Tuesday, November 25, 2014

சுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும் (பகுதி 2)




உலகில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள், வேண்டுமென்றே தவறாக புரியவைக்கப்பட்டுக் கொள்ளப்படுபவர்கள் என்று சொன்னால் அது 'ஹோமோ செக்ஸுவல்ஸ்' (Homosexuals) என்றழைக்கப்படும் சுயபால் விரும்பிகள்தான். மனிதனோ, விலங்குகளோ தங்கள் பாலுறவு இச்சைகளைத் தீர்ப்பதற்கு மூன்று விதமான நடைமுறைகளை வைத்திருக்கின்றன. அவை, 1.எதிர்ப்பால் உறவு (Straight Sexuality), 2.சுயபால் உறவு (Homosexuality), 3.இருபால் உறவு (Bisexuality) என்னும் மூன்றுமாகும்.

Straight sex (எதிர்ப்பால் உறவு) - ஆண் பெண் என எதிர் எதிர்ப்பாலுள்ளவர்கள் உறவில் ஈடுபடுவது 'ஸ்ட்ரெய்ட்' என்று சொல்லப்படுகிறது. அதாவது மிகவும் சாதாரணமாக, மனிதர்களிடையே நடைமுறையில் இருக்கும் பாலியல் உறவு இதுதான். தொன்னூறு விழுக்காடுகளுக்கு (90%) அதிகமானவர்கள் இந்த இச்சையைக் கொண்டிருப்பவர்கள்தான். இதுவே இயற்கையானது என்று மதங்களும், கலாச்சார அமைப்பினர்களும் சொல்லிவருகின்றனர்.  

Homosex (சுயபால் உறவு) - ஆண்கள் ஆண்களுடனும், பெண்கள் பெண்களுடனும் விதிவிலக்கான ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டு உறவு வைத்திருப்பது. இதைத் தகாத உறவு என்றும், இயற்கைக்கு முரணான செயற்பாடு எனவும், இதில் ஈடுபடுபவர்கள் மனப்பிறழ்வு உள்ளவர்கள் எனவும், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் விமர்சிக்கப்படுகிறது. இந்த இச்சை உள்ளவர்கள் உலக மக்களின் விகிதாசாரத்தில் வெறும் ஐந்து விழுக்காடு (5%) உள்ளவர்கள்தான். ஆனால் இப்படிப்பட்டவர்கள் மிக மிக அதிகமான விழுக்காடுகள் இருக்கின்றனர் என்று கற்பிதம் செய்யப்படுகிறது.

Bisex (இருபால் உறவு) - மனநிலைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப ஆண்-பெண் இருபாலினருடனும் பாலுறவு வைத்திருக்கக் கூடியவர்கள். எண்பது விழுக்காடுகளுக்கு (80%) அதிகமான மனிதர்கள் இந்தவிதமான இச்சையைக் கொண்டிருப்பவர்கள் அல்லது கொண்டிருந்தவர்கள்தான். ஆனால் இவர்களில் பலர் சுயபால் உறவினர் என்னும் தப்பான அடையாளத்தில் புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

ஆண்களும், பெண்களும் பிறந்ததிலிருந்து ஒரு குறித்த வயது வரும்போது, பாலிச்சை உணர்வினால் தூண்டப்படுகிறார்கள். இயற்கையின் நியதியான இனப்பெருக்க விதியின் அடிப்படையில், நமது மரபணுவில் (Gene) பதிந்து வைத்திருக்கும் செய்தியாக, ஆண் என்பவன் பெண்ணாலும், பெண் என்பவள் ஆணாலும் கவரப்படுகிறார்கள். இதை நாம் இயற்கை என்று மிகச்சாதாரணமாக சொல்லிவிடுகிறோம். ஆனால் இது ஒரு சாதாரண நடவடிக்கையே அல்ல. ஒரு உயிரினம் இயற்கை அழிவுகள் போன்றவற்றைச் சந்தித்து அழிந்துபட்டாலும், அதனிலிருந்து எஞ்சியவர்கள் தப்பி மேலும் மேலும் வளர்ந்து தழைக்க வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட சிக்கலான மெக்கானிசம் இது. கிட்டத்தட்ட ஒரு விதி (Law) போன்றதாகும். ஆணும் பெண்ணும் உறவில் ஈடுபட வேண்டும் என்ற செய்திகளும், அவற்றுக்குத் தேவையான இச்சையைத் தூண்டும் ஹார்மோன்களைச் சுரந்து, இயக்கும் முறைகளும் நமது மரபணுவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனடிப்படையிலேயே ஆண்-பெண் இருவரும் சந்திக்கும் போது, பாலுறவைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு, காமக் கவர்ச்சியில் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், நமது மூளையினால் அந்த உணர்வு கொஞ்சம் மழுப்பப்பட்டு, காமம் அல்ல அது, காதல் எனப் புரிந்து கசிந்து கண்ணீர் மல்கின்றோம். இது காதலா? இல்லை காமமா? என்னும் விவாதம் இங்கு வேண்டியதில்லை என்பதால் இந்த நிலையில் இதை விட்டுவிடலாம்.

