Monday, January 26, 2015

அதிர்ச்சியான இந்திய அறிவியல் கழக மாநாடு - SCIENTIST

இப்படி ஒரு மிகப் பெரிய அணுகுண்டை போட்டு தாக்கப் போகிறார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

அந்த அதிர்ச்சியான வெடிச் சம்பவம் நடந்தது, சாதாரண சந்துமுனை அல்ல.

இந்தியாவின் மிகப் பெரிய விஞ்ஞானிகளும், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும் கூடி இருந்த உன்னதமான மண்டபத்தில்தான் இந்த வேட்டு வெடித்தது.

இந்தியாவில் விஞ்ஞானத்தை எந்த அளவு முன்னோக்கி எடுத்துச் செல்வது? இதற்கு ஆக்கப்பூர்வமான யோசனைகள் என்ன? என்று உச்சமான ஆய்வு நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த மாநாடு, நம்மை பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று அதலபாதாளத்தில் தள்ளி விட்டது என்று பலரும் அங்கலாய்க்கும் அவலநிலை ஏற்பட்டுவிட்டது.

அப்படி என்னதான் நடந்தது?


கடந்த மாதம் 5–ந் தேதி மும்பையில் இந்திய அறிவியல் கழக மாநாடு நடைபெற்றது.

இந்திய அறிவியல் கழகம் என்ற அமைப்பு 1914–ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்த அமைப்பு தொடங்கப்பட்டதற்கான நோக்கம் உன்னதமானதுதான்.

இதுவரையும் அதே பாதையில் தான் இந்த மாநாடு பயணித்துள்ளது.

ஆண்டிற்கு ஒரு முறை கூடும் இந்த மாநாட்டில், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளும், உலகில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் சிலரும் பங்கேற்று ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள்.

இது, இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருப்பதாகக் கருதப்பட்டது.

முக்கிய நகரங்கள் என்ற வரிசையில் சென்னையிலும் இந்த மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது.

ஆனால், இந்த மாநாடு மூலமாக கடந்த 101 ஆண்டுகளில் ஏற்படாத சலசலப்பு இந்த முறை அரங்கேறி இருக்கிறது.

‘மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான மோடி அரசு இருப்பதால், இந்த மாநாட்டின் மீது காவி நிறம் படர்ந்துவிட்டது; அதன் விளைவுதான் மாநாட்டில் தேவையில்லாத சர்ச்சை உருவாகிவிட்டது’ என்பது ஒரு சிலரின் குற்றச்சாட்டு.

காரணம், மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கை மிகப்பெரிய விவாதப் பொருளாகி விட்டது.

‘‘7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் வாழ்ந்த நமது முன்னோர்கள் 40–க்கும் மேற்பட்ட வகையிலான விமானங்களை தயாரித்து இருந்தார்கள். அந்த விமானங்களைக் கொண்டு பல இடங்களுக்குப் பறந்து சென்றார்கள். ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்றார்கள்; ஒரு கிரகத்தில் இருந்து வேறு ஒரு கிரகத்துக்கு அந்த விமானங்கள் மூலம் பயணம் ஆனார்கள்.....’’ என்ற போக்கில் செல்லும் சூறாவளி அறிக்கைதான் இப்போது பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

‘‘7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாம்... விமானமாம்... கிரகங்களுக்கு இடையே பயணமாம்.. என்னயா இது? 21–ம் நூற்றாண்டில் உட்கார்ந்துகொண்டு இப்படி மடத்தனமாக கதை விடுகிறீர்களே..’’ என்று ஒரு சாரார் குமைந்து தள்ளிவிட்டார்கள்.

உடனே மற்றொரு பிரிவினர், ‘‘நமது முன்னோர்களின் அளப்பரிய – மகோன்னதமான சாதனைகளை பழித்துப் பேசாதீர்கள், நாக்கு வெந்துவிடும்...’’ என்று சாபமிடும் வகையில் குரலை உயர்த்தி இருக்கிறார்கள்.

இந்த சர்ச்சை காரணமாக, ‘தந்தி’ டி.வி. ஆயுத எழுத்து பாணியில், நமது முன்னோர்களைப் பற்றிய வாத, பிரதி வாதங்கள் இப்போது அனைத்து மேடைகளிலும் அனல் பறக்கத் தொடங்கி விட்டன.

இந்த ஆவேச சர்ச்சைக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை முதலில் விரிவாகப் பார்க்கலாம்.

மும்பையில் ஜனவரி 5–ந் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த 102–வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. ‘‘சமஸ்கிருத மொழி அடிப்படையில் நமது பழங்கால விஞ்ஞானம்’’ என்பது அந்த கருத்தரங்கின் தலைப்பு.

