Sunday, August 10, 2014

'நேரம்' (காலம்) என்பதை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?

நேரம் என்பதை நாம் மிகவும் தவறாகப் புரிந்து கொள்கிறோம். "நேரம் என்ற ஒன்று உண்மையில் உண்டா?" என்ற கேள்விகள் எல்லாம் இப்போது அறிவியலில் கேட்கப்படுகிறது. அதைப் புரியவைப்பதற்கான ஒரு சிறு முயற்சி இது. புரிந்தால் சொல்லுங்கள்.
-ராஜ்சிவா-







"இறந்தகாலம், எதிர்காலம் என்று எதுவுமே இல்லை. அவை இரண்டும் நிகழ்காலத்திலேயே, அதனுடன் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றன. சொல்லப் போனால், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுமே நாம் நினைப்பது போல இல்லாமல், புகைப்படம் போல உறைந்து போன நிலையில் நமக்கு அருகிலேயே எப்போதும் இருக்கின்றன. நாம்தான் இல்லாத இந்தக் காலங்களையெல்லாம் இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு பூமியில் வாழ்ந்து வருகிறோம்".

என்ன? ஏதாவது பாபா அல்லது சாமியார் ஒருவரின் பிரசங்கத்துக்கு வந்துவிட்டது போல இருக்கிறதா? இல்லை, மேலே நான் சொன்னது தத்துவமோ, பிரசங்கமோ கிடையாது. முழுக்க முழுக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கூற்று அது. அதாவது விஞ்ஞானம் பிரமிக்கும்படியாக வளர்ந்துவிட்ட நிலையில் உருவான நவீன அறிவியல் கூற்று. "இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் நாம் தினசரி வாழ்க்கையிலேயே அனுபவித்துக் கொண்டு வருகிறோம். அனுபவத்தில் நாம் அறிந்திருக்கும் இவற்றை இல்லையென்று அறிவியல் முட்டாள்தனமான கூறாதே!" என்று நீங்கள் நிச்சயம் நினைப்பீர்கள். இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை உங்களுக்கு நான் முழுமையாகப் புரியவைக்கும் வரை இந்தச் சந்தேகம் உங்களுக்கு இருக்கும். அதனால் இதைப் புரியவைக்க வேண்டுமென்றால் முதலில் அடிப்படையான சில தகவல்களைச் சொல்லிச் செல்ல வேண்டும். கொஞ்சம் ரிலாக்ஸாக, மூச்சை உள்ளே இழுத்து, வெளிவிட்டு அமைதியாக இதை வாசியுங்கள். 


'ஒளி' ஒரு செக்கனுக்கு 300000 கிமீ தூரம் செல்கிறது (மணிக்கு அல்ல செக்கனுக்கு). இதே வேகத்தில் நாம் ஒரு ராக்கெட்டில் பயணம் செய்தால், எதிர்காலத்தை அடைய முடியும் என்று நவீன இயற்பியல் சொல்கிறது. இந்தக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர் அன்றும், இன்றும் மிகப்பிரமிப்புடன் பார்க்கப்படும் கணிதவியலாளர் அல்பேர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein). இந்தக் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் எழுந்தமானமான முறையில் சொல்லிவிடவில்லை. இயற்கை விதிகளுடன் இணைந்த கணிதச் சமன்பாடுகளை முன்வைத்து அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உலகிற்கு அறிவித்தார். பின்னர், பலவிதமான வெவ்வேறு வகைப் பரிசோதனைகள் மூலம், இந்தக் கோட்பாட்டின் அடிப்படை உண்மையானதுதான் என்பதை அறிவியல் உலகம் கண்டுகொண்டது. ஆனாலும் மனிதனால் இதுவரை ஒரு குறித்த அளவுக்கு மேல் வேகம் கொடுக்கக் கூடிய சாதனத்தை உருவாக்க முடியவில்லை. அதிகபட்சமாக மனிதனால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளில், சூரியனின் வட்டப்பாதையை நோக்கி அனுப்பப்பட்ட ஹீலியஸ் (Helios) என்னும் விண்கலமே உயர்வேகம் பெற்றிருக்கிறது. இது கிட்டத்தட்ட மணிக்கு 250000 கிமீ வேகத்தில் பயணித்தது (செக்கனுக்கல்ல மணிக்கு). ஆனாலும் இது மனிதன் இல்லாத ஒரு விண்கலம். மனிதன் அமர்ந்து பயணித்த ராக்கெட்டின் அதியுயர் வேகம் மணிக்கு 40000 கிமீ வேகம்தான்.