மனிதர்கள் எந்த இனத்தவர்களானாலும், எந்த மொழியினரானாலும் இந்தப் பாலுறவு இச்சை (Straight) பொதுவானது. உலக நியதியில் இருக்கும் பெரும்பான்மையான விதிகளுக்கு, 'விதிவிலக்கு' என்னும் ஒரு எதிர்நிலையும் தோன்றிவிடுகிறது. இடது பக்கம் புரியுள்ள சங்குகள்தான் எப்போதும் இயற்கையாக உருவாவவை. இதுவே சங்குகள் உருவாவதற்கான பொது விதியுமாகும். ஆனால், விதிவிலக்குகளாக வலம்புரியுள்ள சங்குகளும் உருவாகிவிடுகின்றன. பாம்புகளுக்கு எப்போதும் ஒரு தலைதான் உண்டு. ஆனால் விதிவிலக்குகளாக இரண்டு தலைகள் கொண்ட பாம்புகளும் உண்டு. இப்படி விதிவிலக்கான அமைப்புடனும், தோற்றத்துடனும் இருப்பவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம். இதில் ஒரு முரண்பாட்டு நகைச்சுவையும் உண்டு. சங்கு ஒன்று இயற்கைக்கு மாறாக உருவம் பெறும்போதும், பாம்பு இருதலையைப் பெறும்போதும், வெள்ளைக் காகம், வெள்ளை மயில் போன்றவற்றைக் காணும்போதும், இவையெல்லாம் இயற்கைக்கு முரணானவை என்று சொல்லி நாம் அவற்றை விலக்கி வைப்பதே இல்லை. அவையெல்லாம் விசேசமானவை எனக் கருதிக் கொண்டாடுகிறோம். மாறாக மிகக்குறைந்த விழுக்காடு உள்ள சிலருக்கு பாலியல் இச்சை சம்மந்தமாக விதிவிலக்கான ஈடுபாடுகள் உருவாகிவிடுகின்றன. அவர்களை நாம் கொண்டாடத் தேவையில்லை. கொடுமையானவர்கள் என்று சொல்லி விலக்கி வைக்காமல் இருக்கலாமல்லவா? அவர்களையும் சகமனிதர்களாகவே பார்க்கலாமல்லவா?

