Sunday, August 10, 2014

நிலவுக்குப் போன கதை நிஜமா? பகுதி II

சந்திரனில் மனிதன் கால் வைத்ததை மட்டும் மையமாக வைத்து எழுதி உயிர்மையில் வெளிவந்த  'நிலவுக்குப் போன கதை நிஜமா?' என்ற கட்டுரையின் இரண்டாம் பகுதி உங்கள் பார்வைக்காக........!

-ராஜ்சிவா-



'வாஸ்டொக் 1' (Vostok 1) விண்கலம், 1961ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி  ரஷ்யாவினால் விண்வெளிக்குச் செலுத்தப்பட்டது. அந்த விண்கலத்தில், விண்வெளிக்குப் பயணம் செய்யும் முதல் மனிதன் என்னும் பெருமையைப் பெறப்போகும் 'யூரி ககாரின்' (Yuri Gagarin) என்னும் வரலாற்று மாமனிதர் அமர்ந்திருந்தார். யூரி ககாரினைச் சுமந்தபடி, 'வாஸ்டொக் 1' விண்கலம் விண்வெளிக்குச் சென்று, பூமியை ஒரு சுற்றுச் சுற்றி வந்தது. 1 மணி 48 நிமிடங்கள் பூமியைச் சுற்றிய யூரி ககாரின், மீண்டும் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தார். ரஷ்யாவுக்கும் தனக்கும் இதன் மூலம் பெருமை சேர்த்துக் கொண்ட யூரி ககாரினை உலகமே வியந்து பாராட்டியது. ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கை, அமெரிக்காவுக்கு மாபெரும் சவாலாக இருந்தது. ரஷ்யா சாதித்ததை விட உயர்ந்ததாக, உலகம் வியக்கும் படியான ஒரு காரியத்தை விண்வெளியில் செய்தால் மட்டுமே பனிப்போரில் ரஷ்யாவை வென்றதாகும் என்ற நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. இதற்கு மேலே அமெரிக்கா செய்யக் கூடியதாக இருந்தது ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்று, தினம் தினம் நம் கண்முன்னே காட்சி தந்து கொண்டு மனிதனைத் தன்னிடம் வா..! வா...! என்று அழைத்துக் கொண்டிருந்தது. அதுதான் நிலா. அமெரிக்காவின் மானம், மரியாதை இரண்டையும் ஒன்று சேரக் காப்பாற்றும் தேவதையாக, உயரத்தில் அமைதியாகக் காய்ந்து கொண்டிருந்தது அந்த 'நிலா'.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த கென்னடி, 'அமெரிக்கா நிலாவுக்கு மனிதனை அனுப்பப் போகிறது' என்ற செய்தியை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக 1969ம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் அல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூவருடன் 'அப்போலோ 11' விண்கலம் நிலாவை நோக்கிப் பயணித்தது. முதல் மனிதனாக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும் தன் காலடியையும் நிலாவில் பதித்தார். ரஷ்யாவிடம் இழந்த மரியாதையை இதன் மூலம், மீண்டும் பலமடங்காக அமெரிக்கா திருப்பிப் பெற்றுக் கொண்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி அமெரிக்காவுக்கு நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 'நிலாவுக்கு மனிதன் சென்றது பொய்' என்னும் எதிர்ப்புக் குரல் பலமாக எழுந்தது. இப்போது அமெரிக்காவுக்கு எதிரான குரல், எதிரியான ரஷ்யாவிடமிருந்து வரவில்லை. அது அமெரிக்காவிலிருந்தே வந்தது. 'கான்பிரஸித் தியரி' என்னும் பெயரில் வரிசையாகக் குற்றச்சாட்டுகள் வீசப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றையும் என்னவென்று நாம் பார்க்கலாம். அத்துடன் அவற்றிற்கான விளக்கங்களையும் பார்க்கலாம். 