இந்த வேகங்கள் அனைத்தும் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். ஆனாலும் மனிதன் என்றோ ஒரு நாள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஆற்றலைப் பெறுவான் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஒருவேளை மனிதன் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஆற்றலை அடைந்தால், அவன் எதிர்காலத்துக்குப் பயணம் செய்வான் என்று சொல்கிறது அறிவியல். இந்த இடத்தில் ஐன்ஸ்டைன் சில சிக்கலான விளைவுகள் பற்றியும் சொல்லியிருக்கிறார். ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடையும் போது, அதன் எடை கற்பனையே பண்ண முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டு செல்வதோடு, அதன் உருவம் சிறியதாக குறுகிக் கொண்டே போகும் என்றார். அத்துடன் வேறு பல விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்றார். ஒளியின் வேகத்தில் பயணிக்க ஆரம்பிக்கும் போது, இப்படிப்பட விளைவுகளைச் சந்திக்க வேண்டுமென்பதாலேயே, மனிதனால் ஒளியின் வேகத்தை அடையமுடியாது என்ற ஐயமும் பல விஞ்ஞானிகளிடையே இருக்கிறது. ஒளியின் வேகத்தை அடைவது சாத்தியமே இல்லாத ஒன்று என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஒளியின் வேகத்தை அடையும் போது ஏற்படும் விளைவுகள் மனிதனைத் தாக்காதவாறு, பாதுகாப்பாக அவன் அமர்ந்து செல்லும் ஒரு இயந்திரத்தைத் தயார் செய்தால், ஒளியின் வேகத்தில் பயணம் செய்யலாம் என்று, அப்படி ஒரு இயந்திரதைத் தயாரிக்க, பலவித முயற்சிகளை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் உருவாக்கப்படும் இயந்திரத்தை, 'கால இயந்திரம்' (Time Machine) என்கிறார்கள். இதுவரை பல வடிவங்களில் கால இயந்திரங்கள் உருவாக்கப்பட்டு ஒளியின் வேகத்தில் பயணித்து இருக்கின்றன. ஆனாலும் அவையெல்லாம் ஹாலிவூட் திரைப்படங்களில் மட்டும்தான். நிஜத்தில் அது இன்னும் சாத்தியப்படவில்லை. "அப்படியென்றால், மனிதனால் கால இயந்திரம் ஒன்றை உருவாக்கவே முடியாதா?" என்று நீங்கள் கேட்டால், 'முடியும்' என்றுதான் விஞ்ஞானிகளிடமிருந்து பதில் வருகின்றது. "இன்றைய தேதியில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளில் மனிதனால் அது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் நாளைய மனிதன் அதைக் கண்டுபிடித்தே தீருவான்" என்கிறார்கள். அதற்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது அண்டத்தின் பரந்த வெளியெங்கும் பரவிக் கிடக்கும் 'கருஞ்சக்தி' (Dark Energy), 'கரும்பொருள்' (Dark Matter) இரண்டையும்தான். இந்தப் பிரபஞ்ச வெளியெங்கும் உள்ள நட்சத்திரங்கள், நெபுலாக்கள், காலக்ஸிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால், பிரபஞ்ச வெளியின் 4% அளவிலேயே காணப்படுகின்றன. எஞ்சியிருக்கும் 96% பிரபஞ்சவெளியில், 70% அளவில் டார்க் எனர்ஜியும், 26% அளவில் டார்க் மாட்டர்களும் நிறைந்திருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


