Sunday, August 10, 2014

உலகத்தை முட்டாளாக்கிய ஒருவன்!

உலகம் வரலாறுகளில் இது போன்ற சம்பவங்கள் நிறையவே நடைபெற்றிருக்கின்றன. இறந்துவிட்டவர்களை உயிருடன் இருப்பதாகவும், உயிருடன் இருப்பவர்களை இறந்துவிட்டதாகவும் மக்கள் புரிந்து கொண்ட பல சம்பவங்கள் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றன. அதேபோல, இரண்டாம் உலகப் போருக்குக் காரணமானவனும், மிகமோசமான கொடுமைக்காரன் என்று வர்ணிக்கப்பட்டவனுமான 'ஹிட்லர்', இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்டதாகவே நாம் இதுவரை நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு நேரெதிரான சம்பவங்கள்தான் உண்மையில் நடைபெற்றிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்று தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பினால், இதைப் படியுங்கள். படித்த பின் பிடித்தால் சொல்லுங்கள். -ராஜ்சிவா- 




ஒருவர் நம்மை ஏமாற்றினல் நமக்கு எவ்வளவு கோபம் வந்துவிடுகிறது. அப்படி ஏமாற்றுபவர் பல நாட்களாகநம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தால் கொலைவெறியே வந்துவிடும். அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படிஇருக்கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கிறான். நம்மை என்றால் நம்இனத்தை மட்டும் அல்ல, நம் நாட்டை மட்டும் அல்ல, ஒட்டு மொத்த உலகையே அறுபத்தியாறு ஆண்டுகளாகஏமாற்றியிருக்கிறான்.

அவன் ஏதோ ஒரு சின்ன விடயத்தை வைத்து நம்மை ஏமாற்றி விடவில்லை. தான் 'உயிருடன் இல்லை' என்றுஉலகையே நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும் வாழ்ந்துமிருக்கிறான்.அவன் ஒரு சாதாரன மனிதன் என்றால், நாம் அவனைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. சரி அவன் ஒருநாட்டின் தலைவன், பிரபலமானவன் என்ற மட்டிலும் இருந்திருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால். 20ம் நூற்றாண்டிலேயே மிகவும் கொடூரமானவன் எனக் கணிக்கப்பட்டவன் அவன்.கொல்லப்பட வேண்டியவன் என்று அஹிம்சையில் நம்பிக்கை உள்ளவர்களால் கூட நினைக்கப்பட்டவன் அவன்.

கடந்து வந்த வரலாற்றுத் தடங்களில், விடை சொல்ல முடியாத பல மர்மங்கள், கருப்புத் தீவுகளாக இப்போதும்நம்மிடையே படிந்து காணப்படுகின்றன. விடை தேடி, விடைகள் கிடைக்கப்படாமல் மர்மங்களாகவே அவை தம்மை ஒரு கூட்டுக்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றன. எந்த ஒரு கேள்விக்கும் மிகச்சரியாக, ஒரேயொரு விடைதான்இருக்க முடியும். அது போல, எந்தவொரு மர்மத்துக்கும் தீர்வாக இருப்பதும் ஒரேயொரு தீர்வுதான். ஆனால் சரியானவிடை தெரியாத பட்சத்தில், பல விடைகைள அந்த மர்மத்தின் தீர்வாக நாமே பொருத்திப் பார்த்துக்கொள்கிறோம். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி, வரலாற்றில் உண்மை என்பது எங்கோ ஒரு மூலையில்நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே இருக்கின்றது.
உலகத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரின் மரணங்கள், இந்த வரலாற்று மர்மத்தின் பக்கங்களால் நிரப்பப்பட்டு இருக்கின்றது. இவர்களின் பெயர்கைள நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் குறிப்பாகச்
சொல்லப்படும் சிலரின் மரணங்கள் மிகவும் மர்மமானதாகவே காணப்படுகிறது. இங்கிலாந்தின் இளவரசியாகஇருந்த 'டயானா', அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த 'கென்னடி', ஹாலிவூட் திரைப்பட நடிகை 'மார்லின்மான்றோ', இந்திய தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய 'சுபாஷ் சந்திரபோஸ்', ஜேர்மன் சர்வாதிகாரி 'ஹிட்லர்'என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மேலே நான் சொன்னவர்களில், சிலரின் மரணங்களில் மர்மங்கள் இருந்தன. ஆனால், சிலரின் மரணங்களே மர்மங்களாக இருக்கின்றன. மார்லின் மன்றோ, இளவரசி டயானா, கென்னடி போன்றவர்கள் எப்படி இறந்தார்கள்அல்லது எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்னும் கேள்விகள்தான் மர்மங்களாக நம்மிடையே இருக்கிறது. ஆனால்சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லர் ஆகியோர் உண்மையில் இறந்தார்களா என்பதே மர்மங்களாக இருப்பதாக, வரலாறுபதிந்து கொண்டது.
உலக வரலாற்றில் அக்கறை கொண்ட ஒரு மனிதனாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் மேலே நான் குறிப்பிட்டநபர் யாரெனச் சுலபமாகக் கண்டு பிடித்திருப்பீர்கள். ஆனால் அந்த நபர் யாரென்று இன்னும் உங்களுக்குத் தெரியாத பட்சத்தில், நானே சொல்கிறேன்......! அவன்தான், இலட்சக்கணக்கான யூதர்கைள, தீப்பெட்டியில்இருக்கும் தீக்குச்சுகள் போல அடுக்கி, சாம்பலாக்கிக் கொன்றவன். உலக வரலாற்றில் தன் பெயரை அழிக்கமுடியாத கறையுடன், ஆழமாக 'அடால்ஃப் ஹிட்லர்' (Adolf Hitler) என்று எழுதியவன்.





