Monday, August 11, 2014

திட்டமிட்டு மறைக்கப்பட்ட சூரியன்

மாபெரும் கண்டுபிடிப்பாளராக இருந்தும் மாற்று சக்திகளால் மறைக்கப்பட்ட ஆச்சரியமான புத்திஜீவி ஒருவரின் கதை இது. உலகில் தோன்றிய கண்டுபிடிப்பாளர்களுக்கெல்லாம் முதல்வன் அவர். சந்திரன்கள் மறைக்க நினைத்த மாபெரும் சூரியன்.
அவர் யாரென்று தெரியுமா?  
உயிர்மையில் வெளிவந்த கட்டுரை இது. படித்துவிட்டு உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள்.
-ராஜ்சிவா-




     'ஒன்றாய் ஒடுங்கியிருந்தவைதான் எல்லாமாக வெளிப்பட்டனவேயொழிய, படைப்பு என்னும் நிகழ்வு அங்கு நிகழவில்லை' என்ற புரட்சிகரமான கருத்தை அந்த மாபெரும் அரங்கில், ஒரு இளம் இந்துத் துறவி சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது, நவீன இயற்பியலின் அடிப்படைக் கோட்பாடான, மதங்கள் அனைத்துமே ஒத்துக் கொள்ளத் தயங்கிய கொள்கையான, பெருவெடிப்புக் கோட்பாட்டைப் பற்றி (Bigbang Theory), ஒரே வரியில் மிகச்சுலபமாக அந்தத் துறவி சொல்லியது, அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தின் எல்லைக்குக் கொண்டு சென்றது. உலகத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து, அறிவியலின் உச்சம் தொட்டிருந்த மேற்கை நோக்கி வந்து, அவர்களுக்கே நவீன இயற்பியலைப் பற்றி ஒரு இந்துத் துறவி புரிய வைக்க முயன்றது, அவர்களே எதிர்பாராதது. அந்தத் துறவி அங்கு வந்திருந்ததே இந்து மதத்தின் பெருமைகளைப் பற்றி, உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான். ஆனால், அவர் இந்து மதத் தத்துவங்களைப் பற்றிச் சொல்லும் போது, அறிவியலையும் புகுத்தித் தன் உரையைக் கொண்டு செல்வார் என்று யாரும் நம்பவில்லை. மேலே கூறிய வசனத்துடன் அவர் நிறுத்திவிடாமல், "ஒவ்வொரு இந்துவின் மனதிலும் ஆழப் பூட்டப்பட்டிருந்த இந்தக் கருத்துத்தான், தற்போது அறிவியலின் முடிவாகவும் வெளிப்பட்டிருக்கிறது" என்றும் சொன்னார். பல அறிஞர்களும், மக்களும் கூடியிருந்த மாபெரும் அரங்கினில், அவர் உரையை, வியப்புடன் திறந்த வாய் மூடாமல் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். பிரபஞ்சம் (Universe), சக்தி (Energy), விசை (Force), ஒருமை (Singularity), இயற்பியல் (Physics), அறிவியல் (Science), வேதியியல் (Chemistry), பருப்பொருள் (Matter) போன்ற நவீன அறிவியலின் அனைத்து அம்சங்களும், சரமாரியாக இவரது உரையில் உட்புகுந்து வெளிவந்து கொண்டிருந்தன. இளம் இந்துத் துறவியின் அந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அவருக்கு அந்நியமானவர்கள். மொழியிலோ, இனத்திலோ, நாட்டிலோ, நிறத்திலோ, எதிலுமே அவருக்கு இணையானவர்கள் இல்லை. ஆனாலும் தங்கள் மொழியிலேயே அந்த இந்துத் துறவி பேசிக் கொண்டிருந்ததை ஒருவிதக் கிறக்க நிலையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் தனது உரையை இப்படித்தான் ஆரம்பித்தார், "அமெரிக்கா வாழ் சகோதரிகளே, சகோதரர்களே!". அப்படி அவர் தன் உரையை ஆரம்பித்ததுமே, அரங்கிலிருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டியது அடங்க இரண்டு நிமிடங்களுக்கு மேலாக எடுத்தது. அதுவரை "லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென்" என்றே உரைகள் ஆரம்பிக்கப்படுவது பழகிப் போன அமெரிக்கர்களுக்கு, அது ஒரு ஆச்சரியமான தொடக்கமாக இருந்தது.



