம்பு கூட அருகுபற்றி வர்மம் பாதித்தால் பாதிக்கப்படும். அருகுபற்றி வர்மத்தில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பும் வில்விசை நரம்பில் தாக்கத்தை ஏற்படுத்தி மனித உடலின் இடுப்புக்கு மேல்பகுதியில் உடலை கோணலாக்கி மனிதனை கோணி நடக்க வைக்கிறது. இதையே

அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ?
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்
இரும்பு கோணிடில் யானையை வெல்லுமே
நரம்பு கோணிடில் நாமெதற்கு என்செய்வேன்..

என்று பாடுகிறார் சித்தர்.

இப்பாடலில் நரம்பு என்று சொல்லப்படுவது வில்விசை நரம்பாகும். அதில் ஏற்படும் சிறிய பாதிப்பு கூட மனிதனின் பெரிய உடலை பிரயோஜனமற்றதாக மாற்றிவிடுகிறது.

இந்த வில்விசை நரம்பு பாதிப்பை சரிசெய்ய வர்ம பரிகார சிகிச்சை முறையே சிறந்ததாகும்.

No comments:

Post a Comment