"அப்படி என்னதான் விசேசம் இருக்கிறது இந்த டார்க் எனர்ஜியில்? என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். இதுவரை பூமியில் எரிசக்தி முதல் மின்சக்தி வரையுள்ள அனைத்து சக்திகளையும் பெற, நாம் பெற்றோலியத்தையும், காற்றையும், நீரையும், சூரியனையும் நம்பி வந்தோம். சமீபத்தில் அதனுடன் அணு உலையும் இணைந்தது. இவற்றின் உதவியுடன் நாம் பூமிக்குத் தேவையான சக்திகள் அனைத்தையும் ஓரளவுக்குப் பெற்று வருகிறோம். இருந்தாலும் தட்டுப்பாடு என்பது இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் டார்க் எனர்ஜியை எடுத்துக் கொண்டால், ஒரு லீட்டர் கனவளவுள்ள டார்க் எனர்ஜியின் மூலம், உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நூறு வருடங்களுக்கு தடையில்லா மின்சாரம் தொடர்ந்து கொடுக்க முடியும் என்கிறார்கள். என்ன பிரமிப்பாக இருக்கிறதா? இந்த அளவுக்கு வீரியமான டார்க் எனர்ஜி, அண்டம் முழுவதும் வெறுமனே பரவியிருக்கிறது. அவற்றின் மொத்த சக்தியை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள். இவை அண்டத்தில் பரவி இருப்பதால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அதிசய நிகழ்வை நாம் பார்த்துவிட்டு மேலே செல்லலாம்.

'பிக்பாங்க்' (Bigbang) என்னும் பெருவெடிப்பின் மூலம் அண்டம் உருவாகியது என்பதை பல இடங்களில் அறிந்திருக்கிறோம். அந்த ஆரம்ப வெடிப்பின் போது ஏற்பட்ட பெருவிசையினால், அண்டம் இன்றுவரை விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அண்டத்தின் எல்லையில் உள்ள நட்சத்திரங்களையும், காலக்ஸிகளையும் அவதானித்த 'எட்வின் ஹபிள்' (Edwin Hubble) என்னும் வானவியல் ஆராய்ச்சியாளர் அவை விலகிச் செல்வதைக் கண்டார் (இவரின் ஞாபகார்த்தமாகவே விண்வெளியில் விடப்பட்டிருக்கும் தொலைநோக்கிக் கருவிக்கு 'ஹபிள் தொலை நோக்கி' என்று பெயரிட்டிருகிறார்கள்). மிக மிகத் தொலைவிலிருந்து வரும் ஒளி, நம்மை நோக்கிய திசையில் பயணித்தால் நீல நிறமாகவும், நம்மை விலகிய திசையில் பயணித்தால் சிவப்பு நிறமாகவும் நிறச் சிதறலடையும். இதைச் 'செவ்வொளி விலகல்' (Redshift) என்பார்கள். இந்தச் செவ்வொளி விலகல் அவதானிப்பின் மூலம், அண்டம் இன்றும் விரிவடைந்து கொண்டு செல்கின்றது என்று ஹபிள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற வெடிப்பு ஏற்படுத்திய விசையே இன்றும் அண்டம் விரிவடைந்து செல்லக் காரணம் என்று நம்பிய விஞ்ஞானிகளுக்கு வேறு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆரம்ப வெடிப்பினால் ஏற்பட்ட விசையினால் அண்டம் விரிவடையுமானால், அவை விரிவடைந்து செல்லும் வேகம் படிப்படியாகக் குறைந்து, ஏதோ ஒரு கட்டத்தில் நின்றுவிட வேண்டுமல்லவா? ஒரு பந்தை பெரும் விசையுடன் மேல் நோக்கி நீங்கள் தூக்கியெறிந்தால், அந்த விசையின் சக்தி படிப்படியாகக் குறைந்து பூச்சியமாகி பந்து கீழே விழ வேண்டுமல்லவா? அதுபோல, அண்டமும் என்றாவது ஒருநாள், தன் விரிவடையும் வேகத்தைக் குறைத்துப் பூச்சியத்தை அடைய வேண்டும். ஆனால் நடந்து கொண்டிருப்பதோ வேறு. அண்டம் விரிவடையும் வேகத்தைக் குறைப்பதற்குப் பதில், அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதாவது அண்டம் 'ஆக்ஸிலரேசன்' (Acceleration) பெற்று, மேலும் வேகத்தை அதிகரித்து, விரிவடைந்து சென்று கொண்டே இருக்கிறது. இது நம்பவே முடியாத, சாத்தியமே இல்லாத ஒன்று. இதை அவதானித்த விஞ்ஞானிகள் பிரமித்துப் போய் இருக்கின்றனர். அண்டம் விரிவடைவதற்குரிய வேகவளர்ச்சியைக் கொடுப்பது யார்? இதை ஆராய்ந்த போதுதான் டார்க் எனர்ஜி பற்றிய அறிவு கிடைக்கப் பெற்றது. டார்க் எனர்ஜி மிகவும் வீரியம் வாய்ந்த ஒரு சக்தி. பூமியில் அதற்கு இணையான ஒரு சக்தி கிடையவே கிடையாது. இந்த டார்க் எனர்ஜியை மனிதன் எப்போது கையாளும் வைகையில் தன் விஞ்ஞான அறிவைப் பெற்றுக் கொள்கிறானோ, அப்போது ஒளியின் வேகத்தில் பயணிப்பது என்பதெல்லாம் வெகு சுலபமான காரியமாக ஆகிவிடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்தக் காலமும் வெகு தொலைவில் இல்லை என்பது போலத்தான் தெரிகிறது.


ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்யும் மனிதன், எதிர்காலத்துக்கு பயணம் செய்யலாம் என்ற கோட்பாட்டைத் தந்த ஐன்ஸ்டைன், இறந்தகாலத்துக்கு மனிதனால் எப்படிப் பயணம் செய்யலாம் என்பதையும் சொல்லியிருக்கிறார். இறந்தகாலத்துக்குச் செல்லும் வாசல் கதவாக நமக்கு ஐன்ஸ்டைன் திறந்து விட்டுச் சென்றது ஒரு வினோதமான ஒன்றை. அதன் பெயர் 'புழுத்துளை' (Wormhole) என்பதாகும். அண்டத்தில் இருக்கும் இரண்டு வெளிகளை புழுப்போன்ற குழாய் வடிவிலான ஒன்று இணைத்து வைத்திருக்கிறது என்று ஐன்ஸ்டைன் வழமை போல கணிதத் தரவுகள் மூலம் நிறுவியுள்ளார். அண்டம் என்பது வளைந்த நிலையிலேயே இருக்கிறது என்றும் அப்படி வளைந்திருக்கும் பகுதிகளில் குழாய் போன்ற அமைப்பின் மூலம் பல ஒளியாண்டுகள் இடைவெளி தூரத்திலிருக்கும் ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்கு சொற்ப நேரத்துக்குள் சென்று விடமுடியும் என்றும் ஐன்ஸ்டைன் கருதினார். இந்த அடிப்படையில், நமது மூதாதையர்கள் வாழ்ந்து வந்த இறந்த காலத்துக்கும் நம்மால் பயணிக்க முடியும் என்பதை அவர் கோட்பாட்டு ரீதியில் நிரூபித்தார்.