* அப்போலோ 11 மட்டுமல்ல, எந்த ஒரு அப்போலோ மிசனும் சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லவில்லை என்பதற்கு மிகமுக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது, 'வான் அலன் கதிர்வீச்சுப் பட்டி' (Van Allen Radiation Belt) என்பதைத்தான். நமது பூமியைச் சுற்றி 'அட்மாஸ்பியர்' என்னும் காற்றுவெளி மண்டலம் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் நம்மில் பலருக்கு இதேபோல மேலும் சில அடுக்குகள் பூமியைச் சுற்றி இருக்கின்றன என்றும், அவை மிகவும் ஆபத்தான கதிர்வீச்சு உடையவை என்றும், மின்னேற்றம் பெற்ற எலெக்ட்ரான்கள், புரோட்டான்கன் போன்ற துகள்களைக் கொண்டவை என்றும் தெரியாது. சூரியனில் இருந்து வரும் பிளாஸ்மாக் துகள்களும், ஏற்றம்பெற்ற அயன்களும் அந்தப் பட்டிகளில் குவிக்கப்பட்டு இருக்கின்றன. நினைக்கவே முடியாத ஆபத்தான கதிரியக்கத்துடன் கூடிய துகள்கள், பூமியைச் சுற்றிக் கிழக்கு மேற்காக வட்டவடிவமாகச் சூழ்ந்து இருக்கின்றன, நாம் உண்ணும் 'டோனட்' (Doughnut) இன் வடிவத்தில் இவை பூமியைச் சூழ்ந்திருக்கின்றன. பூமியில் இருந்து கிட்டத்தட்ட 650 கிலோமீட்டர்களிலிருந்து 6300 கிலோமீட்டர்கள் வரை உள்பட்டியாகவும் (Inner Belt), 10,000 கிலோமீட்டர்களிலிருந்து 65,000 கிலோமீட்டர்கள் வரை வெளிப்பட்டியாகவும் (Outer Belt) என இரண்டு பகுதிகளாக, இரண்டு பட்டிகள் பூமியைச் சூழ்ந்திருக்கின்றன. இந்த இரண்டு பட்டிகளிலும் மனிதனுக்கு மிகமிக ஆபத்தை விளைவிக்கும் கதிரியக்க துகள்கள் (Particles), உயர் மின்னேற்றம் பெற்று, செறிவாகக் காணப்படுகின்றன. இங்கு ஒரு சில நிமிடங்கள் கூட மனிதனால் உயிருடன் வாழமுடியாது. இவற்றினூடாகப் பயணமும் செய்யமுடியாது. விஞ்ஞானம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் கூட, விண்வெளிக்குச் செல்லும் ஆஸ்ட்ரநாட்ஸ் அணியும் உடைகளால் இந்தக் கதிரியக்கத் துகள்களைத் தாங்க முடியாது. இதனாலேயே, இதுவரை மனிதனோ, அல்லது வேறு எந்த உயிரினமோ பூமியில் இருந்து அதிகபட்சம் 400 கிலோமீட்டர்கள் உயரத்துக்குத்தான் விண்வெளிப் பயணமாகச் சென்றிருக்கின்றார்கள்.  