     இப்போது, நான் மேலே சொன்ன அந்தத் துறவி யாரென்று கண்டு பிடிப்பதில் உங்களுக்கு ஒரு சிரமமும் இருக்கப் போவதில்லை. சிலருக்கு இன்னும் புரியாமல் இருக்கலாம். அந்த இளம் துறவிதான், மேற்கு வங்காளத்தின் அன்றைய கல்கத்தாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 'நரேந்திர தத்தா' என்பவர். பின்னாட்களில், ராமகிருஷ்ண பரமஹம்சர் என்னும் குருவின் மூலமாக 'விவேகானந்தர்' என்று உலகம் முழுவதும் பெயர் சொல்லும்படியாக வெளிவந்தவர். அமெரிக்காவின் சிக்காகோ நகரில், 1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி, நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில், இந்தியாவில் இருந்து கலந்து கொள்ளச் சென்றிருந்த சுவாமி விவேகானந்தரே மேற்படி சிறப்புகளுக்குச் சொந்தக்காரர். சுவாமி விவேகானந்தர் சிக்காகோ நகரில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஆற்றிய உரையைக் கேட்ட அமெரிக்க வாழ் மக்கள், அவரை மெம்பிஸ், போஸ்டன், சான் பிரான்சிஸ்கோ, நியூ யோர்க், லாஸ் ஏஞ்சலீஸ், செண்ட் லூயிஸ் ஆகிய நகரங்களுக்கும் உரையாற்றும்படி அழைத்தனர். அங்கெல்லாம் விவேகானந்தர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, இரண்டு மணி நேரங்களாக நின்ற நிலையில் அந்த உரையை ஒரு மனிதர் கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தது மட்டுமில்லாமல், விவேகானந்தரின் கருத்துகளின் மேல் நிறைந்த ஈடுபாட்டையும் ஏற்படுதிக் கொண்டார். பின்னர் நண்பர்களின் உதவியுடன் விவேகானந்தரை நியூ யோர்க் நகரில் வைத்து சந்திக்கவும் செய்தார். அந்த மனிதரைப் பற்றிச் சொல்லப் பொகும் கட்டுரைதான் இது. அந்த மனிதர் சாதாரண மனிதரல்ல. 19ம் நூற்றாண்டின் மாபெரும் அறிவுஜீவி. இயற்பியலின் தந்தை என்று கூட அவரைச் சொல்லலாம். உலக மக்களுக்காக அவர் பாடுபட்டுக் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் ஆயிரக்கணகில் இருக்கும். ஆனால் அதே உலகத்தால் ஏமாற்றப்பட்டு, வரலாற்றில் திட்டமிட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு துரதிர்ஷ்டசாலி. எதையெதையோ எல்லாம் கண்டுபிடித்த, யார்யாரையோ எல்லாம் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் நம்மில் பலருக்கு, ஆயிரக் கணக்கான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த இவரின் பெயரைச் சொன்னால், "அப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை" என்போம். அந்த அளவுக்கு மறைத்து வைக்கப்பட்ட ஒரு சூரியன் அந்த மாமனிதர். அவர்தான் 'நிக்கோலா டெஸ்லா' (Nikola Tesla).



     "வானொலியைக் கண்டுபிடித்தது யார்?" என்று உலகில் எங்கும், எவரிடமும் கேட்டால், கிடைக்கும் ஒரே பதில், 'இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோனி' என்பதாகத்தான் இருக்கும். இன்று கூட, நம் பிள்ளைகளுக்குப் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பொது அறிவுப் போட்டிகளில், 'வானொலியைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி (Marconi)' என்றே சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பொய்யானது என்பது உங்கள் யாருக்காவது தெரியுமா? உண்மையில் வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? நிக்கோலா டெஸ்லாவேதான். வானொலியைக் கண்டுபிடித்த சம்பவத்தில் டெஸ்லாவை மார்க்கோனி ஏமாற்றிய கதையிலிருந்து என் கட்டுரை ஆரம்பித்தாலும், டெஸ்லா முதன் முதலாக ஏமாந்தது தாமஸ் அல்வா எடிசனிடம்தான் (Thomas Alva Edison). உலகிலேயே சிறந்த கண்டுபிடிப்பாளரும், அறிஞரும் என்று நாம் நம்பியிருக்கும் எடிசன் கூட, ஒரு வகையில் டெஸ்லாவின் கதையில் துரோகியாகச் செயல்பட்டார் என்பதே உண்மை. அது மிகப்பெரிய கதை. முதலில் மார்க்கோனியின் கதையைப் பார்த்த பின்னர் அந்தக் கதைக்கு நாம் வரலாம்.