நவீன இயற்பியலின்படி, இந்த வோர்ம்ஹோலை அண்டத்தின் எந்த இடத்திலும் நம்மால் உருவாக்க முடியும். வோர்ம்ஹோலின் வாசல் என்பது அணுக்கருவின் அளவுக்கு மிகச் சிறியதாகத்தான் இருக்கும். அதை மிகப் பெரிய சக்தியைக் கொடுத்துத் திறந்தால், மனிதன் பிரயாணம் செல்லும் அளவுக்கு பாரிய ஒரு துளையாக அது திறக்கும். அதனுள் நுழைந்து அண்டத்தின் அடுத்த வெளிக்கு நம்மால் சுலபமாகச் சென்றுவிட முடியும். கேட்பதற்கு அம்புலிமாமா கதை போலவும், ஹாரிபோட்டர் கதை போலவும் தெரியும் இந்த வோர்ம்ஹோல் கதை, அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மனித சாத்தியமுள்ள ஒரு கதைதான். ஆனால், அணுக்கருவின் அளவு சிறியதாக இருக்கும் வோர்ம்ஹோலின் ஒரு முனையைத் திறக்கத் தேவையான சக்தி மனிதனிடம் இன்றைய விஞ்ஞானத்தின் நிலையில் கைவசம் இல்லை. ஆனால் எப்போது மேலே சொல்லப்பட்ட 'டார்க் எனர்ஜி' என்பது மனிதனின் கைவசப்படுகிறதோ, அப்போது இதுவும் சாத்தியமாகிவிடும். வோர்ம்ஹோல் வாசல்களும் திறக்கப்படும்.



நான் இந்தக் கட்டுரை மூலம் உங்களுக்கு சொல்ல வந்தது, மனிதனால் இறந்தகாலத்துக்கோ, எதிர்காலத்துக்கோ  பயணம் செய்ய முடியும் என்ற கோட்பாட்டைப் புரிய வைக்க அல்ல. எனது நோக்கமே வேறு. ஒளியின் வேகத்தில் பயணம் செய்வது, வோர்ம்ஹோலினூடாகப் பயணம் செய்வது, இறந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றிற்குப் பயணம் செய்வது என அனைத்தும் இன்றுவரை கோட்பாடுகளாகத்தான் இருகின்றன. ஆனாலும் அவை சாத்தியமாகத் தேவைப்படும் அறிவியல் வளர்ச்சியை மனிதன் எட்டவில்லை. ஆனால்,  என்றாவது ஒருநாள் அந்த வளர்ச்சியை மனிதன் அடைவான். அப்போது, அவனால் இறந்தகாலத்துக்கும், எதிர்காலத்துக்கும் பயணம் செய்ய முடியும் என்பதில் ஐயமில்லை. ஒளியின் வேகத்தை மனிதனின் இன்றைய நிலையில் அடைய முடியாது, வோர்ம்ஹோலை மனிதனால் திறக்க முடியாது என்றுதான் இதை மறுக்கும் விஞ்ஞானிகள் கூடச் சொல்கிறார்களேயொழிய, ஒளியின் வேகத்தை அடைந்தால் எதிர்காலத்தை அடைய முடியும் என்பதை அவர்களும் மறுக்கவில்லை. ஆகையால் எதிர்காலத்துக்கு செல்லலாம், இறந்தகாலத்துக்குச் செல்லலாம் என்பது அறிவியலின்படி பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயமாகிறது. இந்த நிலையில்தான், நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன கூற்றுக்கு மீண்டும் வருகிறோம். 