நவீன விண்வெளிப் பயணிகள் கூட, இந்த உயரத்தைத் தாண்டியதே இல்லை. ஆனால் 1969 இலிருந்து 1972 வரை சந்திரனுக்குச் சென்ற அப்போலோ மிசன் மட்டுமே இந்த உயரத்தைத் தாண்டின என்று சொல்லப்படுகின்றது. அதுவும் முதலாவதாக பூமியைச் சூழ்ந்திருக்கும் உள்பட்டியை மட்டுமல்லாமல், இரண்டாவதாகவும், மிக ஆபத்தானதுமானதுமான வெளிப்பட்டியையும் ஊடறுத்துச் சென்றிருக்கின்றனர். இது நடந்தது நாற்பது வருடங்களுக்கு முன்னர். விண்வெளி ஆடை வடிவத்திலேயோ, தலைக் கவசத்திலேயோ இப்போதிருப்பது போல இல்லாமல், விஞ்ஞான வளர்ச்சியடையாத நாற்பது வருடத்துக்கு முன்னர் உள்ள நிலையில் சென்றிருக்கிறார்கள். இதற்குச் சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்கின்றனர். இந்த பட்டிகளினுடாகப் போனது மட்டுமில்லாமல், திரும்பியும் வருவது என்று, இரண்டு தடவைகள் ஊடறுத்துச் செல்வது நடக்கவே முடியாத காரியம் என்கிறார்கள். இன்றிருக்கும் நிலையில் கூட இதற்குச் சாத்தியம் இல்லையென்றுதான் கருதுகிறார்கள். அதனால்தான் இப்போதும் கூட, சந்திரனுக்கு மனிதன் செல்லும் திட்டங்களையெல்லாம் 2020ம் ஆண்டுக்கு அப்புறமான திட்டங்களாக அரசுகள் அறிவிக்கின்றன. அமெரிக்க அரசே சந்திரனுக்குச் செல்லும் புதிய திட்டம் பற்றி இப்படித்தான் சொல்லியிருக்கிறது. நான் இந்தப் பட்டிகள் பற்றி எழுதியதை வாசிக்கும் போது, உங்களுக்கு அதன் பயங்கரம் சரியாகப் புரிந்திருக்காது என்றே நம்புகிறேன். அங்கு நடக்கும் விளைவுகளை 'ஷூட்டிங் ஸ்டார்ஸ்' (Shooting Stars) என்றுதான் சொல்கிறார்கள். அதாவது துப்பாக்கியால் சுடப்படும் குண்டுகள் போல, துகள்கள் ஒளிச்சிதறல்களாக அங்கு மோதிக் கொண்டே இருக்கின்றன. அந்தப் பட்டிகளுக்கு மிகவும் கீழே, விண்வெளியில் ஆராய்ச்சிக்கெனச் செல்லும் ஆஸ்ட்ரநாட்டுகள், மிகவும் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டே அனுப்பப்படுகிறார்கள். இப்போது கிடைத்திருக்கும் புதிய தகவல் மேலும் அதிர்ர்சியைக் கொடுப்பதாக இருக்கிறது. அதாவது வலிமையானதும், பயங்கரமானதுமான மூன்றாவது பட்டி ஒன்றையும், 2012 செப்டெம்பரில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தப் புதிய பட்டியைக் கண்டுபிடித்தது நாஸாதான். மனிதன் இந்த மூன்றையும்  தாண்டி, சந்திரனுக்குச் சென்றான் என்பதை நம்பப் பலர் மறுக்கிறார்கள். வான் அலன் பெல்ட்டைத் தாண்டி மனிதன் செல்வது என்பது இப்போதைக்கு சிக்கலான ஒன்றுதான் என்கிறார்கள்.


