Monday, September 16, 2013

தீவன வங்கி...

வேளாண்மைக்கு உதவுவதோடு பால், இறைச்சி போன்றவற்றின் மூலமும் கால்நடைகள் வருவாய் ஈட்டித் தருகின்றன. ஆனால், அந்த கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்கள் கிடைப்பதுதான் சிக்கலாக இருக்கிறது. மொத்தக் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களின் அளவில் 50% மட்டும்தான் இந்தியாவில் உற்பத்தியாகிறது. அதனால்தான் கால்நடை வளர்ப்பு என்பது நம்நாட்டில் தன்னிறைவை அடையாமலே இருக்கிறது!

ஆடு, கறவை மாடு, வான்கோழி, கோழி... என எதுவாக இருந்தாலும் அதற்கு சமச்சீரான உணவு அவசியம். ஆடு, கறவை மாடுகள் போன்றவற்றின் பராமரிப்பில் 60 சதவிகிதத்துக்கு மேல் தீவனத்துக்காகத்தான் செலவாகிறது. அப்படியிருக்கும்போது அதிகளவில் தீவனப்பயிர்களை உற்பத்தி செய்தால்... தீவனச்செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்க முடியும். கறவை மாடு வளர்க்கிற அனைத்து விவசாயிகளிடமும் நிலம் இருந்தால்தான் பசுந்தீவன உற்பத்தி சாத்தியம்.

அப்படியானால், நிலமில்லாத விவசாயிகள் மாடு வளர்க்க முடியாதா? என்ற கேள்வி எழலாம். அதற்குத்தான் தீவன வங்கிகள்! அதாவது நிலமிருக்கும் விவசாயிகள், தீவனப்பயிர்களை சாகுபடி செய்து நிலமில்லாத மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதுதான் தீவன வங்கித் திட்டம். பல பயிர்களை சாகுபடி செய்தும் இயற்கைச் சீற்றங்கள், விலையின்மை... போன்ற பல காரணங்களால் நஷ்டத்தில் இருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தீவன வங்கி அமைப்பது நல்ல லாபகரமான தொழிலாக இருக்கும். இன்றையச் சூழ்நிலையில் கால்நடைகளுக்கான பசுந்தீவனங்களுக்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் எட்டு முதல் பத்து மாடுகளுக்கு தீவன உற்பத்தி செய்ய முடியும்.

மக்காச்சோளம், சோளம், தீவனக் கம்பு, கினியா, நேப்பியர் ஒட்டுப்புல், சூடான் புல், கோ-3, கோ-4 எருமைப்புல், கொழுக்கட்டைப்புல், முயல்மசால், வேலிமசால், தீவனத் தட்டைப்பயறு, சவுண்டல், கிளரிசீடியா, வாகை, வேம்பு, அகத்தி, கல்யாணமுருங்கை, கொருக்காய்புளி... என ஏகப்பட்ட தீவனப் பயிர்கள் இருக்கின்றன.

இவை, எல்லா வகையான மண்கண்டங்களிலுமே வளரும் தன்மை கொண்டிருக்கின்றன. குறைவான தண்ணீரே இவற்றுக்குப் போதுமானது. வரப்புகள், வேலி ஓரங்கள் என்றுகூட நடவு செய்யலாம். புல் வகைகளை ஊடுபயிராகக்கூட சாகுபடி செய்து கொள்ள முடியும். இவற்றுக்குப் பராமரிப்புச் செலவும் குறைவு. இயற்கை முறையில் வளர்த்தால், உரச் செலவையும் வெகுவாகக் குறைக்க முடியும்.

No comments:

Post a Comment