     1892ம் ஆண்டின் ஆரம்பப் பகுதிகளிலே டெஸ்லா வானொலிக்கான அடிப்படைக் கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றைப் பொருத்தி, வானொலியை உருவாக்கியிருந்தார். அதற்குரிய வரைபடங்களையும் அவர் தயாரித்திருந்தார். அத்துடன் அவற்றை அமெரிக்கக் காப்புரிமை நிலையத்தில் (Patent Office) பதிவும் செய்திருந்தார். ஆனால், டெஸ்லாவின் அதே வரைபடங்களின் அடிப்படையை வைத்துக் கொண்டு, மார்க்கோனி 1895ம் ஆண்டில் வானொலியைக் கண்டுபிடித்ததாக உலகம் முழுவதும் அறிவித்தார். இதை எதிர்த்து டெஸ்லா அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்தார். ஆனால், டெஸ்லாவின் வழக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகத் தள்ளுபடி செய்யப்படது. அதன் பின்னர், மார்க்கோனிதான் வானொலியைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்கள். இந்த அறிவித்தல்களின் பின்னால், பண முதலாளிகளின் பெரும் கைகள் இருந்ததாக அப்பொழுதே பேசப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த மார்கோனி என்பவர் மிகவும் பணம் படைத்த ஒரு வியாபாரியாக இருந்தார். அத்துடன் டெஸ்லாவுக்கு எதிராகப் பல அமெரிக்க முதலாளிகளும் உருவாகி இருந்தார்கள். இவையெல்லாம் சேர்ந்து டெஸ்லாவுக்கு அநீதியைத் தேடிக் கொடுத்தது. இதில் அதிகபட்ச நகைச்சுவையாக, வானொலியைக் கண்டுபிடித்ததற்காக மார்க்கோனிக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், சூரியனை எவ்வளவு காலத்துக்குத்தான் மறைத்து வைக்க முடியும்? 1943ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம், "டெஸ்லாவின் காப்புரிமை பெற்ற ஏழு வரைபடங்களின் அடிப்படையிலேயே மார்க்கோனி, வானொலியைக் கண்டுபிடித்திருந்தார் என்றும், அதனால் வானொலியைக் கண்டுபிடித்த முதல் மனிதராக டெஸ்லாவே விளங்குகிறார்" என்றும் தீர்ப்பு வழங்கியது. இப்படி வழங்கப்பட்ட தீர்ப்புக் கூட பலருக்கு இதுவரை தெரியாமல், வானொலியைக் கண்டு பிடித்தது மார்க்கோனிதான் என்று இப்பொழுதும் சொல்வதுதான் வேதனை தரும் விசயமாகும். இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகபடும் அளவுக்கு, டெஸ்லா என்னும் சூரியனை மறைக்கப் பாடுபட்ட மிகப்பெரிய பணமுதலைதான் தாமஸ் அல்வா எடிசன்.


     தாமஸ் அல்வா எடிசனைப் பற்றி இதுவரை மிகப்பெரிய உயர்ந்த நோக்குப் பார்வையே நம்மிடமெல்லாம் இருந்தது. நாம் பாவனை செய்யும் மின் விளக்குத் தொடங்கி சினிமாப்படம் வரை, தாமஸ் அல்வா எடிசனின் கண்டுபிடிப்புகள் என்ற மரியாதை அவரிடம் நமக்கு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. ஆனால், என்னதான் அவர் ஒரு கண்டுபிடிப்பாளராக இருந்தாலும், கோடி கோடியாகப் பணம் பண்ணும் ஒரு பெருமுதலாளியாகவும் இருந்திருக்கிறார். அதனால் எடிசன் என்னும் பணக்கார வியாபாரி, டெஸ்லாவின் வாழ்க்கையின் அழிவுக்குக் காரணமாகச் சதி முயற்சிகள் செய்திருக்கின்றாரோ என்றே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. ஓரளவுக்கு அந்தச் சந்தேகம் உண்மையும் கூட. இவற்றைப் பற்றியெல்லாம் நாம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், டெஸ்லாவின் வரலாற்றை ஆரம்பத்திலிருந்தே பார்க்க வேண்டும்.  