வான் அலன் பட்டியையும் தாண்டி மனிதன் சந்திரனுக்குச் சென்றான் என்றே வைத்துக் கொள்வோம். அப்போது, சந்திரனில் இறங்கிய மனிதனின் செயல்பாடுகளை படங்களாகவும், காணொளிகளாகவும் எடுத்து அமெரிக்கா வெளியிட்டிருக்கின்றது. அந்தப் படங்களிலும், காணொளிகளிலும் பல முரண்பாடுகளும், ஏமாற்று வேலைகளும் நடைபெற்றிருக்கின்றன என்று சூழ்ச்சிக் கோட்பாட்டாளர்கள், அந்தப் படங்களையே ஆதாரங்களாக வைத்து குறிப்பிடுகின்றனர். அந்தப் படங்களை இந்தக் கட்டுரையில் பல இடங்களில் நீங்கள் பார்க்கும் வண்ணம் தந்திருக்கின்றேன். நீங்களும் அவற்றைப் பாருங்கள். அமெரிக்கா செய்த ஏமாற்று வேலைகள் என்று குறிப்பிடும் சம்பவங்கள் இவைகள்தான்...........!

 * சந்திரனில் இறங்கிய மனிதன், அமெரிக்காவின் கொடியை அங்கு நட்ட போது, அந்தக் கொடி காற்றில் அசைவது போல, இங்கும் அங்கும் அசைவது வீடியோக் காட்சிகளாகக் காட்டப்பட்டது. ஆனால் சந்திரனில் காற்று என்பதே இல்லை. அப்படியெனில் எப்படிக் கொடி காற்றில் அசைந்திருக்க முடியும் என்று கேட்கப்பட்ட கேள்வியை யாராலும் தட்டிக்கழிக்க முடியவில்லை. அந்தக் கொடி அலுமீனியக் கம்பிகளில் மாட்டப்பட்டிருந்தது என்றும், கொடியை நட்ட போது அலுமீனியத்தில் ஏற்பட்ட அதிர்வே, கொடி காற்றில் அசைவது போலத் தோன்றக் காரணம் என்று நாஸாவால் சொல்லப்பட்டாலும், அதை நம்புவது பலருக்குக் கடினமாகவே இருந்தது.

* அப்போலோ மிசனில் எடுக்கப்பட்ட படங்களில் கூட்டல் குறி (Cross Hair) போன்ற அடையாளம் காணப்படுகின்றன. புகைப்படக் கருவியொன்றில், போகஸ் செய்யப்படும் பொருளைக் குறிப்பிடும் வண்ணம் தெரியும் கூட்டல் குறி (+) போன்ற அடையாளம் தெரியுமல்லவா, அந்தக் குறி படங்களிலும் காணப்பட்டன. ஆனால் ஒரு படத்தில் மட்டும் அந்தக் கூட்டல் குறி அடையாளம் பொருளுக்குப் பின்னே மறைந்து காணப்படுகின்றது. இது மிகவும் நகைச்சுவைக்குரியது. இரண்டு படங்களை ஒன்று சேர்க்கும் போது தவறுதலாக நடைபெறும் செயல் போல  இது காணப்படுகிறது. இதைச் சுட்டிக்காட்டி, 'இது ஒன்றே போதும். இவை அனைத்தும் பொய்யென்பதற்கு' என்கிறார்கள். பலரால் அதிகம் விமர்சிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இது முக்கியமானது.

* அப்போலோ 11 இல், சந்திரனுக்குக் கொண்டு சென்றிருந்தது 'காஸல்ப்ளட்' (Hasselblad) என்னும் ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கபட்ட புகைப்படக்கருவியாகும். இன்று புகைப்படத் தொழில்நுட்பம் மிகவும் முன்னேறிய நிலையில் இருக்கிறது. ஆனால் 1969ம் ஆண்டு பெரிய அளவு அது விருத்தியாகவில்லை. கைகளில் தடித்த கையுறைகளையும், தலையில் கவசங்களையும் அணிந்தபடி போகஸ் எதுவும் செய்ய முடியாத நிலையில்தான் சந்திரனில் அனைத்துப் படங்களும் எடுக்கப்பட்டன. ஆனால் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்துமே மிகமிகத் துல்லியமாகவும், தெளிவாகவும் இருந்தன. சந்திரனில் சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும், சூரிய ஒளிக்கு எதிராக எடுத்த படங்களும் துல்லியமாக இருந்தன. இவற்றையும் யாரும் நம்பத் தயாராக இருக்கவில்லை.