அதில், விமான பைலட்டுகளுக்கான கல்லூரியின் ஓய்வு பெற்ற பிரின்சிபால் கேப்டன் ஆனந்த் ஜே போதாஸ் மற்றும் அமேயா ஜாதவ் ஆகியோர் சேர்ந்து ஒரு கட்டுரை சமர்ப்பித்தார்கள். இதன் மீது கேப்டன் ஆனந்த ஜே போதாஸ் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டார்:–

‘‘...... அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் 1904–ம் ஆண்டு விமானத்தை இயக்கி காட்டியதைத்தான் வரலாறு பதிவு செய்து இருக்கிறது. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ரிக் வேதத்தில் விமானம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த பரத்வாஜ் மகரிஷி, ஒரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கும், ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்துக்கும் சென்ற விமானங்கள் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறியுள்ளார்.  அந்த விமானங்களைச் செய்வதற்கு பயன்படுத்திய உலோகம் பற்றியும் அவர் கூறி இருக்கிறார்....’’

‘‘... அந்த விமானங்கள் 60 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்டதாக ‘ஜம்போ’ விமானங் களாக இருந்தன...’’

‘‘... 40 வகையான விமான என்ஜின்களை நமது முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். தற்போதைய ரேடார் கருவியில் விமானங்களை காட்டுவதற்கு புள்ளிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ரேடார் கருவியில் விமானத்தின் படமே தெரிந்துள்ளது...’’

‘‘...பயணத்தின் போது விமானிகள் விசேஷ உணவை சாப்பிட்டுள்ளனர். கடலுக்கு அடியில் வளரும் ஒரு வகை தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷ ஆடையை அணிந்து இருந்தார்கள்...’’

இவ்வாறு கேப்டன் ஆனந்த் ஜே போதாஸ் தொடர்ந்து பல தகவல்களைக் கூறி பேசிய போது சிலர் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள்.

ஆனால் பலர் வாய் விட்டு சிரிக்க முடியாமல் வாயை மூடிக் கொண்டார்கள்.

இந்த விவகாரம் தான், மாநாடு முடிந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் விவாதம் என்ற அளவில் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது.

இணையதளத்திலும் இது எதிரொலிக்கிறது.

அந்த விவாதங்களை நாமும் கொஞ்சம் கையில் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த விவாதங்களில் யார் எந்தக் கட்சி என்று பார்ப்பதைவிட, பழங்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த நமது முன்னோர்களுக்கு உண்மையிலேயே இந்த அளவு வியக்கத்தக்க விஞ்ஞான அறிவு இருந்ததா? இல்லையா? என்பதை ஆதாரங்களுடன் பார்க்கலாம்.

மாநாட்டில் கேப்டன் ஆனந்த் ஜே போதாஸ் பேசியது போன்று, ‘அந்தக் காலத்தில் விமானங்கள் இருந்தன என்பதை ஏற்க முடியாது’ என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அவர்கள் கூறும் காரணங்கள்–

பரிணாம வளர்ச்சி என்ற அடிப்படையில் இருந்து இதை பார்க்கலாம்.

நமது வரலாறு தெளிவாக கூறும் காலத்தில் இருந்து, மக்கள் பயணத்திற்கு முதலில் தங்களது கால்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பின்னர் குதிரை போன்ற விலங்குகளின் மீது சவாரி செய்தனர். சக்கரம் கண்டு பிடிக்கப்பட்டது முதல், வண்டிகளில் பயணித்தார்கள். அதுவே பின்னர் சைக்கிள் எனப்படும் இரு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. எரி பொருள் மூலம் வாகனங்களை இயக்கலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டபின், கார், மோட்டார் சைக்கிள், லாரி ஆகியவை தோன்றின. அந்த எரிபொருளைக் கொண்டு பறவை போல பறக்க முயன்றதால் விமானம் உருவானது. அதன் பின் வேறு கிரகங்களுக்குச் செல்ல ராக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தான் படிப்படியான, உண்மையான விஞ்ஞான பரிணாம வளர்ச்சி.

இந்த கண்டுபிடிப்புகள் பற்றி எத்தனை ஆண்டுகள் கடந்த பின்பு யார் கூறினாலும், அப்போது இருப்பவர்கள் இவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால், கேப்டன் ஆனந்த் ஜே போதாஸ் கூறிய வரலாற்றில் இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமே இல்லை.

பல ஆயிரம் ஆன்டுகளுக்கு முன்பு கால்களால் நடந்து சென்ற மக்கள், திடீர் என்று விமானத்தை கண்டு பிடித்து வானத்தில் பறந்தார்கள் என்றால், அந்தப் புயல் வேக வளர்ச்சி, யாரும் நம்பும்படி இல்லை.