ஆண் ஆணுடனும், பெண் பெண்ணுடனும் ஈக்கப்படும் சுயபால் ஈடுபாட்டுக் கவர்ச்சியை பெரும்பாண்மையான மேலைத்தேய நாடுகளில், 1977ம் ஆண்டு வரை ஒருவித மனநோய் என்ற வகையிலேயே பார்த்து வந்தனர். மிருகங்களுடன் புணர்ச்சி இச்சை (Zoophilia), சிறுவர்களுடன் புணர்ச்சி இச்சை (Pedophilia), பிணங்களுடன் புணர்ச்சி இச்சை (Necrophilia) என்னும் மிகமோசமான மனநோயாளர்கள் போல, சுயபால் புணர்ச்சி இச்சையுள்ளவர்களும் மனநோயாளிகளே என்று நினைக்கப்பட்டனர். வாழும் சூழ்நிலை, பழகும் நண்பர்கள், கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம் ஒருவன் சுயபால் விரும்பியாக மாற்றப்படுகிறான் அல்லது மாறுகிறான் என்று நம்பி வந்தனர். சுயபால் விருப்பம் என்பது  ஒரு தெரிவு நிலையே (Choice) அல்லாமல் இயற்கையாக இவர்களுக்கு உருவானதல்ல என்றும் கூறி வந்தனர். இது மனநோய் என்பதால், முறையான வைத்திய சிகிச்சை மூலம் குணப்படுத்தக் கூடியதுதான் என்றும் நம்பிவந்தனர். ஆனால் 1977ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் உருவாகியது. அமெரிக்காவின் மனவியல் ஆராய்ச்சியாளர்களும், உடலியல் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், வைத்தியர்களும் முறையான ஆராய்ச்சிகள் மூலம், இது தேர்வு நிலை கொண்டதல்ல என்பதைக் கண்டு கொண்டனர். இதுவும் இயற்கையானதே என்று ஒப்புக் கொண்டனர். மனிதனின் மரபணுவில் ஏற்பட்ட மாற்றமே இப்படிப்பட்டவர்கள் உருவாவதற்குக் காரணம் என்று கண்டுகொண்டனர். அதுமட்டுமில்லாமல், மரபணுவுடன் சேர்ந்து மூளையில் உள்ள 'ஹைபோதாலமஸ்' (Hypothalamus) பகுதியில் ஏற்படும் மாற்றங்களும் இவற்றைக் கட்டுப்படுத்துகின்றன் என்ற முடிவுக்கும் வந்தனர். இது சம்மந்தமான ஆராய்ச்சிகள் நிறையவே நடந்தன. அறிவியலில் வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில், இது மனிதனால் சுயமாக தீர்மானிக்கும் விசயமல்ல என்னும் முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். ஆனாலும், 'இல்லை, இது மரபணுவால் வருவதில்லை. ஒவ்வொருவரும் சொந்தமாகத் தாமே தெரிவு செய்வது இது, இதை மாற்ற நினைத்தால் மாற்றலாம். மாற்ற விரும்பாதவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்' என்று மதங்களும், சில அமைப்புகளும் இப்போதும் கூறி வருகின்றன. விஞ்ஞானிகளும், மனவியல் நிபுணர்களுமே சொல்லிவிட்ட பின்னரும் இவர்கள் இந்த அளவுக்கு ஏன் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று யோசிக்கும் போதுதான், அவர்களிலும் தப்பு இல்லை, அவர்களின் சில புரிதல்களில்தான் தப்பு உண்டாகியிருக்கிறது என்பது தெரியவந்தது. இங்குதான் உலகத்தில் உள்ள அனைத்து சுயபால் விரும்பிகள் (homosexualist) தப்பாக புரியப்படக் காரணமாக் இருக்கும் முன்றாம் வகையான இருபால் விரும்பிகள் (Bisexuals) பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் இருபால் விரும்பியாகவே இருக்கிறான் என்பதுதான் உண்மை. அதாவது ஏதாவது ஒரு சமயத்தில் சுயபால் உறவில் பெரும்பாண்மையான மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். சிறு வயதிலோ, காலேஜ் ஹாஸ்டல்களிலோ, வேறு சந்தர்ப்பங்களிலோ அவர்ளுக்கு இந்த ஹோமோ செக்ஸுவல் தொடர்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் உண்டு. அப்படி சுயபால் உறவில் முன்னர் ஈடுபட்டவர்கள், அதிலிருந்து மாறி 'ஆண் பெண்' உறவுமுறையில் இப்பொழுது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கலாம். அந்த அனுபவத்தின் மூலமாக, 'அட! நானே சுயபால் இச்சையிலிருந்து மாறியிருக்கிறேன், இவர்களால் ஏன் மாறமுடியாது?" என்னும் கேள்வி உள்ளுக்குள் எழுந்து, அது ஆத்திரமாக மாறுவது நியாயமான ஒன்றுதானே! ஆனால், இதில் அவர்கள் புரிந்து கொள்ளாத ஒன்று என்னவென்றால், அவர்கள் சுயபால் இச்சை கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருபால் இச்சை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிறுவயதிலும் கூட சுயபாலுறவில் ஈடுபடாமல் சிலர் இருக்கிறார்கள். நாகரீகப்படுத்தப்பட்ட முறையிலும், கட்டுப்பாடான வளர்ப்புகளின் மூலமும், அதற்கென சந்தர்ப்பங்கள் உருவாகாத நிலையிலும், சுயபால் உறவில் ஈடுபடாமல் இவர்கள் காப்பாற்றப்படுகின்றனர். இப்படிக் காப்பாற்றப்பட்டதால், தான் சுயபால் உறவில் ஈடுபடவில்லை என்னும் ஒரு இறுமாப்புடன் அடுத்தவரைக் காயப்படுத்துகின்றனர். அதனாலேயே தாங்களும் இருபால் இச்சையுள்லவர்கள் என்பதே தெரிந்து கொள்ளாமல் வாழ்கின்றனர். நான் இதைச் சொல்லும் போது, என்மேல் உங்களுக்கு நிச்சயம் கோபம் வரும். 'நான் அதுபோல ஒரு உறவில் ஈடுபட்டதுமில்லை. எனக்கு அப்படி ஒரு இச்சை உருவானதுமில்லை' என்று நினைத்து என் மேல் உங்கள் கோபத்தைக் காட்டவும் முயல்வீர்கள். இன்று குடும்பமும், குழந்தையுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு அந்த நினைப்பு வருவதில் தப்பும் இல்லை. ஆனால் உண்மை அதுவல்ல. ஒன்று நீங்கள் இருபாலிச்சை உள்ளவர். அல்லது நீங்களும் ஒரு விதிவிலக்கானவர். இதை ஒரு சின்ன உதாரணம் மூலம் புரிய வைக்கப் பார்க்கிறேன்.