* நிழலில் இருக்கும் மனிதனைப் படம் பிடித்த போதும், நிழல் அப்படியே இருக்க மனிதன் மட்டும் வெளிச்சமாகப் பிரகாசமாகப் படங்களில் தெரிகின்றார். ஆனால், அவரும் நிழலில் இருப்பதால் மங்கிய வெளிச்சத்தில் உள்ளவராகத்தான் தெரிய வேண்டும். ஆனால் அப்படியில்லாமல் மனிதர்கள் மட்டும் பிரகாசமாகத் தெரிகிறார்கள்.

* இரவுச் சந்திரனில் இருந்து பூமியைப் படமெடுத்த பொழுது, பூமி நீலநிறமாக தெளிவாகத் தெரிந்தாலும், அங்கு எந்த நட்சத்திரங்களும் காணப்படவில்லை. பூமியிலாவது மேகங்கள் அவ்வப்போது நட்சத்திரங்களை மறைக்கும். மழை காலங்களிலும் நட்சத்திரங்கள் தெரியாது. ஆனால் இவை எதுவுமே இல்லாத சந்திரனில், தெளிவான விண்வெளியில் ஏன் நட்சத்திரங்கள் தெரியவில்லை என்பதும் அதிகமாகவே சந்தேகங்களை வரவழைத்தது. இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. பூமிக்குத் திரும்பிய ஆம்ஸ்ட்ரோங் குழுவினரிடம் பத்திரிகையாளர்கள், "சந்திரனில் இருந்து பார்க்கும் போது, உங்கள் கண்களுக்கு நட்சத்திரங்கள் விண்ணில் தெரியவில்லையா?" என்று கேட்ட போது, அந்த மூவரும் சொல்லி வைத்தால் போல, தங்களுக்கு நட்சத்திரங்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்றார்கள். இதுவும் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்த சம்பவமாகியது.

* சந்திரனில் ஈகிள் இறங்கிய போது, அது தரையில் மோதாமல் இருக்க, கீழ் நோக்கியபடி அதிவேகமாக நெருப்புப் புகை ஜெட் தொழில்நுட்பத்தில் கொடுக்கப்படும். அதனால் ஈகிளின் வேகம் குறைந்து மெதுவாக அது சந்திரத் தரையில் இறங்கும். ஆனால் ஈகிள் இறங்கிய இடத்தில் உள்ள படங்களில், தரையில் அதற்கான எந்தச் சான்றுகளும் காணப்படவில்லை. மிகப்பெரிய அளவில் காற்றழுத்தம் ஈகிள் இறங்கும் போது கொடுக்கப்பட்டதால், சந்திரனின் தரையில் உள்ள அனைத்துமே சிதறியடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் படங்களைப் பார்க்கும் போது அங்கு அப்படி ஒன்று நடந்ததாகத் தெரியவே இல்லை. மாறாக, ஆம்ஸ்ட்ரோங் வைத்த முதல் காலடி மட்டும் மண்ணில் புதைந்தது போல சந்திரனில் படிந்திருந்தது. அந்தக் காலடி படியக் கூடிய மண்ணைக் கூட ஈகிள் சிதறடிக்கப்பண்ணியிருக்குமல்லவா?

* சந்திரனில் மனிதர்கள் நடந்ததாகச் சொல்லும் விடியோக் காட்சிகளில், மெதுவாகப் பாய்ந்து பாய்ந்து செல்வது போன்ற காட்சிகள் காணப்படும். இதற்குக் காரணம் சந்திரனின் ஈர்ப்புவிசை, புவியின் ஈர்ப்புவிசையின் ஆறில் ஒரு பங்கு குறைவாக இருப்பதுதான். ஆனால் அந்த இயக்கத்தைச் சரியாகக் கவனித்தால், சாதாரணமாகப் பூமியில் மனிதனின் இயக்கத்தின் இரண்டரை பங்கு மட்டுமே குறைவாகக் காணப்படுகின்றது. உண்மையில் ஆறில் ஒரு பங்காக அது இருந்திருக்க வேண்டும். அதனால், இந்த வீடியோக் காட்சியை பூமியிலேயே படமாக்கி, 'ஸ்லோமோசன்' முறையில் குறைத்து நமக்குத் தொலைக்க்காட்சிகள் மூலம் காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

