Tuesday, November 25, 2014

கஞ்சா அரிய வகை மூலிகை: அமெரிக்கா தரும் அதிர்ச்சி!

க்கள் எதை நோக்கிப் போகிறார்களோ, அதை வருமானத்துக்கான வழியாக மாற்றுவது அமெரிக்க அரசுக்கு கைவந்த கலை. 
அமெரிக்காவின் வாஷிங்டன், கலிபோர்னியா, அரிசோனா,மெக்ஸிகோ என 23 மாநிலங்களில் சொந்தப் பயன்பாட்டுக்காக கஞ்சா வைத்திருப்பதும் அதை பயன்படுத்துவதும் குற்றமில்லை. பிற மாநிலங்களிலும் மேற்சொன்ன மாநிலங்களைப் போல தடையை நீக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துகொண்டிருகின்றன.

ஆல்கஹால் போல் பக்கவிளைவுகள் பெரிய அளவில் இல்லாமல் இருப்பதும், இது வலி நிவாரணியாக மருத்துவ பயன்பாட்டுக்கும் உதவுவதாலும், ஒட்டு மொத்த அமெரிக்காவிலும் தடையை நீக்க கோரிக்கை எழுந்துள்ளது. சில மாநிலங்களில் வீடுகளில் சொந்த பயன்பாட்டுக்கு வளர்த்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த அமெரிக்க பாடகர் பாப் மார்லி வெளிப்படையாக கஞ்சாவை ஆதரித்தவர். உபயோகித்தும் வந்தவர். 1981-ல் சாகும்போது மார்லிக்கு 11 குழந்தைகள்.1966-ல் இருந்து பல நாடுகளில் தன்னுடைய இசைக்குழுவுடன் பயணித்து நிகழ்ச்சிகள் செய்த மார்லிக்கு ஏகப்பட்ட சொத்துகள்.
இருந்தும் அமெரிக்காவில் தற்போது பரவி வரும் கஞ்சா ( கன்னாபிஸ் அல்லது வீட் அல்லது மார்ஜுவனா ) மோகத்தை கணக்குப்போட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், பாப் மார்லியின் பெயரில் புதிய கஞ்சா பிராண்டை  'மார்லி நேச்சுரல்ஸ் '  என்ற பெயரில், பாப் மார்லியின் வாரிசுகள் சிலருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு  விற்பனைக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளனர்.

இப்போதெல்லாம் எதையும் ஆர்கானிக் (ரசாயன உரமற்றது) முறையில் உருவாக்கியதா என பார்த்து வாங்கும் சமூகம் என்பதால், கஞ்சாவையும் ஆர்கானிக் முறையில் விற்பனைக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளனர் மார்லி நேச்சுரல்ஸ் நிறுவனத்தார்.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க மக்களின் முன்னோர்கள் உபயோகித்த மூலிகை (!) இது என்று சொல்கின்றனர்.

அழகு சாதன ஏரியாவிலும் கல்லா கட்ட முடிவு செய்து, கஞ்சா எண்ணையிலிருந்து பெண்களுக்கான லோஷனும் உற்பத்தி செய்துகொண்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.

'அதெல்லாம் சரி, நீங்க மார்க்கெட்டிங் செய்வதற்காக கஞ்சா அரிய மூலிகைனு சொல்றீங்க, ஆனா  பாப் மார்லியே ஓவரா கஞ்சா அடித்து 36 வயதில் செத்துப் போனவர்தானே'ன்னு  ஒரு சில நல்லவய்ங்க கேள்வி கேட்காம இல்லை.
'மார்லி நேச்சுரல்ஸ்' நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலைகளின் மீடியா பலத்தாலும், அமெரிக்காவெங்கும் இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பாலும் எதிர்ப்பு குரல்கள் வெளியே கேட்கவில்லை என்பதே உண்மை.


- கணேஷகுமாரன்