1945 இல் உலக வரலாற்றையே தலைகீழாகத் திருப்பிப் போட்டவன் இந்த அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler). இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஹிட்லரும், அவனது மனைவியான ஏஃபா பிரௌனும் (Eva Braun - ஏவா என்று வாசிப்பது தவறு) தற்கொலை செய்து இறந்தது மட்டுமல்லாமல், அவர்கள் உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக் கூடாது என்பதால், பெட்றோல் ஊற்றிக் கொழுத்தப்பட்டார்கள் என்பதுதான் நாம் இதுவரை நம்பிக் கொண்டிருக்கும் வரலாறு. ஹிட்லரின் இறப்பு இப்படித்தான் நடந்தது என்று ஒரு வடிவம் நம்மால் நம்பப்பட்டுக் கொண்டிருக்கையில், ஹிட்லர் இறக்கவில்லை, அவன் தன் மனைவியுடன் தப்பிச் சென்றுவிட்டான் என்னும் செய்தி 66 வருடங்களுக்குப் பின்னர் கிடைத்திருக்கிறது. ஒட்டு மொத்த உலகையும் தனி நபராக ஏமாற்றிவிட்டு, தனக்குள்ளே சிரித்துக் கொண்டு, மனைவி ஏஃபாவுடன் எங்கோ மறைந்திருக்கிறான் ஹிட்லர்.    

  "என்ன ஹிட்லர் சாகவில்லையா?" என்ற ஆச்சரியமும், ஏமாற்றமும் கலந்து, வாய் பிளந்தபடி கேள்வி கேட்பதை உங்களால் தவிர்க்கவே முடியாது.  அந்த அளவுக்கு என்னில், உங்களில் அதிகம் ஏன் ஜேர்மனியர்களில் என  வெறுப்பு ஒன்றையே விதைத்துவிட்டுப் போன ஒருவன் ஹிட்லர். அவன் உயிருடன் இருந்தான் என்பது தாங்க முடியாத ஒரு உணர்வையே நமக்குக் கொடுக்கும். "நம்ப முடியவில்லை, நம்பவே முடியாது" என்று நீங்கள் இதை மறுக்கும் பட்சத்தில், இதை ஏன் நம்ப வேண்டும் என்பதற்குரிய தெளிவான விளக்கத்தை நான் கொடுக்க வேண்டும். எனவே நாம் 30.04.1945 அன்று, ஜேர்மனியின் தலைநகரான பேர்ளின் (Berlin) நகருக்குச் செல்வோமா....?





ஹிட்லரின் மரணம் என்னும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இதுதான் நடந்தது என்று உலகமே நம்பும் விசயங்களை முதலில் பார்ப்போம்......!

  இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில், ஜேர்மனியின் ஆக்ரோசமான சக்தியைத் தனித்தனியாக எதிர்கொள்ள முடியாத நாடுகள், 'நேச நாடுகள்' என்னும் பெயரில் ஒன்று சேர்ந்து, ஜேர்மனியைத் தாக்கின. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்பன ஒரு பக்கதில் அணி சேர்ந்து தாக்க, மறு பக்கத்தில் சொவியத் ரஷ்யா தாக்கத் தொடங்கியது. இந்த நான்கு நாடுகளின் ஒன்று சேர்ந்த தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், 30.04.1945 இல் ஜேர்மனி தனது தோல்வியைத் தழுவிக் கொண்டது. இறுதிக் கட்டப் போரின் போது, ஹிட்லர் பேர்ளின் நகரில் அமைந்த அரசுத் தலைவரின் கட்டடத்துக்கு (Reichkanzlei) கீழே இருந்த ஒரு நிலக்கீழ்ச் சுரங்கத்திலேயே இருந்தார். எதிரி நாடுகளின், குறிப்பாக ரஷ்யாவின் விமானக் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்ள அங்கேயே பதுங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதுவே அவனின் இறப்புக்கான கடைசி இடமாகவும் மாறியது என்றும் சொல்லப்பட்டது.





 ஹிட்லரின் இறுதி நாளில் என்ன செய்தான், எப்படி இறந்தான் என்பதை, உலகிற்கே வெளிக் கொண்டு வந்தவர், 95 வயதாகியும் இன்றும் உயிருடன் இருக்கும் ஹிட்லரின் மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த 'ரோஹுஸ் மிஷ்' (Rochus Misch) என்பவர்தான். இந்த ரோஹுஸ் மிஷ் பிறந்தது, 29.07.1917ம் ஆண்டு. தனது 28 வது வயதில் அவர் ஹிட்லருடன் கடைசியாக இருந்திருக்கிறார். அவர் ஹிட்லரின் இறுதி நாள் பற்றி என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.......!





 'ஏப்ரல் 30 திகதி பங்கரில் உள்ள அனைவரையும் ஹிட்லர் அழைத்து, "எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம். தேவையானவர்கள் மட்டும் இங்கு இருந்து கொள்ளட்டும்". இப்படி அவர் சொன்னதால் அங்கு இருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவனானேன். ஹிட்லரும், ஏஃபாவும் தற்கொலை செய்வது என்னும் முடிவும் அப்போது எடுக்கப்பட்டது. புரொபசர் ஹாஸெ (Dr.Werner Hasse) ஹிட்லரிடம் சொன்னார் "முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கிவிட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது நல்லது". இதைக் கேட்ட பின்னர் ஹிட்லரும், ஏஃபாவும் தங்கள் அறையை நோக்கிச் சென்று கதவைச் சாத்திக் கொண்டார்கள். நெடு நேரம் எந்த அசைவுகளும் இல்லை. அப்புறம் ஹிட்லரின் அறையைத் திறப்பது என்ற முடிவுக்கு வந்தோம். திறந்த போது, நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். நான் கண்ட காட்சி, ஹிட்லர் பெரிய ஷோபாவில் இரத்தக் கறையுடன் இறந்து கிடக்க, அருகில் இருந்த சிறிய ஷோபாவில் ஏஃபா பிரவுன் தலை சாய்ந்து விழுந்து கிடந்தார். பின்னர் சிலர் அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று பங்கருக்கு வெளியே இருந்த இடத்தில் வைத்து, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள்.'

  ஹிட்லரின் இறப்பைப் பற்றி முழுமையானதொரு அறிக்கையைக் கொடுத்த ஒரே நபரும், ஹிட்லருடன் இருந்து தப்பிய ஒரே நபருமாக இருந்தவர் இந்த ரோஹுஸ் மிஷ்தான். ஹிட்லர் இறப்பதற்கு இரண்டு நாட்களின் முன்னர்தான் ஹிட்லரின் நண்பரும், இத்தாலியின் தலைவருமான முஸோலினியும் (Benito Mussolini), அவரது மனைவியும் கொல்லப்பட்டு, ஒரு பெட்ரோல் நிலையத்தில் அவர்களது உடல்கள் தலை கீழாகத் தொங்க விடப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருந்ததை ஹிட்லர் அறிந்திருந்தார். அதனால்தான் எதிரிகளிடம் தனதும், ஏஃபாவுடையதும் உடல்கள் அகப்படக் கூடாது என்று ஹிட்லர் முடிவு செய்து, அதனால் எரிக்கப்பட்டது என்றும் ஒரு கதை சொல்லப்பட்டது.