இறந்தகாலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் மனிதனால் செல்ல இயலுமோ இயலாதோ என்பது ஒருபுறமிருக்க, செல்லலாம் என்ற முடிவை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால், இந்தக் கணத்தில் நாம் சென்றடையும் நிலையில்தான் இறந்தகாலமும், எதிர்காலமும் இருக்கிறது என்பது புரியும். இந்தக் கணத்தில் என்னால் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள இறந்தகாலத்துக்குச் செல்ல முடியும் என்றால், அது எப்படி இறந்தகாலம் ஆக முடியும்? அது போல, இனிவரும் 4000 ஆண்டு எதிர்காலத்திற்கு என்னால் இந்தக் கணமே செல்ல முடியும் என்றால் அது எப்படி எதிர்காலம் ஆக முடியும்? இறந்தகாலமும், எதிர்காலமும் இன்றே அடையும் நிலையில்தான் எப்போதும் இருக்கின்றன என்றல்லவா அர்த்தமாகிறது. நேற்று, முந்தாநேற்று, கடந்த வருடம், நான் பிறந்த வருடம், யேசுநாதர் பிறந்த வருடம் என எல்லாக் காலங்களுக்கும் இப்போதே நான் பயணம் செய்ய முடியும் எனின், அந்த ஒவ்வொரு நாட்களும் இன்று நிகழ்காலத்திலேயே, உறைந்த நிலையில் இருக்கிறது என்றுதானே அர்த்தமாகிறது. அதாவது ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலங்களாக நடந்து முடிந்த ஒவ்வொரு நாட்களும், அவற்றின் ஒவ்வொரு கணங்களும், ஒரு போட்டோப் பிரதியைப் போல பதிந்தபடி இருக்கிறது என்றாகிறதல்லவா? அதுபோல எதிர்காலத்தில் நடக்கப் போவதும் ஏற்கனவே நடைபெற்ற நிகழ்வுகளாக, போட்டோப் பிரதிகளாக பதியப்பட்டு இருக்கின்றன என்றாகிறதல்லவா?

இப்போது நீங்கள், "போட்டோக்களாக உறைந்த நிலையில் இருப்பதாக சொல்வது நமது வாழ்க்கையைப் பற்றியது. வாழ்க்கை என்பது ஒரு வீடியோக் காட்சி போல இயங்கும் நிலையில் நடைபெறுவதல்லவா? அப்படி என்றால், அவை எப்படிப் போட்டோப் பிரதிகள் போல இருக்க முடியும்?" என்று கேட்கலாம். ஆனால், ஒரு வீடியோப் படக்காட்சியோ, திரைப்படமோ அசையும் நிலையில் நமக்குத் தெரிந்தாலும், அவை ஒவ்வொன்றும் தனித்தனிப் படங்கள்தான். ஒரு செக்கனுக்கு 25 முதல் 30 வரையுள்ள போட்டோக்களை இயங்க வைத்தால், நகரும் வீடியோக் காட்சிகளை நாம் பார்க்க முடியும். அதுபோல, ஒவ்வொரு கணத்திலும் நடைபெறும் அண்டத்தின் அனைத்துக் காட்சிகளும் போட்டோ பிரதிகளாக பதிவு செய்யப்பட்டு இயங்கும் காட்சிகளாக நம்மை நம்ப வைக்கிறது. கேட்கும் போது நம்பவே முடியாத பிரமிப்பான கட்டுக்கதை போல இது தெரிந்தாலும், இறந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் மனிதனால் பயணம் செய்ய முடியும் என்ற கோட்பாடு இருக்கும் வரை இதுதான் உண்மையாக இருக்கச் சாத்தியம் நிறையவே உண்டு. 


இப்போது நான் ஆரம்பத்த்தில் கூறியதை மீண்டும் படித்துப் பாருங்கள்............!

"இறந்தகாலம், எதிர்காலம் என்று எதுவுமே இல்லை. அவை இரண்டும் நிகழ்காலத்திலேயே, அதனுடன் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றன. சொல்லப் போனால், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுமே நாம் நினைப்பது போல இல்லாமல், புகைப்படம் போல உறைந்து போன நிலையில் எப்போதும் இருக்கின்றன. நாம்தான் இல்லாத இந்தக் காலங்களையெல்லாம் இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு பூமியில் வாழ்ந்து வருகிறோம்".

என்ன புரிகிறதா.......?
நேரம் (Time) என்பது என்ன என்று அறிவியல் ரீதியாக ஆராயும் போது, இன்னும் பல வியப்பான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. நம்மால் நம்பவே முடியாத அளவில் அவை நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. நேரம் என்பதை முழுமையாக ஒரே கட்டுரையில் விளக்கிவிட முடியாது. அதனால் அடுத்த இதழில் மேலதிக ஆச்சரியங்களுடன் இதைத் தொடர்கிறேன்..............!

No comments:

Post a Comment