     இன்று 'குரோஷியா' என்று அழைக்கப்படும், அன்றைய 'சேர்பியக் குடிமகனாக' 10ம் தேதி யூலை மாதம் 1856ம் ஆண்டு டெஸ்லா பிறந்தார். மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர் பட்டங்களைப் பெற்ற டெஸ்லா தன் கனவுகளை மெய்யாக்க, அமெரிக்கா நோக்கித் தன் பயணப்பட விரும்பினார். டெஸ்லாவுக்கு இயல்பிலேயே ஒரு பழக்கம் இருந்தது. அவர் கனவுகளிலும், நினைவுகளிலும் பல காட்சிகளைக் கண்டு கொள்வார். அவை எல்லாமே ஏதோ ஒரு விஞ்ஞானக் கருவியின் கண்டுபிடிப்பிற்கான ஒரு தோற்றமாக இருக்கும். இது ஏதோ கதையளப்பது போல இருந்தாலும், அதில் நிறைய உண்மைகள் இருந்தன. இளைஞனான டெஸ்லா ஒருநாள் தனது நண்பனுடன் சென்று கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு ஒரு காட்சி மனதில் தோன்றியது. உடனே அவர் நண்பனை நிறுத்தித் தரையில் தான் கண்ட அந்தக் காட்சியின் வடிவத்தை வரைய ஆரம்பித்தார். வரைந்த பின்னர் அதற்கான விளக்கத்தையும் நண்பனுக்குச் சொல்லவும் ஆரம்பித்தார். டெஸ்லா வரைந்தது மோட்டார் (Motor) ஒன்றின் அடிப்படை வரைபடம். ஆனால், வழமையான மோட்டாரின் வரைபடம் போல இல்லாமல், வித்தியாசமாக அது காணப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் 'நேர் மின்சாரமே' (Direct Current - DC) மின் சாதனங்கள் அனைத்தும் இயங்குவதற்குப் பாவிக்கப்பட்டது. மின் மோட்டார்கள் கூட, நேர் மின்சாரத்தின் மூலமாகவே இயக்கப்பட்டன. டெஸ்லாவுக்குத் தோன்றிய தோற்றம் இதற்கு எதிரானதாக இருந்தது. அது மாற்றுத் திசை மின்னோட்டத்தின் (Alternating Current -AC) மூலம் இயங்கும் மோட்டார் ஒன்றின் வடிவமாக இருந்தது. அப்படியொரு மின்சாரக் கருவியை அந்த நேரத்தில் யாரும் கண்டிருந்ததே இல்லை. டெஸ்லா தன் நண்பனிடம் அதுபற்றித்தான் விளக்கம் கொடுத்தார். அத்தோடு, "நான் அமெரிக்காவுக்குச் சென்று நயாகரா நீர்வீழ்ச்சியை என் கைக்குள் கொண்டு வந்து அதன் மூலம் மின்சாரத்தை உட்பத்தி செய்வேன்" என்றும் சொன்னார். நயாகரா நீர்வீழ்ச்சியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை சிறுவனாக இருக்கும் போதே டெஸ்லா கற்பனை செய்திருந்தார். 




     1884ம் ஆண்டு அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதற்கான சூழ்நிலை டெஸ்லாவுக்கு உருவாகியது. அமெரிக்காவில் காலடியெடுத்து வைத்த டெஸ்லா, நேரே போய் நின்றது தாமஸ் அல்வா எடிசனிடம்தான். எடிசனிடம் அந்த அளவுக்கு பர்றும், மரியாதையும் வைத்திருந்தார் டெஸ்லா. தன் முனே நின்ற இளைஞன், தன்னையே ஒருநாள் புரட்டிப் போடுவான் என்று அப்போது எடிசன் நினைத்திருக்கவில்லை. மிகவும் புத்திசாலியாகக் காணப்பட்ட அந்த இளைஞனை தனக்குக் கீழே பணிபுரிவதற்கு வைத்துக் கொண்டார். எப்போழுதும் விதவிதமான புதிய கண்டுபிடிப்புகளுடன் எடிசனிடம் வந்து நிற்பார் டெஸ்லா. புத்திசாலியான டெஸ்லாவைக் கண்டு பயமும், மரியாதையும் எடிசனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. டெஸ்லா கண்டுபிடித்துக் கொண்டுவருபவற்றையெல்லாம் எடிசன் தனது பெயரில் காப்புரிமைக்காகப் பதிந்து கொண்டதாக ஒரு வதந்தியுமுண்டு. எடிசனின் பல கண்டுபிடிப்புகள் டெஸ்லாவுடையதுதான் எனச் சொல்பவர்களும் உண்டு. ஒருநாள் டெஸ்லா தான் முன்னர் கண்ட மாற்றுத் திசை மின் மோட்டாரின் வரைபடத்துடன் எடிசனிடம் வந்தார். நேர்மின்சாரத்தை விட, மாற்றுத்திசை மின்சாரம் எந்த அளவுக்குச் சிறந்ததாக இருக்கும் என்பதை, எடிசனுக்குப் படம் கீறி விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார். டெஸ்லாவின் நல்ல காலமோ, கெட்ட காலமோ எடிசனுக்கு அந்த விசயத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. நேர் மின்சாரம் மூலம் எடிசன், நியூயோர்க் சிட்டி முழுவதற்கும் மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருந்தார். சொல்லப் போனால் எடிசனின் மின்சாரக் கம்பெனி அமெரிக்கா முழுவதும் நேர்மின்சாரம் மூலமாக மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருந்தது. அதற்கெனப் பெரிய இயந்திரங்களையும் அவர் பயன்படுத்தி வந்தார். பல கோடி டாலர்கள் பணத்தைக் கொட்டிச் செலவு செய்து, அந்தத் திட்டத்தை நடை முறைப்படுதி வந்தார். ஆனால், அதைவிடப் பலமடங்கு பணத்தை லாபமாகப் பெற்றுக் கொண்டும் வந்தார். அதனால், இந்த மாற்றுத்திசை மின்சாரத் திட்டம் அவருக்கு எரிச்சலையே கொடுத்தது. இந்தக் காரணத்தினால் டெஸ்லா, எடிசனின் கம்பெனியில் பணிபுரிவதிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால், டெஸ்லாவுக்கு வேறு ஒரு புதிய இடத்திலிருந்து அழைப்பு வந்தது.