  மே 1ம் திகதி ஜேர்மனிய வானொலி, 'ஹிட்லர் இறந்துவிட்டார்' என்ற செய்தியை அறிவித்தது. அதற்கு அடுத்த தினம் அதாவது 2.5.1945 இல், ஹிட்லர் இருந்ததாகச் சொன்ன பங்கரை ரஷ்யா கைப்பற்றியது. அத்தோடு ஹிட்லர் சம்மந்தமாக தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிக்கையும் கொடுத்தது. ஆனால் சில மணி நேரங்களில் அவர்களுக்கு ஹிட்லரின் முழுமையான உடல் கிடைத்ததாக சொல்லி, அந்த உடலுடன் நின்று படங்களை எடுத்து ரஷ்யா வெளியிட்டது.




ஆனால் அடுத்த நாட்களிலேயே அது ஹிட்லரின் உடலல்ல என்றும், ஹிட்லர் தனக்கென வைத்திருந்த 'டூப்' என்றும் அறிவித்தது ரஷ்யா. அந்த ஹிட்லரின் டூப்பாக இருந்த நபர், எதிரிகளின் இராணுவத்தை, ஹிட்லர் இறந்துவிட்டார் என்று நம்ப வைப்பதற்காக ஹிட்லரின் பாதுகாப்புப் படையினராலேயே கொல்லப்பட்டு அங்கு போடப்பட்டிருந்தார். ஹிட்லர் தனக்கென ஒரு டூப்பை எதற்காக வைத்திருந்தார் என்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஹிட்லரைக் கொல்வதற்கு ஜேர்மனியிலேயே, சிலரால் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. அந்த சதித்திட்டத்தில் யூலை மாதம் 1944 இல் ஹிட்லர் சாலையில் ஊர்வலமாக வரும்போது கொல்லப்பட வேண்டும் என முடிவாகியது. அதற்கு 'ஒபெரேசன் வால்கிரீ' (Operation Valkyrie) என்று பெயரும் இடப்பட்டிருந்தது. ஆனால் அது படு தோல்வியில் முடிவடைந்தது. அந்தச் சதியில் ஈடுபட்டார்கள் என்று 300க்கும் அதிகமானவர்கள் சரமாரியாகக் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து ஹிட்லர் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தனக்கென ஒரு டூப்பை அனுப்பி வைப்பார். அப்படி மொத்தமாக ஹிட்லருக்கு ஆறு டூப்புகள் இருந்ததாகச் சொல்வார்கள். அதில் ஒருவன்தான் இறந்து காணப்பட்டான்.




இதன் பின்னர் ஹிட்லரும், ஏஃபாவும் தற்கொலை செய்து அவர்கள் இருவரது உடல்களும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்று ரஷ்யாவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. உலகமும் அதை ஏற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஹிட்லரின் உடல் கிடைத்ததோ இல்லையோ அவன் இறந்தது என்ற செய்தியே நமக்குப் போதும் என்று மகிழ்ச்சியுடன் இருந்தது.

  1968 ம் ஆண்டு, ரஷ்யா மீண்டும் ஒரு அறிக்கையை வெளிவிட்டது. அந்த அறிக்கையில், 'ஹிட்லர் இறந்தது என்பது நிஜம். அரைகுறையாக எரிந்த நிலையில் நாம் ஹிட்லருடையதும், ஏஃபாவுடையதும் உடல்களைக் கைப்பற்றினோம். பின்னர் அந்த உடல்களை பேர்ளினில் இருந்து 130 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் மாக்டபுர்க் (Magdeburg) என்னுமிடத்தில் அமைந்த இராணுவ இடுகாட்டில் புதைத்து விட்டோம்' என்று அந்த அறிக்கையில் இருந்தது. ரஷ்யா விட்ட அறிக்கைகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. 1970 இல் மீண்டும் இன்னுமொரு அறிக்கையை ரஷ்யா வெளியிட்டது. அந்த அறிக்கையில், ' மாக்டபுர்க்கில் புதைக்கப்பட்டிருந்த ஹிட்லர், ஏஃபா உடல்களைத் தோண்டியெடுத்து, அவற்றை எரித்து, சாம்பலை எல்பெ (Elbe) என்னும் நதியில் கரைத்துவிட்டோம்' என்று இருந்தது. இறுதியாக 1993 இல் ஹிட்லரின் இறப்புடன் சம்மந்தமான கடைசி அறிக்கையையும் ரஷ்யா வெளியிட்டது.