* ஒரே படத்தில் காணப்படும் இரண்டு பொருட்களின் நிழல்கள் வேறு வேறு கோணங்களில் தரையில் விழுகின்றன.  சந்திரனுக்கு ஒளி சூரியனில் இருந்துதான் வருகின்றது. ஒரே சூரியனில் இருந்து வரும் ஒளியால் எப்படி இரண்டு கோணங்களில் நிழல்கள் தோன்ற முடியும்? செயற்கையாகப் படம் எடுக்கும் போது, இரண்டு ஒளிவிளக்குகள் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். கொடுத்திருக்கும் படத்தை நீங்கள் அவதானித்துப் பார்த்தால் இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். முக்கியமாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று.

* அப்போலோ 12 சந்திரனில் இறங்கிய போது எடுக்கப்பட்ட படம் ஒன்றில் இருந்த கற்பாறையில் ஆங்கில 'C' எழுத்து காப்பிட்டலில் குறிப்பிடப்பட்டிருந்தது. சந்திரனில் எப்படி ஆங்கில எழுத்து என்ற கேள்விகள் அனைவரையுமே முகஞ்சுழிக்க வைத்தது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் நாஸாவினால் அதற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அந்தப் படத்தில், ஆங்கில எழுத்து லாகவமாக அழிக்கபட்டிருந்தது. முதலில் ஆங்கில எழுத்து இருந்தது எப்படி? பின்னர் அது மறைந்தது ஏன்? இந்த ஒன்றும் மனிதன் சந்திரனுக்குச் சென்றது பொய்யென்பதற்கு முக்கிய ஆதாரமான சாட்சியாக எதிர்ப்பாளர்களால் எடுத்து வைக்கப்படுகிறது.

* வேறு வேறு இரண்டு அப்போலோச் சம்பவங்களில் எடுக்கப்பட்ட இரண்டு படங்களில், மலைகள் போன்ற ஒரே பின்புலக் காட்சிகள் (Background) இருக்கின்றன. ஆனால் தரை மட்டும் வேறு வேறாக இருக்கிறது. இதுவும் மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டாகும்.

* சந்திரனில் பகல் நேரங்களில் வெப்பநிலை 120 சதமபாகைக்கும் அதிகமானது. ஆனால், சந்திரனுக்குச் சென்றவர்கள் அந்த வெப்பநிலையை எப்படித் தாங்கினார்கள் என்ற கேள்வி முக்கியமானது. காரணம் அந்த அளவுக்கு அதிகமான வெப்பநிலை அது. இதுபற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, அதற்கு பதில் கொடுத்த சந்திரப் பயணிகள், 'தாங்கள் மிகப்பெரிய பாட்டரிகளைக் கொண்டு சென்றதாகவும், அவற்றின் மூலம், குளிர்பதன அமைப்பு தங்கள் ஆடைக்குள் ஏற்படுத்தப்பட்டிருந்தது' என்றும் சொன்னார்கள். 1969ம் ஆண்டு ஏசி வசதிக்கான பாட்டரிகளை ராக்கெட்ட்டில் கொண்டு சென்றார்கள் என்று சொல்லப்பட்ட பதிலை யாரும் நம்பத் தயாராக இருக்கவில்லை. அப்படிச் சில நாட்களுக்குத் தேவையான பாட்டரிகள் எத்தனையாக இருந்திருக்கும்? 

