Tuesday, September 30, 2014

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும்

மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல வழங்கியது, பெரும் அதிர்ச்சியை தலித் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியது. இதனை எதிர்த்தும், உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியும் மு.பூபால் உள்ளிட்ட 12 இளம் வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அவர்களில் இருவருக்கு குற்றவாளிகள் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் கடிதங்களும் வந்தன. பின்னர், 11.2.2005 அன்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, உயர்நீதிமன்ற மேல்முறையீடு நிலுவைக் காலத்தில் பிணை வழங்கியிருக்கக் கூடாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த பிணையை ரத்து செய்தும், அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
.
ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும் பிணையை ரத்து செய்யும் அதிகாரம் பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் தான் உண்டு. பிணையில் விடுவிக்கும்போது அந்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இடும் நிபந்தனைகள் மீறப்படும்போது, பிணையை வழங்கிய நீதிமன்றமே பிணை உத்தரவை ரத்து செய்யலாம். மற்ற நிகழ்வுகளில் உயர் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482 வழங்கியுள்ள தன்னதிகாரத்தின் கீழும் (Inherent Powers) அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 227இன் படியான கீழமை நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் அதிகாரத்தின் கீழும் (Supervisory Juisdiction) பிணையை ரத்து செய்யலாம்.
.
ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமென கீழ்க்கண்ட ஏதாவது ஒரு அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து கோரலாம். இவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி உள்ள காரணங்களாகும், இவை முழுமையானவை அல்ல. இவை தவிர மற்றெந்த நியாயமான, ஏற்கத்தக்க காரணங்களின் அடிப்படையிலும் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு.
.
1. பிணையில் விடுவிக்கப்படும் நபர் பிணையில் இருக்கும்போது எவ்வகையான குற்றத்திற்காக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரோ, அதே வகையான குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர் பிணையில் தொடர்ந்து இருக்கும் தகுதியை இழந்தவராகிறார்.
.
2. புலன்விசாரணையின்போது கிடைக்கும் புதிய தகவலின் அடிப்படையில் அந்நபர் கூடுதல் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவராகத் தெரிய வருமாயின், அந்நபரின் பிணை திரும்பப் பெறப்படலாம்.
.
3. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் புலன்விசாரணைக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்துவாரானால் அந்நபரின் பிணை திரும்பப் பெறத்தக்கதாகிறது.
.
4. வழக்கின் சம்பந்தப்பட்ட சாட்சிகளை எவ்வகையிலாவது மிரட்டுவதன் மூலம் சாட்சியத்தைக் கலைக்க முற்படுவாரானால், அச்சூழலில் அவர் பிணையில் இருக்கும் தகுதியை இழக்கிறார்.
.
5. பிணையில் உள்ள நபர் தலைமறைவாக முயற்சித்தாலோ, தப்பித்துச் செல்ல முயற்சித்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்தாலோ, அல்லது வேறு வகையில் நீதிமன்றப் பார்வையிலிருந்து மறைந்து கொள்வாராயின், அந்நபரின் பிணை ரத்து செய்யப்படலாம்.
.
6. புலன்விசாரணை அதிகாரி மீதோ அல்லது வழக்கு சாட்சிகளின் மீதோ வன்முறை புரிதலும் பிணை திரும்பப் பெறலாகும்.
.
7. நீதிமன்றம் பிணை வழங்கும்போது பிழையான அணுகுமுறையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்தால் அப்பிணை ரத்து செய்யப்படலாம்.
.
8. குற்றச்சாட்டின் தன்மை மாறுபடும் பட்சத்திலும், வேறு விதமான வழக்குச் சூழ்நிலை மாற்றங்களும்கூட பிணை ரத்து செய்யக் காரணமாக அமையலாம்.
.
9. நீதிமன்ற நிபந்தனைப்படி பிணையிலுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினாலும் பிணை ரத்து செய்யப்படத்தக்கதே.
.
10. பிணையாளர்கள் குற்றம்சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர பத்திரம் முலம் நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியவர்கள், தாங்கள் வழங்கிய பிணைப் பத்திரத்தை திரும்பப் பெறக்கோரி நீதிமன்றத்தில் மனு செய்தாலும் பிணை ரத்து செய்யப்படலாம்.
.
11. பிணைப் பத்திரம் தவறுதலாகவோ, மோசடியாகவோ அல்லது வேறு வகையிலோ நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைபாடாக இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் பிணை ரத்து செய்யப்படலாம்.
.
12. பிணையப்பத்திரம் வேறு எவ்வகையிலாவது செல்லுபடியாகும் தன்மையை இழக்கும் போதும் பிணை ரத்து செய்யக்கூடியதாகிறது.
.
இவ்வகையில், வன்கொடுமை வழக்குகளில் பிணை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை பாதிக்கப்பட்டோர் தரப்பு வலிமையுடன் எடுக்கும்போது, வழக்கு சிதைக்கப்படாமலும் வலுவிழக்காமலும் நீதிமன்றத்தில் நடத்தப் பெற முடியும். இதை சரியாகப் பயன்படுத்தினால் வன்கொடுமையாளர்கள் – பாதிக்கப்பட்டோரையோ, மற்றவர்களையோ அச்சுறுத்துதல் செய்வதை முழுமையாகத் தடுக்க முடியும்.
Thanks – makkal sattam

No comments:

Post a Comment