     அமெரிக்காவில் வாழ்ந்த கோடீஸ்வரனாகிய 'ஜார்ஜ் வெஸ்டிங்ஹௌஸ்' (George Westinghouse) என்பவர் டெஸ்லாவின் மாற்றுத்திசை மின்சாரத் திட்டத்துக்கு உதவுவதாகவும், அதற்குரிய பணத்தை முதலிடுவதாகவும் சொன்னார். டெஸ்லாவின் பாதையிலும் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. இன்றுவரை உலகிலேயே பயனுள்ள மிகப்பெரிய பத்துக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும், 'மாற்றுத்திசை மின்சார மோட்டார்' டெஸ்லாவால் கண்டுபிடிக்கப்பட்டு, உலகப் பயன்பாட்டுக்கு வந்தது. அதை வெஸ்டிங்ஹௌஸ் உடனடியாகக் காப்புரிமை செய்து கொண்டார். மாற்றுத்திசை மின்சார மோட்டார்களின் பயன்பாட்டை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு டெஸ்லா முயன்ற போது, எடிசனால் பலவிதமான தடைகள் ஏற்படுத்தப்பட்டன. டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள் மக்களுக்கும், மிருகங்களுக்கும் உயிராபத்தை விளைவிக்கக் கூடியவை என்று வெளிப்படையாகவே அறிக்கையையும் எடிசன் சமர்ப்பித்தார். ஆனால், இவற்றையெல்லாம் டெஸ்லா முறியடித்து, மாற்றுத்திசை மோட்டார்களே சிறந்தது என்பதை நிரூபித்தார். அதுவரை 'மின்சாரப் போர்' என்று அழைக்கப்பட்ட நேர் மின்சாரமா? மாற்றுத்திசை மின்சாரமா? என்ற போட்டியில், டெஸ்லாவே வென்றார். எடிசனால் அந்தத் தோல்வியைத் தாங்கவும் முடியவில்லை. மறக்கவும் முடியவிலை. இன்றுவரை டெஸ்லாவின் இந்தக் கண்டுபிடிப்பால் மக்களாகிய நாம் மிகவும் பயனடைந்து கொண்டுவருகிறோம். அமெரிக்கா, ஐரோப்பா எங்கும் மாற்றுத்திசை மோட்டார்களே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. வெஸ்டிங்ஹௌஸ் இதன் மூலம் பல கோடி டாலர்கள் பணத்தைச் சம்பாதித்தார். அதன் அடுத்த கட்டமாக, முப்பது வருடங்களுக்கு முன்னர் டெஸ்லா கண்ட நயாகரா கனவும் வெஸ்டிங்ஹௌசின் உதவியினால் நிறைவேற்றப்பட்டது. நயாகரா நீர்வீழ்ச்சி வீழும் இடத்தில், இராட்சச மோட்டார்களை அமைத்து, அவை நீர்வீழ்ச்சியின் வேகத்தினால் சுற்றுவதால் பெறப்படும் மின்சாரத்தினால், 'பஃப்பலோ' (Buffalo) நகரத்துக்கே மின்சாரம் வழங்கப்பட்டது. அந்தக் காப்புரிமை அனைத்தையும் வெஸ்டிங்ஹௌஸன் கம்பெனியே பெற்றுக் கொண்டது.