* சந்திரனுக்கு பூமியில் இருப்பது போல அட்மாஸ்பியர் என்னும் காற்றுவளி மண்டலம் அறவே கிடையாது. அதனால் அங்கு வரும் சூரிய ஒளி நேரடியாகச் சந்திரனை அடைகின்றது. அவை மிகவும் ஆபத்தான கதிர்களாக இருக்கும். அத்துடன் மிகை வெப்பமாகவும் இருக்கும். கண்ணுக்குத் தெரியாத புற ஊதாக்கதிர்கள், இன்ஃப்ராச் சிவப்புக் கதிர்கள் ஆகியவற்றுடன் சேர்ந்த பல கதிர்களும் அதில் அடக்கம். ஆனால் நாற்பது வருடங்களுக்கு முன்னர் விஞ்னானத்தின் வசதிக் குறைவான ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட தலைக்கவசம் அவற்றையெல்லாம் ஊடுருவ முடியாமல் எப்படித் தாங்கியது என்னும் கேள்வியும் இப்போது எழுகிறது.

இவை தவிர்ந்து சந்திரனுக்குச் சென்று வந்த பயணிகளைப் பூமியில் பேட்டியெடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள், சந்திரப் பயணிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அல்ட்ரின் ஒரு தொலைக்காட்சி நிருபரின் முகத்தில் குத்தும் விட்டார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொல்ல முடியாமல், அவர்களால் கோபங்களை மட்டுமே வெளிக்காட்ட முடிந்தது. இவர்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள் என்று உலகமே ஆச்சரியப்படுகிறது. இதில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மட்டும் விதிவிலக்காக இருந்தார். அவர் சந்திரனுக்குச் சென்று வந்ததன் பின்னர் இறக்கும் வரை எந்த ஒரு மீடியாவுக்கும் பேட்டியென்பதே கொடுத்ததில்லை. எப்போதும் அவர் அமைதியே காத்தார். அவரால் பொய் சொல்ல முடியவில்லை என்ற எண்னம் பலருக்குத் தோன்றியது. சில வருடங்களுக்கு முன்னர், நீல் ஆம்ஸ்ட்ரோங் சர்ச் ஒன்றுக்குச் சென்று திரும்பிய நேரத்தில் சந்தித்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர், பைபிள் ஒன்றைத் தன் கையில் வைத்துக் கொண்டு, "சந்திரனில் நீங்கள் காலடி எடுத்து வைத்தது உண்மைதான் என்று ஒரு வார்த்தை மட்டும் இந்த பைபிளில் கை வைத்தபடி சொல்லுங்கள்" என்று பல தடவைகள் அவரைக் கெஞ்சினார், பணத்தைக் கட்டாக எடுத்துக் காட்டி அவற்றை சர்ச்சுக்கு செலுத்துவதாகவும் சொன்னார். ஆனால் ஆம்ஸ்ட்ரோங் பைபிளைத் தொடவே இல்லை. முகத்தில் எந்தச் சலனமுமில்லாமல் காணப்பட்டார். அவரால் பொய் சொல்ல முடியவில்லை என்று மட்டும் முகத்தில் தெரிந்தது. இந்த நிகழ்வு பலரையும் ஆச்சரியத்துடன் புரட்டிப் போட்டது.