மேலும் இதுவரை எத்தனையோ இடங்களில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், பூமியை தோண்டி, கற்காலம் முதல் உலோக காலம் வரையில், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பழங்கால ஆயுதங்களை எல்லாம் கண்டு பிடித்துள்ளனர். ஆனால், பறப்பதற்கு பயன்பட்டதாகக் கூறும் எந்த கருவியின் ஆதாரத்தையும் அவர்கள் இதுவரை தோண்டி எடுக்கவில்லை. இது நமது முன்னோர்கள் விமானங்களை பயன்படுத்தினார்கள் என்பதை நம்புவதற்கு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறும் அதேசமயம், நமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்று கூறப்படுவதையும் முற்றிலுமாக ஏற்பதற்கு இல்லை என்பதற்கும் பல ஆதாரப்பூர்வமான சான்றுகள் கிடைத்து இருக்கின்றன.

அந்தக் காலத்தில், பொழுது போக்குவதற்கு, இப்போது இருப்பது போன்ற செல்போன், இணையதளம், டெலிவிஷன், சினிமா ஆகியவை எல்லாம் இல்லை என்பதால் அவர்களுக்கு அதிகப்படியான நேரம் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் கிடைத்து இருந்தது.

அந்த நேரத்தை அவர்கள் மிகவும் பயனுள்ள வகையில் செலவழித்து பல ஆய்வுகளை நடத்தி வெற்றி கண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் பிரத்யட்சமாகப் பார்க்க முடிகிறது.

உதாரணமாக பச்சிலை வைத்தியத்தை எடுத்துக் கொள்ளலாம்.

உலகில் கோடிக்கணக்கான தாவரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாவரத்திலும் உள்ள இலை, தண்டு, பூ, காய், கனி, வேர் ஆகியவற்றுக்கு வெவ்வேறுவிதமான குணங்கள் இருக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் எதற்கு மருந்தாகும் என்பதை கண்டுபிடிப்பதென்றால், அது லேசுப்பட்ட காரியமா? இதற்காக லட்சக்கணக்கான பரிசோதனைகளை நடத்தி இருக்க வேண்டும் அல்லவா?

நமது முன்னோர்கள் அனைத்துப் பச்சிலைகளின் குணத்தையும் தெளிவாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

பாம்பு கடிக்கு குறிப்பிட்ட ஒரு வேரை பயன்படுத்தினால் விஷம் இறங்கி விடுகிறது. பாம்பு கடி மருந்தான இந்த வேரை கண்டுபிடிக்க, எத்தனை ஆயிரம் விதமான சோதனைகளை நடத்திப் பார்த்திருக்க வேண்டும் என்பதை கணக்கிட்டால், வியப்பு விண்ணளவு விரிகிறது.

நமது உடலில் எத்தனை விதமான நரம்புகள் ஓடுகின்றன என்பதை அந்தக் காலத்திலேயே துல்லியமாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதை கண்டுபிடிக்க அவர்கள் எவ்வளவு ஆய்வு நடத்தி இருக்க வேண்டும்?

நமது நாசியில் இரண்டு துவாரங்கள் இருக்கின்றன. இவை இரண்டின் மூலமாக நாம் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை அது அல்ல என்பதை நமது முன்னோர்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் இடது நாசி துவாரம் வழியாகவும், மற்ற சமயத்தில் வலது நாசி துவாரம் வழியாகவும் மூச்சுக் காற்று சென்று வருகிறது.

இந்த மூச்சுக் காற்றின் சுவாச போக்கு, நமது அப்போதைய குணங்களுக்கு தக்கபடி எவ்வாறு மாறுகிறது என்பதையும் கண்டுபிடித்துக் கூறி இருக்கிறார்கள்.

இதே போல வேறு பல துறைகளிலும் நமது முன்னோர்களின் சாதனை அளப்பரியது.

நமது முன்னோர்கள் அறிவியலில் உயர்ந்த ஞானம் பெற்று இருந்தார்களா? இல்லையா? என்பது பற்றி இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் விவாதங்களுக்கு இடையே, நமது முன்னோர்களின் உண்மையான கண்டுபிடிப்புகள் பற்றியும் அவற்றுக்கு ஆதாரம் என்ன என்பது பற்றியும் அவை பற்றி தற்போதைய விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதையும் அடுத்த வாரத்தில் இருந்து விரிவாக அலசலாம்.

(ஆராய்ச்சி தொடரும்)

Thanks to Dhina thanthi

No comments:

Post a Comment