     டெஸ்லாவிடம் இன்னுமொரு விசித்திரமான பழக்கமும் இருந்தது. தான் ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்து விட்டால், அதன் பின்னர் அதில் அதிக நாட்டம் கொண்டிருக்க மாட்டார். தன்னுடைய அடுத்த கண்டுபிடிப்புக்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்துவிடுவார். ஒரே சமயத்தில் பல கண்டுபிடிப்புகளிலும் அவர் ஈடுபட்டதுண்டு. டெஸ்லாவின் கண்டுபிடிப்பால், பணத்தை முதலிட்டவர்களெல்லாம் கோடி கோடியாகச் சம்பாதிக்க ஆரம்பிக்க, அந்தப் பணத்தில் எந்தவொரு நாட்டமுமில்லாமல், தன் அடுத்த கண்டுபிடிப்புக்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கிவிடுவார் டெஸ்லா. பெண்களிடமும் கூட அவருக்கு நாட்டம் அதிகம் இருக்கவில்லை. எத்தனையோ பெண்கள் அவரிடம் காதலிப்பாதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கெஞ்சிக் கேட்டும், அவர் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. மிக அழகியான ஒரு நடிகை கூட டெஸ்லாவைக் காதலிப்பதாகச் சொன்னார். அவரின் காதலைக் கூட டெஸ்லா ஏற்கவில்லை. தன் கடைசிக் காலம்வரை தனிமையாகவே இருந்து இறந்தார் டெஸ்லா. எப்போதும் ஆராய்ச்சி, ஆராய்ச்சிதான். டெஸ்லா இறக்கும் வரை 1200 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்திருக்கிறார். அதில் அவர் 700 க்கும் மேலான கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார். உங்களால் நம்பவே முடியாதவற்றையெல்லாம் டெஸ்லா கண்டுபிடித்துள்ளார். அவற்றின் பெயர்களைச் சொன்னால், "அட! இதையெல்லாம் டெஸ்லாவா கண்டுபிடித்தார்?" என்று நீங்கள் வாயடைத்துப் போவீர்கள். குறிப்பாகச் சொல்லப் போனால், வானொலி, எக்ஸ்ரே படம், வயர்லெஸ் கருவி, நியான் விளக்கு, இண்டக்ஸன் மோட்டார், மாற்றுத்திசை மோட்டார், ரிமோட் கண்ட்ரோல், டெஸ்லா காய்ல், நின்ற நிலையில் இருந்து விமானம் எழுந்து பறப்பதற்கான பொறிமுறை, புளோரசான் விளக்கு என்பவை இவைகளில் விசேசமானவை.



     இத்தனை கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த ஒருவர் எப்படி மக்களுக்குத் தெரியாமல், வரலாற்றிலிருந்து மறைக்கப்பட முடியும்? அனைவரும் தெரிந்து கொண்டு, புகழின் உச்சிக்கே சென்று அமர்ந்திருக்க வேண்டிய ஒருவரல்லவா இவர். இவரால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கண்டுபிடிப்புகள்தான் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று பலர் இப்போது நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய விரும்பிய அவரது நல்ல மனசே, அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எடிசனுடன் முரண்பட்டிருந்த காலங்களில் அதாவது 1898ம் ஆண்டளவில் டெஸ்லாவின் ஆராய்ச்சிச் சாலை முற்றாகத் தீயினால் எரிந்து கருகியது. அதுவரை டெஸ்லா கண்டுபிடித்த ஆராய்ச்சிகளின் குறிப்புகள், கருவிகள் அனைத்துமே அந்தத் தீயில் எரிந்து சாம்பலாயின. மர்மமான முறையில் ஏற்பட்ட அந்தத் தீவிபத்துக்குக் காரணம் கடைசி வரை கண்டுபிடிக்கப்படவேயில்லை. ஆனால், அதற்கு யார் காரணமாக இருக்கலாமென நீங்கள் நினைக்கிறீர்களோ, அவரே காரனமாகவும் இருந்திருக்கலாம். எல்லாமே பணம் செய்யும் வேலை. தீ விபத்தினால், அனைத்தையும் இழந்தார் டெஸ்லா. அதனால், தான் வசித்த இடத்திலிருந்து, கொலராடோ ஸ்பிரிங் (Colorado Spring) என்னும் இடத்துக்குச் சென்றார். கொலராடோ ஸ்ப்ரிங் என்பது மிகவும் அமைதியான கிராமப் பாங்கான ஓரிடம். அங்கிருந்தபடி டெஸ்லா உலகமே வியக்கும்படியான ஒரு கண்டுபிடிப்புக்கு வித்திட்டார்.