ஆனால், சந்திரனுக்கு மனிதன் சென்றான் என்று நாஸா தயங்காமல் சொல்வதற்கு ஏற்ற சாட்சியம் ஒன்று இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அப்போலோ 11 இல் சென்றவர்கள், ஒளி பட்டுத் தெறிக்கும் ஒரு சதுரமான சாதனத்தை (
The Laser Ranging Retroreflector) தாங்கள் சந்திரனில் இறங்கிய இடத்தில் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். டெக்ஸாசில் அமைந்துள்ள மாக்டொனால்ட் வானிலை அவதானிப்பு நிலையத்திலிருந்து (Texas McDonald Laser Ranging Observatory) அதிக சக்திவாய்ந்த செறிவான லேசர் கதிர்களைச் செலுத்தும் போது, அந்த லேசர் கதிர்கள் சந்திரனில் இருக்கும் ரிஃப்லெக்டரில் பட்டுத் தெறித்து, மீண்டும் பூமியை வந்தடைகின்றது. இதை யாரும் மறுக்கவே முடியாது. இந்த லேசர் ரிஃப்லெக்டரைக் கொண்டு சென்றது அப்போலோ 11 இல் சென்ற மனிதர்கள்தான் என்று நாஸா சொல்கிறது. இந்த ரிஃப்லெக்டர் விசயம் உண்மையும் கூட. "இது ஒன்றே போதும், அமெரிக்கா மனிதனைச் சந்திரனுக்கு அனுப்பியது என்பதற்குச் சான்றாக" என்கிறது நாஸா. ஆனால், இதையும் மறுக்கிறார்கள் கான்ஸ்பிரஸிக் கோட்பாட்டாளர்கள். "ரஷ்யாவும், அமெரிக்காவும் மனிதனில்லா விண்கலங்களாக முன்னரே சில விண்கலங்களைச் சந்திரனுக்கு அனுப்பியுள்ளன. அப்படி அனுப்பியவற்றில் சில சந்திரனில் சரியாகத் தரையிரங்காமல் மோதின என்றும் சொல்லப்பட்டது. அப்படி அனுப்பபட்ட ஆளில்லாத விண்கலமொன்றில்தான் இந்த ஒளித்தெறிப்புக் கருவியை அமெரிக்கா சந்திரனில் வைத்திருக்கிறது. இவை நன்றாகத் திட்டமிட்டுச் செய்த ஒரு காரியம்" என்கிறார்கள் அவர்கள். அத்துடன், "நாம் சந்தேகப்படுவோம் என்று முன்னரே தெரிந்துதானா அப்போலோவில் அந்த லேசர் ஒளித்தெறிப்புக் கருவியை அனுப்பினார்கள்?" என்ற எதிர்க் கேள்வியையும் திருப்பிக் கேட்கிறார்கள்.

 மனிதன் சந்திரனுக்குச் சென்றான் என்னும் சந்தேகம் இன்றும் நீடிப்பதற்கு, அண்மையில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கிளிண்டன் எழுதிய 'மை லைஃப்' (My Life) என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கும் சில வசனங்களும் காரணமாகின்றது. அந்தப் புத்தகத்தின் ஒரிடத்தில், சந்திரனுக்கு மனிதன் சென்றதில் சந்தேகப் இருப்பது போலக் கிளிண்டன் எழுதியிருக்கும் வார்த்தைகள் இன்று சர்ச்சைக்கு உள்ளாகின்றது. எது எப்படியாயினும் சந்திரனுக்கு மனிதன் சென்றது இன்றும் மர்மமான ஒன்றாகவே இருக்கிறது. லேசர் ரிஃப்லெக்டர் மட்டும் சந்திரனுக்கு மனிதன் சென்றதற்கு ஆதாரமாகி விட முடியாது. என்றாலும், நாஸாவையும் நாம் அப்படியே பொய் சொல்கிறது என்று தட்டிக்கழிக்கவும் முடியாது. உண்மை பலருக்குத் தெரிந்துதான் இருக்கிறது. அவை வெளியே வர இன்னும் சில காலங்களாகலாம்.



பிற்குறிப்பு: நிலவில் மனிதன் இறங்கவில்லை அலது இறங்கினான் என்னும் முடிவுகளை இனி நீங்களே சொந்தமாக் முடிவெடுத்துக் கொள்ளலாம். இத்தனை தகவல்களும் சந்தேகங்களின் அடிபடையில் நிறைந்து போயிருக்கின்றன. உண்மை என்பது நிச்சயம் நாஸாவுக்குத் தெரிந்த ஒன்றுதான். அது எது என்பதில்தான் இப்போது சிக்கல்.

இரண்டு பகுதிகளைய்ம் படித்தவர்கள் பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் - ராஜ்சிவா

No comments:

Post a Comment