  அந்த அறிக்கை இதுதான். 'ஹிட்லர் இறந்த போது, எந்த ஷோபாவில் இருந்து கொண்டு தன்னைச் சுட்டுத் தற்கொலை செய்தாரோ, அந்த இரத்தம் தோய்ந்த ஷோபாவையும், ஹிட்லர் இறந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தில் எரிந்த நிலையில் துப்பாக்கிக் குண்டு ஒன்று துளைத்த அடையாளத்துடன் கூடிய, அவரின் மண்டையோட்டையும் மட்டும் எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்கிறோம்' என்று இருந்தது.

  ஹிட்லரின் மரணம் சம்மந்தமாக உலகமே நம்பியிருக்கும் சம்பவங்கள் இவைதான். இவையெல்லாவற்றிலும் இறுதியாக எஞ்சும் முடிவுகள் என்னவோ ஹிட்லரும், ஏஃபாவும் இறந்து விட்டார்கள் என்பதுதான். ஆனால் இவையெல்லாமே பொய்யென்று நிரூபனமாகி, ஹிட்லரும் ஏஃபாவும் உயிருடன் தப்பினார்கள் என்னும் செய்தி இப்போது நம்மை அதிர வைக்கிறது.

  ஹிட்லர் தப்பினானா? அப்படியென்றால் எங்கு தப்பிச் சென்றான்? எப்படித் தப்பிச் சென்றான்? என்னும் கேள்வி மட்டுமில்லாமல், ஹிட்லர் சாகவே இல்லை என்று எப்படிச் சொல்வீர்கள்? என்னும் கேள்வியும் சேர்ந்தே நமக்கு இப்போது தோன்றும். அவற்றிற்கான விடைகளையும் நாம் பார்ப்போம்........!

  ஹிட்லர் இறந்து விட்டான் என்று உலகமே சொல்லிக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் திட்டவட்டமாக ஹிட்லர் தப்பிவிட்டான் என்று யூலை 1945 இலேயே சொன்னார். சொன்னவர் சாதாரணமானவர் என்றால் யாரும் அதை கவனத்தில் எடுத்திருக்கத் தேவையில்லை. ஆனால் அப்படிச் சொன்னவர் மிகப் பெரியவர். அவர் வேறு யாருமில்லை. அந்தக் காலத்தில் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவரும், சோவியத் ரஷ்யாவின் அதிபருமான ஜோசப் ஸ்டாலினேதான் (Joseph Stalin). அதுவும் முக்கிய தலைவர்களான ட்ரூமான் (Truman), சர்ச்சில் (Churchill) ஆகியோரைச் சந்தித்த ஒரு விழாவில் பகிரங்கமாக "ஹிட்லர் சாகவில்லை. ஸ்பெயினுக்கோ, ஆர்ஜென்டீனாவுக்கோ நீர்மூழ்கிக் கப்பலில் தப்பிவிட்டார்" என்று கூறினார். அது மட்டுமில்லாமல், ஹிட்லரின் இறப்பு சம்மந்தமாக ரஷ்யா தயாரித்த கோப்பை (File), 'ஒபெரேசன் மித்' (Operation Myth) என்று பெயரிட்டு அதை ஆராயும் படி கட்டளையும் இட்டிருந்தார் ஸ்டாலின். ஹிட்லர் இறக்கவில்லை என்னும் சந்தேகத் துளி இங்கிருந்துதான் முதலில் தூவப்பட்டது.




  உலகிலேயே மிகவும்  பலமான உளவுப்படை என்று அழைக்கப்படுவது ரஷ்யாவின் உளவுப்படையான KGB (Komitet Gesudarstvennoy Bezopasnosti). அப்படி ஒரு படையையே வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின், ஹிட்லர் இறந்ததற்கான சாட்சியங்களை எல்லாம் தன்னுடனே வைத்திருக்கும் போது, எதற்கு ஹிட்லர் தப்பி விட்டார் என்று சொல்ல வேண்டும்? ஹிட்லர் சார்ந்த கோப்பிற்கு ஏன் Myth என்று பெயர் வைக்க வேண்டும்? ஹிட்லர் நீர்மூழ்கிக் கப்பலில்தான் தப்பினார் என்று எப்படி அவர் அடித்துச் சொன்னார்? ஸ்டாலின் அப்போதே எதையோ அறிந்திருக்க வேண்டும். அதற்கான சாட்சியங்கள் இல்லாததால் அவரால் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இருந்திருக்க வேண்டும்.