     கொலராடோ ஸ்ப்பிரிங்கில் டெஸ்லா அமைத்துக் கொண்ட சோதனைச்சாலையில், உயரமான கோபுரம் போன்ற ஒன்றை உருவாக்கினார். அந்தக் கோபுரத்தின் உச்சியில் உலோகத்தாலான பந்து ஒன்றையும் அமைத்தார். அதிலிருந்து அவர் 'பிராந்திய வளிமண்டல அலை' (Terrestrial Atmospheric Wave) என்பதை அடிப்படையாகக் கொண்டு, 'உயர் அதிர்வெண்' மின்சாரத்தை (High Frequency Current) உருவாக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தார். கொலராடோ ஸ்பிரிங்கில் அதற்கான பரிசோதனையிலும் வெற்றி பெற்றார். இந்த உயர் அதிர்வெண் மின்சாரத்தை, எந்தக் கருவிகளும், செலவுகளும் இல்லாமல் இயற்கையாகவே தயாரிக்கலாம் என்றும் முடிவுக்கு வந்தார். அதாவது பூமியைச் சுற்றியிருக்கும் வளிமண்டலமான அட்மாஸ்பியரின் உதவியுடன் எந்தச் செலவும் இல்லாமல் அதிகமான மின்சாரதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கண்டுபிடித்தார். உலகம் முழுவதும் இலவச மின்சாரத்தை இதன் மூலம் வழங்கலாம் என்று கனவும் கண்டார். அந்தக் கனவே டெஸ்லாவின் வீழ்ச்சிகான புதை குழியாக அமைந்தது.



     டெஸ்லா உடனடியாக ஜே.பி.மோர்கன் (J.P.Morgen) என்னும் கோடீஸ்வரனைத் தொடர்பு கொண்டார். 'ரேடியோ, வயர்லெஸ் பரிசோதனை செய்வதற்காக அவர் உதவி செய்வாரா?' என்று கேட்டார். அதற்கு மோர்கன் உடன் சம்மதித்தார். கொலராடோ ஸ்பிரிங் நகரில் பரிசோதனை செய்த கருவியைப் போலப் பலமடங்கு பெரிய கருவியை நியூயார்க் நகரில் உருவாக்கினார். நூறடி உயரமான கோபுரமொன்று கட்டப்பட்டது. அதன் மேலே மிகப் பெரிய உலோகக் கோளம் போல ஒன்றும் பொருத்தப்பட்டது. இந்த ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்த போது, மோர்கனுக்கு அந்தக் கோபுரம் எதற்காகக் கட்டப்படுகின்றது என்ற உண்மை தெரிய வந்தது. அவர் டெஸ்லாவை அழைத்து விசாரிக்க, 'உலகம் முழுவதுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டம்தான் அது' என்ற உண்மையை டெஸ்லா உடைத்தார். மோர்கன் மட்டுமில்லை, உலகில் இருக்கும் எந்தக் கோடீஸ்வரனும் அப்படியானதொரு திட்டத்துக்கு சம்மதிக்க மாட்டான் என்பதை டெஸ்லா புரிந்து கொண்டிருக்கவில்லை. மக்களுக்கு மின்சாரம் விற்பனை செய்வது என்பது உலக முதலைகளின் மிகப்பெரிய வியாபாரங்களில் ஒன்று. அதை இலவசமாக மக்கள் பெற்றுக் கொள்ள எந்தப் பணக்காரன் ஒத்துக் கொள்ளப் போகிறான்? உடனடியாக டெஸ்லாவுடனான ஒபந்தத்தை ரத்து செய்தார் மோர்கன். அடுத்த சில நாட்களில் யுத்த ஏற்பாடுகளின் நிமித்தமாக அந்தக் கோபுரம் அரசாங்கத்தினால் உடைக்கப்பட்டது. டெஸ்லாவும் மனமுடைந்து ஒடுங்கிப் போனார். அதன்பின்னர் டெஸ்லாவுக்கு உதவி செய்ய எந்தப் பணக்காரனும் வரவில்லை. டெஸ்லாவின் வாழ்க்கை முறைகளும் மாறத்தொடங்கின. தனிமையிலேயே தனது நேரங்களை அவர் கழிக்க விரும்பினார். புறாக்களுடன் தன் காலங்களைச் செலவிட்டார். தனிமையில் அவர் இருந்தாலும், தன் ஆராய்ச்சிகளை  மட்டும் விட்டுவிடவில்லை. இறுதிக் காலங்களில் டெஸ்லா இறங்கிய ஆராய்ச்சிதான் பயங்கரமானது.        