உணவு, செக்ஸ் இரண்டும் மனிதனுக்கு எப்போதும் தேவைப்படும் அடிப்படைத் தேவைகள். இந்த அடிப்படைத் தேவைகள் நமக்குக் கிடைக்காமல் தடுக்கப்படும் போது, தடைகளை உடைத்தாவது அதைப் பெறும் நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம். சீனாவில் கரப்பான் பூச்சிகளையும், புழுக்களையும் குவியல் குவியல்களாக சந்தையில் விற்பதைப் படமாகப் பார்க்கும் போது, நமக்கு குமட்டிக் கொண்டு வருவது இயல்பானது. 'அதை நாங்கள் உண்டால் என்ன?' என்று நினைத்தாலே வாந்திதான். அதிகம் ஏன், தமிழ்நாட்டிலேயே காய்கறி மட்டும் உண்ணும் சில தொகுதி மக்களுக்கு, கறியையோ, மீனையோ அருகில் கொண்டு வைத்தால் குமட்டிக் கொண்டு வரும். தாராளமாக உணவு கிடைத்துக் கொண்டு வரும் நமக்கு, ஒரு மாறுதலான கட்டாய நிலையில், இவற்றை உண்ணவேண்டி வந்தால், கட்டாயம் உண்ணுவோம் என்பதை ஏற்றுக்கொள்ள மனமே வராது. ஆனால் உணவு கிடைக்காமல் உயிர் போகக்கூடிய கட்டத்தில் அது சீனாக்காரனின் கரப்பான் பூச்சியாயிருந்தாலென்ன? மீனாக இருந்தாலென்ன? அவை பற்றிக் கவலைப்படவே மாட்டோம். அந்த நேரத்தில் நமக்குத் தேவை பசிக்கான உணவு. அதைப் பெற்றுக் கொள்வது மட்டுமே பிரதானமாக இருக்கும். இதை நீங்கள் நம்பாவிட்டால், 1972ம் ஆண்டு நடந்த ஒரு விமான விபத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி உருகுவே நாட்டுக்குச் சொந்தமான ஒரு விமானம் அந்தீஸ் மலைத் தொடர் ஒன்றில் விபத்துக்குள்ளாகி விழுந்தது. 45 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தில் தப்பியவர்கள் 16 பேர் மட்டுமே. இவர்கள் எப்பொழுது காப்பாற்றப்பட்டார்கள் தெரியுமா? இரண்டு மாதங்களின் பின்னர். அதாவது 23ம் தேதி டிசம்பர் மாதம் 1972ம் ஆண்டு அன்றுதான் காப்பாற்றப்பட்டார்கள். அதுவரை பனிமூடிய அந்தீஸ் மலை உச்சியில், குளிரில் உணவேதும் இல்லாமல் வாடிக் கொண்டிருந்தார்கள். காப்பாற்றுவதற்கு உதவி வரும், உதவி வரும் என்று இரண்டு மாதங்களுக்கு மேல் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, ஒரு கட்டத்தின் பின்னர் உயிரைக் காப்பாற்றி வைத்திருக்க வேண்டிய அவசியம் உருவானது. உயிரைக் காப்பாற்ற உணவு தேவை. கொண்டுவந்த உணவு எல்லாம் எப்போதோ தீர்ந்த நிலையில் அவர்களுக்கு உணவாக இருந்தது என்ன தெரியுமா? உடன் பயணம் செய்து இறந்துவிட்டிருந்த மனிதர்களின் இறைச்சிதான். பனியினால் சூழப்பட்ட அந்தீஇஸ் மலைத்தொடரில் விமானம் விழுந்ததால் எங்கும் பனியே சூழ்ந்திருந்தது. விபத்தில் இறந்திருந்த உடல்கள் பனிகளுக்கிடையில் இருந்ததால் எதுவுமே கெட்டுப் போயிருக்கவில்லை. மனிதர்களின் உடலின் பகுதிகளை ஒவ்வொன்றாக வெட்டி சாப்பிட்டுக் கொண்டுவந்தனர் அவர்கள். யாருமே கற்பனை செய்ய முடியாத, உலகையே உலுக்கிப் போட்ட சம்பவம் இது. உயிர் வாழ வேண்டுமென்ற இறுதிக்கட்ட நிலையில் இயற்கை, விதி, கட்டுப்பாடு, மதம், உணவுப்பழக்கம் என எதையும் கவனத்தில் எடுக்காமல் உண்பதென்பதே முக்கியம் என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். அந்த நிலையில் உணவு என்பது எதுவாகவும் இருக்கலாம். உண்பதுதான் தேவை. உண்டே ஆகவேண்டும். இவர்கள் காப்பாற்றப்பட்ட பின்னர், மனித இறைச்சியை உண்டதால் சர்ச்சுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற எதிர்குரல்கள் எழுந்த கூத்தும் நடந்தது. இது போலத்தான் பாலுறவு இச்சையும் ஒரு கட்டத்தைத் தாண்டிய பின்னர் மனிதனை வேறுவிதமாக ஆட்டி வைக்கிறது.