  இதன் தொடர்ச்சியாக நடந்த பல சம்பவங்கள் ஹிட்லர் ஆர்ஜென்டீனாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலின் மூலம், தப்பி விட்டார் என்பதை பலமாக உறுதி செய்தன. இறுதியில் அமெரிக்காவின் FBI, ஹிட்லர் தப்பியது உண்மைதான் என்பதை உறுதி செய்தது. அதை அடிப்படையாக வைத்து, ஆதாரங்களுடன் 700 பக்க அறிக்கையை FBI வெளியிட்டது. ஹிட்லர் எப்படித் தப்பியிருக்கிறார் என்று அறிய நிச்சயம் நீங்களும் ஆவலாக இருப்பீர்கள். நடந்தது இதுதான்......! (என்று சொல்லப்படுகிறது).

  30.4.1945 அன்று ஹிட்லரும், ஏஃபாவும் இறந்தது போல இரண்டு பிணங்கள் தயார் செய்யப்பட்டுக் கொளுத்தப்பட்டன. ஆனால் ஹிட்லரும், மனைவியும் அவர்கள் மறைந்திருந்த பங்கரின் இன்னுமொரு இரகசிய வழியாக வெழியே வந்து, அப்படியே நார்வே நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். நார்வேயில் ஹிட்லருக்காகவே காத்திருந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஆர்ஜென்டீனா நோக்கிப் பிரயாணம் செய்திருக்கிறார்கள். 2ம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களில் ஹிட்லரின் படையில் இருந்த, மிக முக்கியமான, போர்க் கைதிகள் என வர்ணிக்கப்படும், பல நாஸித் (NAZI) தலைவர்கள் ஏற்கனவே ஆர்ஜென்டீனாவுக்கு சென்றிருந்தார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள், ஜோசெப் மெங்கெலே (Josef Mengele), அடோல்ஃப் ஐக்மான் (Adolf Eichmann), பிரான்ஸ் ஸ்டாங்கிள் (Franz Stangl), எரிக் பிரீப்கே (Erich Priebke), க்ளௌஸ் பார்பீ (Klaus Barbie) என்பவர்களாவார்கள். இவர்கள் எல்லாரும் நாஸிப் படையில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள். ஆர்ஜென்டீனாவில் 30000 க்கும் அதிகமான நாஸிப் படையினர் தப்பியோடி வாழ்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

  ஜூலை 10ம் திகதி 1945 இல் ஆர்ஜென்டீனாவை U530 என்னும் நீர்மூழ்கிக் கப்பல் அடைந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜேர்மனிக்குச் சொந்தமானது. அது பற்றிய விபரங்களை அமெரிக்கா கேட்ட போது, அதில் வெறும் கப்பல் மாலுமிகள் மட்டுமே இருந்தார்கள் எனக் கூறி, அவர்களை அமெரிக்கா விசாரிக்க ஆர்ஜென்டீனா ஒத்துழைத்தது. அதில் யார் யார் வந்தார்கள் என்ற விபரமே இல்லை. வெறும் மாலுமிகள் மட்டும்தான். அதற்கு ஐந்து வாரங்களுக்குப் பின்னர் U977 என்னும் ஜேர்மனிக்குச் சொந்தமான இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் தெற்கு ஆர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. இதற்கும் அதே கதைதான் அமெரிக்காவுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் ஹிட்லர் இறந்தார் என்று ஜேர்மனி அறிவித்த அன்றுவரை, அதாவது மே மாதம் 2ம் திகதி வரை நார்வே துறைமுகத்தில்தான் U977 என்ற நீர்மூழ்கிக் கப்பல் நின்று கொண்டிருந்தது. ஆனால் மே 2ம் திகதி  திடீரென நார்வே துறைமுகத்தில் இருந்து மாயமாக மறைந்தது அந்த நீர்மூழ்கிக் கப்பல். அதற்கு அப்புறம் பல நாட்களாக அது காணப்படவே இல்லை. ஆனால் ஜேர்மனி தோற்றிருந்த வேளையில் அனைவரும் சரணடைந்து கொண்டிருந்த நேரமது.