     நவீன இயற்பியல் அணுவின் துகள்களைப் பிரித்தறிந்து அவற்றின் ஆற்றல்களைப் பற்றிப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நேரமது. டெஸ்லாவும் தன் ஆராய்ச்சிகளை அணுத்துகள்கள் (Particles) பக்கம் திருப்பினார். எதையுமே மிகவித்தியாசமாகச் சிந்திக்கும் டெஸ்லா, அதிலும் வித்தியாசமாகவே சிந்தித்தார். 'மின்னேற்றப்பட்ட துகள்களைக் குவியப்படுத்தும் ஆயுதம்' (Charged Particle Beam Weapon) என்று சொல்லபடும் ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் டெஸ்லா ஈடுபட்டார். அதை 'டெத் ரே' (death Ray) என்றே பலரும் பின்னாட்களில் அழைத்தார்கள். அந்த நேரத்தில் ஹிட்லரின் விமானங்கள் அமெரிக்காவைத் தாக்கலாமோ என்ற அச்சம் பரவலாக இருந்தது. அப்படி விமானங்கள் தாக்க வந்தால், அவற்றை வானில் இருக்கும் போதே, இந்த ஆயுதத்தின் மூலம் சிதைத்து விடலாம். அன்றும், இன்றும் கதைகளிலும், விஞ்ஞானத் திரைப்படங்களிலும் மட்டுமே அப்படியொரு ஆயுதத்தை நாம் கற்பனை செய்திருக்கிறோம். ஆனால் டெஸ்லாவோ அப்படியொரு ஆயுதத்தை உருவாக்குவதற்கான அனைத்து வடிவங்களையும் தயார்படுத்தி வைத்திருந்தார். இந்த ஆயுதம் விஞ்ஞான உலகில் மிகப்பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தி இருக்கும். 200 கிலோமீட்டர் பரப்பளவில் பறந்து கொண்டிருக்கும் அத்தனை விமானங்களையும், ஒரே சமயத்தில் இந்த ஆயுதம் செயலிழக்க வைக்கும் என்று டெஸ்லாவால் சொல்லப்பட்டது. இரண்டாம் உலகப் போரிற்கான ஆயத்தங்கள் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது. தனது கண்டுபிடிப்பைப் பற்றி அமெரிக்க அரசுக்கு அறிவித்தார் டெஸ்லா. அத்துடன் தன் கண்டுபிடிப்பைப் பற்றி வெளிப்படையான அறிக்கையையும் வெளியிட்டார். டெஸ்லா அப்படி ஒரு ஆயுதத்தைக் கண்டுபிடித்திருந்தாரா? அல்லது அதற்கான மாதிரி வடிவத்தை உருவாக்கி வைத்திருந்தாரா? அல்லது அதுபற்றி விளக்கமான வரைபடங்களை மட்டும் வைத்திருந்தாரா? என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அதன் பின்னர் நடந்த அனைத்துமே மர்மங்கள்தான்.

     டெஸ்லாவைச் சந்திக்கத் திடீரென அவரது மைத்துனர் முறையிலான ஒருவர், சொந்த நாட்டிலிருந்து வந்திருந்தார் என்று சொல்லப்பட்டது. அப்போது அந்த நாடுகளெல்லாம் சோவியத் ரஷ்யாவின் கைகளிலேயே இருந்தன. அதனால், டெஸ்லா உருவாக்கிய ஆயுதத்தை ரஷ்யா பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறது என்ற பேச்சு இருந்தது. இவையெல்லாவற்றையும் மீறி, 1943ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி, நியூயோர்க்கர் ஹோட்டல் அறையொன்றில் இறந்தார் டெஸ்லா. டெஸ்லா இறந்த அடுத்த கணம், அமெரிக்க அரசின் உளவுப்படையினர் டெஸ்லாவின் அறைக்குள் நுழைந்து அவரது அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கான குறிப்புகளையும் கொண்டு சென்றது. டெஸ்லாவின் அறைக்குள் 'டெத் ரே' என்று சொல்லப்பட்ட அந்த ஆயுதத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் இருக்கவில்லை என்று அமெரிக்கா தலையில் அடித்துச் சத்தியம் செய்தது. வழமையான அமெரிக்காவின் சத்தியம்தான் அது. இந்த ஆயுதத்தின் மர்மத்தை அடியோடு குழி தோண்டிப் புதைக்க வேண்டுமாயின், அதைக் கண்டுபிடித்த ஒருவரின் வரலாற்றையே மக்கள் அதிகம் தெரிந்து கொள்ளாமல் பார்க்க வேண்டும் என்ற முடிவுகளும் எடுகப்பட்டது. அதனால், ஒரு பிரகாசமான சூரியனை பெட்டியொன்றில் பூட்டி மறைத்தார்கள் அவர்கள். பின்னாட்களில் அமெரிக்கா ற்த் ரே ஆயுதத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

     சூரியனை எப்படி மறைத்தாலும், அதன் பிரகாசம் என்றாவது பீறிக் கொண்டு வெளிவரும். இன்றைய இணையத்தளக் காலங்களில், டெஸ்லாவின் அனைத்து வரலாறும் மக்களுக்கு ஒவ்வொன்றாக தெரிய ஆரம்பித்தது. இதுவரை உலகில் தோன்றிய கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்தியில், மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராக டெஸ்லாவே திகழ்கிறார் என்று சொன்னால் அதில் எந்தப் பொய்யுமில்லை.


-ராஜ்சிவா-

No comments:

Post a Comment