குடும்பமாய் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஒரு ஆண், ஏதோ ஒரு கணத்தில் தோன்றும் பழி நோக்கத்தில் ஒரு கொலையைச் செய்துவிட, அவனுக்கு 40 வருடங்களுக்கு மேலாகச் சிறைத் தண்டனை கிடைக்கிறது. அவனது வாழ்க்கையே சிறைச்சாலையில் முடிந்துவிடப்போகிறது என்னும் நிலை. அங்கு எத்தனை வருடங்கள் அவன் தன்னையே அடக்கிக் கொண்டு பாலுறவில் ஈடுபடாமல் இருக்க முடியும்? அவன் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்த ஒருவனகாத்தான் இருந்தான். ஆனால் அந்த வாசல்கள் அனைத்தும் அடைபட்டுப் போன நிலையில், சிறைக்குள் தன்னை சுயபால் புணர்ச்சிக்கு உள்ளாக்குகிறான் அலவா? இதே மனிதனிடம், அவன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த போது, "நீ ஆண்களுடன் உறவில் ஈடுபடுவாயா?" என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால், அதை நினைத்து வாந்திதான் எடுத்திருப்பான். ஆனால் சிறையில் தனது தேவைக்கேற்ப அவன் நிலை மாறிவிடுகிறது. இவையெல்லம் இருபால் இச்சையாளர்களாகத்தான் நாம் ஒவ்வொருவரும் இருக்கின்றோம் என்பதற்கு உதாரணம்.ஆனால், நாம் அந்தக் கட்டாயங்கள் வரும்வரை அவற்றைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால், சிறுவயது இளைஞர்களாக ஹாஸ்டல்களிலோ இல்லை வேறு இடங்களிலோ ஒன்றாக இருக்கும் போது, சுயபால் இச்சையில் ஈடுபடுவது மேலே சொல்லப்பட்ட சிறைவாழ்வு போன்ற கட்டாயமான நிகழ்வுகளுக்குள் அடங்குவதில்லை. அதனால் அவை தவிர்க்கப்படுதலே எப்போதும் சிரந்த முடிவாக இருக்கும்.

இருபால் விரும்பிகளையும், சுயபால் விரும்பிகளையும் நாம் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம். இரண்டும் ஒன்றுதான் என்று நினைத்துவிடுவதால் வரும் குழப்பங்கள்தான் இவை. ஒரு சுத்தமான, மார்ட்டினைப் போன்ற சுயபால் விரும்பிகள் எப்போதும் மாறாதவர்கள். மார்ட்டின் போன்றவர்கள் நூறு சதவீதம் ஹோமோ செக்ஸுவல் பிரிவினர். இவர்களுக்கு எந்த விதமான வைத்திய சிகிச்சை கொடுத்தாலும் மாற்றவே முடியாதவர்கள். ஒரு பேச்சுக்கு, வைத்திய சிகிச்சை மூலம் பெண் ஒருத்தியை விரும்பும் வகையில் மார்ட்டினை மாற்றுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்படி மார்ட்டின் மாறினால் அவன் ஒரு ஹோமோ செக்ஸுவலிஸ்ட்டே கிடையாது, அவன் இருபால் விரும்பி (Bisex) வகையினன். எவனொருவனை நாம் மாற்ற முடியும் என்று சொல்லி மாற்றிக் காட்டுகிறோமோ, அவனெல்லாம் சுயபால் விரும்பி வகைக்குள் முன்னரே இருந்தவனில்லை, இருபால் விரும்பி வகைக்குள்தான் இருந்திருக்கிறான். அதனால் சுயபால் விரும்பி என்பவனை உங்களால் ஒருபோதும் மாற்றவே முடியாது. என்ன புரிகிறதா?