 மொத்தமாக 102 நாட்கள் கடலினடியிலேயே பிரயாணம் செய்த U977, பின்னர் ஆர்ஜென்டீனாவை வந்து அடைந்தது. அதில் யார் வந்தார்கள்? சரணடையும் சாத்தியம் இருந்தும், இவ்வளவு ஆபத்தான நீண்ட நாள் கடலடிப் பிரயாணத்தை அது ஏன் மேற்கொண்டது? என்ற கேள்விகளுக்கு ஆர்ஜென்டீனா எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. பல தலைவர்களுடனும், அளவுக்கு மிஞ்சிய பணத்துடனும், சொத்துக்களுடனும்  ஆர்ஜென்டீனாவை வந்தடைந்தான் ஹிட்லர் என்று சொல்கிறார்கள். அதன் பின்னர் ஆர்ஜென்டீனாவின் பல இடங்களிலிருந்து, இரகசியமாக, மிகவும் நம்பகத்தன்மை உடையவர்களிடமிருந்து, ஹிட்லரைக் கண்டதாகச் செய்திகள் FBI ஐ வசம் வந்தடைந்தது. ஹிட்லருக்கு இரண்டு பெண்கள் பிறந்ததாகவும், அவர்கள் அங்கேயே வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. அந்த பெண்களைச் சந்தித்த பலர் சாட்சிகளாகவும் இருந்திருக்கின்றனர். ஏஃபா ஜேர்மனியில் இருந்து தப்பும் போதே, கர்ப்பமாக இருந்ததாகவும் சொல்கிறனர்.

  'கிரே வோல்ஃவ்' (Gray Wolf) என்னும் புத்தகத்தை எழுதிய இங்கிலாந்தின் பிரபல பத்திரிக்கையாளர் ஜெரார்ட் வில்லியம்ஸ் (Gerrard Williams) அவர்கள் Sky News க்குக் கொடுத்த பேட்டியின்படி, நாம் தற்போது ஹிட்லர் இறந்ததாக நம்பும் ஆண்டுக்குப் 17 ஆண்டுகள் கழித்து, 1962 இல் ஆர்ஜென்டீனாவில் ஹிட்லர் இறந்தான் என்று தெரிய வருகிறது. அதாவது வயது போன நிலையில் இயற்கையாக இறந்தான் ஹிட்லர்.

  இவ்வளவும் சரி, ரஷ்யாதான் ஹிட்லரின் இரத்தக் கறையுடன் கூடிய ஷோபாவையும், ஹிட்லரின் மண்டையோட்டையும் எடுத்துப் பாதுகாக்கின்றதே என்னும் கேள்வி மிஞ்சுகிறதல்லவா?

  இன்றுள்ள ஆராய்ச்சி வளங்களையும், சாதன வசதிகளையும் வைத்துக் கொண்டு இவற்றை ஒருதரம் ஆராய்ந்துதான் பார்ப்போமே என்று புறப்பட்டது ஒரு குழு. அதில் முக்கியமானவர் தொல்லியல் ஆராய்ச்சியாளரான 'டாக்டர் நிக் பலண்டோனி' (Dr.Nick Bellantoni) என்பவர். அவர் ரஷ்யாவில் ஹிட்லர் இறந்ததற்கு ஆதாரமாகச் சொல்லப்படும் அனைத்தையும் ஆராய்ந்தார். அவை அனைத்தும் மாஸ்கொவில் Russian Federation State Archive என்னும் இடத்தில் பாதுகாத்து வைகப்பட்டிருந்தது. மொத்தமாக ஒரு மணி நேரமே அவருக்கு அனுமதி கொடுத்தது ரஷ்ய அரசு. அவர் அந்த மண்டை ஓட்டின் சில துண்டுகளை எடுத்தார். அத்துடன் மண்டையோட்டைப் பல கோணங்களில் படங்களாகவும் எடுத்தார். ஷோபாவில் இருந்த இரத்தக் கறைகளை, பல இடங்களிலிருந்து  அவதானமாக எடுத்தார். அந்த மண்டையோட்டில் துப்பாக்கிக் குண்டு துளைத்த அடையாளம் காணப்பட்டது என்னவோ உண்மைதான்.




  பின்னர் அவற்றையெல்லாம் அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து, Molecular copying, Allosomal DNA பரிசோதனைகள் என்னும் டிஎன்ஏ பரிசோதனை முறைகளைப் பாவித்து பல சோதனைகளைச் செய்தார். கிடைத்த விடைகள் மிகவும் ஆச்சரியமானதும், அதிர்ச்சிகரமானதுமாக இருந்தன. அவை என்ன தெரியுமா....?

1. அந்த ஷோபாவில் இருந்த இரத்தக் கறைக்கும், மண்டையோட்டுக்கும் DNA பரிசோதனையில் எந்தப் பொருத்தமும் இருக்கவில்லை. அதாவது அந்த ஷோபாவில் இருந்த இரத்தக் கறை ஒருவருடையது. மண்டையோடு வேறு ஒருவருடையது.

2. அந்த மண்டையோடு ஒரு ஆணுடையதே அல்ல. ஒரு பெண்ணுடையது. அதாவது ஹிட்லரின் மண்டையோடு என்று நம்பப்பட்ட மண்டையோட்டுக்குச் சொந்தக்காரர் ஒரு பெண்.

3. அந்த மண்டையோடு மிகவும் இளமையான ஒருவரின் மண்டையோடு. அதாவது 20 வயதிலிருந்து அதிக பட்சம் 40 வயது வரையிலாவது இருக்கும் ஒருவருடையது. ஆனால் ஹிட்லருக்கோ, ஏஃபாவுக்கோ வயது 50க்கும் மேலே இருந்தது.

  இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, ரஷ்யாவில் கண்டெடுத்த எதுவுமே ஹிட்லருடயதோ, ஏஃபாவினுடையதோ அல்ல என்று நிச்சயமாக நிரூபனமாகியது. ஆனால் இறுதியில் எஞ்யிருப்பது ஹிட்லருடன் கடைசியாக இருந்த, அவனது மெய்ப்பாதுகாவலர் ரோஹுஸ் மிஷ்தான். அவர் சொன்னவை எல்லாம் பொய்தானா....?

  இதற்கும் விடை கண்டு பிடித்தார் பெலெண்டோனி. ரஷ்யாவில், ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட 'ஒபெரேசன் மித்' என்னும் கோப்பைத் தட்டிப் பார்க்கையில், ரஷ்யர்கள் பேர்ளினைக் கைப்பற்றியதும், ஹிட்லர் பற்றிய பல தகவல்களை படங்களாக வரைந்து ஒருவர் கொடுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? சாட்சாத் இதே ரோஹுஸ் மிஷ்தான். அதாவது ஒட்டு மொத்த உலகையே ஹிட்லர் இப்படித்தான் இறந்தார் என நம்ப வைத்தவர் இந்த ரொஹுஸ் மிஷ்தான். அவரின் நம்பகத் தன்மையை இப்போது எவரும் கருத்தில் கொள்ளத் தயாராகவே இல்லை. அப்பட்டமாக தனது தலைவனுக்காக, அவன் உருவாக்கிய நாடகத்தை நடித்துக் காட்டியிருக்கிறார் ரோஹுஸ் மிஷ்.

  தங்களை அதிபுத்திசாலிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நாடுகளையும் தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றி, தனது வாழ்வைப் பூர்த்தியாக்கி இயற்கையாகவே மரணமடைந்திருக்கிறான் ஹிட்லர். தனது கடைசிக் காலங்களில் போரில் தோற்ற ஒரு ஆற்றாமை அவனுக்கு இருந்திருந்தாலும், அனைத்து உலகையே எமாற்றிய திருப்தியும், குரூரமான மகிழ்சியும் சாகும் வரை அவனுக்கு இல்லாமல் போயிருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

-ராஜ்சிவா-


குறிப்பு: ஹிட்லர் உயிருடன் இருந்தான் என்னும் தகவல்கள் ஜெராட் வில்லியம்ஸ், மிஸ்டரி க்வெஸ்ட், FBIஆவணங்கள், மற்றும் பல தகவல்கைள அடிப்பைடயாக கொண்டு எழுதப்பட்டது. -ராஜ்சிவா-

No comments:

Post a Comment